ஞாயிறு, 24 ஜூன், 2018

சாரளம்> சாளரம்.

சாளரம் என்ற சொல்லை நாம் ஆய்வு செய்வோம்.

புரட்சிக் கவி என்று பாராட்டப்பட்ட பெரும்பாவலரும் பாரதியாரின் சீடருமான பாரதிதாசன் :

"கதவைச் சாத்தடி --- கையில்
காசில்லாதவன் கடவுள் ஆனாலும்
கதவைச் சாத்தடி"

என்று தொடங்கும் பாடலை கதைக்கேற்பப் பாடிக்கொடுத்திருந்தார்.

சாத்து என்ற சொல் இலக்கியத்திலும் இடம்பெற்ற சொல்.  தீமைகளைத் தடுக்க அவை வரும்வழிகளைச் சாத்தும் ஒரு தெய்வம் "சாத்தன்"  எனப்பட்டது.  சாத்தன் என்ற இப்பழைய தெய்வம்தான் ஐயப்பன், ஐயனார் என்பர்.  சாத்தன் என்ற சொல் மெருகூட்டப்பெற்று :  சாத்தா > சாஸ்தா என்றுமாகியது.  சாத்தன் என்ற தமிழின் எழுவாய்ச் சொல்லுருவிற்கு சாத்தா என்பது விளிவடிவமாகும்.

"காதலுக்கு வழிவைத்துக் கதவைச் சாத்த,
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்"  என்று

சாத்துதல் என்பதைப் பயன்படுத்தியுமிருந்தார் பாரதிதாசன்.    சாத்துதல் என்ற சொல் இன்றும் வழக்கிலுள்ள தமிழ்ச்சொல் ஆகும்.

இது "சார்> சார்த்து > சாத்து"  என்று பண்டைக்காலத்திலே திரிந்துவிட்டது.  இடைநின்ற ரகர ஒற்று பல சொற்களில் மறைந்துள்ளமையைப் பல இடுகைகளில் எடுத்துக்காட்டியுள்ளோம்.  அவற்றை மறுவாசிப்புச் செய்து மகிழவும்.  வாய்விட்டு ஒன்றைப் படிப்பதுதான் வாய் > வாயிப்பு> வாசிப்பு ஆகும்.
இனி வாசி+அகம் =  வாசகம். உண்மையில் இங்கு அகம் என்று வருவது:  கு+அம் என்ற விகுதிகளுடன் அகரம் புணர்ச்சியில் தோன்றி நின்றதாகும்.  இங்கு அகம் என்றது மனம் அன்று.

வாசி +கு+அம் = வாசி+அ+கு+அம் =  வாசகம்.  இந்த அகரம் இணைப்பில் தோன்றியது.  ஆனால் அகத்துக்குள்ளேயே வாசித்துக்கொள்வது வாசகம் என்று சிலர் சொல்லக்கூடும்.  வாசித்தல் என்பது சில திராவிட மொழிகளில் வாயித்தல் என்றே வழங்கும்.

சாத்து என்ற சொல்லை ஆய்வு செய்யப்புகுந்து பிறவும் கூறினோம். எழுதுவனவற்றை அழிப்போர் நடமாடுவதால் அவ்வப்போது வாய்ப்பு நேர்கையில் பலவும் சொல்வது அவர்களை முறியடிக்க ஓர் உத்தியாகும். அது இனிமேல் வேண்டியாங்கு கடைப்பிடிக்கப்படும்.

இனி சாத்து, சாளரம் என்பவற்றின் தொடர்பு விளக்குவோம்.

சார் > சார்த்து > சாத்து.
சார்> சார்+அள+அம் = சாரளம்  (சாத்தவும் திறக்கவும் பயன்படும் ஒரு சிறு சுவர்க்கதவுடன் கூடிய காற்றதர்.)

இதில் :  சாரளம் என்பது பின் எழுத்து முறைமாற்றத்தால்:  சாளரம் ஆனது.

இப்படி அமைந்த பிற சொற்கள் எடுத்துக்காட்டு:  மருதை> மதுரை; விசிறி>சிவிறி.

பதநிரல்மாற்றுச் சொற்கள்:   வாய்க்கால் > கால்வாய். இங்கு முழுப்பதங்கள் முறைமாறின.

சாளரமென்பது ஓர் அளவுடன் இருக்கவேண்டியது முதன்மையாகும். பண்டைக்காலத்தில் வெளியாட்கள் கதவு சாத்தியிருக்கும்போது சாளரத்தின் வழியாய் உள்ளே குதித்து வருவதைக் கட்டுப்படுத்த ஓர் அளவைக் கடைப்பிடித்தனர் என்பதைச் சொல் நமக்குத் தெரிவிக்கிறது, அளத்தல் - எட்டுதலும் ஆகும்.  அதரடைப்பு எட்டிச் சுவரைத் தொடவேண்டுமே. அதுவும் நன்று.   வெளியாரைத் தடுக்கக் கதவு சாத்திக் காற்றுக்காக பலகணியைத் திறத்தல் இதன் உத்தியாகும்.பலகணி என்ற சொல்லுக்குத் தனி இடுகை உள்ளது. அங்குக் காணலாம்.  பலகண்கள் அல்லது பல துவாரங்கள் உள்ள சாளரம் :  பலகணி.   துவை+ஆர்(தல்)+அம் = துவாரம்.   அம்மி துவைத்தல், அம்மி பொழிதல் எல்லாம் கேள்விப்பட்டதுண்டா? இடித்து உண்டாக்குவது துவாரம். இப்போது இடிக்காமல் குடைந்து உண்டாக்கிய துளையையும் குறிக்கும்.

சாரளம் > சாலகம் > சாலம் என்பன திரிபுகள்.  சார்<> சால்.

சாலேகம் என்பது மற்றோர் சொல்லுரு.   சாலகம் > சாலேகம் (பலகணி).

சாலுதல் என்பது அமைத்தலையும் குறிக்கும்.வீடு என்பதை முதல்முதலாக அமைத்த மனிதன் அதை மரங்களில் மேல் அமைத்தான்.  அப்போது அவனுக்கு வாசல் கதவு எல்லாம் தேவையற்றவை.  ஒரு பரண்போல  அமைத்து அதன்மேல் இருந்துகொண்டான்.  விலங்குகளிடம் இருந்து தப்பவும்  மழை காற்று வெயில் முதலிய இயற்கைத் துன்பங்களிலிருந்து விடுபடவும் அவன் வழி தேடினான்.  பின்னர் காடுகளிலிருந்து விலகி, நிலங்களைச் சமன் செய்து குச்சிகளின்மேல் பரண்போல் மேடையமைத்து அதில் வாழ்ந்தான்,  அப்போது கதவு செய்வது கூரை வேய்வது முதலியவற்றில் பட்டறிவு உடையவனானான். ஆகவே சுவர், கூரை முதலியவை அமைக்க அறிந்துகொண்டான்.  சுவர் என்பது சுற்றி வரும் தடுப்பு.   கூராக மேல் அமைக்கப்பட்டது கூரை.  சு+வர். (சுற்றி வருவது).  கூர்+ஐ = கூரை.  சுற்று, சுழல், சூழ் முதலிய சொற்களின் தொடக்கத்தை நல்லபடியாக சிந்திக்கவும்.  சுற்றுவரு > சுவரு > சுவர்.  அல்லது சுத்துவரு என்று பேச்சுப்படி நோக்கலாம்.  சுவரில் காற்றுக்காக பல கண்களை அமைத்தான்.  வீட்டுக்கு அவை கண்கள். கண்  என்றால் துவாரம்.  பூச்சி கடித்துச் சேலை கண்ணு கண்ணாகப் போய்விட்டது என்பாள் கிழவி.  கண் - சிறு பொத்தல்.  பல கண் உள்ள திறப்பு, பலகண்+இ.= பலகணி.  சுவர் எனபதன் மூல அடிச்சொல் சுல் என்பது ஆகும்.  சுட்டடிச் சொல்.  பலகணிக்கு முந்தியது வாயிலும் கதவும்.  சால்>சார் ( ரகர லகரப் போலி).

இதைச் சார் என்பதிலிருந்து தொடங்கினால் புரிந்துகொள்வது எளிது.  சால் என்பதிலிருந்த்ம் தொடங்கியும் சொல்லலாம்.  பின் பேசி மகிழ்வோம்.

இருக்கும் எழுத்துப்பிழைகளும் பின் எழுதியினால் தோற்றுவிக்கப்படும் auto correct பிழைகளும் சரிசெய்யப்படும். எக்கச்சக்கமான கள்ள மென்பொருள் கலாய்த்துக்கொண்டிருப்பதால் விரைந்து செய்தாலும் பயனில்லை. பொறுமையுடன் வாயிக்கவும்.  வாசிக்கவும்.  யி-சி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

ஊழல் அலுவலர் மாட்டிக் கொண்டார்

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு பெரிய அலுவலர் சில குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். அதிலொன்று ஊழல் பற்றியது.
இன்றை நிலையில் அவர் கதையைப் பாடல்களாய் எழுதினால் அவற்றிலொரு பாடல் இப்படி இருக்கக்கூடும்.

என் கணக்கில் எப்படியோ பணத்தைப் போட்டார்;
எனக்குப்பின் தெரிந்ததையா யான் என் செய்வேன்?

தன்வரவாய் வந்தபணம் கேட்ட தில்லை;
தனக்கென்றே அதிலேதும் எடுத்த தில்லை;

வன் கணமாய் வாய்த்தபணம் இதுவோ இல்லை;
வாழ்வில்நான் திருடியதோ இல்லை இல்லை;

துன் குணத்தார் எனைக்குற்றம் சொல்வ தென்னே
தோன்றியவை சொல்லி எனை வதைக்கின் றாரே.

இப்படி எல்லாம் அவர் அழுது புலம்பினாலும் யாரும் அதைக்
கேட்பதாய் இல்லை.  மக்கள் தீர்ப்பில் அவர் மடங்கி வீழ்ந்தார்.

சனி, 23 ஜூன், 2018

மரியாதை என்னும் பதம்.

 வடகொரிய  அதிபர் கிம்மும் அமெரிக்க அதிபர் திரம்பும் சிங்கப்பூரில் எதிர்கொண்டு தழுவிக்கொண்டனர் என்று செய்திகள் கூறுகின்றன. கிம் தாம் அணுவாயுதத் தயாரிப்பிலும் வெடியாய்வுகளிலும் ஈடுபடப்போவதில்லை என்ற  உறுதியை அமெரிக்க அதிபருக்கு வழங்கினார் என்றனர்.  உலகம் மகிழ்வடைந்தது என்று சொல்லத்தேவையில்லை.

இத்தகைய தழுவுதல்கள் பணிவன்பு காரணமான நல்லெண்ணப் பரிமாற்றம் என்னலாமா?

இன்னும் பல உலகத் தலைவர்கள் எதிர்கொள்ளுதலின் போது தழுவிக்கொள்வது இப்போது வெகு இயல்பானதாகிறது.

கைகுலுக்குதலும் வேண்டியாங்கு நடைபெறுகிறது.

தழுவிக்கொள்ளுதலுக்கு மருவுதல் என்றும் தமிழில் இன்னொரு சொல் உள்ளது.

இருகைகளாலும் எதிர்நிற்பவரை மருவிக்கொள்ளுதல்.

மருவியபடி இறுக்கிப் பிடித்துப் பணிவு தெரிவித்துக்கொள்வது "யாத்துக்கொள்ளுதல்"  ஆகும்.  யாத்தல் - கட்டுதல்.

கைகளால் சுற்றிக் கட்டுதல்.

மருவு+ யா+தை.  

மரு+ யா + தை.

இங்கு தை என்பது விகுதி.  நட > நடத்தை என்பதில்போல.

ருகரமும் யகர வருக்கமும் எதிர்கொள்ளும் புணர்ச்சியில் ரு என்பது ரி என்று திரியும்.

மரு+யா+தை > மரியாதை.     பெரு+யாழ்=  பேரியாழ் என்பதில்போல.

மருவு என்பதன் அடிச்சொல் மரு.   வு என்பது வினைச்சொல்லாக்க விகுதி.

யாத்தல் என்பதில் யா என்பது அடிச்சொல்.

மரியாதை என்பதில் இரு அடிச்சொற்களும் ஒரு விகுதியும் உள.

மரியாதை என்பது சிற்றூர்களிலும் வழங்கும் சொல்.

முன்னர் இதை விரித்ததுண்டு.  இங்கு மாற்றம் எதுவும் இல்லை.

அறிந்து மகிழ்க. 

குறிப்பு:

பொருள் பதிந்துள்ள சொல் பதி+அம் =  பதம் ஆகும். பதி (பதிதல்) என்பதன் ஈற்று இகரம் கெட்டு பத் + அம் என்று நின்று  தகரத்தில் அகரமேற பதம் என்றானது. இதில் வியப்பும் இல்லை, விளக்கெண்ணெயும் இல்லை. அறியாருக்கு இரங்குவதன்றி யாது செய்வோம்?