செவ்வாய், 16 ஜனவரி, 2018

இராசி வீட்டுக்கும் பாவகம் ....



இன்று பாவகம் என்ற சொல்லை அறிந்து இன்புறுவோம்.

பாவகம் என்பது பல பொருளுடைய ஒரு சொல். அப்பொருள்களில் வீடு என்பதும் ஒன்றாகும்.

கணியக் கலையில் (சோதிடத்தில் )  பிறப்பினைக் கணிக்கக் கட்டங்கள் வரைவர்.  அக்கட்டங்கள் பன்னிரண்டாயினும் இராசி நாதர்கள் என்னும் கோள்கள் ஒன்பதே ஆகும்.  சில கணியர் ஏழே கோள்களைக் கொண்டு கணித்துக் கூறுதலும் உண்டு. இதற்குக் காரணம் இராகு ( இர்+ஆகு) மற்றும்  கேது (கே(டு)+து)   என்பன பாணிப்புகள் அல்லது ஊகத்தில் விளைந்தவை.  (postulated)

ஆனால் இற்றை  நிலையில் புதிய கிரகங்களும்1 கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ( நெப்தியூன், யூரேனஸ் ). கணிதத்தின் மூலம் இன்னும்* இரண்டு கோள்கள் இருந்திருக்க வேண்டும் என்று ஊகித்தறிந்தது நுண்மாண் நுழைபுலமே ஆகும்.

இந்த இராசி வீட்டுக்குப் பாவகம் என்றும் சொல்லலாம்.   இதைக் "கோள் பாவிக்கும் அகம்" என்று முடிபுகொண்டு,  பாவி+ அகம் = பாவகம் எனினுமாம்.

பன்னிரண்டாகப் பகுக்கப்பட்டிருத்தலால்,   பகு+ அகம் =  பா + அகம் = பா+வ்(வகர உடம்படு மெய்) + அகம் = பாவகம் ஆகும்.  பகுத்துள்ள வீடுகள் என்பது பொருள்.  பகு என்பது பா என்றும் திரியும்.  பகுதி > பாதி.   இது மிகுதி > மீதி எனல்போலுமாம்.

மனிதன் முதன்முதல் அறிந்துகொள்ள விரும்பியது தான் சாகும் நேரம்,  அதை உடனே அறிய இயலாமல் பல கணிப்புகளுக்குள்ளும் புகுந்து படிப்படியாக கணியக் கலையை வளர்த்துப் பிற பல அறிந்தான்.  

சா+ து + அகம் = சாதகம் எனின் சாவை  அறிவதற்கான (கணிக்கலையின்) உட்பொருள் என்று அர்த்தம். இதுபின் பிறப்பை அல்லது அதிலிருந்து அதை (சாவு நிகழ் நேரத்தை )  அறிய முற்பட்டு அது உடன் அறியா நிலையில் பிறப்பு முதலியவை கணித்து, ஏனைய அறிந்தான். அது    ஜா+து + அகம் = ஜாதகம் ஆயிற்று. (து :  உடையது , உரியது, அஃறிணை விகுதியும் ஆகும்.) ஆனால் மாரகத்தை ( மரணம் அல்லது சாவு நேரத்தை மட்டும்) இன்னும் துல்லியமாக அறிய இயல்வில்லை. பல்வேறு கோணங்களில் சில நாட்களாவது முயன்று அறிய வேண்டுமாதலின் அது கைவிடப்பட்டு,  கண்டங்கள் அல்லது அது (சாவு) நிகழும் வாய்ப்புள்ள காலங்களை மட்டுமே இப்போது கூறுவர்.

பாவகம் - இராசி;  (வீடு) .   

 சொல்லறிந்து மகிழ்வீர்.


அடிக்குறிப்புகள்:
இரு+ அகம் > இரகம் > கிரகம்.  இராசி வீட்டில் இருப்பது.
இரு + ஆசு + இ > இராசி.  (பற்றுக்கோடு கொண்டு இருப்பதான கோளின் வீடு.)
* இன்னும் என்பது சேர்க்கப்பட்டது.  இப்போது  யாம் நினைத்த பொருண்மை நன்'கு வெளிப்படும்.

திங்கள், 15 ஜனவரி, 2018

பொங்கல் இனிமை பெருகட்டும்!



பொங்கல் உண்பீர்!

பொங்கலுண்டால் மங்கலமே தங்கு மெங்கும்;
பொங்கலிது போகுமுன்னே உண்க நன்`கே;
எங்களுக்குப் பொங்கலிலை என்ற பேரும்
இனிமையினால்  நன்றிதுவே என்றி ணைவார்;
நன்கணமாய்   நலங்கள்தாம்  நண்ண வேண்டின்
நாற்சிறந்த பெருநாளும் கொண்டா டுங்கள்
பெண்களினிப் பொதுநிலையில் கண்போல் பண்பீர்
பேதமின்றிப் பொங்கினிய சாதம் உண்பீர். 

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

பணம் பந்தியிலே



பந்தி என்னும் சொல்

பந்தி என்னும் சொல் எப்படி அமைந்தது? 

 பணம் பந்தியிலோ குலம் குப்பையிலேஎன்பது ஒரு தமிழ்ப் பழமொழி.
பணம் பந்தியிலே குணம் குப்பையிலேஎன்று தொடங்கும்      ஒரு திரைப்பாடலை எழுதிய கவி, அமரர் கா.மு. ஷெரீப் என்று தெரிகிறது. குலத்தினும் பணமே ஆற்றல் மிக்கது என்கிறது பழமொழி. “ இந்தப் பழமொழியை அறியாதவன் மனிதன் இல்லேஎன்`கிறார் கவிஞர்.

ஆனால் பந்தி என்ற சொல்லின் தோற்றம் அறிந்துகொள்ள இந்தப் பழமொழியின் உதவி தேவை இல்லை.   பந்தி என்பது பலர் அமர்ந்து உண்ணும் வரிசை அல்லது பல வரிசைகள். அங்கனம் வரிசையாக அமர்ந்துண்ணும் உணவுக் கொடை அல்லது விருந்து. 1[

பல்: அடிச்சொல்.   பொருள்:  பொருந்தி அல்லது கூடி யிருத்தல்.


இதனடிப் பிறந்த சொற்கள் சிலவற்றையாவது  அறிந்துகொள்வோம்.

பல்   -.  மேவாய் கீழ்வாய் எலும்புகளுடன் பொருந்தி நிற்பது.

பல் > பல்+து >  பற்று.    (௳னம் பொருந்தியுள்ள நிலை).

பல் > பல்+ தி > பன்றி.   ( நீண்ட பற்களை யுடைய விலங்கு).

பல் >  பன் > பன்+து > பந்து.
.நோ:  சில் >  சின் > சிந்து .

( சிந்து என்பது சிறியது என்று பொருள்படும் சொல். அளவடிக்குக் குறைந்த நிலையினது யாப்பியலில் சிந்து எனப்படும்.  சிந்து  என்பது சிறு நூலையும் குறிக்கும் என்றார் பி.டி. சீனிவாச ஐயங்கார் எனும் வரலாற்றறிஞர்.  இது சிந்து நதி அளாவிய நிலப்பகுதிகளில் விற்கப்பட்டதனால், நதியும் அப்பெயர் பெற்றது. இச்சொல் பின் ஈரான் சென்று ஆங்கு இந்து ஆனது.  பின் இத்திரிபு மீண்டும் இந்தியாவிற்கு வந்தேறி இறுதியில் ஒரு மதத்திற்கும் பெயரானது என்பதை முன் எடுத்து எழுதியுள்ளோம்.)
எங்கெங்கு உலவினும் சில், சின் என்ற அடிகள் இன்னும் நம்மிடை நின்று நிலவுதல் நம்  பாக்கியமே ஆகும். இது நிற்க:
பந்து என்பது கயிற்றாலோ துணியாலோ சுருட்டிப் பிடிக்கப்பட்ட உருண்டை.  இப்போது செய்பொருள்கள் மாறிவிட்டன.

பல் > பன்  > பந்தி.  (பன்+தி).
.நோ:   முன்+தி > முந்தி.

பலர் பொருந்தி அல்லது சேர்ந்து உண்பதே பந்தியாகும்.  

திரட்சி என்பதன் முதலெழுத்தாகிய தி,  ஈண்டு விகுதியாய் நிற்றலும் பொருத்தமே ஆகும்.

பல் பல:  ஒன்றுக்கு மேற்பட்டவை..   (   இரண்டும் அதற்கு மேற்பட்டவையும் எனினுமது.)

பந்தியிலும் உண்டு மகிழ்வீராக.

அடிக்குறிப்பு:

1  (விருந்து என்னும் சொற்குப் புதுமை என்னும் பொருளும் உண்டு.)

விருந்து + அம் = விருத்தம்: வலித்தல் விகாரம்.  பொருள்: புதுவகைப் பா.




[1][1]