வெள்ளி, 17 மார்ச், 2017

மொழி நூலும் தேவியும்

மொழி என்பது ஒரு கருத்தறிவிப்புக் கலை. ஓர் அறிவியல் என்றுகூடச்
சொல்லலாம். ஓர் இசைவட்டு வாங்குகிறவன், அதை அதற்குரிய இயந்திரத்தில் இயக்கி  இசையை நுகர்தல் வேண்டும். அஃதின்றி அந்த‌
வட்டு எந்த மூலப்பொருள்களால் ஆனது என்பது அவனுக்குச் சற்றும் பயன் தரா அறிவாகும். அதுபோலவே ஒரு சொல்லைப் பயன்படுத்திக்
கருத்தினைக் கேட்பவன் புரிந்துகொள்ளுமாறு செய்வதே மொழி. அவனுக்கு மூலங்கள் தேவை அற்றவை.

இருப்பினும் சொல்லைப் பயன்படுத்தும் புலவனுக்கும் கவிவாணனுக்கும் இடமறிந்தும் உண்மைப்பொருளறிந்தும் பயன்படுத்த மூலச்சொற்கள் அடிச்சொற்கள் பற்றிய ஆய்வு உதவியாக இருக்கும், மேலும் பழஞ்சொற்கள் அமைந்துள்ள முறையறிந்தால் புதுச்சொற்களை அமைக்கும் முறையை நாம் அறிந்து மொழியை‍ , அதாவது நம் மொழியை மட்டுமின்றி எம்மொழியையும் வளர்ச்சிபெறச்
செய்யும் திறத்தைப் பெறலாம். உலக மொழிகள் அனைத்துக்கும்
இது பொதுவான கருத்து ஆகும்.

பிரித்தியங்கறா தேவி என்ற கடவுட் பெயரை நாம் 2013 வாக்கில்
அறிந்துகொண்டோம். இந்தப் பெயரைப் படைத்த பூசாரி அல்லது புலவன் மிக்கக் கற்பனை ஆற்றலும் சிந்திக்கும் திறமும் உடையவன்.
இந்தத் தேவியைத் தனியாக நிறுவினாலும் சிவத்துடன் தேவிக்கு உள்ள உறவு ஒன்றும் அற்றுப் போய்விடுவதில்லை என்ற உணர்வில்
அவன் அச்சொல்லை உருவாக்கினான். அது சொல்லாலே நமக்குப்
புரிகின்றது. சொல்லை அமைத்தபின், வணங்கும் பற்றனுக்கு (பத்தனுக்கு அல்லது பக்தனுக்கு)  மூலங்கள் தேவைப்படா. இறையுணர்வு முதன்மையாம் அன்றி சொல்மூலம் தேவையற்றது.
சொல்மூலத்தைவிடச் சூடன் சாம்பிராணி அவன் பார்வையில்
முன்மைபெறுதல் காண்க.

பிரித்தியங்கறா (~ரா) தேவிபற்றிய எம் முன் இடுகை காண்க:

தலைப்பு   :  மொழி நூலும் தேவியும்  

வியாழன், 16 மார்ச், 2017

ராகு என்று வழங்குவது........

இராகு என்பது ராகு என்று வழங்குவது தலையெழுத்திழப்பு ஆகும்.

இர்:  இது இருள் என்பதன் வேர்ச்சொல்.

இர் > இருள்.
இர் > இர் +ஆகு = இராகு.  (இருளாகிவிட்ட கிரகம்).

ராகு என்பது ஒரு நிழற்கிரகம் அல்லது நிழற்கோள். கேதுவும் நிழற்கோள் தான்.

இர் > இராமன்.
இர்+ஆம்+அன்:   கருப்பு நிறமான அவன்.  ஆம் : ஆகும் என்பதன்
குறுக்கம்.  அன் = அவன்.

இர் > இரா>  இராவண்ணன் > இராவணன்.

இவனும் கருத்தவனே.

இர் > இரா > இராகுலன்.

இருள் நிறக் குலத்தினன்.

இவற்றை 2009 ‍~  2010 வாக்கில் விளக்கியிருந்தாலும் இவை கள்ள‌
மென்பொருளால் அழிவுண்டன. பழைய இடுகைகளின் பகர்ப்பு அல்லது
சேமிப்பு இருந்தால் அனுப்பிவையுங்கள்.

இர்> இரவு .  இருள் நேரம்.

இர் > இரா > இராவு.

இர் > இரா > அத்து + இரி:  இராத்திரி.

இரு> இரி:  இருப்பது.  அத்து : சாரியை.

புதன், 15 மார்ச், 2017

சன்னலுக்குப் பலகணி

பலகணி என்ற சொல் அவ்வப்போது நம்மை எதிர்கொள்கின்றது. சன்னல்
என்பதே பரந்து வழங்குவதாய் உள்ளது. நாம் இப்போது பலகணி என்ற‌
சொல்லைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

ஒன்று, சில, பல என்னும் எண்ணிக்கைகளில் பல என்பதே  பலகணி என்ற சொல்லில் முன்நிற்கிறது.

இது உணர்ந்துகொள்ள விளக்கம் வேண்டாதது ஆகும்.

கண் என்பது ஓட்டையையும் குறிக்கும். கண்  என்ற சொல்லின் பொருளை முழுமையாக அறிந்துகொள்வோம். பொருளாவன:

அல்லி, அழகு, அறிவு, இடம், கணு, துவாரம், மூங்கில், விழி,
பீலிக்கண், தேங்காய்க்கண், மூங்கிற்கண், பெருமை, ஞானம்.

கண் என்பது பலபொருள் ஒருசொல்.  "துணியில் பூச்சிகடித்ததுக்    கண்ணு
கண்ணாய்ப் போய்விட்டது, அதை வீசிவிட்டேன் " என்று பேசுகையில்
கண் என்பது விழியைக் குறிக்கவில்லை; ஓட்டையையே குறிக்கிறது.

முற்காலத்தில் சன்னல்களை அமைத்தவர்கள், பல வட்டமான துளைகளை ஒவ்வொரு சன்னலிலும் அமைத்து காற்றுவர வசதி செய்தனர்.  அதனால் சன்னலுக்குப் பலகணி என்ற பெயர் ஏற்பட்டது.

இதைப் பல + கண் + இ என்று பிரிக்கவேண்டும். பல கண்களை
உடையது என்று பொருள்.

இது அழகாய் அமைந்த ஒரு தமிழ்ச்சொல். இதைப் பயன்படுத்துங்கள்.