புதன், 24 பிப்ரவரி, 2016

பொறுப்பு ஒப்படைக்க

ஒரு பழமொழிப் பாடலைப் படித்து மகிழ்வோம்.  பழமொழி என்பது நூலின் பெயர்.


உடைப்பெரும் செல்வத்து  உயர்ந்த பெருமை
அடக்கமில் உள்ளத்தன் ஆகி ===  நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல்.

இப்பாடல் அடக்கமில்லாதவனைப் பற்றியது.  அடுத்த வீட்டான் உங்களுக்கு அடங்கிப் போகவேண்டும் என்று நினைத்து அவன் அடக்கமில்லாதவன் என்று பேசுதல் கூடாது. இப்பாடல்  அத்தகைய  சூழ்நிலையைப் பற்றியதன்று.

அதிகாரத்தை வழங்கும் நிலையிலுள்ளோன், அதை இன்னொருவனிடம்  ஒப்படைக்கும் முன்னர், அதைப் பெறுவோன் எப்படிப் பட்டவனாய் இருக்கவேண்டும் என்பதை   இப்பாடல் தெளிவாக்குகிறது.

அவன் செல்வச் செருக்கு உடையவனாய் இருத்தல் ஆகாது.  அதாவது அவன் செல்வனாய்  இருக்கலாம்  ஆனால் செல்வச் செருக்கு உடையவனாய் இருத்தலாகாது ; இரண்டும் வெவ்வேறாம்,  தன் உயர்ந்த பெருமைக்கு ஏற்ப அவன் நடத்தையில் சிறந்தவனாய்  இருக்கவேண்டும். அல்லாதவன்மேல் அதிகாரத்தை வைத்துவிட்டால் அவன் ஆடத்தொடங்கிவிடுவான்,  அது குரங்கின் கைகளில் எரியும் கோலைக் கொடுத்ததற்கு ஒப்பாகிவிடும். எரிகோல் பிடித்த குரங்கு ஊரையே  அழித்துவிடும். இதை நன்கு ஆராய்ந்து உணர்ந்துதான் எந்தப் பொறுப்பையும்  ஒப்படைக்க வேண்டும்.

மக்களாட்சி முறையில் தேர்தலுக்கு விருப்பாளர்களாக (candidates)  நிற்க முன்வந்தோரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.  முன்வராதோரில் அதற்குத் தகுதியானவர் அருகிலேயே இருக்கலாம்;  அவர் முன்வரவில்லை என்றால் மக்களால் அவரைக் கொண்டுவந்து தேர்ந்தெடுப்பது  இயலாதா காரியம்.

இப்படி வழிகாட்டுகிறது  பழமொழி நானுறு. 

கோழை

இனி  கு >  கோ  திரிபினைச்  சற்று காண்போம்,

குவளை என்ற சொல்லுக்குப்   பேச்சில்  கோளை என்று நாவருகின்றது பேச்சில் மட்டுமோ?  எழுத்திலும் வந்துள்ளது.
,
குழப்பம் என்பதோ பேச்சில் கொழப்பம்  என்று வருவது மட்டுமோ,   கோழம்பம் என்றும் எழுத்தில் உள்ளது.  மற்றும்  -ப்ப -  என்ற  நடு  -ம்ப - என்றும் திரிந்துள்ளது.  இது இருமடித் திரிபு ஆகும்.

கடினமான சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல் சவத்துப் போகிறவனைக் கோழை என்கிறோம். இது ஒரு குழைவு ஆகும்.

குழை >  கோழை.

இதில் கு-கோ திரிபும் முதனிலை திரிதலும்  அடங்குகின்றன. குழை  என்பது முதனிலை திரியின் கூழை என்றே வரவேண்டும்;  மேலும் திரிந்து கோழை எனவருதனால்  இருமடித் திரிபாகிறது,

கூழை என்பது அறிவிற் குறைந்தோனைக் குறிக்கும்,

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

டகரம் ரகரமாக

டகரம் சொற்கள் சிலவற்றில் ரகரமாகத் திரியும். இதற்கு ஓர் எளிதான எடுத்துக்காட்டினைத் தரவேண்டுமானால்:

மடி >  மரி என்பதைக் குறிப்பிடலாம்.  இங்கு டி > ரி என்று திரிந்ததைக் கவனிக்கவும்,

கோடு என்ற சொல் வளைவும் குறிக்கும். மலையுச்சி வளைவைக்  கோடு என்பர். பின்னர் அது அம்மலை உள்ள ஊருக்கும் பெயரொட்டானது .

உதாரணம்:  திருச்செங்கோடு.   கசரக்கோடு .  அதங்கோடு.

வடக்கிலுள்ள பதன்கோடு வரை செல்லும் இச் சொல்லாட்சி. கோடு+ ஐ =  கோட்டை ஆயிற்று. கோட்டைகளும் வளைவாகக் கட்டப்பட்டனவாதலினால்,  கோடு அடிச்சொல்லாக நின்றது.

கொடு > கோடு.

கொடு என்பது இங்கு நீண்டது.  கருத்து வளைவுதான்,  நண்டுக்கொடுக்கு  வளைவானது.  கொடு> கொடுக்கு,     கொடுக்குப்பிடித்தல் என்ற வழக்கையும் நினைவுகூர்க.

செயலாலும் வளைவு உணரப்படும்.

கொடு > கொடுமை.

கொடு > கொடுங்கோல்  ( வளைந்த கோல்;  நேர்மையின்மை குறித்தது. )


கோடு > கோடம் > கோரம்.  ( மிகக் கொடுமை.)  ட > ர .

கோரக் கொலை என்பது காண்க.

கொடு > கொடுத்தல். ( வளைந்து நின்றபடி ஒன்றைத் தருதல்.)  இதுவே  சொல்லமைப்புப் பொருள்.  நாளடைவில் வளையாமல் கொடுத்தலும் கணினிக்கணக்கு வழி காசு கொடுத்தலும் எல்லாம்
கொடுத்தலில் உள்ளடங்கின .. இது பொருள் விரிவாக்கம். பயன்பாட்டு  விரிவு ஆம்.