ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

வருத்தகம் ...................

யப்பானியர் (ஜப்பானியர்)  தென்கிழகாசிய நாடுகளைக் கைப்பற்றி  யாண்ட காலங்களில் தடுப்புக் கைதிகளைத் துன்புறுத்தும் நிலையங்கள் பல செயல்பட்டன வென்பர். பிடித்துக் கொணர்ந்து  வருத்தும் இவ்விடங்களை  "வருத்தகங்கள்"  எனின் எத்துணைப் பொருத்தம் என்று சொல்லவும் வேண்டுமோ?  (torture chambers)

வருத்து  + அகம் =  வருத்தகம். எனல் பொருத்தமே. ஆனாலும் இவற்றை யாரும் இப்படிக்  குறித்ததாக யான் அறியேன். 

ஆனால்  நான்  கூற விழைந்தது  இவை பற்றி அல்ல.

ஏற்றுமதி - இறக்குமதி சரக்குகள் மாற்று வணிகத்தில் பயன் பெறும் "வர்த்தகம் "   என்னும் சொல்லே நாம்  ஆயப்   புகும் சொல்லாம்.

போக்குவரத்து  என்னும் சொல்லை நோக்குங்கள்.  இதில் "வரு "(வருதல்) என்பதில் உள்ள "ரு "    சொல்லாக்கத்தில் "ர " என்று  திரிந்துள்ளது. ஆக, ரகர ஒற்றின் மேலேறிய உகரம் கெட்டு அகரம்  வந்துற்றது.  எனவே பொருள்களை வருவித்தல் என்னும் பொருளில்  "பொருள் வரத்து" எனப்பட்டது. இது பேச்சு வழக்கில் சொல்லப்படுவது  ஆகும்.

இந்த   வரத்திலிருந்து அமைந்ததே வரத்தகம். அதுபின் "வர்த்தகம் " என்று அழகு படுத்தப்பட்டது.  ( word polishing).  இதன்மூலம் அது  வரு என்னும் மூலத்தை உடையது என்பதை மறந்து   தடையின்றிப்  பயன்படுத்தவும் ஒரு வாய்ப்பு நல்கப்பட்டது.

குறிப்பு:

வரம்+ அத்து +இல்+ இருந்து  =  வரத்திலிருந்து.  (அத்து -  சாரியை)
வரத்து +  இல் + இருந்து.=  வரத்திலிருந்து . (வரத்து -  சொற் பகுதி ,  இல் -  உருபு .இருந்து - சொல்லுருபு.)
வருத்து =  துன்புறுத்து என்பது.. .



  

சனி, 19 ஏப்ரல், 2014

Words of cleanliness

ஐந்து புலனுணர்ச்சிகளில் "தொட்டறிவு" (sense of touch)  அல்லது "தோலுணர்ச்சி " ஒன்றாகும். இதனை  ஊறு  என்போம்.

ஊறு  என்பதோ உறுதல் என்னும் வினையடியாய்ப் பிறந்த சொல். உறு என்பது  ஊறு என்று முதலெழுத்து நீண்டு பெயர்ச்சொல் ஆயிற்று. இப்படித் திரிந்து பெயரானவை எண்ணிறந்தவை ஆகும்.

உறத்   தக்கது, அதாவது தொடத் தக்கது தூய்மை.  தொடத் தகாதது அழுக்கு அல்லது துப்புரவு இல்லாதது.

குழந்தைப் பருவத்திலேயே நமக்கு இது சொல்லித் தரப்படுகிறது.

எனவே உறுதல் தொடத்தக்கது என்பதையும் அப்புறம் தொடத்தக்கது தூய்மையையு,ம் குறித்தன.

உறு> உது > உத்தம் > சுத்தம் என்று திரிந்தது.

உது+அம்  = உத்தம்.   (இங்கு  து+அம் = த்தம் என்றானது).

உறு + அம்  > உற்றம் > உத்தம் எனினுமாகும்.

உத்தம் > உத்தமர் . (தொடற்குரியவர்,  நல்லவர், நல்ல குணங்களை உடையவர். என்று   பொருள் விரிவு கொள்ளும்).

"தின்மை செய்பவரே --  அண்டித் 
தீண்ட ஒண்ணாதார் "

கவிமணி தேசிக விநாயகம்  பிள்ளை.  



"தீயாரைக் காண்பதுவும் தீதே" என்பதனால்,  தீயார் அல்லது  சுத்தம் இல்லாதவர், மனத்தாலும் கையாலும்  மெய்யாலும் தொடற்குரியர் அல்லர்

மொழி வளர்ச்சி என்பது கருத்து வளர்ச்சியும் அதற்கேற்ற சொல் திரிபும் ஆகும்

உத்தமர் என்பது உ+ தமர் எனவும் பிரியும். உ = முன்னிலை; தமர்  = நம் ஆள்  என்பது.  முன்னிலையாய் உள்ள நம்மவர் என்றும் பொருளாம். இப்படி இச்சொல் இருபொருள் தரும்.

"தான் என்றும் தமர் என்றும் நினைப்பதன்றித் 
தமிழ் நாட்டின் நலத்தினுக்கே உயிர் உடல்கள் 
அமைக "

--  பாரதிதாசன் 



வெள்ளி, 18 ஏப்ரல், 2014

காட்டில் வாழ்ந்த காலத்திலே......




காட்டில் வாழ்ந்த காலத்திலே  ---  பல
கரடிகள் புலிகள் கொன்றன நம்மை
நாட்டில் வாழும் நாளுற்றதும்  --- நலம்
நல்கிடும் உந்துகள் கொல்வன உண்மை !

வேறு சந்தம்


ஏழை இன்பொருள் மேல்பெற்றவன்---- ‍‍‍ ஞாலம்
ஏத்திடும் போற்றிடும் நூல்கற்றவன்
மோழை மூடன் யாரென்கிலும்---  ‍‍‍உந்து
மோதிக் கொல்படை! கூராயுதம்.

மரணம் வருவது காத்தோமா நாம்?  -  பல
மரணப் படைக்கலன் சேர்த்துவைத்தோம்!
கரணம் தப்பினால் மாண்டுவிடும் ---   அந்தக்
காரியம் மாறுமோ?  யாண்டுமில்லை!

விபத்தில் இறந்தார் யாவருக்கும் ---  நெஞ்சு
விம்மிய துயருடன் விடைபகர்வோம்!
சிவத்தில் இணைந்தார் இன்னவர்கள்!---  நம்மின்
சீர்பெறு உலகில் முன்னவர்கள்!.


http://www.nst.com.my/latest/font-color-red-karpal-singh-s-death-font-a-picture-of-grief-at-the-hospital-1.570504


http://www.thehindu.com/news/international/world/eminent-malaysian-lawyer-karpal-singh-dies/article5921311.ece