திங்கள், 20 அக்டோபர், 2008

சிறு குடில் அழகு

அழகியதோர் ஏரிதனை அண்டுசிறு குடிலே,
அரக்குநிறக் களிமண்ணால் ஆனதுவே சுவரும்;
தழைகளையே தரித்திட்ட மழைக்கூரை;
தனியேநான் இக்குடிலில் தங்குவதென் ஆசை.

உமையவளின் அழகினையே ஊருக்குக் காட்டி
உள்ளமைதி தருகின்ற குடிலருகில்,
இமைப்போதும் வண்டுகளும் நிறுத்தாமல் முரலும்.
என்கருத்ததைத் தேன்கூடு பகலெல்லாம் கவரும். பக்49

ஏரிதன்னின் நீர்ப்பரப்பில் சீறிவரும் காற்றால்
இக்கரைமேல் எழுந்தூர்ந்து கைதட்டும் அலைகள்!
பாரிலிது போலமைதி எங்குகிட்டும்?
பயக்குமொரு 'நித்' 'திரை'யால் "திரைநிற்றல்" கூடும்.

நாளுக்கொரு வெண்பா

ஒவ்வொரு நாளும் ஒருவெண்பா பாடினையேல்
செவ்விய பாத்திறன் கைவருமே -- கௌவ்விக்
கடிக்கப் பொடியாகும் கெட்டியுண்டை நெல்லும்
இடிக்க இடிக்கவே தூள்.

இந்தப் பாடலை வேறு சொற்களால் முடித்திருந்தேன். அது உணர்வுகள் களத்தில் வெளியிடப்பட்டது. இப்போது நினைவில் உள்ளவாறு பதிப்பிக்கபெறுகிறது.

சனி, 11 அக்டோபர், 2008

வெண்பாக்கள்

தேனூறும் வெண்பா தெளிந்த செழுந்தமிழில்
நானூறு தந்திடுவேன் நன்றாக --- காணூறும்
ஆன்பால் கறந்தே அதனோடு பாகுபருப்
பானயிவை யாவும் கலந்து!!

வருகவந் தென்னோடு வாகாய் வடித்துத்
தருக திரியிதனில் தண்மை --- பெருகிவரும்
நல்ல தமிழ்வெண்பா நாளும் மகிழ்ந்திடுவோம்
வெல்க உலகில் தமிழ்.