வியாழன், 8 ஆகஸ்ட், 2019

மயூரமும் வைசூரியும்.

திருமயிலாடு துறை என்ற ஊருக்கு மயூரம்  என்றும் பெயர். 

மயூரம் பின் திரிந்து மாயவரம் என்றானது.    இதைப் பிரித்தால் மாய  = செத்துப்போக,  வரம் =  வரம் பெற்ற ஊர் என்று இரண்டாவது ஒரு பொருளும் வருகிறது.

பொருளாகச் சில எடுத்துக் கொள்ளும் வசதி உள்ள ஒரு நிலையை  சில + எடு + ஐ =  சிலேடை என்பார்கள்.  நல்ல அமைப்புச் சொல்.  ஆனால் புரியாமல் போனவர்கள் பலர்.  சிலேடை என்னும்போதெல்லாம் சல்லடை நினைவுக்கு வருதனாலோ என்னவோ!  சல்லடையில் ஏகப்பட்ட பொத்தல்கள்.

மயூரம் என்பது மயில் என்ற சொல்லுடன் தொடர்பு மிக்குள்ள சொல்லே.

மை+ இல் =  மயில்.

இல் எனப்பட்டது இடப்பொருள் தரும் பழந்தமிழ்ச் சொல்.  அது வீடு என்றும் பொருள்தரும்.   கண்ணில் மூக்கில் என்னும்போது இடப்பொருள் உருபாகவும் வரும் இனிய இடைச்சொல்லும் ஆகும்.  அல்லாதவிடத்து இல் - வீடு என்று முழுச்சொல்லாகவும் மிளிரும்.

இல் > இன் என்பதை மேலை மொழிகட்கும் தந்து மகிழ்ந்தவன் தமிழன்.

இவை நிற்க:


மை +  ஊர் + அம் =  மையூரம் ,  இதில் ஐகாரம் குறுகி,  மயூரம்.

இறக்கைகளில் பல இடங்களில் மை ஊர்ந்து நிற்கும் பறவை மையூரம்.> மயூரம்.  அம் என்பதை அமைப்பு குறித்த தொழிற்பெயர் விகுதி.  அமைப்பு இலாவிடத்தும் வரும்;  அமைப்பு உள்ளவிடத்தும் வரும்.  விரவி வரும்.
அமைப்பு அற்ற பொருள் நினைவுக்கு வரவில்லை.  வானம் என்றாலும் அதுவும் அமைப்புற்றதே என்னலாம்.  ஒருவேளை  வான் என்பதை வானம் என்று நீட்டி அதனால் குறிக்கப்பெற்ற அமைப்பு யாதுமில்லை என்று வாதிடாலாம்..  அமைப்பு பொருளில் வந்துவிட்டபடியால் விகுதியில் தேவையில்லை என்று வாதிட்டால் -   சரிசரி,   வாதம்  வைகுக.

மை இல்லென்று இருப்பின் என்ன,  மை ஊர்தல் என்று ஊர்ந்தால் என்ன, வேறுபாடு ஒன்றுமில்லை.

கொப்புளங்கள் ஏற்பட்டு, சுர சுர என்று  சுரசுரப்பாகி,   நுண் நோயுயிர்கள் கொப்புளங்களின் உள் சுரந்து,  உடலெங்குமே   ஊர்ந்தனபோல் தோன்றுவது    வை + சுர +   ஊரி.  =  வைசூரி.  சுரந்து ஊரும் கொப்புளங்கள் உடலெங்கும் வைக்கப்பட்ட நிலை!!

சுரந்து வரும் நீர்க் கொப்புளங்கள் சுரசுரப்பைத் தோலில் ஏற்படுத்துவன.  இங்கு சுர என்ற சொற்புகவு இரட்டைப் பொருத்தம்.

மயிலில் மை   ஊர்ந்தன;   இந்த   அம்மை நோயில் கொப்புளங்கள் ஊர்ந்தன.

ஊர்தல் வினைதான் எத்துணை அழகாகப் புகுத்தப்பட்டுள்ளது  எம் தமிழே!

தனிமைச் சுவையுள்ள சொல்லை எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாம் கண்ட திலை.  உண்மை உண்மை.

எல்லா மொழிகளும் இனிமையே ஆகும்.

எழுத்துப் பிழைத் திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: