சனி, 3 ஆகஸ்ட், 2019

ஒளஷதம் - அவுடதம் - ....( மருந்து)

இப்போது மருந்துக்கு மற்றொரு பெயராகிய ஒளடதம் (ஒளஷதம் ) என்பதன் அமைப்பினை ஆராய்வோம். இச்சொல் தமிழ்நாட்டின் சிற்றூர்களிலோ பிற தேயங்களிலோ பேச்சு வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. மருந்து அல்லது "மெட்சன்" (ஆங்கிலம்) என்பதே வழக்கில் உள்ளதாகும். ஒளடதம் என்பது எழுத்துலகிலும் அருகியே வழங்குகிறது.

மருந்துகள் பண்டைக்காலங்களில் பச்சிலைகளை அரைத்துக் கரைத்துக் குடிப்பனவும் தேய்த்துக்கொள்வனவும் அவித்துத் தேய்த்துக்கொள்வனவும் குடிப்பனவும் என வகைகள் இருந்தன. இவற்றுள் ஒளடதம் என்பது சொல்லமைப்பில் அவித்துப் பாவிப்பனவாகவே இருந்தன. ஏனைச் சொற்கள்போல நாளடைவில் இச்சொல்லின் பொருள் விரிந்து அவிக்காத மருந்துகளையும் அகப்படுத்திக்கொண்டது.

இச்சொல் அவித்தல் என்ற சொல்லினின்று வருகிறது. இவ்வாறு:

அவி + இடு + அது + அம்.
=அவி + இடதம்
=அவிடதம் > அவுடதம் > ஒளடதம்.

அவி என்ற சொல்லீற்றின் இகரம் வீழ்ந்து இடு என்பதன் இகரம் உகரமாய்த் திரிந்தது. உகரமே இன்றி அவ்டதம் என்று சொல்வாரே பெரும்பான்மை. பேச்சில் இவ்வாறு சொல் அடையும் குறுக்கங்களை எழுத்து மேதையர் கணக்கில் கொள்வதில்லை.

தமிழினின்று புறப்பட்ட சொற்களில் அவுடதமும் ஒன்று.

ழகர டகர ஷகரப் பரிமாற்றங்கள் மொழியில் உள்ளவை.
-டு: பாடை > பாழை > பாஷை. மற்றும் வாடகை < வாழகை. பொருள் வேறுபடுகையில் திரிபாகாது: -டு: கூழை/ கூடை

பிழைபுகின் திருத்தம் பின்
oru thiruththam cheyyappattathu  7.8.2019

கருத்துகள் இல்லை: