வியாழன், 13 பிப்ரவரி, 2025

ஆபத்து - முன்சொலா முடிபுகள்.

 முன் சொல்லப்படா முடிவுகள் இங்கு கவியில் வருவதுபோல் முன்சொலா என்று திரிபுசெய்து இட்டிருக்கிறோம். மகிழ்வு நமதே.

ஆக்களைப் பற்றிக்கொண்டு செல்வது ஒரு பண்டைப் போர்த்தொடக்கத் தந்திரமாகும்.  முதலில் பயிற்சிபெற்ற கள்ளர்களை அனுப்பி  மாடுகளைக் கவர்ந்து வரச்செய்வர்.  எதிரி நாட்டவன் வெகுண்டெழுவான். போர் தொடங்கிவிடும்.   ஆ பற்று என்பது ஆ பத்து ஆகி ஒரு சொல்லாய்  ஆபத்து என்றாகிவிட்டது. இதுவும் பொருத்தமே.

இந்தச் சொல் இவ்வாறு அமைவதாகச் சொல்வது,  முதன்மையான கண்டறிவு ஆன காரணத்தினால், இது முன்னர்க்  கூறினோம். இது மக்களிடை வழங்கி மொழியிற் புகுந்த ஒரு சொல். 

ஓரு புதுமையான நடப்பு நிகழ்வு மிக்க வலிமையுடன் வந்து தாக்கினால் அதைக் குறிப்பதற்கு ஒரு சொல் வேண்டுமே.

ஆ+ வல் + து >  ஆவற்று >    ஆவத்து > ஆபத்து ( வகரப் பகரத் திரிபு)

இவ்வாறும் இச்சொல் அமையும்.  ஆகையினால் இது ஒரு இருபிறப்பி அல்லது பல்பிறப்பிச் சொல்.

ஆவது ( ஆகக் கூடியது)   அற்றுப் போனாலும்  ஆபத்துத்தான். இது:

ஆ + அற்று > ஆ+ அத்து >  ஆவத்து >   ஆபத்து என்று ஆகும்.

அற்று என்ற எச்சம் அத்து என்று திரியும்.  இன்னோர் அத்து இருக்கிறது. அது வேறு.

இங்கு ஆ என்பது ஆதல் வினை.  இன்னொரு வடிவம்:  ஆகுதல்.  இதில் கு என்ற வினையாக்க விகுதி சேர்ந்துள்ளது.

பிற பின் காண்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

உளுந்து - தானியப் பெயர்.

 தானியங்கள் என்பவை ஒரு குடியானவன் தனக்கென்று ஒதுக்கிவைத்துக்கொண்ட கூலங்கள். விளைத்த எல்லாவற்றையும் அவன் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. வேலை செய்தோருக்கு அளக்க வேண்டும். அப்புறம் ஊர்ப்பெரியவர்களுக்கும் கொடுக்கவேண்டும்.   பிற குடியாவர்களிட மிருந்து முன் பெற்றவற்றைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.  அப்புறம் அரசனுக்கு உரியவற்றைத் தனியாக ஒதுக்கி வைத்து அவனுடைய அதிகாரிகள் வரும்போது முறைப்படி அளிக்கவேண்டும். வீட்டுக்கு வேண்டியவற்றை ஒதுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பிச்சைக்காரனுக்கும் ஏதாவது வைத்திருக்கவேண்டும்.  நிலக்கிழாருக்கு ( ஜமீந்தாருக்கு) வேண்டும்.  நாமே இவ்வளவும் அவன் கணக்கு என்று ஒரு பத்தி எழுதமுடிகிறது.  அவனே வந்து எழுதினால் ஒரு பக்கத்துக்கு மேலாகவே இருக்கும்.  நீங்கள் சம்பளம் எடுத்தவுடன் செலவுத்திட்டம் எழுதிப்பார்த்தால் கடனாக வந்து முன் நிற்கும்.  துன்பமாதமே என்று பாடவேண்டி இருந்தாலும் இருக்கும்.  மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் என்று பாகவதர்போல் பாடமுடியாது.  இவ்வாறு இன்னலுற்றுத் தான், தனக்கு என்று ஒதுக்கவேண்டி யுள்ளது.   இப்படி ஒதுக்கியதற்கு ஒரு தனிப்பெயர் வேண்டுமே!  தான் இயம் -  தன்னால் இயன்றது என்று ஒதுக்கியதுதான் பின் தானியம் என்று உருவெடுத்தது.

இயன்றது என்பதும் இயம் என்பதும் எப்படி ஒன்றாகும் என்று கேட்கவேண்டும். இயம் > இயன் என்றாகும்.  அறம் >  அறன் என்றாகவில்லை?  திறம் - திறன் என்றாகவில்லை?  உரம் - உரன் என்றாகவில்லை?  பதம் > பதன் என்றாகவில்லை?  பதனழிவு என்ற பதத்தைப் பாருங்கள். இயம்> இயன் என்பதும் அத்தகையதே.  தமிழின் மொழி இயல்பு அது.  மகர ஈற்றுச் சொற்கள் னகர ஈறாம்.  இயன்> இயன்+து > இயன்று என்று எச்சமாகிவிடுகிறது. இயன்> இயன்று > இயன்ற என்று மாறிமாறி அமையும்.  தனக்கு இயன்றதை வைத்துகொள்வது தானியம் என்று அறிக.

ஆங்கில நிலச் சட்டத்தில் personalty என்று ஒரு சொல் உள்ளது.  A person's personal property என்று இதற்குப் பொருள்.  இதுபோலுமே, தானியம் என்றால் தனக்கு என்று வைத்துக்கொள்ள இயன்ற கூலங்கள் ஆகும்.

இவற்றுள் உளுந்து என்பது உண்டால் உடலில் ஓர் உந்துதலைத் தரும் தானியம் என்று பொருள். உள்ளில் சென்று உந்துதல் ஆற்றல் தரும் தானியம் என்ற பொருள் உள்+ உந்து > உளுந்து என்று பெயர் அமைந்தது.   அதன் ஆற்றலைத் தெரிவிக்குமாறு அமைந்த சொல்.

கூலம் என்பது தானியப் பொருளதுதான்.  விளைந்த பின் அறுவடை செய்து ஒன்றாகச் சேர்க்கப்படுவது என்று பொருள்.  குல் என்பது அடிச்சொல். குல்> குலை. குல் > கூல்> கூல்_+ அம் >  கூலம்,    இதன் சொல்லமைப்புப் பொருள் ஒன்றாகக் கொணர்ந்து குதிருக்குள் வைக்கப்படுவது என்பதுதான். வேறு சம்பளத்துடன் சேர்த்துத் தரப்படுவது என்று சொல்லலாம்.  சம்பளம் என்பதே சம்பு - நெல்,  அளம் = உப்பு என்று  இரண்டும் முன்னாளில் ஒன்றாகக் கொடுக்கப்பட்டதனால் வந்த பெயர்தான். குல் > குலம் என்றால் சேர்ந்துவாழும் கூட்டம் அவ்வளவுதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

 

சனி, 8 பிப்ரவரி, 2025

சாரம் அபச்சாரம்

 இன்று சாரம், அபச்சாரம்  என்பவற்றைத் தெரிந்துகொள்வோம்.  அவற்றுடன் சொல்லாக்கத்தையும் அறிவோம்.

அபச்சாரம் என்ற சொல்லில்  அப என்பதையும் அறிக.   இவ் அப என்பது  அவ என்று அறிக.   அவ> அப என்பது வகர பகரப் போலி. இது எவ்வாறு என்பது பழைய இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது,  ஒருமுறை விளக்கியதை இன்னொரு முறை சொல்லலாம்.  நீங்கள் அப்போது இவ்விடுகையைப் படிக்கவில்லை என்பதற்காக அதையே திரும்பவும் சொன்னால் அதை ஒன்றுடன் இரண்டான முறை வாசித்தவர்களுக்கு எரிச்சல் ஏற்படுமாகையால் இம்முறையில் கூறியது கூறுவதைத் தவிர்த்துவிடுகிறோம். நேரம் இருக்கும்போது பழைய இடுகைகளையும் படித்துக்கொள்ளுங்கள்.

அவ என்பதன் முழுச்சொல் அவம் என்பதுதான்.   அவ் என்பது  மூலம்.  இது கிழித்து வேறாக்கி விடுதல், பிரித்துவிடுதல் என்று பொருள்தரும் மூலம். ஒன்றைப் பலவாறு விளக்கலாம் ஆதலின், நீங்கள் சற்று வேறுபட்டும் விளக்கிக் கொள்ளலாம்.  இறுதியில் பொருளை விளக்கம் செய்து இதே நிலைக்கு வருவீரானால் அதுவும் ஏற்றுக்கொள்ளற்குரியதே ஆகும்.  அவ்+ இழ் என்ற சொல்லும் அவிழ் என்றாகும் பின் அவிழ்தல் வினை.  ஒன்றை அவிழ்க்குப்போது கட்டுகளை வேறாக்கிவிடுகிறோம்.  அதனால் இந்த அவிழ்தல் என்ற சொல்லையும் நாம் அறிந்துகொள்கிறோம்.

இதற்குமேல் பல சொல்லாமல் அபச்சாரம் என்ற சொல்லைப் பார்த்தால்,  சாரத்தைப் பிரித்துவிடுதல். சாரத்தை இல்லாமல் ஆக்குதல் என்ற பொருளைத் பெறுகிறோம். இப்போது அறிதலுக்கு நெருங்கிவிட்டோம். ஆனால் அவ் > அவி என்பதில் நீரில் போட்டு ஒன்றை அடுப்பில் வைத்து வேவிப்பதை அல்லவா உணர்கிறோம்.   ஆம், அதிலும் ஒன்றைப் பிரிப்பது, வேறாக்குவது, வேறு உருவிற் படுத்துவது என்று சொல்லி முன் கூறியவற்றுடன் பொருத்த முடிகிறது. அரிசியை வேவித்துச் சோறாக்கினால் அரிசியை வேறுபடுத்திவிட்டோம் என்பதற்குப் பொருந்துகிறது.  குளிர்நீரைச் சூடாக்கினால் சுடுநீர் வேறுபொருள்தான்.  ஆனால் சுடுநீர் குளிர்ந்து மீண்டும் தண்ணீர் ஆனால் அப்படி ஆவது நீரின் தன்மை. அவி என்ற சொல்லின் பொருளை அது பாதிக்கவில்லை 

அவ். அவ. அவி, அவிழ். அவிர்.  அவ> அப என்பன கண்டோம்.

திரைத்தவிர்தல் என்று ஒரு கூட்டுவினைச் சொல் இருக்கின்றது. ஒரு பொருள் விட்டுவிட்டு ஒளிசெய்தால் அது திரைத்து அவிர்தல் ஆகும்.  ஆகவே திரைத்தவிர் பன்மணி என்று குறித்தது ஒரு ஒளிசெய் மணியைச் சொன்னதுமுண்டு. திரைத்துணி சுருங்குவதும் பின் விரிவதும் உடையது.  அதனால் அதைத் திரை என்றனர். 

திரைந்த தோலுடைய தவளை  போன்ற உயிரி, தேரை எனப்பட்டது, திரை> தெரை என்று திரிந்து பின் முதல் நீண்டு தேரை என்று மாறிவிட்டது. முதலெழுத்து இவ்வாறு நீள்தல் தமிழில் பலகாலும் நிகழ்வதுதான்.

சாரம் என்ற சொல் ஒன்றைச் சார்ந்து இருத்தலையும் இருக்கும் தன்மையையும் குறிக்கும். சார்தல் என்பது சேர்தல் என்பதன் திரிபுதான்.  சார் என்ற வினைசொல் உகரம் பெற்று சாரு என்று வராமல் சாறு என்றே வரும். சொல்லிறுதிக்குச் ரு பொருந்தாது. சார்ந்து எழும் விளக்கங்கள், நெறிகள், உள்ளீடுகள் என எவையும் சாரம் ஆகும். இந்தச் சொல்லும் அதன் திரிபுகளும் மற்ற மொழிகளிலும் வருவதில் வியப்பு ஒன்றுமில்லை. அந்த மொழிகளை இங்கு விரித்தல் வேண்டியதில்லை.

சார்ந்து உள்ளவற்றை நிலைகுலையச் செய்யும் ஒரு செயலைத்தான் அபச்சாரம் என்கிறோம்.  ஒழுக்கமுறை அறநெறிகள் என எதையும் சார்ந்து எழுவன சாரம் ஆகும்.  சாறு என்பது சார்ந்து உள்ளிருக்கும் நீர்ப்பொருளைக் குறிப்பது காணலாம்.

சாறு என்ற சொல்லைச் சோறு என்ற  சொல்லுடன் ஒப்பிடுக.  அரிசி அவிக்கப்பட்டுத் தன் திடநிலையிலிருந்து சோர்ந்து விடுகிற காரணத்தால் - அதாவது மெதுவாகிவிட்ட காரணதால் - சோர் > சோறு என்றானது.  இவை அமைப்பில் ஒன்றான சொற்கள்.  பொருள் வேறு.

ஆகவே சாரம் அபச்சாரம் பொருளும் அமைப்பும் அறிந்தோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.