செவ்வாய், 8 மார்ச், 2022

பிறர் என்ன நினைப்பர் என்ற கவலை

 எனைப்பிறர் நினைப்ப தென்ன

என்பதே நினைத்தி  ருந்தால்

முனைப்பொடு செயல்கள் ஆற்றும்

எழுச்சியும் தோன்றல்  ஏது?

மனைப்படு ஞமலி  தானும்

தனக்குறு எண்ணம் ஏற்று,

வினைகடன் ஆற்றும் காணீர்

வீட்டினர் மகிழ்ந்து போற்ற.


தன்கடன் ஆற்றும் நாளில்

பின்னுள மக்கள் கூட்டம்

என்சொலும் என்று எண்ணி

எழுசெயல் தயங்க லாகா

பொன்வழி என்றும் செல்க

பூவென மலரும் ஆற்றல்

பின்முனும் பார்த்து நீங்கள்

பேதலித் திருத்தல் வேண்டா.


ஒரு நாட்டின் தலைவரை எழுத்தாளர்கள் கேட்டஞான்று

அவர் பிறர் என்ன கூறுவர் என்ற எண்ணம் தமக்கில்லை 

என்று கூறியது சரியான பதிலானது கண்டு இக்கவி எழுந்தது.

நாய் என்றும் நன்றியுடனே செயலாற்றிக்கொண்டிருக்கும்.


அருஞ்சொற்பொருள்

எனை - என்னை,

முனைப்பொடு - முன்சென்று எதையும் செய்யும் ஆற்றலோடு

எழுச்சி -  தோன்றும் காரியங்களின் மேல் உண்டாகும் ஆர்வம்

மனைப்படு ஞமலி - வீட்டின் நாய்

தனக்குறு எண்ணம் -  தனக்குத் தோன்றியவாறு

வினைக்கடன் -  செய்யும் கடமை

என் சொலும் - என்ன சொல்வார்கள்

எழு செயல் - செய்ய வேண்டிய காரியங்கள்

தயங்கலாகா -   தயங்கலாகாது

பொன்வழி -  போற்றத்தக்க வழி

பூவென - நன்றாக

பின் முனும் - முன்னும் பின்னும்


இங்குள்ள செய்தியையும் சொடுக்கி வாசித்துக்கொள்ளுங்கள். இங்கும் ஒரு கருத்து உள்ளது:-

https://youtu.be/FSkdeXupjVc


பாடி மகிழ்க

மெய்ப்பு பின்


திங்கள், 7 மார்ச், 2022

ஆலாபனம்

 ஆலாபனம் என்னும் சொல்லை அணுகி அறிவோம்.

பண்டைத் தமிழ் என்பது முத்தமிழாக இருந்தது. இவை, இயல், இசை மற்றும் கூத்து அல்லது நாடகம் என்பன.  

இக்காலங்களில் படுத்துக்கொண்டும் சிலர் ஆடுகின்றனர்.  மேடையில் படுத்துக்கொண்டு ஆடினால், பார்க்கத் திரண்டவர்கள் அதனைக் கண்டு களிப்பதென்பது சற்றுக் கடினமாகிவிடும்.பெரும்பாலும் நின்றுகொண்டுதான் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஆகவே நட்டு நின்றுதான்  தொடங்கி, அதன்பின் அங்குமிங்கும் அசைந்து ஆடுதல் எளிது. நடு> நட்டு;  நடு> நடி.  நடு > நட என்பன உன்னுக.  படுத்துக்கொண்டும் இருந்துகொண்டும் அசைவுகளை உண்டாக்கி நடனம் செய்தலும் கூடுமெனினும் அது பெரும்பான்மையன்று.  சொல்லாக்கத்தில் கவனிக்கப்படுவது நின்றசைதலே.

எனவே,  நடு > நடம்; நடி என்று சொற்கள் அமைந்தன.

நடனம் என்பதை, நடி + அன் + அம் > நடனம் என்று காட்டுவது சரிதான்.   மனிதனுக்கு நடு என்பதிலிருந்து நட என்பதை  அறியச் சிறிது காலம் கடந்தது.  நட என்பதிலிருந்து நடி என்பது சொல்லிலும் செயலிலும் தோன்றச் சிறிது காலம் சென்றது.  மனித இனம் கண்டறிந்து செய்த இவற்றை இன்று நாம் ஒரு குழந்தயைக் கவனிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.  குழந்தை தவழ்ந்து, பின் எழுந்து நின்று பட்டறிவின்மையால் விழுந்து எழுந்து நட்டு நின்று மெல்லவே நடக்கிறது. பின்னாளில் ஆடுவோரைக் கண்டு அதுவும் ஆடத் தொடங்கிவிடுகிறது.

நடனம் என்பதை நடு என்ற மூலத்திலிருந்தே காட்டினால் அதனால் உண்டான ஒரு முரண் இன்மை காண்பீராக.  நடு என்பதே நடி என்பதற்கும் நட என்பதற்கும் சொல்லுருவாக்கத்தில் அப்பன் பாட்டன் போலாம் என்பதை உணர்க. கிழக்காசியாவில் உள்ளவர்கள், மிகப்பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு மூதாதையைக் குறிக்கும் சொல்லைக் குடிப்பெயராய்ப்  போட்டுக்கொள்கிறார்கள். அப்பனின் பிள்ளை என்று குறுகலாக த் தெரிவிக்காமல்,  ஒரு பெரு மூதாதையின் பிள்ளைகள் நாங்கள் என்று சொல்வதற்கொப்பதே அதுவாகும்.  ஏதும் தவறில்லை; அடையாள விரிவுதான் இது என்று உணரவேண்டும். இதுபோல் நடு> நடி என்று காட்டினாலும் அது அடையாளவிரியே ஆகும். ஆகவே இஃது அடைவிரி உத்தி.

இவற்றை இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் தமிழ் முத்தமிழானதால் அது மூத்த தமிழ் என்றும் உணரப்படும். தமிழில் இசைநூல்கள் பல இருந்தன. அவை காப்பாற்றுவாரற்று அழிந்தன. பெரும்பேராசிரியர் சாமிநாதையர் போலும் மொழிக்  காவ   லறிஞர்கள் முற்காலத்தில் தோன்றாமற் போயினமையே காரணமாகும்.  

ஆலாபனம் என்ற சொல் இன்று தமிழிலும் பிற மொழிகளிலும் வழங்குகிறது. இதற்குக் காரணம் இசைப்பயிற்சி விரிந்தமையே ஆகும்.  அங்கும் தமிழ்வழி வந்த சொற்கள் வழங்குவது நம் நற்பேறு என்போம்.

ஆலாபனம்:

பாடும் இராகத்தின் அகலத்தை அல்லது விரிவினைக் கேட்போருக்குச் சென்று சேர்க்க, தாளம் முதலியன இன்றிப் பாடிக்காட்டுவது ஆலாபனம். இது காரண இடுகுறி. ஏன்? இராகத்திற்காக என்ற பொருள் சொல்லில் மறைவாய் உள்ளது. வழக்கில் அறியப்படுகிறது. அதனால்தான்.

இதில் ஆல் என்பது அகல் என்பதன் திரிபு.  இராகத்தின் அகலம் காட்டுவது.

ஆபு  என்பது ஆதல் .  நிறைவேற்றுதல் .   ஆ: வினைச்சொல்.  பு:  தொழிற்பெயர் விகுதி. இச்சொல் தனித்து வழங்கவில்லை. இச்சொல்லில் உள்ளுறுப்பாய் உள்ளதை அறியலாம்.  ஆ, பு என்று தனித்தனி கொண்டாலும்  விளைவு ஒன்றே ஆகும்.

ஆபி என்ற இன்னோர் உள்ளுறுப்புச் சொல்லையும் இன்னொரு கால் கவனிப்போம்.

அன்  - சொல்லிடைநிலை.

அம் - விகுதி.

இராகத்தின் விரிவு உணர்த்தும் பாட்டின் பகுதி.

இதனை,  ஆல் ஆ பன்னம் >  ஆலாபனம் என்று காட்டினால் அஃதே. பன்னுதலாவது   மீண்டும் மீண்டும் சொல்லுதல்.  ( விரிசொற்றல்).  பன்னு அம் > பன்னம் > பனம் இடைக்குறை.

பன்னுதல் என்பது:  பல் > பன் > பன்னுதல்.  பலமுறை வெளித்தருதல். இச்சொல் ஆலாபனம் என்பதில் வெளித்தோன்றியதுபோலவே, சொற்பனம் என்பதிலும் தோன்றிற்று. தூங்கும்போது சொல்லைப் பன்னுவதாகும். பின்னர் சொல்லைப் பன்னியவாறு உறங்குதலுக்கும் உறங்குகையில் கனாக் காணுதற்கும் பெயரானது என்பதறிக

மனிதன் தன் மனப்போக்குக்கு ஒப்ப எவ்வாறு திரித்துக்கொண்டாலும் சொல்லிக்கொண்டாலும் உண்மை இதுதான்,  சொற்பன்னுதல் தான். போந்த வடிவங்கள்: சொற்பன்னம், சொற்பனம், சொப்பனம், சொப்நம், ஸ்வப்நம், வேண்டியாங்கு திரித்துக்கொள்க.  அகலாகுபன்னுதலும் அவ்வாறே.

சொல் திரிந்து பொருள் திரியாமை ஒருவகை; சொல் திரிந்து பொருளும் திரிதல் இன்னொரு வகை.

தொகுத்தலையும் குறைச்சொல்லையும் இங்கு குறை ( முக்குறை) என்றே குறிப்போம்.  இவற்றை வேறுபடுத்துவது இலக்கணத்தில் வேண்டியது. இங்கு வேண்டாதது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

தட்டச்சு பிறழ்வுகள் பின்னர் திருத்தப்பெறும். நீங்கள் 

காண்பனவற்றையும் பின்னூட்டம் செய்து தெரிவிக்கவும்.





ஞாயிறு, 6 மார்ச், 2022

வாரம் ஒருமுறை வந்து காணும் நாய்க்குட்டி.

 என்னிடம் வந்து இனிதாய்  விளையாடச்

சின்னஞ்  சிறுகுட்டி  இங்குவந்து  ----   முன்பாயும், 

யான்காத்  திருக்கின்றேன் என்மேல் அதுதாவி

தான்மகிழ் வைரவன் காண்.


வாஞ்சையுடன்  வாசற்குக்  குக்கலிது    வந்ததும்

ஊஞ்சலில் ஆடலை மிஞ்சிவிடும் ----  காஞ்சுகி

வெண்மை உடுத்து விளைக்குமே காவலுக்கு

வண்மையாய் என்செய்வேன் யான்.


இது சற்றுநேரத்தில் இங்கு வரவிருக்கும் நாய்க்குட்டிக்காக காத்திருக்கையில்காத்திருக்கும் பெரியவருக்காக யான் பாடிய இருவெண்பாக்கள்.  இவற்றைப் படித்து  நோட்டம் செய்து பின்னூட்டம் செய்யுங்கள்.  செப்பலோசை மற்றும் சொற்பயன்பாடு இன்னும் உங்கள் கற்பனையில் ஊறும் எதையும் தொட்டு எழுதுங்கள்.   காத்திருக்கும் முதியவர் படம் கீழே.இச்செய்யுள்கள் காண் என்றும்  யான் என்றும்  நாள் என்ற வாய்பாட்டில் முடிந்தன. வாஞ்சையுடன் -  இங்கு ஐகாரக் குறுக்கம்.   வாஞ்-சயு-டன்  என்பதுபோல்  சை என்பது ச என்று குறுகிற்று. இதனால் கூவிளங்காய்ச் சீரானது.

வாரம் ஒருமுறை இந்த நாய்க்குட்டி வந்துவிடும். இல்லாவிட்டால் உறங்காமல்கத்திக்கொண்டிருக்கும். தொலைவிலிருக்கும் முதியவருடன்  நேசம். இந்த நாயின் எசமானியும் பையனும் கொண்டுவந்துவிடுவார்கள்.


அருஞ்ச்சொற்பொருள்.


காஞ்சுகி வெண்மை -  வெண்மயிர் போர்த்த உடலுடைய  ( நாய்க்குட்டி )

காஞ்சுகி  - மேற்சட்டை. 

விளைக்கும் காவல்  -  காவல் காக்கும் செயல்.

வண்மையாய்  -   கொடையாய் அளித்தலைக் குறிக்கிறது.

அது தரும் காவலுக்கு என்ன கைம்மாறு என்றவாறு.  

குக்கல் - ( சிறு )  நாய்க்குட்டி.

வைரவன் - நாய்க் குட்டிக்கு உயர்வான பெயர்.

குறுக்கல்  என்ற சொல் குக்கல் என்று குறுகிற்று.  சின்ன நாய் என்பது பொருள். 

நாளடைவில் இக் குறுமைப் பொருள் மறைந்தது.





அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்