வியாழன், 26 ஆகஸ்ட், 2021

கு+ இ = கி ஆகிவிடும். இது சரிதானா?

 ஒற்று  என்பது புள்ளி வைத்த எழுத்து.   எடுத்துக்காட்டு:   ( ச் ) ( ம் ) என்பன.  ஓர் எழுத்து "கி"  ஆவது என்றால்,  அது  க் + இ என்ற இரண்டும் சேர்ந்திருக்க வேண்டும்.  இதை அறிந்தவரிடம் கு + இ என்பது கி ஆகிவிடும் என்றால் முன்னரே அவர் அறிந்துவைத்துள்ளதற்கு அது முரண்படுவதால்,  அவர் குதித்தெழுந்து கத்தவில்லை என்றால்,   செவிடரோ இவர் என்ற ஐயப்பாடு உங்களுக்கும் எழ வேண்டுமே!

சிலரைக் கத்தவிட்டுச் சில வேளைகளில் நாம் அதில் நுகர்ச்சி ( அனுபவித்தல் ) அடைந்து மகிழலாம்.  அவர் கத்தலால் கேட்பவர்க்குக் குத்தல் எதுவும் ஏற்படப் போவதில்லை.

இப்போது இதைப் பாருங்கள்.

வருதல் என்பதில் வரு என்பதே வினைப்பகுதி அல்லது ஏவல் வினை.  ஆனால் வருகிறான் என்ற ( இலக்கணப்படி அமைந்த சொல்லில் )  :

வரு + கிறு  + ஆன் என்பதுதான் உள்ளுறைவுகள் ஆகும்.

ஆனால் கிறு என்ற சொல்துண்டு எங்கிருந்து வந்தது?   ஏனைத் தமிழின மொழிகளில் இதைக் காணமுடியவில்லையே!

வருகின்றான் என்பதை எடுத்துக்கொண்டாலும் கின்று எங்கிருந்து வந்தது?

புலவர்கள் சிலர் கின்று என்பதைக் கண்டுபிடித்துக் கூறினர்.  கிறு என்பதையும் தான்.

கிறு என்பது கிறுக்கு என்பதிலிருந்து வரவில்லை.

வரு +   கு  + இன்று + ஆன்.    

இன்று என்பது தான் நிகழ்காலம் என்று உங்களுக்குத் தெரியுமே.

இங்கு கு + இன்று இரண்டும் சேர்ந்து  கின்று ஆகிவிட்டது.

கின்று என்பதிலும் ஓர் இடைக்குறை ஏற்பட்டு கிறு ஆகிவிட்டது.

எனவே கு + இ என்பது குவி என்றாகாமல் இங்கு கி ஆகிவிட்டது.

ஆனால் சந்தி இலக்கணப்படி குவி என்றாகவேண்டும் என்றால்  அப்படி ஆகவில்லை.  இந்தச் சொல் அமைப்பில் ஆகவில்லை. மற்ற சொற்களைப் பற்றி நாம் பேசவில்லை.

கு+ இன்று என்பது கின்று என்று வரும்.  குவின்று என்று வராது.  வாக்கியத்தில் வரும் சந்திக்கான இலக்கணம் இங்கு அடிபட்டு வீழ்ந்துவிடுகிறது. அது இங்குப் பொருந்தாது.

  இன்னும் எழுதலாம். நேரமாவதாலும்,  நாளை மருத்துவரைக் காணவேண்டி இருப்பதாலும் இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


புதன், 25 ஆகஸ்ட், 2021

விலாசம் என்பதென்ன? பெயர் என்பதென்ன?

 ஒரு  மனிதனுக்குப் பெயர் என்பது மிக்கத் தேவையானது ஆகும். இதனாலே பெயர் என்ற சொல்லுக்குப் புகழ் என்ற பொருளும் நாளடைவில் மக்களிடையே ஏற்படுவதாயிற்று.  பெயர்தலாவது ஓரிடத்தினின்று இன்னோரிடம் செல்லுதல். இதிலடங்கிய கருத்தை, ஒரு மனிதனிலிருந்து இன்னொருவனைப் பெயர்த்து அல்லது வேறுபடுத்தி அறிய உதவுவது என்று விரிவுபடுத்தினர். எவ்வளவு சிறிய இடமாயினும் ஒரு மனிதன் இன்னொருவனிடமிருந்து அப்பால்தான் இருக்கமுடியும். ஒருவனின் கால்வைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் இன்னொருவன் கால்வைக்கமுடிவதில்லை. அதற்குப் பக்கத்தில் கால்வைக்கலாம், இதன் காரணமாகப் பெயர்த்தறிதல் என்பதைத் தமிழன் கூர்ந்துணர்ந்துகொண்டான். இடப்பெயர்வு போன்றதே மனிதக் குறிப்பின் பெயர்வும் ஆகும்.  ஆதிமனிதற்கு மிகுந்த அறிவு இருந்தது என்பது இதனால் புரிந்துகொள்ளமுடிகிறது. The space occupied by an individual  on ground can only be taken up by one person at a time. Different persons occupying the same place at different times must be differentiated. 

ஒருவன் தன் வீட்டைக் கட்டிக்கொண்டு அதில் வாழ்கிறான்.  இன்னொருவன் அதற்கு  அடுத்துக் கட்டுவான்.  இப்போது உள்ள அடுக்குமாடி வீடுபோல், அதே இடத்தில் முற்காலங்களில் வீடமைக்கும் வழக்கமோ திறனோ வளர்ந்திருக்கவில்லை என்றாலும் ஒருவீட்டிலிருந்து இன்னொரு வீட்டைப் பெயர்த்தறிதல் நடைபெறவே செய்தது.  வீட்டுக்கும் பெயரிட்டுக் குறித்தான். அந்தப் பெயர்,  அழகாக, "நீவாசம்" என்றோ  " அக்காவீடு" என்றோ இருந்திருக்கலாம். பெயர்ப்பலகை போடாமல் குறிப்பிட்டு அறிந்துகொள்வது  " அக்காவீடு"  என்பது.  மாமாவீடு என்பது வேறுவீடு.  இதன்மூலம், மாமாவீடு என்பது அக்காவீட்டிலிருந்து " விலக்கி"  அறியப்பட்டது.  விலக்குதலுக்கான இந்த சிந்தனைத் தெளிவு 'பெயர்" என்பதன் தன்மையை உணர்ந்ததனால் ஏற்பட்டதாகும். 

இவ்வாறு விலக்கி அறிய ஏற்பட்டதுதான் விலாசம் என்பது.  வில என்பது அடிச்சொல். ஆசு என்பது விலக்க ஆவதான பற்றுக்கோடு ஆகும்.  ஆகவே வில+ ஆசு+ அம் = விலாசம் ஆகும்.   நல்ல தமிழ்ச் சொல் என்று அறிந்து,  உங்கள் மாணவர்களுக்கோ கேட்பவர்களுக்கோ விளக்கிச் சொல்லுங்கள். பிற்காலத்தில் இது முகவரியைக் குறித்தது.  கடைகள் முதலிய இடங்களுக்கு இடப்படும் குறிப்புச்சொல்லையும் முன்நிறுத்தியது.  விலாசம் என்பதை விலாஸ் என்று பலுக்கினால் அது பிற சொல்லைப் போல் தெரியும்.  அன்று என்று அறிக.

ஆசு என்பது முண்டாசில் கூட இருக்கிறதே. முண்டு என்பது துண்டுத்துணி. முண்டு ஆசு முண்டாசு.

வில்லிருந்து அம்பு புறப்படுகிறது.  அம்பை விலகிச் செல்ல உதவுவதே வில். வில் என்பது இங்கு அடிச்சொல் -  பிரிந்து சொல்லுதல் குறிக்கும்.  இதிலிருந்து விலகுதல் என்ற சொல் ஏற்பட்டது.  விலாசம் என்பது இவ்வடியிற் பிறந்ததுதான்.

வில்லா என்ற இலத்தீன் சொல்லும் இதனோடு தொடர்புடைய இரவல்தான். வில்லாக்கள் தனித்தனியான மாளிகைகள்.

வங்காளத்தில் தாம் கண்ட வளையல்களை  வங்காளம் > பங்காள் > பேங்கள் என்று குறித்த ஆங்கிலேயனும் கெட்டிக்காரனே.

வில் ஆசு அம் என்பது வில்லாசம் என்று லகரம் இரட்டிக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால்,  ஒரு லகர ஒற்றை இடைக்குறைத்து விளக்கலாம்.  உங்கள் மனநிறைவுக்கு.  எம் சிந்தனையில் அது தேவையில்லை.

விலகி விலகி அமைந்த உடற் பக்க எலும்புகள் விலா என்ற பெயர் பெற்றன. ஒரு மனிதனிடமிருந்து ஏதேனும் பெற்றுக்கொண்டு அடுத்தவனிடம் சென்ற பொருள்  வில்> வில்+தல் > விற்றல் ஆனது.  வில் > விலை.  வில் பு அன் ஐ > விற்பனை.

ஒரு சொல்லமைவது,  அந்த அமைப்புச் செயலின் முன்நிற்போனையும் அவன்றன் சுற்றுச்சார்பினையும்,  அவன் சிந்தனையையும்  சிறிதளவு அவன் சார்ந்துள்ள மொழிமரபினையும் நிலைக்களனாகக் கொண்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.  எடுத்துக்காட்டாக பெயர்தல் என்ற சொல் அவன் சிந்தைக்குள் வரவில்லை என்றால்,  "வேறு" என்பதையே அவன் எண்ணிக்கொண்டிருந்திருப்பான் என்றால், பெயர் இட்டுக்கொள்ளப்படுவதன்று, ஆடைபோல் உடுத்துக்கொள்ளப்படுவது என்று கருதிக்கொண்டிருந்திருப்பான் என்றால்  அவன் அமைக்கும் சொல்:  வேறுடை என்று வந்துவிடும். உடுத்தும் உடையைக் குறிப்பதால் சரியில்லை, அடை என்பதே சரி என்று அவன் மனைவி சொல்கிறாள் என்றால் அதை அவன் வேறடை என்று மாற்றிக்கொள்வான்.இதில் இன்னும் கருதுவதற்கு இடமுள்ளது. இத்துடன் நிறுத்துவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கசானா கஜானா (கருவூலம்)

கஜானா  காலி என்னும் தொடர் மக்களிடையே பெரிதும் வழங்குவதொன்றாம். இதை முன் ஆராய்ந்தவர்கள் இச்சொல் உருதுமொழியில் வழங்கித் தமிழுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள்.  உருதுமொழி தமிழ்நாட்டுக்கு வடபால் பேசப்பட்டது என்பதை நாம் அறிவோம்.  இது முஸ்லீம் மக்களிடையே வழங்கி வளர்ச்சி பெற்றது. இம்மொழியில் அரபுச் சொற்களும் பல உள்ளன.

கஜானா என்பதற்குத் தமிழில் தொன்றுதொட்டு வழங்கும் சொல்:  கருவூலம் என்பது.

பிற்காலத்தில் வழக்குக்கு வந்து வளர்ச்சியடைந்து இனியன என்றும் பேசுவோரால் பாராட்டப்படும் மொழிகள்,  தமக்கு வேண்டிய சொற்றொகுதிகளை முன்னரே வழங்கிவந்த பழைய மொழிகளிலிருந்து மேற்கொண்டன என்பது தெளிவு.  பழைய மொழிகளின் சொற்களை எடுத்துத் திரித்து தமக்கு வேண்டியவாறு ஆக்கிக்கொள்வதைத் தவிரப் புதுமொழிகட்கு வேறுவழியில்லை. 

மரித்தல், மரணம் என்ற சொற்களிலிருந்து "  மாரோ " என்ற சொல்லைப் படைத்துக்கொண்டமை போலவேயாகும்.  மாரோ - இறப்பைக் குறிக்கிறது. இதேபோல் ஈரானிய மொழியிலிருந்து எடுத்தாளும் வசதி அவைகளுக்கு இருந்தது.

கஜானா என்ற சொல்லை முன்னிருந்த மொழியிலிருந்து பெற்றனர். தமிழ் முதலியவை முன்னிருந்த மொழிகள்.

செய்த சேவைக்கோ, விற்கும் பொருளுக்கோ விலையைப் பெற்றுக்கொண்ட பின்,  பணத்தைப் பெட்டியில் போடுவர்.  

விற்பனையில் காசு ஆனால் அதைப் பெட்டியில் போடுவது வழக்கம். 

காசானா(ல்)  பெற்றுப் பெட்டியில் போடு என்பது குறுகி காசானாப் பெட்டி என்றானது.  காசானா என்பது பின்னர் மெருகேறி கஜானா ஆனது.  இவ்வாறு சேர்த்து வைக்கும் பெட்டி கஜானா ஆகி,  பெட்டிக்குக் கஜானா என்பதே பெயருமானது.   பணம் சேமித்த பெட்டி ஆனதால், சேமிப்புக்கும் அதுவே பெயரானது.

வறுத்த முந்திரிக்கொட்டை விற்றுக்கொண்டிருந்த ஒரு மலையாளிப் பெண்ணிடம் ஒரு வெள்ளைக்காரர்  என்ன இது என்று கேட்க,  விலையைக் கேட்கிறார் என்றெண்ணிய பெண்,  காசினெட்டு   ( காசுக்கு எட்டு எண்ணம்) என்றாள்.  அதுவே " காஷியுனட்"  என்று அதற்கு ஆங்கிலத்தில் பெயராகிவிட்டது என்பது நீங்கள் அறிந்திருக்கலாம். 

ஒம்னிபஸ் என்றால் இலத்தீனில் எல்லாருக்கும் என்பது பொருள். அதுவே பின் குறுகி பஸ் என்று ஆயிற்று. இச்சொல்லில் பஸ் என்பது ஒரு வெறும் விகுதி.

கசனா அல்லது கஜானா என்பது அழகான சொல்தான்.


அறிக மகிழ.

மெய்ப்பு பின்.