சனி, 1 ஆகஸ்ட், 2020

இரத்தம் - "ரெட்" (ஆங்கிலம்)

இதில் இரு சொற்களை ஒப்பாய்வு செய்வோம்.

ஆங்கிலத்திலுள்ள சிவப்பு என்று பொருள்படும் "ரெட்
என்னும் சொல், பலரும் அறிந்ததே.

இரத்தம் என்ற சொல்லில் உள்ள இகரத்தையும்
 இறுதிநிலையில் அமைந்த "தம்" என்பதையும் 
எடுத்துவிட்டால் நடுவிலிருப்பது "ரத்"  (ரெட்) என்பதே.

இந்தோ ஐரோப்பிய மூலமொழி எனப்படும் 
புனைவாக்கத்தில் இதை ஏறத்தாழ "ரெத்" என்றே 
கண்டுபிடித்திருக்கிறார்கள்.ஆங்கிலத்துக்கு அது 
ஸ்காட் மொழியிலிருந்து வந்தது என்பர். 
ஸ்காட் மொழிக்கு அது ஸ்காண்டிநேவிய வட்டாரத்தி
லிருந்து வந்திருக்கவேண்டுமென்று தெரிகிறது. 
அவ்வட்டாரத்தில் ரெயனிர் ரோவன் என்று பலவாறு 
திரிந்து வழங்கியுள்ளதாம்.

இலத்தீனில் அது "ருப்ரம்" என்னும் அழகான வடிவமாய் 
உள்ளது. சிவப்புக் கல்லுக்கு "ரூபி" என்று நாமறிந்ததே.
 இலத்தீனிலே அது  "ரூஃபூஸ்",   "ரூபர்"  " ரூபிகுண்டஸ்" 
என்றெல்லாம் வேற்றுமைப்படும். ரகர வருக்கம் 
முன்னிலையில் இருந்தபடி இருக்க, வால்கள் - விகுதிகளில்
மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழில்போல சமஸ்
கிருதத்திலும் இலத்தீனிலும் வேற்றுமைகள் வரும்: 
தமிழில், மேசை, மேசையை, மேசையோடு, மேசைக்கு 
என்றெல்லாம் உருபுகள் வருவதுகாண்க. வேற்றுமை 
இல்லாத (இவ்வாறு சொல்லிறுதி மாறியமையாத) 
மொழிகள் பல உலகில் உள்ளன. அது நிற்க.  ஆங்கிலத்தில்
இது உள்ளதென்றாலும் மெத்தக் குறைவு.  எடுத்துக்காட்டு:  
ஹி >  ஹிம் என்பது காணலாம். எழுவாய், பயனிலை 
என்ற  எந்நிலையிலும் மலாய் முதலிய 
மொழிகளில் சொல்லிறுதி மாற்றமென்பது இலது.

இரத்தம் என்பதன் மூலம் அரத்தம் என்பதே. இதை 
மொழிநூலார் கூறியுள்ளனர்.  அர் என்பதே சிவப்பு என்று 
பொருள்படும் அடிச்சொல். அர்+ அத்து + அம் = அரத்தம்.  
அத்து என்பது அது என்ற சொல்லின் தகர இரட்டிப்பு
வடிவம். இங்கு சொல்லாக்க இடைநிலையாய் வருவது.  
கணித்தல் குறிக்கும் கணிதம் என்ற சொல்லில் இது 
என்பது இடைநிலையாய் வந்தது போலுமே இஃது 
என்றறிக.  கணி + இது + அம் = கணிதம். ஓர் இகரம்
கெட்டது. துகரத்தில் உகரமும் கெட்டது. அரத்தம் 
என்பதிலோர் உகரம் கெட்டது.   அர் + அத் +
 (த்+உ) +அம் > அர் அத் த் அம் >  அரத்தம் எனவறிக.

அர் என்ற அடிச்சொல் வந்த மற்ற சொற்கள்:   
அர் அன் > அரன்; அர் அத்து ஐ > அரத்தை. என்று 
கூறுவர்.  அரன் : சிவன் குறிக்கும் சொல்.


அர் ஆனாலும் இர் ஆனாலும் ஒன்று  தலையிழந்து
ரூ ஆகி, பின் வெவ்வேறு இறுதிநிலைகளை 
ஆங்காங்கு வேண்டியவாறு திரித்துக்கொண்டு 
சொற்கள் பல்கியுள்ளமை இதனால் அறியலாகும்.
 இதில் இ-ஐரோ.  மூலமொழி மீட்டுருவில்
தகர ஒற்று கண்டிணைபுற் றிருப்பது சிறப்பே 
என்றுமுடிக்க.

அரத்தம் இரத்தம் என்ற வடிவங்களில் நடுவாகிய
ரத் என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகட்கும் ஏகி 
 ஆங்கு இடம்கண்டிருப்பது நாம் 
மகிழ்வதற்குரியதாகும்.

மெய்ப்பு - பின்.





மது உண்பவர் உண்ணட்டும்.

நச்சுநீர் உட்கொண்டு நம்மனோர் மாய்வரென்றால்
இச்சை   மதுவுண்ணல் ஏன்தடுப்பீர்----  சொச்சமின்றி
உண்ணட்டும் தீயமது  உள்ளவரை வாழ்கஏதும்
பண்ணின் பயனர் அவர்.

நச்சுநீர் -  நோய் நுண்மிகளை ஒழிக்கும் நீர்க்கலவை
நம்மனோர் - நம் மக்கள்.
மாய்வரென்றால்  - (சிலர் மாண்டுவிட்டனர் என்பது
தகவல்  ).

இச்சை - விருப்பம்.
ஏன் தடுப்பீர் - தடுக்கத் தேவை இல்லை என்பது.

சொச்சம் இன்றி  --  கோப்பையில் உள்ள மது
எல்லாவற்றையும்.

தீயமது - கெடுதல் என்று அறிஞர் சொல்லும் மது.

உள்ளவரை வாழ்க  -  மது உண்டலால் ஆயுள்
குறையுமென்றால், குறைந்த வரை வாழட்டும்;

ஏதும் பண்ணின் ( பண்ணட்டும்) - அது மது உண்போருக்கு
உரிமை ஆகட்டும் என்றபடி.

பயனர் அவர் -  அதைப் பயன்படுத்துவோர் அவர்களே.
அதனால் வரும் உடற்கேட்டையும் விளைவுகள்
பிறவற்றையும் அவர்களே அடையட்டும் என்றவாறு.

பிறர் எப்படி வாழவேண்டும் என்பதை அவர்களேதாம்
தீர்மானிக்க வேண்டும்.  நாம் தீர்மானித்து வெற்றி
காணுதல் இயலாதது.

மது அருந்துவதால் குடும்பச்சண்டைகள் வரலாம்.
மதுவைத்  தடைசெய்தால் கள்ளச்சாராயம் அதன்
இடத்தை மேற்கொள்கிறது. பிறகு அதைத் தடுக்க
இயலாது. சில நிகழ்வுகளையே பிடிக்கமுடியும்.
பல நல்லபடி நடந்தேறி, கள்ளத்தனம் உடையார்
காசு ஈட்டுவர்.

உலகத்தைக் கட்டுப்படுத்தி வெற்றிகாண்பவன்
 எவனும் இன்னும் பிறக்கவில்லை.  மதுவுண்ணல்
என்பது ஒரு நாய்வால்.

மெய்ப்பு பின்

News references:


You may have better or different views. Pl feel free to comment.

யாம் கூறுவது ஏற்புடையதன்று எனின் தங்களின்
கருத்துகளைப் பதிவு செய்யலாம். பின்னூட்டம் இடுங்கள்.
எம் கருத்தே சிறந்தது என்று யாம் கூறவில்லை.

வெள்ளி, 31 ஜூலை, 2020

கஷாயம். கசாயம்

இவண்  இனிமை தெரிவிக்காத ஒரு சொல்லைப் பற்றி
ஆய்ந்தறிவோம்.

அது கஷாயம் என்ற சொல்தான். பாயசம் குடிக்கப்
பலர் விரும்பும் இந்நாளில் யார் கஷாயம் குடிக்க
விரும்புவார்?

கஷாயம் எத்துணை கசப்பாய் இருக்கும் என்பது 
உண்மையில் யார் அதைத் தயாரிக்கிறார்கள் 
என்பதைப் பொறுத்ததே ஆகும். சித்தவைத்தியரே
அதைத் தயாரித்தால் மிகக் கசப்பு உடையாதாய் 
இருக்குமென்று நாம் எண்ணலாம்.

கஷாயம் என்பது உண்மையில் கச ஆயம் தான். 
கசப்பாய் ஆயது கசாயம்.

இச்சொல்லில் முன் நிற்பது கசத்தல் என்ற 
வினைச்சொல்.

கச என்பது கஷ என்று திரிந்துவிட்டதால் பலருக்குத்
தடுமாற்றமாய் உள்ளது. வடவெழுத்து என்ற அயல் ஒலி
நீக்கி, உரிய ஒலியோடு (எழுத்தொடு) புணரின் அது சரியான
சொல்லாகிவிடும். தொல்காப்பியம் சொல்வது இது,

ஆயம் என்பதையும் இவ்வாறு அறியலாம்:

ஆதல் - வினைச்சொல்.
ஆ வினைப்பகுதி.

ஆ + அம் =  ஆயம்,  யகர உடம்படுமெய் தோன்றியது..

ஆய என்ற எச்சவினையினின்று இதை அறிய:

ஆய + அம் =  ஆயம்,  இங்கு ஆய என்பதன் ஈற்று அகரம் 
கெட்டது.
ஆய் என்ற வினை எச்சத்திலிருந்து அறிவதானால், 
இன்னும் எளிதாகிவிடும். ஆய்+அம் = ஆயம்.

எச்சங்களிலிருந்து பிற பாலி, சங்கதம் போலும் 
மொழிகளில் சொற்கள் பல பிறந்தனவென்று சொல்வர்
ஆய்வாளர்.

சொற்களில் ஒவ்வொன்றும் வினைப்பகுதி, விகுதி
என்று இணைந்து தோன்றியிருக்கும் என்பது 
இலக்கண ஆசிரியர்கள் கருத்து. இலக்கணம் 
காணப்படுமுன்னரே சொற்களும் மொழியும் 
தோன்றிவிட்டமையால், இப்படிக் கருதுவது
மொழிவரலாற்றுக்கு முரண்பட்ட தவறான 
கருத்து அல்லது கொள்கை. இலக்கியம் அல்லது
மொழியில் காணப்பட்டதற்கே உண்மை கண்டு
இலக்கணம் உரைக்கவேண்டும். விடப்பட்டதை
சொந்தபுத்தியில் அறிக.

பெய்ப்பு பின்.