ஞாயிறு, 5 மே, 2019

சிக்கட்டான் குழந்தை / பிள்ளை (வழக்கு)

சிலருக்கு உடலில் ஒரு "கட்டு" ( கட்டுதல், கட்டப்பட்டதுபோன்ற உடல் ) இருப்பதாகப்  பேச்சில் வழங்குகிறது.  கட்டான அளவு,  கட்டான உருவம் என்று சொல்வதுண்டு.

பிறந்து ஓர் அகவை கடந்த குழந்தைகளில் சில உடல் "கொழகொழ" என்று சற்றுப் பருமனாக இருப்பதுமுண்டு. சில இன்னும் மென்மை மாறாவிடினும் இந்தக் கொழகொழப்பு இல்லாமல் அல்லது குறைவாக இருப்பதுபோல் காணப்படுதலும் உண்டு. இதுபோலும் குழந்தைகட்குக் "கட்டு" இருப்பதாகக் கூறுவதுண்டு.

சிறிதாகவும் கட்டாகவும் இருக்கும் குழந்தையைச் சிக்கட்டான் குழந்தை என்பர்.

" ஒரு சிக்கட்டான் குழந்தையுடன் அவள் பூசைக்கு வந்திருந்தாள்" என்று கூறும்போது இந்தச் சொல் நினைவு கூர முன்னிற்கின்றது.  இச்சொல் எப்படி வந்தது என்று பார்ப்போம்.

சிறு + கட்டு +  ஆன்
=  சிறுகட்டான்
=  சிக்கட்டான்.

இந்தத் திரிபில் று எனற ஓர் எழுத்து மட்டும் கெட்டது அல்லது மறைந்தது.

சிறு >  சி > சி+ கட்டான் = சிக்கட்டான்  என்றாகும்.  இலக்கணத்தில் இது இடைக்குறை எனப்படும்.

சிறு என்பதன் மூலம் சில் என்பதே.

சில் > சிறு.

ஆகையால் சிறு என்பதிலிருந்து புறப்படாமல் சில் என்பதிலிருந்து தொடங்கலாம்.

சில்  > சி.  (  இது கடைக்குறை ).
சி + கட்டு + ஆன் = சிக்கட்டான்

என்று விளக்கினும் இதிலோர் கருதத் தக்க வேற்றுமை இல்லை என்பதறிக.

மீள்பார்வை பின்னர் நிகழும்.

சனி, 4 மே, 2019

சீக்காது, சீத்தலை, வாத்தியம், சூத்திரம் மற்றும் சீக்காட்டுதல்.

காதில் சீழ் வைக்கும் ஒரு வீக்க நோய் உள்ளது.   தற்கால நடையில் இதற்குக் காது அழற்சி என்று கூறுவர். இதன் பழைய பெயர் : " சீக்காது " என்பது ஆகும்.

இப்பெயரை மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் சீக்கு + ஆது  என்று பிரிவதற்குரிய சொல்போல் தோன்றும்.  அது சரியன்று.  இதனை ஆய்வோம்.

இந்நோயில் காதில் சீழ் வைத்து வீங்கும்.  ஆகவே  சீழ் அல்லது சலம் என்று பொருள் படும் சொல்லும் காது என்ற உறுப்பின் பெயரும் இணைப்புற்று உள்ளது. இணையவே,  சீழ்க்காது என்று ஆகி,    ழகர ஒற்று மறைந்து சீக்காது ஆயிற்று.

இப்படி ழகர ஒற்று மறைந்த இன்னொரு சொல் வேண்டுமெனின்:

வாழ்த்தியம்  >  வாத்தியம் என்பது காண்க.  ழகர ஒற்று மறைந்ததால் இஃது ஒரு திரிசொல் ஆகும்,

இயம்  என்பது பல ஒலிக்கருவிகளுடன் இயங்கும் ஒரு கூட்டம்.  வாழ்த்து என்பது தான் வாத்து ஆகிவிட்டது.   வாத்து என்ற பறவை வேறு.

சூழ்+ திறம் >  சூழ்த்திறம் >  சூத்திறம் >  சூத்திரம் என்பதும் காண்க.

எதையும் ஆலோசித்துத் திறனுடன் செய்தவனே சூத்திரன்.  பண்டைக் குமுகம் கைத்திறன் உடையவனை மதிக்கத் தவறினமையால்  சூழ்ந்து திறம்பட ஒன்றைச் செய்வோன் மதிப்புப் பெறாதொழிந்தான்.  திறமுடன் அமைக்கப்பட்ட நூற்பாவே  சூத்திரம்.  இது உண்மையில் சூழ் திறம் கொண்ட நூலின் பாடல் ஆகும்.

சீக்காட்டுதல் என்ற இன்னொரு சொல்லும் உளது, இதுவும் உண்மையில் சீழ்க் காட்டுதல் தான்,  ழகர ஒற்று மறைந்தது.  சீக்காட்டுதல் என்றால் சீழ் அல்லது சலம் வைத்தல்.

சீத்தலைச் சாத்தனார் என்ற சங்கப் புலவரின் பெயரின் சீத்தலை என்பது  சீழ் பிடித்த தலை என்று பொருள்பாடாமல்  குளித்தலை என்ற ஊர்ப்பெயர் போலும் அமைந்ததே என்று உணரற்பாலது.  சீர்த்தலை >  சீத்தலை.  தலையென்பது இடம்.  சீரமைந்த இடம் என்பது பொருளாகும்.

தலை > தலம்,    இது அம் விகுதி பெற்ற சொல்.

அறிந்து மகிழ்வோம்,

வெள்ளி, 3 மே, 2019

அருள்மிகு துர்க்கையம்மன்




 



அருள்மிகு துர்க்கையம்மன்


பொருளல்ல வற்றைப் பொருளென் றயராதீர்  பூவுலகில்
அருளென்று  தந்தவர்  ஆரு மிலைகாணீர்  அன்னையல்லால்;
இருளென்று வந்திடில் மாற்றி இயற்றுவள் வாழ்க்கைதன்னில்;
உருளென்று துன்பில் உருண்டோர் தமக்கும் விடுதல்தந்தாள்.


இலக்கணம்:

இந்தவகைப் பாடலில் மெய் எழுத்துக்களை நீக்கி எண்ணினால்  அிக்ு 17
எழுத்துக்கள் இருக்கவேண்டும். இதில் தவறினால் வேறுபாடல் ஆகிவிடும்.