ஞாயிறு, 3 மார்ச், 2019

சொல்: ஜீவாதாரம்.

இது ஒரு பழைய பாடல்::

செல்வமே சுக ஜீவாதாரம்
திருமகள் அவதாரம்

உள்ளபடி செல்வம் இல்லாதவரே
உலகினிலே வாழ்வதும் தவறே.

கல்லா ரெனினும் காசுள் ளவரைக்
காட்சிப் பொருளாய்க் காணார் எவரே?

இது நல்ல எதுகை மோனைகளுடனும் இயைபுகளுடனும் பாடப்பெற்றுள்ளது. கருத்துகள் தமிழ் நூல்களிலும் அடிக்கடி வாழ்க்கை நிகழ்வுகளிலும் நாமறிந்துகொள்வனதாம்.

இன்னொரு பாடலும்:

நம் ஜீவாதாரமே
செல்வம் ஆகுமே

என்று வருகிறது.

இன்று ஜீவாதாரம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

ஜீவன் அல்லது ஜீவ் என்பது உயிர் என்று பொருள்படும்.  ஜீவ +  ஆதாரம் = ஜீவாதாரம்.

இலங்கைத் தமிழ் அறிஞர் முன் கூறிய ஆய்வுரையில்

உயிர்  >   யிர் >  ஜிவ்  > ஜீவ் > ஜீவன் 1

என்று விளைந்தமை கூறுவார்.      ஜிவ் என்ற அயல் திரிபை  அன் விகுதி கொடுத்து ஜீவன் என்பது கலவை அமைப்பு. (hybrid).  அன் தமிழ்க்குரியது.


யகர வருக்கம் ஜகர வருக்கமாவது பல மொழிகளில் உளது.  ஜூலியஸ் > யூலியஸ்;  யாக்கோப் > ஜேக்கப்  என்பன எளிதில் காணத்தக்கவை. மற்றவை வேறு விடயங்களை ஆய்கையில் தானே அறியலாம்.

சீரான வாழ்வுக்கு ஆதாரம் செல்வமே.

சீர் + வாழ்வு > சீர்வாழ்வாதாரம் >  சீவாதாரம்  > ஜீவாதாரம்.

ரகர ஒற்றும் தொலைவதே.  சேர்> சேர்மி >  சேமி > சேமித்தல்.

ழகர ஒற்று இடைக்குறைதல் மிகுதி:

வாழ்த்து + இயம் =  வாழ்த்தியம் > வாத்தியம்.
பாழ்+ வு + அம் =  பாழ்வம் >  பாவம்.

ஜீவிப்பதற்கு  ஆதாரம் ஜீவாதாரம்.  ஜீவனுக்குச் செல்வம் நேரடி ஆதாரம் அன்று.  அதற்கு மூச்சு முதலியன அடிப்படை ஆதாரங்கள்.  ஆனால் சீரான
வாழ்க்கைக்குச் செல்வம் வேண்டும்.

இப்படிச் சீர் வாழ்வு என்பதும் ஜீவி என்பதும் ஆன இரண்டும் பொருந்துவன.


--------------------------------------------

அடிக்குறிப்புகள்:

1  இலங்கை ஞானப் பிரகாச அடிகள்.

திருத்தம் பின்.


வெள்ளி, 1 மார்ச், 2019

யோசனை ஆலோசனை

ஓர்தலும் ஓய்தலும்


ஓர்தலும் ஓய்தலும் ஆய்வுக்குரிய சொற்கள். இவற்றின் தொடர்பினைச் சிறிது ஆய்வோம்.

ஓர்தல் எனின் யோசித்தல். இந்தச் சொல் இப்போது இலக்கிய வழக்கில் மட்டுமே தமிழில் உள்ளது. தமிழில் பண்புப் பெயர் விகுதியாகிய மைகாரம் ஏற்றப்பட்ட " ஓர்மை" என்பது மலையாள மொழியில் உள்ளது. அஃது ஆங்கு நினைவு அல்லது ஞாபகம் என்னும் பொருளில் நிலவுகின்றது.

ஓய்தல் என்பது இதே பொருள் உடைய சொல். ஆயின் இப்பொருள் அகரவரிசைகளில் கிட்டிற்றிலது. இது முற்றிலும் வழக்கிறந்ததுடன் இச்சொல் இப்பொருளில் பயன்பட்ட நூல்கள் எவையும் அகப்படாதொழிந்தன. தமிழ் மொழியின் நீண்ட வரலாற்றில் இவ்வாறு அகப்படாதொழிந்தவையும் அழிந்தவையும் மிகப்பலவே என்றறிக.

ஓய்தல் என்பதற்கு அழிதல், இளைப்பாறுதல், சோர்தல், சாய்தல், தளருதல், முடிதல், நீங்குதல் மற்றும் மாறுதல் என்பன இன்று கிடைக்கும் பொருள் ஆகும்.


யோசி யோசனை என்ற சொற்கள் தமிழ்ப் பேச்சில் அன்றாட வழக்கில் உள்ளனவாகும். அகர வருக்கச் சொற்கள் யகர வருக்கமாகவும் திரிவன என்ற சொல்லியல் விதிகொண்டு நோக்கின் இவை முற்காலத்து ஓசி, ஓசனை என்றிருந்திருத்தல் தெளிவு. கல்வி அறிவில்லாத மக்களின் பேச்சில் இவை எங்கேனும் இருத்தல் கூடும். அவற்றைக் கேட்டோரும் அவை தவறாக ஒலிக்கப்பட்டன என்று கோடலும் எதிர்பார்த்தற்குரியதே.

ஓய்> ஓயி > ஓசி > ஓசனை > யோசனை;


இனி:

ஆனை > யானை
ஆண்டு > யாண்டு
ஆய் > யாய்
ஆறு > யாறு
உத்தி > யுக்தி
எமன் > யமன்

என வழங்கும் சொற்களினால் அ-ய மற்றும் வருக்கமும் அடங்கிய  இவ்விதியை நன் கு உணரலாம்.

ஆகவே யோசனை என்பதன் முன்வடிவம் ஓசனை என்பது எனல் எளிதின் உணரப்படும்.

ஆலமரத்தடியில் அமர்ந்து பழங்காலத்தில் ஆலோசனைகள் நடைபெற்றன.
ஆலமரத்தடியில் அமைக்கப்பட்ட அல்லது தொழப்பட்ட கடவுளும் ஆலமர் கடவுள் எனப்பட்டார். இனி ஆலோசனை என்ற சொல்லை ஆய்ந்தால்:

ஆல் + ஓசனை என்பது கிடைக்கிறது.

ஆலோசனை என்ற இருபெயரொட்டுச் சொல்லில் ஓசனை என்ற முந்தை  வடிவம் இன்னும் வாழ்கிறது என்பதறியலாம்.

இதை ஆய்ந்து ஓய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும் என்ற தொடர்மொழியில் ஓய்தல் என்ற வினை வருகின்றது. ஆய்தல் என்பதும் ஓய்தல் என்பதும் ஆராய்தல் யோசித்தல் என்பனவே ஆகும்.

இதை இன்னொரு நாள் வேறொரு கோணத்தில் தொடர்வோம்.

பிழை புகின் பின் திருத்தம்



வியாழன், 28 பிப்ரவரி, 2019

இறைப்பற்று மிக்குடையார் பெண்களே

இறைப்பற்று மிக்குடையார் பெண்களே---  இறைவர்
ஒருவரையே காணுமிவர் கண்களே;
முறைப்படி முடித்திடுவர்  பூசையை --- அன்பர்
முன்னேற வேண்டிடுமோர்   ஆசையில் .


பொருள்:

இறைப்பற்று -  பக்தி  அல்லது பத்தி.
இறைவர் ஒருவரையே---  கடவுளை மட்டுமே; 
காணும் :  மற்ற மனிதர்களைப் பார்க்கமாட்டார்கள், கண்ணாலும் மனத்தாலும்
என்பது.
இவர் கண்களே -  இவர்கள் குமுகத்துக்குக் கண்களே.
அன்பர் : கணவன்மார்.