சனி, 26 ஜனவரி, 2019

கழிச்சலைத் தந்த பேதா.

தமிழ் நாட்டில் சிற்றூரில் வாழும் மக்கள்  பெரும்பாலும் அரசு அதிகாரிகளுக்கு அஞ்சி நடுங்கினோர்தாம். சங்க இலக்கியங்களில் எந்தக் குழுவினரும் எங்கேயும் போராட்டங்கள் செய்ததனைக் குறிக்கும் பாடல் எவையும் யாம் படித்ததாக நினைவில் இல்லை.  இருந்தனவெனின் அவற்றைப் பின்னூட்டம் செய்து உதவவும்.  இல்லை என்றே நினைக்கின்றோம்.

கணவன் கள்வனல்லன் என்பதை மெய்ப்பிக்க மதுரைக்கு எழுந்த கண்ணகி ஒரு தனிப் போராளியே யன்றி  அவளுக்குப் பின் ஒரு பெரிய படை திரண்டு மன்னனை எதிர்த்தல் போன்ற செய்திகளை  யாமும் கேள்விப்படவில்லை.  அக்காலத் தமிழகத்தில் போராட்டங்கள் மிகக் குறைவு அல்லது இல என்றுதான் முடிக்கவேண்டும்.

போராட்டம் மறியல் கறுப்புக்கொடி காட்டுதல் எழுச்சிப் பேரணி எல்லாம் இற்றைத் தமிழில் ஏற்பட்டுள்ள தொடர்கள்.

தமிழர்கள் பெரும்பாலும் அச்சவுணர்ச்சி கூடுதலாக உள்ளவர்கள். சாதிச் சண்டைகளை வைத்து அவர்களில் எத்தரப்பினரும் வீறு உடையோர் என்று  கூறுதற்கில்லை.  இத்தகு அச்சவுணர்ச்சி உடையோர்க்குப் பயிற்சி அளித்துப் படைநடத்தி வெற்றிகள் பல பெற்ற இராச இராச சோழன் போன்றவர்கள் வரலாற்றில் போற்றப்பட வேண்டியவர்கள்.  ஒரு சிறந்த படைத்தளபதியின் கடமை திறமை என்பன வெல்லாம் கோழைகளை வீரர்களாக்கிப் படைநடத்துவதுதான். இப்படித் திறன்பல உள்ள மன்னர்கள் தமிழருள் ஏராளமாக இருந்துள்ளனர் என்பதைப் புறம்,  சிலம்பு முதலியவை மிக்க  நன்றாக எடுத்துக்காட்டுகின்றன.

உடல்நலத்துறையினர் ஊசிபோட வந்துவிட்டால் ஓடி ஒளிந்துகொள்வோர் இன்னும் நாட்டில் உள்ளனர் என்று தெரிகிறது.

ஒரு போலிஸ்கரன் அல்லது காவல்துறைஞன் ஊருக்குள் வந்துவிட்டால் ஓடி ஓளிந்துகொள்வது இவர்கள் இயல்பு. கொஞ்ச காலத்துக்கு முன் காவல்துறைஞனுக்குப் பேதா தாணாக்காரன் என்ற பெயர்களெல்லாம் இருந்தன.  இன்று கோவிலில் நடப்பது பேதாமார் உபயம்,  நேற்று தாணாக்காரன் வந்தான் என்பன போலும் உரையாடல்கள் அந்தக் காலத்தில் மிகுதி.

அவன் வந்தவுடன் சிலருக்குக் கழிச்சல் வந்துவிடும்.  அல்லது சிறுநீரை அடக்கிக்கொள்ள முடியாமல் போய்விடும்.  அப்படிப் பட்ட அவனுக்குத்தான் பேதா என்பது பெயர்.

பெய் + தா >  பெய்தா > பேதா.  (  பெய்தலை அல்லது பேதியைத் தருபவன் )

பெய் என்பதிலிருந்தே பேதி என்ற சொல்லும் அமைந்தது.  பெய்  தி >  பேதி.  இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  பேதியாவது கழிச்சல்.

செய்தி என்பது சேதி என்று திரிந்தன்ன மாற்றமே  பெய்தி எனற்பாலது பேதி என்று திரிந்தமையும் என்று உணர்க.

தட்டச்சுப்பிழைகள் காணின் பின் திருத்தம் பெறும்.




வெள்ளி, 25 ஜனவரி, 2019

நாளைத் தமிழ் மணம்

நித்தலும்  வளரும் கருத்துகளை
நிறுத்தம் இலவாய் எழுதிடுவேன்
மெத்தவும் மகிழ்வு தருமிதனை
உத்தமம் செய்பொழு தின்றிலதே;

நேற்றும் தருணம் வாய்த்திலது
நினைப்பு மட்டும் உறுத்தியது;
காற்று வாங்கும் படிநேர்ந்த
கரிசில் பயணம்  பொருத்தமுற.

இன்றும் ஓய்ந்த வாறிருந்து
நாளைக் கருத்துகள் தந்திடுவேன்;
பொன்றாப் புகழ்சேர் தமிழ்மலரும்
பூத்துப் பொலிந்து மணம்தருமே.



செவ்வாய், 22 ஜனவரி, 2019

இல்லமொழி தமிழ்


வீதம் என்ற சொல்லைச் சிந்திப்போம்.

தமிழ் அதன் தொடக்க காலத்தில் பல குழுக்களால்பேசப்பட்டு வந்த மொழி என்றே ஒரு வரலாற்றாசிரியன் முடிவுக்கு வரவேண்டும். அந்த முடிவுக்கு அவன் வராமல் ஏதேனும் கூறுவானாகில் அவன் தேர்வில் பட்டங்கள் பெற்றிருக்கலாம்வேறுமொழிகளைக் கற்றிருக்கலாம், அவனுக்குத் தமிழ் வரலாறு  சரியாகத் தெரியவில்லை என்றுதான் பொருள்.

தமிழ் மொழியில் திரிபுச் சொற்கள் மிக்கிருந்தன என்பதே உண்மை. இதனாலன்றோ தொல்காப்பியனார் தம் சொல்லதிகாரத்தில் இயற்சொற்களுக்கு அடுத்தபடியாகத் திரிசொற்களைச் சொல்லுகிறார். அதற்கடுத்த நிலையையே வடசொல் என்று தமிழ் நாட்டு மரத்தடிகளில் வழங்கிய சொற்களைக் கூறுகிறார். வடம் என்பதற்கு உள்ள அர்த்தங்களைக் காணின் இது தெற்றெனப் புலப்படும். தொடார்பற்று வடக்குத் திசையில் வாழ்ந்த மக்களை அவர் குறிப்பிட்டார் என்று சொல்வதற்கில்லை.

தமிழ் என்பதற்குப் பற்பல சொல்மூலங்களை அறிஞர்கள் கூறியுள்ளனர். ஒரு நூற்றுக்கு மேற்பட்டவை கிட்டலாம். தமிழ் என்பது தனித்து நிற்கும் மொழி என்று கூறுவதும் உண்டு. இதற்குக் காரணம் : தமி என்பது தனி என்ற பொருளுடையதாக இருப்பதுதான். தன் என்பதிற் பிறந்த தனி என்று சிந்திப்பதைவிட தம் என்ற பன்மை வடிவிற் பிறந்த தமி என்றுதான் சிந்திக்கவேண்டும். தமி என்று எடுத்துக்கொண்டால் பன்மை வடிவானமையால் பல குழுக்களால் பேசப்பட்டு வந்த மொழி என்று கொள்ளுதல் வேண்டும். அதுவும் இக்குழுக்கள் தங்கள் இல்லத்தில் பேசிய மொழியாதல் வேண்டும். இப்படிச் சிந்தித்த கமில் சுவலபெல்லும் தேவநேயப் பாவாணரும் இதைத் தம் இல் மொழி என்று கூறினார்கள். தமில் ( தம் + இல் ) என்பதே தமிழ் என்று திருத்தமுற்றது என்'கின்றனர். இது உண்மையானால் இல்ல மொழியுடன் இல்லத்துக்கு வெளியில் வேறு மொழியும் வழங்கி வந்ததென்று பெறப்படும். அது அல்லது அவை எந்த மொழி(கள் ) என்று தெரியவில்லை, தம் என்று பன்மை வடிவிலிருந்து சொல் தோன்றியிருப்பதால் பல குழுக்களின் மொழி என்பது தானே பெறப்படுவதுடன், அவற்றுள் திரிபுகள் இருந்தன என்பதும் பெறப்படும். ஆகவே தொல்காப்பியர் திரிசொற்களை அடுத்துக் கூறியது ஏனென்பதுவும் பெறப்படும். இல்ல மொழி என்றாலே வேறுமொழிகளும் நடமாடின என்று பொருள்கொள்ள வழிவந்துவிடும்.

இதனாற்றான் விழுக்காடு குறிக்கும் வீதம் என்ற சொல் பலவாறு திரிந்தும் ஓர்முடிபு கொள்கின்றது என்பது நம் சிந்தனைக்குள் வருவதை அகற்ற முடியவில்லை. இன்னும் எண்ணிறந்த சொற்களும் இப்படியே ஆகும்.