வியாழன், 17 ஜனவரி, 2019

வன்மை பயில்வார்

நாயினைப் பூனையை வீட்டுள் பழக்கியவன்
பாய்புலி சிங்கம்பால் தோற்றானே-----சாய்வறிந்தான்
வாய்க்குச்சோ றிட்டாலும் வன்மை பயில்வாரைத்
தோய்க்குநட் பில்லை துணி. 

பாய்புலி -  வினைத்தொகை:  பாயும்புலி
சாய்வு - எப்பக்கம் எது என்னும் தன்மை
வன்மை -  வலக்காரம்  (பலத்தகாரம் )
தோய்க்கு -  தோய்க்கும். ஈடுபடுத்தும்.
அன்புத் தொடர்பில் ஈடுபடுத்தும்.
துணி -  துணிவுகொள்;  அல்லது வெட்டிவிடு
( இருவாறு பொருள் கொள்ளலாம்).
துணித்தல் :  வெட்டுதல்.

சிங்கம் :  அரிமா.
சிங்கம் பற்றிய சொல்லமைப்பு அறிய:
 https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_88.html


புதன், 16 ஜனவரி, 2019

ழகர ளகர லகரப் போலிச் சொல்

சில சொற்களில் எழுத்து மாறினாலும் பொருள் மாறுவதில்லை. இவற்றை இலக்கணியர் போலி என்று குறித்தனர். போலி எனின் போல இருப்பது என்பதே நாமறிவதாகும்.  தமிழில் போலிச் சொற்கள் போதுமான அளவில் கிடைக்கின்றன.

பழம் என்ற சொல் போலியாகப் பலம் என்று வரும்.  சென்னை நகரில் மாம்பழங்கள் மிகுதியாகக் கிடைத்த இடத்திற்கு  மாம்பழம் என்ற பெயரையே வைத்தனர்.  மாம்பழம் என்பது பழத்தைக் குறித்துப் பொருள்மாறாட்டம் ஏற்படுத்தியதால் அதை மாம்பலம் என்று மாற்றிச்சொல்லிப் பொருளில் ஏற்பட்ட குழப்படியைத் தவிர்த்தது ஒரு திறனே  ஆகும்.

பழம் என்பது பயம் என்று ஒலிக்கப்படுவதும் உண்டு.  இலந்தைப் பயம் என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள்.

மரத்தின் பயனே பழம் என்பதை உணர அதிகம் தெரியவேண்டியதில்லை. பயனாவது மரம் பயப்பது.  மரம் வெளிக்கொணரும் பொருள்.

பழம் பயம் பலம் பழன் பயன் பலன் என்று பல வடிவங்களில் இச்சொல் போதரும் என்றாலும் எழுத்தில் இப்போது பழம் என்பதே திருத்தமான வடிவம் என்று எழுதுவோரும் படிப்போரும் நினைத்துக்கொள்கிறார்கள்.  திருத்தமான வடிவம் என்று ஒன்று உலகில் இல்லை. பலராலும் இது சரி என்று ஒப்புக்கொள்ளப்படுவதே திருந்திய வடிவம்.  ஒரு சொல்லில் இருப்பதெல்லாம் வாயொலிதான்.  வாயினால் ஒன்றை உச்சரிப்பதன் தேவை பொருளைக் கேட்போனுக்கு உணர்த்துவதன்றி வேறில்லை. சொல்வதைச் சரியாக உணர்த்துவதே சொல்லின்  வேலை; அதையது செய்து வெற்றிபெறுமாயின் அது ஏற்றுக் கொள்வதற்  குரிய   தாகிவிடும்.

ழகர ஒலி இல்லாத மொழிக்குப் பழம் என்ற சொல் தாவிச் செல்லுமாயின் அது பலம் என்ற வடிவைத்தான் மேற்கொள்ளவேண்டும்.  சங்கத மொழியில் ( சமஸ்கிருதத்தில் )  ழகரம் இல்லை.  ஆகவே அங்குப் பலம் என்ற சொல்லே ஏற்றுக்கொள்ளப்படுவ தாயிற்று.  பலம் பின்னர் இந்திக்கும் அங்கிருந்து உருதுவிற்கும் சென்றது.  பலத்தின் பொருள் பழமே.

ஞானத்தை வழங்குபவன் முருகப்பெருமான்.

ஞானத்தைப் பயப்போன். 

ஞானத்தைப் பயனாகத் தருவோன்,  எனவே அவன்  ஞானப்பழம் எனப்பட்டான்.  அவனை வணங்கினால் ஞானமுண்டாம்.

அரக்கு என்பது முத்திரை இடுவதற்குப் பயன்படும் உருகுபொருள்.   அது  வெம்மையில் உருகிப் பின் குளிரில் கட்டியாகிவிடும்.  கட்டியான பின்   அது சற்றுக் கடினமான மேல்தோல்போல் காகிதம்  முதலியவற்றில் ஒட்டிக்கொள்வது.  அதனால் அது தோலி எனப்பட்டது. ----   அதன் தோலாம் தன்மையினால்.

தோலி என்பது பின் தோழி என்றும் திரிந்தது.  இந்தத் தோழி என்பது திரிபுச் சொல்.  தோழன் என்பதன் பெண்பால் அன்று,  வேறு சொல்.  இந்தத் தோலின் திரிபாகிய தோழி பின் தோளி என்றும் திரிந்தது.  ஆகவே இச்சொல்லும் முந்நிலையிலும்  தோலி -  தோழி - தோலி என்று வந்துள்ளது.  இவற்றில் எதுவும் இப்போது வழக்கில் இல்லை. பழைய நூல்களில் காணின் அறிந்து மகிழ்வீர்.

காவியம் சொல்

கவி என்ற சொல்லை முன் விளக்கியிருக்கிறோம்.

ஒரு பொருள்மேல் கருத்துகளையும் கற்பனைகளையும் கவித்துப் பாடப்படுவதே கவிதை.

-----------------------
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்த தைப்போல்
கிளைதொறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதை எல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்

என்பது  கவிதை  ;  நூல்:  அழகின் சிரிப்பு.

அப்படியானால் செய்யுள் என்பதென்ன?   இதற்கு,  பவணந்தியார் கூறிய வரையறவு :  " வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்"  என்பது.  ஒளவையாரின் இந்தப் பாட்டு ஒரு செய்யுள்:

ஈதல்  அறன்;   தீவினைவிட்டு ஈட்டல் பொருள்;
காத லிருவர் கருத்தொருமித்து  -----  ஆதரவு
பட்டதே இன்பம்; பரனைநினைந்  திம்மூன்றும்  
விட்டதே பேரின்ப வீடு.

கவிதைகளால் ஆக்கப்பட்ட பெருநூல்  காவியம்.

கவி + இயம் =  காவியம்.   

முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  முதனிலை நீண்டது காண்க.

பாடம் என்பதும் முதனிலை நீண்ட சொல்:

படி + அம் =  பாடம்.  படி என்பது பாடி என்று திரிந்து,  இகரமிழந்து பாட் ஆகி, அம் சேர்ந்து பாடம் ஆனது.

முன் காலத்தில் பாடங்களெல்லாம் பெரும்பாலும் பாடல்களாக இருந்தன.  அவற்றை அவர்கள் இராகம் போட்டுப் பாடி ஒப்புவித்தார்கள்.  ஆசிரியர்களும் பாடியே சொல்லிக்கொடுத்தார்கள்.  திரு வி க அவர்களின் காலத்தில் இவ்வழக்கம் குறைந்தது,  தம் நூலில் அவர் பாடியே படிக்கவேண்டும் என்றார்.

படித்தல் என்றாலே பாடுதல் என்ற பொருளும் உண்டு.

உன்ன நெனச்சேன்
ஒரு பாட்டுப் படிச்சேன்

என்ற திரைப்பாடலில் படிச்சேன் என்ற சொற்பயன்பாடு காண்க.

பாடு+ அம் = பாடம் என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆகவே காவியம் என்ற சொல் முதனிலைத் திரிபு ஏற்ற சொல் என்பதுணர்க.