செவ்வாய், 23 அக்டோபர், 2018

அதரம் என்ற சொல் இதழில் தொடங்கி,.....

பெரும்பாலும் கவிதை எழுதும் கவிகள் தம் சொந்த உணர்வுகளையே எழுதி  மகிழ்கின்றனர்.   திரைப்படத்துக்கோ நாடகத்துக்கோ எழுதுகிற கவிஞரானால் நாயகன் நாயகியை மனத்துள் வைத்துக்கொண்டு கற்பனை மேடையில் நின்றுகொண்டு எழுதவேண்டும்.  தாம் நுகர்ந்து உணர இயலாத, பிறர் நுகர்வு பற்றிய கற்பனைக்குள் தம்மை வீழ்த்திக்கொண்டு பாடலை எழுதவேண்டும்.

என் அதர மீது வைப்பேன் ---  ஒரு
அன்பு முத்தம் கொடுப்பேன்
இன்பம் இன்பம் 

என்று ஒரு கவி எழுதினார்.  இது உடல் தொடர்பைக் குறித்து எழுகின்றது. பணத்துக்காகப் பாடவரும் பின்னணிப்பாடகியைத் திடீரென்று கட்டிப் பிடித்துவிட்டால் இன்பத்துக்குப் பதில் துன்பமே விளையும்.


உன்னை நயந்துநான் வேண்டியும் ஓர் முத்தம்
தந்தால் குறைந்     திடுமோ
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை
பாய்ந்துஅல்லல்    படுமோ

பாபநாசம் சிவன் என்ற பெருங்கவிஞரின் பாடலில் வரும் இவ்வரிகளும்
நன்றாகவே அமைந்துள்ளன.  முத்தம்  என்பதையும் இதில் புகுத்த 
இவரும் தயங்கவில்லை.  ஆண்மகன் நயந்து வேண்டுவது இம்முத்தம்.  இத்தகைய வேண்டுதலுக்கு உடன்பாடு உண்டாகிவிட்டால் வழக்குமன்றம் செல்லாமல் இருக்கலாம்.  இல்லையேல் அதுவும் துன்பம்தான்.

இந்திர லோகமும் சொர்க்கமும் நாம் பெறும்
இன்பத்தின்முன் நிற்குமோ?
மலரும் மணமும் போல்
நகமும் சதையும் போல்
இணைபிரியோம் நம் காதல் வானில் 
வானம் பாடி போல
பிரேம கீதம் பாடி மகிழ்ந்திடுவோம்

முத்துடன் ரத்தினம் வைத்துப்ப   தித்தவி
சித்திர சப்பிர மஞ்சம் ----  அதில்
நித்தமு மெத்தத  னத்தில்தி   ளைத்தொரு
மித்தம  னத்துடன் வாழ்ந்திடுவோம் 



என்ற கே.டி. சந்தானம் என்னும் கவியின் வரிகளும் காதலையே சொன்னாலும்  வானம் இந்திரலோகம் மலர் மணம் நகம் சதை என எல்லாவிடத்திலும் உலாவுவதாலும் இறுதியில் பிரேம கீதத்தில் திளைப்பதாலும் உடலைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.  கவிதை திரைப்  பாடலாயினும் எதுகைகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.  கவியில் வலிபு வண்ணம் பயில்கிறது. உடல்பற்றிய எதுவும் புகுத்தப்படவில்லை.

அதரம் என்ற சொல்லைப் பற்றியே விளக்க முற்பட்டோம்.  அதரம் என்றால்
உதடுகள்.  உதடுகள் என்பவை மந்திரித்த தகடுகள் என்று இன்னொரு கவி எழுதியிருந்தாலும் அவை உடலின்  பகுதிகளே.  அவற்றில் ஒன்றும் இல்லை. மயக்குறுவதும் மலைவீழ்வதும் மனமே அன்றிப் பிறிதில்லை. மனத்தையே கட்டுப்படுத்த வேண்டும்.

சொல்லமைப்பின்படி  இதழ் என்ற உதடு குறிக்கும் சொல் பூவிதழ்களையும் குறிக்கும்,   பூவிதழ் என்பதே அதன் ஆதிப் பொருள். மனித இதழ்களைப் பூவுடன் ஒப்பிட்டு இதழ் என்பது மனித உதட்டையும் குறிக்கவேண்டிய நிலை உண்டாயிற்று.  முத்தமிடுவதால் பல நோய்கள் பரவுதலால் கவனமாகவே இருக்கவேண்டும்.  தூய்மை முன்மை வாய்ந்ததாகும்.

இதழ் என்பது பின் அதழ் என்று திரிந்தது.  இகரத்தில் வரும் சொற்களில் பல அகரத்திலும் வருதல் காணலாம்.  அதழ் என்று திரிந்தபின்

அதழ் >  அதழம் > அதரம் என்று திரிந்தது.

ழகரம்  டகரமாகத் திரியும்:  வாழகை : வாடகை;  பாழை > பாடை.
டகரம் ரகரமாகும்:    மடி ( மடிதல் =  மரித்தல் )  விடு> விடதம் > விரதம் (சில உணவுகளை விடுதல் ).

திராவிட மொழிகள் சங்கதம் என்று பல மொழிகள் நாட்டில் உலவுதலுக்குக் காரணமே திரிபுகள் தாம்.  இவற்றைத் தொல்காப்பியனாரே உணர்ந்திருந்ததால்,  பொருள் ஒன்றாகச் சொல் ஒன்றாகவும் மற்றும் சொல் ஒன்றாகப் பொருள் ஒன்றாகவும் இருந்த பல சொற்களை அவர் கண்டு அவற்றைப் பற்றியும் சூத்திரம் செய்தார்.  இப்படி உலகின் முதல் சொல்லாய்வையும் மொழியாய்வையும் அவரே தொடக்கிவைத்தார்.  77 திராவிட மொழிகள் இருப்பதாக 50 ஆண்டுகட்கு முன்பே ஓர் ஆய்வுக்குழு சொல்லியது. இசின் என்ற தொல்காப்பியச் சொல்லைக் கங்கையாற்றுப் பகுதியில் வழங்கக் கண்டதாகவும் குழு சொல்லியது. இற்றைக்கு அவற்றுள் பல மறைந்திருக்கக் கூடும். பல எழுத்தில்லாதவை. எழுத்து உள்ளவை ஐந்துதான்.  இவையும் திரிபுகளால் தோன்றியவை.  தமிழினுள்ளும் எத்துணை திரிபுகள்.  ஒரே மாவைப் பல்வேறு பலகாரங்களாகப் பண்ணிவிட்ட நாடகமே இம்மொழிகள் எல்லாம்!!  ஒன்றுக்கொன்று தொடர்பின்றி  மக்கள் கூட்டம் வாழ்ந்தமையே மூலகாரணமானது. வானொலி தொலைக்காட்சி ஏதுமில்லை.

இவ்வாறு திரிபுகள் பல.

எ-டு:  ஆ+ இடை :  ஆயிடை;   அ+ இடை: அவ்விடை.    
அவ்விடை > அவிடை > அவிடா. இதை விரிக்கவில்லை.

இழு என்பதும் ஈர் என்பதும் தொடர்புடையவை.  இவ்விரு வினைகளில் இகரம் நீண்டு ழுகரம் ரகர ஒற்றானது.  இ என்பதும் ஈ என்பதும் ஒன்றுக்கு ஒன்று நிற்பதுண்டு:  எடுத்துக்காட்டு:  இங்கு > ஈங்கு;    அங்கு என்பதும் ஆங்கு என்று திரியும்.  இ > இர் > இருதயம்;  இரத்தத்தை ஈர்த்துக்கொள்ளும் உறுப்பு.   இழு> இர் > இரு;   இரு> ஈர். ( எண்ணிக்கைச் சொல்லாகிய இன்னோர் இரு என்பதும் ஈர் என்றே திரியும்.  ஈராறு கரங்கள் என்பது காண்க.  இர் > ஈர் > ஈரல்: மூச்சு இழுத்தல். ( நுரை ஈரல் ). பிற உடல் ஊறுசாறுகளை இழுத்தல்  (கல்லீரல் ).. ஆதலின்  ஈரல் எனப்பட்டது


ஈர்த்தல் :  ஈர் > ஈர் + து +  அயம்  (அ + அம்).  அங்கு அல்லது அயலில் இயங்கி  ஈர்த்துக்கொள்வது ).  அயம்:   ஏனை உறுப்புகட்குப் பக்கலில் இருப்பது என்பதாம்.   ஈர்தயம் > இருதயம் எனினும் பொருள் போதரும். காண்க.

தமிழ் விரிந்த பரவுதலை உணர்ந்து மகிழ்க..

குறிப்பு: 

 சில சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்குறலாம். இதை முன்பே சொல்லியிருக்கிறோம்.  
அதரம் :  அ = அங்கிருக்கும்;  து = பொருள் /   அது;   அரு =  அருகிலே;  அம் = அமைந்துவிட்டது.    உதடுகள் ஒன்றுக்கு ஒன்று வேறாக நின்றாலும் வேண்டியபோது ஒன்றுபட்டு மூடிக்கொள்பவை.  இது இதையே காட்டுகிறது. இச்சொல்லமைப்பு.  உதடுகள் இறுதிகள் இணைந்து இடைவெளிகொண்டு இருப்பவை. ஒன்றினருகில் இன்னொன்று  இணைப்பில் இருத்தல். பூவிதழ்களும் இத்தகையவே.

ழகரம் -  ரகரம்:   அழ் = அர் = அரு ( இடநெருக்கம்; அடுத்திருத்தல் .) 
அதழ்  ( அழ் );  அதர் (அர் - அரு ).> அதரம்.

 திருத்தம் பின்.

மீண்டும் பார்த்த திகதி:  21.4.2020.


கொரனா என்னும் மகுடமுகி நோய்நுண்மி உலவும் இந்நாளில் யாரிடமிருந்தும் தொலைவிலேயே இருக்கவும்.  வந்துவிட்டால்  யார் பிழைப்பார், யார் இறப்பார் என்று முன் கூட்டியே அறியும் வழி ஒன்றுமில்லை.  "பத்திரமாக இருங்கள்".

திங்கள், 22 அக்டோபர், 2018

தீனர் என்ற சொல். (திரிசொல்)

தின்,   தீன் என்ற சொற்களை இன்று அறிந்துகொள்வோம்.

மக்கள் சாப்பிடுவது, " உண்பது"  என்று  சொல்லப் படும்.  பெரும்பாலும் விலங்குகளின் உட்கொள்ளுதலே தின்பது என்ற சொல்லால் குறிக்கப்பெறும்.என்றாலும்  சில வேளைகளில் மனிதனையும் "தின்னு" என்று ஏவுதல் உண்டு  .

ஏழைகளின் உணவு இரங்கத் தக்க தரத்தினதாய் உலகெங்கும் இருப்பதனால் அதற்கு ஏழ்மை என்ற பொருள் ஏற்பட்டது.

தின் + அம் =  தீனம்.  எளிமை, வறுமை இன்ன பிற.

இது முதனிலை திரிந்து அம் என்னும் விகுதி பெற்ற பெயர்ச்சொல் ஆகும்.  இது தின்னுதல் (  விலங்குபோல் உட்கொள்ளுதல் )  என்னும் கருத்தினின்று  அமைந்ததே ஆம். இதைப் போல முதனிலை நீண்டு அமைந்த இன்னொரு சொல்:

படு >  பாடு. (  இது விகுதி பெறவில்லை.)

விகுதி பெற்றது:

நடி  +  அகம் =  நாடகம்.  ( இங்கு ந  என்பது  நா என்று நீண்டது.   அகம் என்ற
விகுதி பெற்றது.   நடி என்பதன் இறுதி    இகரம் கெட்டது , அல்லது வீழ்ந்தது ).

இவை போல்வன பழைய இடுகைகளில் ஆங்காங்கு காட்டப்பெற்றுள்ளன.

இவற்றையும் அறிக:

தின் + இ =  தீனி.   (முதனிலைத் திரிபு;  இகரம் விகுதி ).
தின் + இ  =  தின்னி.   ( ஒருனகர ஒற்று தோன்றல்;  இகரம் விகுதி. முதனிலை  இயல்பு ஆனது ).   "இவன் ஒரு பலகாரம் தின்னி." (  வாக்கியம் )
தின் + அர் =  தீனர்.  ( முதனிலை நீட்சித் திரிபு;  அர் விகுதி).  ஏழைகள்.
தின் > தீன்:   உட்கொள்பொருள்.

தின் > தீனன்:  விலங்குட்கொள்வது போன்றவை  உட்கொள்ளும் ஏழை,
பின் பொதுப்பொருள்:  ஏழை, வறியோன்.

தீனி

மக்கள் என்பது உயர்திணையாகவும் மாக்கள் அஃறிணையாகவும் கொள்ளப்படும்.  மாக்களாவர்,  மக்கள் போல் உருவில் மக்கள் அல்லாதவர்.   தீனி என்பது மாக்கள் உட்கொள்வதும் விலங்குகள் உட்கொள்வதும் ஆகிய தாழ்ந்த பொருள்.  இம்மாக்கள் பலர் ஏழைகளும் ஆவர். இவர்களே தீனரும் ஆவார்கள்.
.

இறைவன்முன் தன்னைத்  " தீனன்" என்று பற்றன் சொல்லிக்கொள்வது  ஓர்
அடக்கமாகும்

அடிக்குறிப்புகள்:

1.   தீனரைத் தியக்கறுத்த திருவுடையார்:  தேவாரம், 477.
2.    தீனன் : மிகுதியாய் உண்போன் என்பதுமாம்.
3.   தீனம்:  நோய்.( என்பதுமாகும்)
4     தீனவத்சல, எளியோர்க்கிரங்குதல்;  தீனநுகம்பன.
5.   தின்பண்டம் - தீன்பண்டம் என்பதும் ஆகும்.
6     உணவு என்ற அடிப்படையில் எழுந்து பின்னர் பொருள்மாற்றமடைந்து  ஏழை என்று பொருள்கொண்டதனால் இது திரிசொல் ஆகிறது.  (  இயற்சொல் அன்று ).

7. "ஞானகுருபரன் தீனர்க்கருள் குகன்"   ( இசைப்பாடல்)

8 தீன தயா பரனே தேவனே (பாட்டு ) :  விலங்குணவுபோலும் உட்கொள்ளும் ஏழையர்க்கு அருள் தந்து  காப்பாற்றும் தீபோலும் தூயவனே - இறைவனே என்று விரிந்த பொருளைச் சொல்லாய்வின் மூலமே கூறலாம்.  பிறவழிகளிட் பொருள் குறுக்கம் பெறும்.

தீ > தே > தேவன்:   தீ என்ற சொல்லினின்று தே என்று திரிபு ஏற்பட்டதால் தேவன் என்பதற்கு இவ்வாறு விரித்துப் பொருள் கூற இயல்கின்றது. தே எனற்பாலதற்கு தீ போலும் தூயவன் என்றே பிறரும் கோடி காட்டுவர்.





   

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

ஆறுமோ ஆவல் ஆறுமுகனைக் காணாமல் (பாட்டு)

இது ஓர் அழகிய கர்நாடக சங்கீதப் பாடல்:

பாடலை முழுமையாகத் தருகிறேன். இசைவட்டில் உள்ள பாடல்தான்:


ஆறுமோ  ஆவல்
ஆறுமுகனை நேரில் ----  காணாமல்   (ஆறு)

ஏறுமயில் ஏறிக் குன்று
தோறும் நின்றாடியவன்
பேரும் புகழும் தெரிந்தும் அவன்
பேரழகைப் பருகாமல்                               (ஆறு)

ஞான குருபரன்
தீனர்க் கருள் குகன்
வானவரும் தொழும்
ஆனந்த வைபோகன்

காணக் கிடைக்குமோ
கூறுதற் கில்லாத
அற்புத தரிசனம்
கற்பனை செய்தால் மட்டும்                   (ஆறு )

இதை  அமரர் எம். எல். வசந்தகுமாரி கச்சேரிகளிலும் பாடியுள்ளார்.
கேட்டு மகிழவும்.

இயற்கை எல்லாம் அழகுதான்.  அதுவே அழகு.  அதுவே முருகு என்பார்
திரு வி.க.    "பேரழகைப் பருகாமல்"  என்ற வரியை  நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  இயற்கை அழகெல்லாம் காணுங்கள்.  முருகு என்றால் அழகு,    பின்  முருகு நிலைகொள்ளும் முருகனையும் காணுங்கள்.  அதுவே "ஆனந்தம்" என்பது.  அவன் ஆனந்த வைபோகன்.  மகிழ்வனைத்தையும் ஒருசேர ஆங்குக் காணலாம்.  நுகரலாம்.   அற்புத தெரிசனமே அது. வானின் அனைத்தும் அவ்வழகைத் தொழுகின்றது.  அதைக் கற்பனை செய்து கொண்டிருந்தால்மட்டும் காணுதற் கியலாது.  சென்று வணங்க வேண்டும்.

அழகைப் பெண்ணாக உருவகம் செய்கிறார் பாரதிதாசன். 

காலை இளம் பரிதியிலே அவளைக் கண்டேன்
கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச்
சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்
தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்
மாலையிலே மேற்றிசையில் இலங்கு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்  ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம்
தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள்

எங்கெங்கு காணினும் சக்தியடா -- தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா!

பின் சொந்தமாகப் பாடி  உவகை கொள்ளுங்கள்.

அம்மையும் ஆறுமுகனும் ஒன்றே,  எல்லாம் அழகுதான். தூணிலும்
துரும்பிலும் இருப்பது இறைமை ஆகும்.  சிவம் வேறு முருகன் வேறன்று என்பார் அருணகிரிநாதர்.