வெள்ளி, 14 செப்டம்பர், 2018

வடகிழக்கு அசாமிலிருந்து கும்பகோணச் செலவு.

வடகிழக்கி      னின்று  தொடர்வண்டிப் பயணம்
விடமுடிந்த  தில்லை விழுநீட்சி  உடைத்தாம்
கடகடவென்  றோசை செவிகட்கே இனித்தாம்
கடவுளுந்தம் அன்பில் கனிபோலும் அளித்தார்.




  
திரு மோகன் ஐயப்ப குருசாமி அவர்கள் வடகிழக்கு மேகாலயா
அசாம்  ஷில்லோங்கிலிருந்து தென் திசைக் கும்பகோணம் பயணமானார்.
இப்பயணம் இயற்கை அழகை விரித்துணர்த்தியது.  பல கோவில்களைக்
காணச் செய்து இறும்பூது எய்துவித்தது. தம் இனிய பயணத்தை முடித்துக் கொண்டவர்களாய் அவரும் குழுவினரும் தென்னாடு மேவினர்.
இப்படத்தில் அவர்கள் பயணம் செய்துகொண்டிருப்பதைக் காணலாம்.






 உங்கள்  வடகிழக்கு இந்தியப் பயணம் எப்போது?

பயணமும் மகிழ்ச்சி தரும்.....

அடிக்குறிப்புகள்

தொடர்வண்டி -  கோத்திழுவை வண்டி  ( ட்ரெய்ன்)
இனித்தாம் -  இது முன்னும் பின்னும் வரும் அடிகளில் இறுதிச் சீர்களின் இயைபு கருதி "வலிக்கும்வழி வலித்தல்" என்னும் உத்தி பின்பற்றி வல்லெழுத்து மிகுக்கப்பட்டது. இவ்வுத்தி தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டது காண்க.
=  இனிதாம்.
உடைத்தாம் = உடையதாம்.




நரகா சூரன் ( நரகாசுரன், நரக அசுரன் )

நரகாசூரன் பற்றிய கதைகள் அல்லது தொன்மப் பதிவுகள் தீபாவளிப் பண்டிகையின் போதுதான் வெளிவந்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும்.

நரகா சூரன் என்பவன் கிருஷ்ண பரமாத்மாவினுடைய மகன் என்றும் பரமாத்மாவே  அவனைக் கொன்றுவிட்டார் என்றும் கூறுவதுண்டு. வேறு வகையில் சொல்லப்பட்ட கதைகளும் பல.

விட்ணு அல்லது விஷ்ணு நீரின் அமைப்பினர் (  அம்சம் _).  இதற்குக் காரணம் கடலும் விண்ணும் நீல நிறம்.  இரண்டுமே மழை தருவன..  கடலின் நீரிலிருந்து எழுந்தது என்ற கருத்தை " நீரகம்"  எனற சொல் குறிக்கிறது.  இதுபின் நரக என்று மாறிற்று.  சூறாவளி என்ற சொல்லில் உள்ள சூர் என்பது
சூரன் ஆயிற்று.  நீரக சூர என்பதே பெயர்.  இதுபின் நரகாசூரன் என்று மாறியமைந்தது.

இன்றும் மொழியில் பல சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி வழங்குகின்றன.
றகரம் என்பது இரு ரகரங்களை இணைத்த எழுத்து.  இதை( றகரத்தை) உற்று ஆய்ந்து உணரலாம்.  றகரம் ஏற்பட்ட பின்  புதிய விதிகள் தோன்றிப் பின்னர் மரபுகளாயின.. வேறுபாடின்றி வழங்கும் சொற்களை இலக்கண நூல்களில் காணலாம்.

சூறாவளி, சூராவளி,  சூர,   அசுர என்பவற்றில் வரும் ரகரங்களை வைத்து வாதிடலாகாது.

சூர் சூரை சூறை என்பன ஒலிக்குறிப்பு அடிப்படையில் எழுந்த சொற்களாகலாம்.

நாராயணன் என்ற பெயருக்கு  நீராயினன் என்பதே மூலச்சொல்.  இது விண், கடல் மேகம் எல்லாவற்றையும் உட்படுத்தும்.

இச் "சமய"க் கருத்துகள் இயற்கை வணக்கத்திலிருந்து எழுந்தவை.  மாரி என்ற அம்மன் பெயரும் இன்றும் மழையைக் குறிக்கிறது.  மேகங்கள் கறுத்து மழை பொழிகிறது.  காளி என்பது இக்கருத்தை வலியுறுத்துவதே. இயற்கை அழகைப் பராவியதே முருகவணக்கம்.  நாற் கணங்களின் ஆட்சியனே கணபதி.செம்மை ஒளியே சிவமாகும். சூரிய சந்திரர் தேவர்கள் என்பர்.  கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார் என்பதே இந்துக் கொள்கை ஆகும்.

எல்லாம் இயக்கமுடையவை ஆதலின் அவற்றில் கடவுள் இல்லை என்று கூறுதல் இயலாது.

விண்ணு அல்லது விஷ்ணுவில் தோன்/றியதே சூறாவளி. அது  விண்ணனின் பிள்ளை என்பதில் எந்த முரணும் இல்லை.

நீரில் விழுந்திறத்தலே நீரக - நரகச் சாவு. நரகம் என்று ஒன்றில்லை என்று வாதிட்டால் அவரைக் கடலில் களைந்து அதை மெய்ப்பிக்கலாம். இன்று நீரகக் குண்டு என்ற ஹைட்ரோஜன் குண்டு வேறு உள்ளது. அதுவும் நரகமே. அது நீரின் அமைப்பாக உள்ளது.

திருத்தம் பின்

புதன், 12 செப்டம்பர், 2018

நீக்கமற நிறைந்த பூரணானந்தம்





பார்க்கின்றேன் பார்க்குமிடம்  எங்குமெங்கும் ---  ஒரு
நீக்கமற  நிறைந்துள்ளான்  மகிழ் பூரணன்;
மேற்கினிலே கிழக்கினிலே திசைஎட்டிலும் --- அவன்
மிசையிருப்பான் அகத்திருப்பான் இடமெங்கிலும்.
தூக்கமதில் இணைகையிலே தோய்ந்திருப்பான் --- இரு
தோற்றுருக்கள் தம்மிலுமே பகுந்தும்நிற்பான்;
ஆக்கத்திலும் வந்து  முன்நிற்கிறான் --- இந்த
அகிலமெல் லாமவனே அயிர்ப்பதில்லை.

பாடல்: சிவமாலா.
படங்கள் உதவியவர்: மோகன் (குருசாமி).

 அரும்பொருள்:

மிசை -  மேலே;    அகத்து -  உள்ளே;    எங்கிலும் -  எங்கேயும்;
பகுந்து  -  வெவ்வேறாக;    அகிலம் - உலகம்.
அயிர்ப்பதில்லை -  சந்தேகமடைவதில்லை.




இறைப்பற்றர் மோகன்
(ஐயப்ப குருசாமி)