திங்கள், 10 செப்டம்பர், 2018

தூக்கம் கலைந்து வந்த தூக்கமே.



தெய்வத்  தைத்தேடிக் கண்ட தேனுலா---- வான்
தெரியக் காட்டிய தேகுளிர் வான்நிலா
வையத் தழகெலாம் காட்டும் வாரிகள் ---- எல்லும்
வானில் எழுமுன் னர்ஒளி சேரிருள்.

பச்சைப் பசேலென்  றேமரம் தோகைபோல் --- விரிந்து
பார்க்க விழிகட் குள்அழ கேகுமே.
நிச்ச லும்இக் கவின்தனைக் காண்பவர் --- இறை
நேர்ந்த அருள்தனை நன்கு பூண்பவர்.

வெள்ளி உருக்கித் தெளித்த போர்வையோ --- இங்கு
விரித்த ஏரி கொண்டு காட்டும் நீரினில்;
துள்ளி எழுந்து விழும்பெரு மீன்`களைக் ----- கண்டு
தூக்கம் கலைந்தது    பின்வந்த தூக்கமே.

{ ஒரு புகைப்படத்துக்கு ஒரு செய்தி விளக்கமாக எழுத முற்பட்டுப்
பின் ஓர் இசைப்பாடலாக  வெளிப்பட்டு, இப்போது இதை ஒரு கவிதை 
போல் மாற்றியமைத்து இங்கு வெளியிடுகிறோம். இசைப்பாடலாக எம் 
சொந்த மெட்டில் அமைந்தது.  இப்போது வேறுபட்டுள்ளது. } 

தேனுலா :  இனிய உலவுதல்.
வாரிகள்:  ஆறுகள்.
எல்லும் :  சூரியனும்.
ஒளிசேர் இருள்:  உதய  நேரத்தின் முன்.
நிச்சலும் - நித்தமும்; நாள்தோறும்
கவின்:  அழகு
பூண்பவர்:  பெற்றுக்கொண்டவர்.
இறை: கடவுள்
நேர்ந்த : கொடுத்த.
 பின் வந்ததூக்கமே:  பின் வந்தது ஊக்கமே.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

தெய்வத்தைத் தேடிய தேனுலா.

தெய்வத்தைத் தேடிய தேனுலா.
இப்படத்தில் நம் இறைப்பற்றாளரும் மென்பொருள் குழும்பு உரிமையாளரும் பொறியியலாளருமான ஐயப்ப அடியார் சுவாமி மோகன் அவர்கள் ஷில்லோங் இராமகிருஷ்ண மடாலய சுவாமிகளுடன் நின்று இறைவன் முன்னிறுத்திய இயற்கை எழிலை எண்ணிப் பரவசம் அடைகின்றனர்.

அவன் சபரியிலும் இருப்பான்; அசாம் தென்றலிலும் மேகங்களிலும் இருப்பான்;   அவனில்லாத இடமுண்டோ?  ---  என்பதை  மடாலய சாமிகள் விளக்கிக்கொண்டிருப்பார் போலும்.

கம்மலாக இருக்கும் அசாம் அடிவானம் இறைப்பற்றின் விம்மலாக விரிந்து நிற்கின்றது காண்பீர்.

பாரதி  -
அவர்தம் குழும்பு இயக்குநரும் இயற்கையை நுகராதவரல்லர்.


அருள்மிகு காமக்கியா ஆலயக் கோபுரத்தின்முன் சாமி. மோகனும்
பாரதியும் கும்பிட்டபின் மகிழ்வுடன் நிற்கின்றனர்.




குருசாமி மோகனும்  அவர்தம் இயக்குநர் பாரதியும்.

ஷில்லோங்க் இறைவணக்கச் சுற்றுலா





Ramakrishna Mission building at  Shillong  Assam.

இறைவணக்கம் இயன்ற பின் இயற்கை அழகும் கண்டனர் நம் பற்றாளர்.