புதன், 5 செப்டம்பர், 2018

மகமும் மாகமும் சொல்லும் பொருளும்.

மகம்:  இச்சொல்லை " மகம் " என்று எழுதினும்  " மஹம்"  என்று எழுதினும்  இஃது மக என்னும் அடிச்சொல்லினின்று தோன்றிற்றென்பதை மறைத்திடுதல் இயலாமை அறிக.

மக என்பது நீங்கள் அறிந்த சொல்லே.

"பெற்ற தாய்தனை மக மறந்தாலும்" என்று இராமலிங்க அடிகளார் பாடவில்லையா?

மக+ அன் =  மகன்;  இங்கு மக என்ற சொல் அகரத்தில் முடிய அடுத்துவரும் அன் விகுதியும் அகரத்திலே தொடங்க, இரண்டு அகரங்கள் இணைதலால் ஓர் அகரம் கெடும்.  இதை உணருமுகத்தான் கடினமாக்கிவிடாமல்,  விகுதியில் உள்ள தொடக்க அகரத்தை வீசிவிட மக+ன் = மகனாகும். வாத்தியார்கள் சிலர் மக என்பதில் அகரம் கெட்டது எனினும் ஒப்புக.  பின் மக்+ அன் = மகன் ஆகும். எப்படியும் ஒன்றுதான். மக் என்பது ஒரு சொல்வடிவம் ஆகாது.  பிறமொழியில் மக் என்பது சொல்லாய் நிற்கும்.  எ-டு:  மக்டோனல்டு.  இதற்கு டோனல்டின் மகன் என்று பொருள்.  நம் வீட்டு மக தான் அங்கு சென்று மக் என்று மட்கி விட்டது.

 இது இலக்கணத்தில் கூறப்படும் புணரியல் ( சந்தி ) அன்று.  இங்கு நிலைமொழியோடு வந்து சேர்வது விகுதி அல்லது இறுதிநிலை. அதாவது இஃது சொல்லாக்கப் புணர்ச்சி. எனினும் மக என்பதை நிலைமொழி போல் கொண்டு விகுதி வருவதாகக் கொள்வதாயின் மக என்பதில் உள்ள அகரம் கெட்டதாகக் கொள்வதும்  ஆகுமென்`க்.

மகள், மகார் (ஆர் விகுதி),  மக்கள் (கள் விகுதி) என்பனவும் இவ்வாறு அறிந்துகொள்ளத்தக்கவை.

மகன் மகள் உடையவனையே அல்லது உடையவளையே மன்பதை மதித்தது. மன்பதை எனில் சமுதாயம், குமுகாயம்.  மகன் உடையவன் பெரியவன். அவனால்தான் நாலைந்து மகன்`களையும் வயலுக்கு அனுப்பிப் பாடுபடச் செய்ய முடியும்.  எண்ணிக்கை இருந்தால்தானே படைவலிமை.  ஆளிருந்தால்தானே உழைக்கமுடியும். உழுதல் முடியும்.  இதனால் மக என்ற சொல் திரிந்து மா என்றாகும்.  அப்போது மா என்பது பெரிது என்றும் பொருள்தரும்.  மக என்பது மகா, மஹா என்றும் திரியும்.

எப்போது பிறந்தாள் தாயாகிய ஆதி பராசக்தி.  அறியோம். அறிய முடியாமையின் அது மாயா.   அதை அறிய முற்பட்டால் அறிவு அதன் எல்லையை அடைந்து நின்றுவிடுகிறது.  ஆகவேதான்  அது மாயா.  (மாய் : வினைச்சொல்;  ஆ:  விகுதி.   நிலா விலா முதலியவற்றில் ஆ விகுதி நின்று சொல்லை மிகுத்து முடித்தது )   --சிந்தனைத் திறன்  முடிந்துவிடுவது மாய்தல்.   மகா மாயா என்பதைப் பிறப்பில் மாயா - அறிய இயலாதது என்று உணர்க.  மகா என்பதைப் பிறவா என்றும் கொள்ளலாம்.  பிறவாத அறிய முடியாத பொருள் இறை.

மகவு என்ற ஒரு சொல் இருக்கின்றது.  மகத்தல் என்று ஒன்றிருந்து ஒழிந்திருக்கவேண்டும் என்று நினைக்க இடமிருக்கின்றது.   மக என்ற அடி இன்று வினையாக வழங்கவில்லை. அதாவது பிற - பிறத்தல் போல் மக - மகத்தல் இல்லை.

மகவுடைமை பெருமை ஆதலால்,   மக பெருமை குறிக்கும்.

மக + ஆன் =  மகான்  (பெரியோன் என்பது பொருள்).

மகம் என்ற நக்கத்திரம்  ( நட்சத்திரம் ) ஐந்தாகப் பிறந்தவை ஆகும்.  பிள்ளைகள் போல.  மக + அம் =  மகம்.  அம் விகுதி. நகுதல் : சிரித்தல் மற்றும் ஒளிவீசுதலும் ஆம்.

இனி உலகம் என்றும் பிறவும் குறிக்கும் மாகம் என்ற சொல்லை அறிவோம்.

மக + அம் = மாகம் (  முதனிலை நீண்டு  விகுதி பெற்ற சொல் ).

இது பிறந்த அல்லது இறைவனால் அமைக்கப்பட்ட இவற்றைக் குறிக்கும்:
உலகம் ( உண்டானதாகச் சொல்லப்படுவது).
வானம்  (உண்டானதாகச் சொல்லப்படுவது.)
மேகம்  ( நீரால் உண்டாவது ).
துறக்கம் ( இறைவனால் உண்டானது).
திக்கு  ( இறைவனால் உண்டானது ).
மாசி மாதம்.  (  மக என்பது இங்கு மா என்று திரிந்தது.  அம் விகுதி பெறாமல் சி விகுதி பெற்று மாதப் பெயர் ஆனது. )

இனி மா + கம் என்றும் பிரித்து விளக்கலாம்.   மா = பெரிது;  கம் என்பது உலகம் என்ற சொல்லின் பின்பகுதி.  இது ஒரு "போர்ட்மென்டோ" ஆகும்.

இதைப் பற்றிய உரையாடல் மேலும் அறிய:

தலைப்பு: விடைதெரியாத சொற்கள்.



அறிந்து மகிழ்வீர்.

தட்டச்சுப் பிறழ்வுகள்:  பின்னூட்டம் இடுக.  திருத்தம் பின்னர்.

பார்வை: 20.5.2022 1832


செவ்வாய், 4 செப்டம்பர், 2018

குரவர் குரு என்ற சொற்கள்


 குரு குரல்


குர் என்பது  ஓர் ஒலிக்குறிப்புச் சொல்:


(குர்)   >    குரீஇ   :   குருவி



குர்  >  (  குரு. ) .:   ஒலி.
குரு >  குருவி  ( குர் என்று ஒலியெழுப்பும் பறவை).
குரு >  குரை  ( ஒலி யெழுப்புதல் -  நாய்).
குரு >  குரம்   (ஒலி)
குரு > குரல்  ( தொண்டையிலிருந்து எழும் ஒலி)
குரு > குரவை  ( ஒலி, ஒலி எழுப்பி மகளிர் விளையாடுதல் )
குரு > குருமி  (ஒலி)
குரு > குருமித்தல் (ஒலித்தல்)
குரு >  குரூஉ  (குரு)
குரு > குரோதம் ( ஒலி எழுப்பிப் பகை காட்டுதல்)-  குரோதித்தல்.
குரு > குரவன்  ( ஆசிரியன் : ஒலி எழுப்பிக் கற்பிக்கிறவன்).
குரு :  ஆசிரியன்:   ஒலி எழுப்பிக் கற்பிக்கிறவன்.

குரைத்தல் > குலைத்தல். ( ர > ல போலி)

தொடக்கத்தில் குரு என்பதும் குரவன் என்பதும் ஆசிரியனைக் குறிக்கக் காரணம் அவன் பெரிதும் ஒலிசெய்து கற்பித்ததனாலேதான்.

வாத்தி என்ற சொல்லும் வாயொலியைக் குறித்து எழுந்தது: வாய்> வாய்த்தி > வாத்தி > வாத்தியார்.

உப+ அத்தியாயி என்பது உபாத்தியாயி.1  அது வேறு.  வாத்தியையும் உபாத்தியாயியையும் குழப்பிவிட்டனர்.

ஓலைச்சுவடிகள் அதிகமில்லை. பகர்ப்பு ( காப்பி) செய்வதற்குச் செலவு  (பண்டமாற்று )  ஆனதால் வாயினால் கத்தியே " படித்தனர்".

------------------------
 1  உபாத்தியாய  :  முன் காலத்தில் வேதம் இலக்கணம் முதலியன சொல்லிக்கொடுத்தோர்.. உபாத்தியாயினி என்பது அவர் மனைவியையும் குறிக்கும்.



அருளாளர் நாராயணகுருவின் எதிர்கால ஞானம் -( முன்னுணர்வு).



அருள்மிகு நாராயண  குருக்களும் கவி குமரனாசானும்


நம் சிங்கைத் தீவில் வாசுப் பிள்ளை என்று ஒரு மலையாளி இருந்தார். இவரை அறிந்த பின் சீர்மிகு நாராயண குருக்களின் வரலாற்று நிகழ்வுகள்  சிலவற்றை அறிந்துகொண்டோம். 

குருக்கள் மாதவம் புரிந்து பல அரிய ஆற்றல்களைப் பெற்றிருந்தார் என்று அறியலானோம்.  காந்தியடிகள் கேரளா சென்ற காலை ஸ்ரீ நாராயண குருக்களைச் சென்று கண்டு தமது பணிவன்பினைத் தெரிவித்துக்கொண்டார் என்று கூறுப.  குருக்களின் புகழ் எங்கும் பரவியிருந்தது.
சிங்கப்பூரிலும் ஸ்ரீ நாராயண மிஷன் என்னும் மடாலயம் இயங்கிவருகின்றது.

குமரனாசான் என்பவர் ஓர் மலையாளக் கவியாவார்.  அவர் குருக்களை பலமுறை சென்று தரிசித்ததுடன் அவர்தம் இறையுரைகளையும் பெற்று மகிழ்ந்தவர்.

ஒரு சமயம் வழக்கம்போல் குருக்களைச் சென்று கண்டு அவர்தம் ஞான உரைகளைக் கேட்டு உயர்நிலையை உணர்ந்தார்.  பின் இறையுணா அருந்திவிட்டு  அன்று சற்று விரைவாகவே விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்.  குரு இருந்துவிட்டு நாளை போகலாமே என்று சொல்லிப்பார்த்தார்:  குமரனாசான்  கேட்கவில்லை. அவ்விடத்திருந்து ஆசான் அகன்றக்கால், குருவானவர் சற்று கவலையுடன் காணப்பட்டார்.

அருகிலிருந்த ஏனைச் சீடர்கள் குருவைத் துருவிக் கேட்கத் தொடங்கிவிட்டனர். ஏன் எப்போதுமில்லாத கவலையுடன் காணப்படுகிறீர்கள் என்று அவர்கள் வினாவினர்.   கேள்விகள் ஒரு நெருக்கடி நிலைபோன்ற சூழலை எட்டவே குருக்கள் அவர்தம் மனத்துக்கண் இருந்த ஆழ்ந்த  கவலையை வெளியிட வேண்டியதாயிற்று.

“குமரனாசான் இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிடுவார்.” என்பதை வெளிப்படுத்தினார்.   எப்படி என்றனர் சீடர்கள். அவர்  ஓர் ஆற்றைக் கடக்கப் போகிறார்; அங்கு வள்ளம் கவிழ்ந்து உயிர் துறப்பார்  ----  என்பதைக் குருக்கள் விளக்கினார்.  சீடர்கள் “ குருவே நீங்கள் எப்படியாவது தலையிட்டுக் காப்பாற்றுங்கள்”  என்றனர் . 

 “ இயற்கையின் முடிவுகளில் யாம் என்றுமே தலையிட மாட்டோம்”  என்றனர் குருக்கள். ம் மியுரையைக் குமான் புறந்தள்ளிப் புறப்பட்டுவிடுவார் என்பும் குருவானர் நன்`குணர்ந்தே.  “எது நடைபெற வேண்டுமோ அது நடைபெறும். அதில் தலையிட்டு மாற்றங்கள் செய்யாமல் நம் நேரம் வரும்வரை நாமும் சென்றுகொண்டிருப்பதே இறைவனுக்குப் பிடித்தது”  என்று சொல்லிவிட்டார்.

 சில மணி நேரத்தில் அவர் சொன்னதுபோலவே மடத்திற்குச் செய்தி வந்தது.  கவி குமரனாசான் படகு கவிழ்ந்து உயிரிழந்தார்.
இந்நிகழ்வு குரு ஒர வருவதுரைஞர் என்பதைக் காட்டிற்று.

அருளாளர் நாராயணகுருவின் வரலாற்றினைப் படித்துள்ளேமெனினும் குரு பற்றிய இத்தகு நிகழ்ச்சி யொன்று அங்குக் கூறப்படவில்லை.  அதாவது குரு ஓர் முன்னுரைஞர்    என்பதும் குமரனாசானின் மரிப்பினை முன்னறிந்திருந்தார் என்பதும் அந்நூலில் கூறப்படவில்லை. இது மேற்கூறியவாறு அறிந்தவர்வாய்க் கேட்டுணர்ந்தது ஆகும்.

குருவானவர் தாம் செய்த எதற்கும் விளம்பரம் தேடாது அமைந்து வாழ்ந்த உயர்பெற்றியினர் என்பதும் இதன் மூலம் தெரிகிறது.

(குமரனாசான் பற்றிய ஒரு வலைத்தளம் செல்லத்தக்க சான்)றிதழைப் பெற்றிருக்கவில்லையாதலின் அங்குச் சென்று எதையும் ஆராய இயலவுமில்லை. )

குறிப்பு:  ஒரு என்பது ஓர் என்றும் ஓர் என்பது 
ஒரு என்றும் தன் திருத்த மென்பொருளால் 
மாறிக்கொள்கிறது.  திருத்தியுள்ளோம். மீண்டும்
பின்னர் நோட்டமிடுவோம். நன்றி.