செவ்வாய், 28 நவம்பர், 2017

ஒட்டகத்துக்குப் புதிய சொல்



இன்று ஒட்டகம் என்ற தமிழ்ச்சொல்லை மாற்றி  அயல்மொழி வடிவம் கொடுப்போம்.
ஒட்டகம் என்று தமிழர்கள் பெயர்வைத்துவிட்டதால் வேறு புதிய சொல்வடிவங்களைத் தேடி அலையவேண்டாம் அல்லவா. ஒட்டகத்தையே எடுத்து அயல்வடிவம் கொடுப்பதே திறமுடைமை ஆகும்.

ஒட்டகம். இதில் “ட்ட” என்பதை எடுப்போம்.
ட்ட  ஷ்ட.

இது வழக்கமான மாற்றம்.   ட்ட > ஷ்ட.

ஒ என்ற தலையெழுத்தை எடுப்போம்.
ஒ > உ..
அயல்மொழிகளில் ஒகரம் இல்லை; எகரமும் இல்லை.  ஓகாரம் ( நெடில் )  ஏகாரம் (  நெடில் ) உள்ளன. ஓஷ்ட் என்னாமல் உஷ்ட என்பதே சரியாகவிருக்கும்.

இப்போது ஒட்ட என்பதை உஷ்ட என்று மாற்றிவிட்டோம்.

இறுதி கம் இணைக்கலாம். அப்படிச் செய்தால் பெரிய மாற்றம் எதுவுமில்லை. ஆகவே கம் வேண்டாம். ரம் என்று போட்டுச் சொல்லை முடிப்போம்.

ஒட்டகம் > உஷ்ட்ர

நன்றாக இருக்கிறது.


ஒட்டகம்



இப்போது ஒட்டகம் என்ற விலங்கின் பெயரை ஆய்வுசெய்வோம்.
உடலின் மேல்தோல் ஒட்டியுலர்ந்தது போன்ற காட்சியைத் தருவது இந்த விலங்கு அல்லது மிருகம்,1
ஓட்டகம் =  அகத்து ஒட்டியதுபோன்ற தோல் உடைய விலங்கு.
ஒட்டு +  அகம் =  ஒட்டகம்.
உடலின் எலும்புக்கூட்டுள் சென்று ஒட்டுதலைக் குறிப்பதே அகம் என்ற சொ.ல், நன்.கு அமைந்த சொல்.

பின் விரித்தெழுதப்படும்.


அடிக்குறிப்பு:
1 மிருகம் என்ற சொல்லுக்குப் பிறப்பு உடையது என்று பொருள். அதாவது குட்டிபோடுதலை உடையது. இது மக என்ற சொல்லிலிருந்து வந்தது.

மக  - பிறத்தல் பொருளுடைய  ஓர் அடிச்சொல்.
மக > மகம் (பிரிந்து தோன்றிய நட்சத்திரம்).
மக >  மகன், மகள் மக்கள்
மக >  மகதி:   பிரிந்து வளர்ந்த மொழி.
மக >  மா  விலங்கு.
மக >   ம்ருக விலங்கு.   அயல் மொழித் திரிபு.
ம்ருக > மிருக.

விலங்கு:  விலங்கு என்பது விலகிச் செல்லவேண்டிய நடப்பும் குணமும் உடையது என்று பொருள்படும்.  விலகு >  விலங்கு.

வேறு திரிபுகள்

இலகு > இலங்கு.
சவுங்கு > சவுகு (சவுகரியம்)
துலங்கு > திலகு > திலகம். ( இட்டால் வாழ்வு துலங்குவது )
தெலுகு > தெலுங்கு   தென்மொழி.  தெல்> தென்.

பிறவும் அன்ன.

திங்கள், 27 நவம்பர், 2017

சிற்றரசன் வள்ளுவன்



வள்ளுவன் என்ற சொல்லைப்பற்றிப் பல ஆய்வுகள் நடந்துள்ளன. பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் ஆய்வுகளே நம்மை வந்து எட்டியுள்ளன.

இச்சொல் எங்கனம் அமைந்ததாயிருப்பினும், நாஞ்சில் நாட்டில் பண்டைக்காலத்தில் ஒரு சிற்றரசன் இருந்தான். இவன் நாஞ்சில் வள்ளுவன் என்றே குறிக்கப்படுகிறான்.

இவன் பாண்டிய மன்னருக்கு அடங்கி ஆட்சிசெய்தவன். வறிய புலவன்மாரை ஆதரித்தவன். இவனைப் புலவர் பலர் பாடிப் பரிசில் பெற்றிருப்பர் என்றாலும் புறநானூற்றில் இவனைப் பாடிய சில பாடல்களாவது கிடைத்துள்ளன

ஓளவைப் பாட்டியும் இவனைப் பாடியுள்ளார்.

வள்ளுவர் என்போர் சிற்றரசர்களாய் இருந்தனர் என்பதை இப்பாடல்கள் தெளிவிக்கின்றன.




ஒரு போர்க்களக் காட்சியின் புறநானூற்றில் வள்ளுவன் யானை மீதிருந்துகொண்டு போர்மறவர்கள்பால் உத்தரவுகள் விடுத்துப் போரை இயக்கியுள்ளதை இங்குப் பாடலுடன் பொருளும் தந்து எழுதியிருந்தோம். பாடலிலுள்ள அருஞ்சொற்களை அறிந்து மகிழ்ந்தகாலை இக்காட்சியில் வந்த வள்ளுவனை இங்குப் படிப்போர் அறியாது நெகிழவிட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.