திங்கள், 18 செப்டம்பர், 2017

சயனம் சயனி அனந்த சயனம்




சயனம், சயனித்தல் என்பன நம் கவனத்தை ஈர்ப்பன.
சிலர் உட்கார்ந்துகொண்டே உறங்குதலும் உண்டு; நின்றுகொண்டே தூங்கி விழுந்துவிடுதலும் உண்டு. நல்லபடி தூங்க வேண்டுமானால் சாய்ந்துகொண்டு (அல்லது படுத்துக்கொண்டு ) தூங்குவதே சரி.
எனவே சாய் என்ற வினையினின்று “சயனித்தல்”   “சயனம்” என்பன அமைவுற்றது மிக்கப் பொருத்தமென்போம்.
பல சொற்களில் இப்போது நாம் கண்டுவருவதுபோல சாய் என்பதன் முன் நிலை நெடில் குறிலானது. சாய் -  சய் > சயனி.
சாவு+அ,ம்  -   சவம் என்று குறுகினாற்போலவே  இங்கும் குறுகியுள்ளது. இங்கனம் குறுகினவை பல. பண்டைத்தமிழிலிருந்து  உதாரணம் ஓன்று   சொல்லவேண்டின்,  காண் > கண் என்பதுகாண்க. எச்சவினை நிலையிலும் காண் எனற்பாலது கண்டு, கண்ட என்று குறுகவில்லை? இத்தகு குறுக்கங்கள் இயல்பு என அறிக.
இனி அனந்த சயனம் காண்போம்.
அனந்தம் :  அன் + அந்தம் .அந்தம் அல்லாதது.  அந்தம் – முடிவு. அல் > அன் திரிபு.
ஆகவே முடிவு அற்ற உறக்கம் என்பது பொருள்.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஏமாற்றும் மழை



வலியதோர் இடி முழக்கம்
வருமழை நெடிதென் றேனா
தொலியிலே குளிரு ணர்ந்தேன்!
துவண்டுபோய்ச் சாயந்து கொண்டேன்

சடசட கொஞ்ச நேரம்,
சலிப்பில்லை இன்னும் வேண்டும்.
கொடகொட என்றே ஊற்றி
குளிர்விக்க நிலத்தை என்ன,

கடுமழை கனவாய் ஆகி
கண்மூடு முன்னே ஓய
விடுவிடு எனைஏ மாற்றும்
வீண்படை  எனவெ ழுந்தேன்!

சொல்லும் சுருக்கமும்



போகலாம், செல்லலாம், பேசலாம் என்பன போலும் சொல்லமைப்புகளைப் பற்றிச் சற்று சிந்திப்போம்.

போ என்பது ஏவல் வினை. இதில் அல் என்னும் தொழிற்பெயர் விகுதி கொண்டு புணர்த்தால் போவல் என்று வகர உடம்படு மெய்தான் தோன்றவேண்டும். சிலர் போவலாமா என்று கேட்பது சரியாகத் தோன்றுகிறது,

ஆனால் பெரும்பாலோர் “போகலாமா!” என்றுதான் கேட்கின்றனர். யாம் புள்ளி விவரங்கள் எடுக்கவில்லை எனினும் பெரும்பான்மை பற்றிய எம் சிந்தனை சரியென்றே தோன்றுகிறது’

இப்போது போகலாம் என்பதை அலசுவோம்.
போ + கு+  அல் + ஆம்.
சில சொல்லமைப்புகளில் குகர ஒலி இடைவருகின்றது. ஆகவே இதனை வகர உடம்படுமெய்க்குப் பதிலாகத் தோன்றிய போலி அல்லது திரிபு என்று கொள்ளலாம்.

ஆயினும் செல்லலாம் என்னும் சொல்முடிபில் கு தோன்றவில்லை. செல்கலாம் என்று யாரும் பேசுவதில்லை.. போகலாம் என்பது சரியானால் செல்கலாம் என்பதும் சரி என்று வாதிடலாம்.  ஒப்புமையாக்கம் ஆயிற்றே!.ஆனால் எதிர்மறையாக வரும்போது செய்கலாதார்,  என்று  கவிதையில் வரலாம்.  செய்+கு+ அல்+ ஆ+ து + ஆர் என்று நோக்குங்கள். இதில் வரும் அலாதார் என்பது அல் என்னும் தொழிற்பெயர் விகுதி அன்று. அது “அல்”  என்னும் எதிர்மறை ஆகும்.   அன்மைப் பொருளீல் வருகிறது. நிற்க.

சங்ககாலத்தில் யாம் செல்லாமோ?   யாம் போகாமோ?  யாம் கொள்ளாமோ என்று பேசிக்கொண்டிருந்த தமிழர்கள்  செல்லல் ஆமோ, போகல் ஆமோ.  கொள்ளல் ஆமோ என்று தொழிற்பெயர் விகுதியாகிய அல் என்பதைப் போட்டுச் சொற்களை நீட்டமாக்கினார்கள். இது ஏன் என்று தெரியவில்லை.. சீனமொழியில் இன்னும் பல சொற்கள் நீளாமல் சுருங்கியே நின்று பொருள் தருகின்றன.! சுருக்கிப் பேசுவதே உலகக் கடைப்பிடிப்பாகும். “சினிமாட்டோகிராபி” என்பது பழைய இங்கிலாந்தின் நாடாளுமன்றமியற்றிய சட்டங்களில் இருந்திருக்கலாம்.. அது பேச்சில் சினிமா ஆனது. இப்போது சினிபிளக்ஸ் என்ற புதிய சொல்லுக்கு வசதி தந்தது. ஒம்னி பஸ் என்றது வெறும் பஸ் ஆனது. பிரசிடென்ட் கூட பிரஸ்ஸ் ஆகிவிடுகிறார்.

செல்லாமோ? என்பதுபோன்ற வடிவங்கள் இன்னும் மலையாள மொழியில் மட்டும் மாறாமலுள்ளன.

தமிழனே! ஆயிடைச் சென்று செவிகொடுத்துக் கேளாமோ?
சேச்சிகளும் சேட்டன்மாரும் கேட்டா?