செவ்வாய், 11 ஏப்ரல், 2017

வித்துதல் சொல்லிலிருந்து எழுந்திருப்பினும்........வித்தகர்

வித்தகர் என்ற சொல் காண்போம்.

இது முன்பு சிறிது விளக்கம் பெற்றுள்ளது.

விதைத்தல் என்ற வினைச்சொல்லுடன், வித்துதல் என்ற வினைச்சொல்லும் தமிழிலேயே உள்ளது.

வித்துதலும் விதைத்தலே ஆகும்.

கல்வியையும் கருத்துகளையும் ஒரு பெரு மரம்போல் வளர்க்கத்தக்க விதையைத் தம்முள் வைத்திருப்பவர் ‍‍==  ஓர் ஆசிரியர் == வித்தகர்
ஆவர். பேரறிவாளர் என்பது பொருளாம்.

வேதம் என்பது வேய்தல் அடிப்படையில் எழுந்தது என்பது எம்
முடிபு ஆகும். ஆயினும் வித் (வித்துதல்) என்பதனடிப்படையிலே
எழுந்தது என்று மேலையர் கூறுவதால், வித்துதல் என்ற சொல்லிலிருந்து எழுந்திருப்பினும்   அதுவும் தமிழ் மூலமே ஆகும்.

வித்தகர் என்பது: வித்து + அகம் + அர் எனப்புணர்ந்து, வித்து+அக+ ர்
என்றாகி, சொல் அமைந்தது. அர் என்ற விகுதி, அகரம் கெட்டு ரகர‌
ஒற்று மட்டும் நின்றது. வித்து என்பதன் உகரமும் கெட்டது. எனவே
வித் + த் அ + அ +  கர் என்பதில் வித் (த்+) (அக)ர் = வித்தகர்
ஆனது. ஒழிந்த ஒலிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
அகம்+அர் என்பது அகமர் என்று முடியாமல் அகர் என்றே வந்தது
காண்க. மகர ஒற்றுக் கெட்டு, அக+ வ் + அர் எனப்பொருந்தி, அகவர்
என்றும் வரவில்லை.

கல்வி, கலை ஆய இவற்றை வளர்க்கும் பெரு வித்தினை உடையவர்
என்று பொருளுரைக்கலாமே.










திங்கள், 10 ஏப்ரல், 2017

சேர்மி நேர்மி சோர்+தன்+ஐ


சேர்+ ம் + இ = சேர்மி என்பது சேமி, சேமித்தல் என்று வினையாகும்.
ஒரு புதிய சொல்லை உருவாக்கிய பின், இடையில் நின்று சொல்லை
நீட்டமாக்கிக் கொண்டிருக்கும் ரகர ஒற்றை நீக்கிவிடுதலென்பது ஓர்
இயல்பான திரிப்பு முறையாகும். ரகர ஒற்று நின்று ஆகப்போவது
ஒன்றுமில்லை; சேர் என்பதே பகுதி அல்லது முதனிலை என்பதை
விளக்க உதவலாம். சொல் எப்படி உருவாயிற்று என்பதைப் பேசுவோன்
அறிந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. சொல்லைப் பயன்படுத்திக்
கருத்தறிவிப்பதே பேசுதலின் தலையாய நோக்கு ஆகும்.

வழக்குக்கும் வாய்ப்புக்கும் மலாய், ஆங்கிலம் என்பவை எப்போதும்
பேசுவோனிடத்துத் தயார் நிலையில் உள்ளபடியால், பேசுவோனிடம்
அதிக முயற்சியையும் கருத்துத் தடைகளையும் வேண்டும் சொற்கள்
நளடைவில் நகர்ந்துபோய்விடும். இதனாலே, திரிபுகளுக்கு இதுகாலை
ஒரு தேவை உண்டென்றும் கூறலாம். பேசுவோனிடம் நெருக்கடி கொடுத்து மொழியை வளர்த்துவிடமுடியாது. ஊக்குவித்தல் என்பது
வேறு. பல திரிபுகள், சொற்களை எளிதாக்குபவை.

சேமித்தல் என்பதுபோல் அமைந்ததே நேர்மித்தல் > நேமித்தல் என்பதுமாகும். நேராக அழைத்து ஒருவனை ஒரு வேலையில்
வேலையிற் பணித்தல் என்பது ஆதி வழக்கமானாலும் இப்போது
பணிப்போலை மூலம் நேமித்தல் பெருவழக்கு ஆகும். இதுபற்றிய‌
எம் பழைய இடுகைகள் அழிந்தன.

சோதனை என்பதும் ஒரு சிற்றூர் வழக்கு. சோர்(தல்) என்பதினின்று
தோன்றியது இதுவாகும். ஒரு சோதனையானது, தன்னைச் சோர்வடையச் செய்துவிடும்.

சோர்+தன்+ஐ > சோ+தன்+ஐ = சோதனை.
அல்லது:

சோர் > சோ.
சோ+ தன் + ஐ = சோதனை.

தன் என்பது "தன்" என்ற முழுச்சொல்லாகவிருந்தாலும், து+அன் என்பதன் திரிதலாக இருந்தாலும், விளைவில் மாற்றம் இல்லை.

தன்  -  இடை நிலை;  ஐ  : விகுதி.






ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

94‍ஐ எட்டிய பூரணவடிவு அம்மையார் மறைந்தார்

94‍ஐ எட்டிய பூரணவடிவு அம்மையார் மறைந்தார்.  (சிங்கப்பூர் 6.4.2017)

இக்காலத்தில் ஒரு நல்ல வயதை எட்டுமுன்னரே மறைந்துவிடுவோர்
பலராவர். மேலும், நோய்களின் எண்ணிக்கையும் மிகுந்தள்ளது. இந்த நிலையில், பழங்கால முறைப்படிச் சத்துணவை உண்டு  உடலை நன்கு நலம் பேணி, நீண்ட நாள் வாழ்ந்துள்ளார் பூரணவடிவு அம்மையார்.

இவருக்கு ஏழு பிள்ளைகள். ஆண்கள் ஐவர்; பெண்கள் இருவர் ஆவர்.

இட்டிலி, வடை, சிலவகை அப்பங்கள், உளுந்துக் கஞ்சி என்று
செய்து உண்பதுடன் பிறருக்கும் கொடுப்பவர்.  அன்பு  கெழுமிய உள்ளம் படைத்தவர் .

இவர் உடற்பயிற்சி ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலும்
சமையல் வேலைதான். இறுதி நாட்களில், பணிப்பெண் உதவியை
ஏற்றுக்கொண்டார்.

பின்னாட்களில் இனிப்பு நீர் நோய் ஏற்பட்டு, கட்டுக்குள் இருந்ததாகக்
கேள்வி. இப்போது மாரடைப்பு ஏற்பட்டு   மறைந்துவிட்டார்.

இவருடைய மகன்களில் ஒருவர், முருகையன். முரு ஆட்டோ ட்ரேடிங்
(முரு உந்து வணிகம்)  என்ற நிலையத்தை நடத்திவருகிறார். சிங்கப்பூரில் உந்து வண்டி வணிகம் செய்பவர் இந்தியருள்   இவர் ஒருவரே.   இந்தியர் பிறரை இத்துறையில் காணமுடியவில்லை .

அன்புடையோரும் ஆதரவாளரும் பெருந்திரளாக வந்திருந்து அம்மையாரை
வழியனுப்பி வைத்தனர்.

பூரணவடிவு அம்மையார் ஆன்மா சாந்தி அடைய நாம் இறைவனை
வேண்டிக்கொள்வோமாக.

நாரணன் சிவனொடு வீறுடை அம்மனின் நல்லருள் பெற்றுயர்ந்த‌
பூரண வடிவெனும் பொற்பெயர் பூண்டவர் புன்னகை என்றுமுள்ளார்;
ஊருணத் தந்து தான்பிற குண்பவர் உள்ளில் விரிந்த அன்பு;
வேறுல கெய்தினர் வேண்டுவம் சாந்தியை விழைவம் அவர்பெறவே.