புதன், 7 செப்டம்பர், 2016

புறநானூறு :" பூக்காரிக்கு இரங்கு, எனக்கன்று"


இது புறநானூற்றுப் பாடல். 293. அழகிய இப்பாடலை நொச்சியூர் நியமங்கிழார் பாடியுள்ளார்.சங்க காலத்தில் இவ்வூர் நொச்சிநியமம் என்றிருந்தது என்பர்.

திணை: காஞ்சி. துறை: பூக்கோள் காஞ்சி.

நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாணுடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினை எனப்
பிறமனை புகுவள் கொல்லோ
அளியள் தானே பூவிலைப் பெண்டே.

சினம்கொண்ட யானையின் மேலமர்ந்து தண்ணுமை (போர்க்கழைக்கும் பறை) முழக்கி, மறவர்களை அழைக்கின்றான் ஒருவன். மறவர்கள் அது கேட்டுக் காஞ்சிப் பூச்சூடி, அரணைச் சூழ்ந்துள்ள பகைப்படையை அழிக்கப்
புறப்பட்டு வருகின்றனர்.

அங்ஙனம் போந்த மறவன் ஒருவனின் மனைவி, வீட்டில் இருக்கிறாள். அப்போது அங்கு வந்த பூக்காரி, பூ வாங்குக என்று அவளிடம் கேட்கிறாள்.
காஞ்சி சூடிச் சென்றுவிட்ட கணவனை எண்ணியபடி, தான் பூச்சூடிக்கொள்ளாமல் இருந்த அவளுக்கு, அந்தத் தண்ணுமை ஒலி இரக்கம் காட்டுவது போலிருக்கிறது. தண்ணுமை ஒலியே!  எனக்கு இரங்காதே!.
அந்தப் பூக்காரிக்கு நீ இரங்கு. இந்த ஒலியால், அடுத்தடுத்து உள்ள மனைகளிலும் எந்த மறவனின் மனைவியும் பூ வாங்கமாட்டாளே. பூ விற்க முடியாத அவள் அல்லளோ இரக்கத்திற்கு உரியவள்......?

இவ்வாறு பாடுகிறார் நொச்சி நியமங்கிழார்.
தண்ணுமை ஒலிக்கிறதே, அது இரக்க உணர்வினை மேலெழுப்பும் ஒலி.
அந்த இரக்கத்திற்கு உரியோர் மறவர்களின் மனைவிமாரல்லர். பூக்காரிகள்
தாம்.  மறக்குலத்துப் பெண்டிர் இதற்கெல்லாம் அஞ்சுவதில்லை.


தண்ணுமை முழக்குவோனும் அஞ்சுவதில்லை. அவனிருப்பது யானையின்
மேல். கீழ் நிற்கும் பகைவர் அவனைக் குத்த முடிவதில்லை." நிறப்புடைக்கு
ஒல்கா"  யானையின் மேலிருக்கிறான்.   கீழ்  நின்ற படி புடைத்தல் ‍ நிறப்புடை.
நின்ற> ‍ நிற.  னகர ஒற்றுக் குறைந்தது. புடைத்தல் ‍:  பக்கத்திலிருந்து குத்துதல். நில் > நிறு > நிற எனினும் அதுவே. அடிச்சொல் நில்.








செவ்வாய், 6 செப்டம்பர், 2016

இடக்கர்ப் பொருள் வரு தமிழ்

தமிழில் சொல்லும்போது இடக்கராகத் தோன்றும் சில சொற்களையும்
தொடர்களையும் அவை தமிழ் என்னாமல் வேறு மொழியினுடைய என்று கூறிவிட்டால் அந்த இடக்கான பொருள் மேலெழாது அடங்கிப்போகும். சிலவிடத்து இவ் வுபாயத்தை அல்லது ஆம்புடைமையைக் கையாண்டுள்ளனர் இந்திய இலக்கியவாதிகள். இது ஒரு செயலாற்றுத்
திறன் என்றே உயர்த்தவேண்டும். எந்த எந்த இடங்களில் அவ்வாறு செய்துள்ளனர் என்று விரித்து விளக்கலாம். ஆனால் அது புதைத்ததை மீண்டும் கிண்டி மேலெடுத்தது போலாகிவிடும்.

ஆனால் எடுத்துக்காட்டாக மட்டும் ஒன்றைக் காட்டி முடித்துவிடலாம்.
அது சாணக்கியன் என்பதே. பிரித்துப் பார்த்தால், சாண் நக்கியன் என்று
இடக்கர்ப் பொருள் வருகிறது.  ஆகவே இவன் தமிழனே ஆனாலும்
இவனை வடதிசைக்குப் பெயர்த்துவிடின் தொல்லை இராது.

இவன் எழுதினான் என்று சொல்லப்படும் அர்த்தசாத்திரமும் தமிழிற்போந்து பின் சமஸ்கிருத மொழியிற் பெயர்க்கப் பட்டதென்றே
தெரிகிறது. தமிழ் மூலம் தொடர்பு துண்டிக்கப்பட்டுக் கிடப்பதாகக்
கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் குமரசாமிப் பிள்ளை இதனை மீண்டும்
அழகிய வெண்பாக்களாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவற்றைப் பாடி
இன்புறுக.

எடுத்துக்காட்டுக்கு:

ஆடையால் மற்றை அணியால் அலங்கரித்துப்
பீடடைய வந்த பெருமூடர்  -நீடவையில்
எத்துணையும் பேசாது அடங்கி இருப்பரேல்
அத்துணையும் மேன்மை அவர்க்கு ".

(சாணக்கிய நீதி வெண்பா)

இது அவையடக்கம் வலியுறுத்தியது. பேச வேண்டிய சமையத்துப் பேசவேண்டும்.  இன்றேல் " நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய 
மாட்டாதவன் நன்மரம் "  என்று குற்றமாகும் .  இ
துபோலும்  கருத்துக்கள் மன்னர் அவைக்குரிய என்றாலும் இன்றும் பொருந்துவனவாம் .

திங்கள், 5 செப்டம்பர், 2016

வனதாய் > வனிதை. காடு வனம் & கொடுந்தமிழ்

காடு என்பது காக்கப்படுவதாகிய மரங்கள் செடிகள் கொடிகள் அடர்ந்த இடம்.

கா (காத்தல் )  >  காடு.  (டு விகுதி).

ஒப்பு நோக்குக:  மா >  மாடு.  மா‍ = விலங்கு;  மாடு: ஒரு குறிப்பிட்ட‌
விலங்கு;  ஆக்கள்.

கா> கான் > கானம் > கானகம்.   (காடு).

கடு > காடு.  முதனிலை நீண்டசொல்.   கடுமையான (கடத்தற்கரிய இடம்)

கடு > கடம்.  (வேங்கடம்).  கடத்தற்கரிய வெம்மை மிக்க இடம்.

 வல் > வன்  (லகர  னகரத் திரிபு.)

வன் > வனம்.   காக்கப் படும் இடமாகிய காடு.

வனப்பு >  அழகு.   வனம்+ ஆம் + தரம் =  வனாந்தரம்.  (காடு என்னும்
தரமுடைய இடம்).  வனம் ஆகும் தரம்.  ஆகுபெயராய் வனம் குறித்தது.

வனப்பு > வன + தாய் >  வனதா > வனிதா.  

இங்கு அழகு குறிக்கும் வன என்ற அடி வனி  என்று திரிந்தது.

வனதாய் > வனிதை. வலிமிகாச் சொற்புனைவு.

செந்தமிழில் வனத்  தாய் என்று வரவேண்டும் .  கொடுந்தமிழில் வனிதா என்று திரிந்தது.  கொடுந்தமிழில் திரியும்.   கொடு  = வளைவு . கொடுந்தமிழ் = வளைந்த தமிழ் .   ஆயினும் தமிழே.  கொடுந்தமிழ்  மேலும் திரிந்து பாகதங்கள் ஆயின.

காடு வனம் & கொடுந்தமிழ்