வியாழன், 16 ஜூன், 2016

திருலோக சந்தர் மறைவு .

திருலோக சந்தரவர் மறைந்து   விட்டார்
திரைகளிலே பெயர்கண்டு தெரிந்தோர் பல்லோர்
பரலோகம் படர்தலுக்கும் வயதும் உண்டோ
பார்ப்போருள் நான்நீஎன் றியார்க்கும் நன்றே
இருலோகம் கால்வைத்தும் இருக்கும் தன்மை
இதுபிழையா தென்பதுவே உளது காண்பீர்
தரவேணும் மரிநாள்மேல் தாவும் காறும்
தமிழுக்கோர் நலம்தன்னைச் செய்தார் என்பர்

காணொளியில் யாமறிந்தார் கருதும் காலை
கல்விகலை நலம்செய்தார் கணக்கில் நண்பர்
மாணுறவே ஆள்கண்டோர் உளரோ இல்லை
மடிக்கணினி தாளிகைக்குள் மண்டி நிற்பார்
வீணுறவே பூண்காலம் கழிந்தி டாமல்
விளைத்திட்டார் கலை யின்பம்  இன்னோர்  எல்லாம்;
சாணளவே பயனெனினும்  முழமாய்க் கொள்வோம்
சாவினையே மேவுறினோ வீழ்புன் கண்ணீர்.


மாணுறவே ஆள்கண்டோர் உளரோ -அதாவது  என் வட்டாரத்தில் இவரை நேராகக் கண்டோர் யாருமில்லை.
பூண்காலம்:  பூணும் காலம் . நாம் பொருந்தி வாழும் இக்காலம் .
அதாவது   நாம் காலத்தின் வாயில்  அகப்பட்டது   -  அகவை;   நாம் வயப்பட்ட  அல்லது  நமக்கு வைக்கப்பட்ட காலம் வயது.  அதன்பின் நாம் சென்றுவிடுவோம்.  காலம் நம்மை இப்போது அணிந்துகொண்டிருக்கிறது,  பூணுதல் -  அணிதல்.  அல்லது நாம் காலத்தை அணிந்துகொண்டிருக்கிறோம் . அதனால் நாம் வயது குறித்துக்கொள்கிறோம்.  இந்த   இரு கருத்தும் பொருந்துவது  "பூண் காலம் "  என்னும் தொடர்.

புன்கண்ணீர்  -  துன்பக் கண்ணீர் .

தலைப்பு: திருலோக சந்தர் மறைவு 





உலகெங்கும் தமிழ்

எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார் என்பதனை இணையத்தால்  உணர்ந்துகொண்டேன்;
பங்கிட்டே  பல்லரசும் ஓச்சுகின்ற கோல்வரைக்குள்
பதியாமற் கடந்து நின்றேன்;
தங்குற்றேம் ஓரிடத்தில் என்றபடி தவியாமல்
தமிழன்னை  தரணிபரவி
எங்குற்றும் மிளிர்கின்றாள் இதுவன்/றோ வளர்ச்சியிதை
எனைத்தானும் காத்தல்கடனே

கோல் வரை  :   செங்கோல் செலுத்தும் ஆட்சி எல்லை.
பதியாமல்  -   உள் அடங்கி  நின்றுவிடாமல்.
தங்குற்றேம்  -  தங்கிவிட்டோம் 
தரணி பரவி  =  உலகெங்கும் பரவி 
எங்குற்றும்   -  எங்கெங்கும் 
எனைத்தானும்  -  எப்படியாகிலும் .

உலகெங்கும்   தமிழ் 

வெயில் விழைவு :LongSunnyDay

பன்னிரண்டு மணிநேரம் பகலவன் ஒளிப்புனலில்
பயின்றவெலாம்  மறந்திருந்தேன்;
என்னிரண்டு விழிகளும் இறைஞ்சிய போதெல்லாம்
இருந்தநிழல் விருந்துமுண்டேன்;
அன்னியமோ கதிரவனே அன்னியமோ  வெண்ணிலவே
அன்னியமோ உடுக்களெல்லாம்
பொன்னிறமே பட்டொளிரும் எழிலியொடு   தென்றலுமே
மன்னுயிர்க்கெல் லாமினிமையே.

கதிரோனும் மறைந்திட்டான் கவிமெல்ல  இனிப்பாடு
காதுணவு விழைகின்றன;
மதிதானும் மாருதமும் மலர்களிலே வண்டினமும்
மருவினிய மாலையழகில்!
இதுநாளில் யான்பெற்ற இன்பங்கள் யாவுமினி
என்றென்றும் எனதுமாகும்
மெதுவாக எழுந்திந்த  இடம்நீங்கு  வேன்விரைவும்
உதவாத இசைந்தநாளே.

வெயில் விழைவு