செவ்வாய், 26 ஏப்ரல், 2016

சகம் > சகா.

சக்களத்தி என்ற சொல்லின் அமைப்பினைக் காண்போம்.

ஒரே அகத்தில் (வீட்டில் அல்லது இடத்தில்) ஒன்றாக இருத்தலே சகம் என்பதாகும்.

உலகம் என்ற பொருளில் வரும்  ஜெகம் என்பதும் சகம் எனவரும். அந்தச் சகம் வேறு. அதை முன் யாம்  விளக்கியதுண்டு. அது முன் வந்த இடுகைகளில் இங்குப் பதிவுபெற்றுள்ளது.

இப்போது யாம் கூறவந்த "சகம்".

சகம்+ களத்தி = சகக்களத்தி.   மகர ஒற்றுக் கெட்டது.

இனிச் சகம் என்பதை மட்டும் காண்போம்.

சரி+ அகம் = சகம்.  இதில் உள்ள "ரி" எழுத்தையும்  "அ" எழுத்தையும் விலக்க, சகம் வரும்.

சரியகம் >  ச (ரிய) கம் =  சகம்.

இது ஒரு புனைவுச் சொல்லே.

இதை அமைத்த புலவர்கள் நல்ல படைப்பாளிகள்.

தமிழில் இடைக்குறை, தொகுத்தல் (சில எழுத்துக்களை விலக்குதல்) முதலிய உண்டு. பெரும்பாலும் கவிதைக்கு இவை
பயன்பட்டன.  என்னில் > எனில்  இல்லது > இலது, இப்படிப் பல.

இதைச் சொல்லமைப்புக்குக் கையாண்டது  மிக்க நல்ல உத்தி.


உயிரில் தொடங்கிய பல சொற்கள் உயிர்மெய்யாகத் திரிந்துவிட்டன என்று முன்பு யாம் மொழிந்த வழிச்சென்று, இதையும் உட்படுத்தி உரைப்பினும் ஏற்கத்தக்கதே.  அகரம் சகரமானதற்கு இங்கு ஒரு
காரணம் உண்டேயன்றித் திரிபு பொறுத்தவரை மாற்றம் இலது.

சொற்களின் நீட்டம் குறைத்தலில் குற்றம் ஒன்றும் இலது.

சகம் > சகா.

நன்றாகத்தான் இருக்கிறது.  இதைத் தமிழெனினும்  அன்றெனினும்  அதனால் விளைவு யாதுமிலது.


வெள்ளை அழகே ..... meaning

கறுப்பரொடு  ....  என்னும் இடுகை 

தொடர்ந்து:

வெள்ளை  அழகே கருப்போ அழகின்மை

எள்ளி  இதுசொல்வார் சொல்லுக்கு ‍‍‍----\\உள்ளுவது

யாதென்பீர் ;  யாதானும் சாதி  கறுப்பரொடு\

தோதில்லை என்பாரின் மாட்டு


பொருள்: 




வெள்ளை  அழகே  : உடல் வெள்ளையாக இருந்தால் அவள்தான்

அழகி;

கருப்போ அழகின்மை  ‍‍:  கறுப்பு நிறமானால் உடல் அழகு இல்லை.

எள்ளி : பரிகாசம் செய்து;

இதுசொல்வார்  ‍‍‍ :  இப்படிச் சொல்லுகிறவரின்;

சொல்லுக்கு உள்ளுவது :  வாய்ப்பேச்சுக்கு நீங்கள் நினைக்கும் பதில்;

யாதென்பீர்  : என்னவாய் இருக்கும் சொல்லுவீர்  

யாதானும் சாதி :  நீங்கள் சொல்லும் உங்கள் சாதி எதுவாயினும்;


கறுப்பரொடு :  கறுப்பாய் உள்ள  உங்களுடன்


தோதில்லை என்பாரின் மாட்டு :  தமக்கு எந்தத் தொடர்பும் வேண்டாம் என்பவரின் இடத்து.

மாடு : மாட்டு ,  இடம்  இடத்தில் என்ற பொருள்.  கால் மாடு
தலை மாடு என்ற வழக்கை நோக்குக.

சொல்லுக்கு  உள்ளுவது:  இதன் பொருள் ,  அவர் சொல்லுக்கு நினைப்பதன்றிச்  செயல்   ( நாமும் ஏதும் செய்தல்  )  மேலும் கசப்பு  விளைக்கும் ஆதலால்,   சொல்லுக்கு என்பது அழுத்திக் கூறப்பட்டது  என்பது அறிக. சொல்லுக்கு நாம் அறிவார்ந்த முறையில்
செயல்படுவது  "எண்ணுதல்"  ஆதலால் " உள்ளுதல் " என்ற சொல் பயன்படுத்தப் பட்டது.

தோது  connection, affinity, dealings etc. 

இதுவே பாடலின் பொருள்.

வேறொரு இனத்தவர் உங்களுடன் கொள்ளும் தொடர்பு   மணம் பற்றியதாகவோ  வணிகம்  அல்லது  வேறு எது  பற்றியதாகவுமோ   இருக்கலாம். உறவே வேண்டாம் என்பவரை நாம் வற்புறுத்த முடியாது.
ஊருக்குள் ஒரே சாதிக்குள் கூட இவளைப் பிடிக்கவில்லை  அவள்தான் வேண்டும் என்று போராடுகிறவர்களும்  இருக்கிறார்களே ! ஒரு காரணம் இல்லாவிட்டாலும் இன்னொரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்வது  எளிதாயிற்றே. பல் சரியில்லை என்று சொல்லி விட்டால் என்ன செய்வது ?  அதனால் எந்த விடயமானாலும் உங்களுடன் ஒத்துப் போகிறவர்  வரும்வரை பொறுமையுடன் இருக்கவும். பெண் வேண்டுமென்று  உங்களை விரும்பினாலும் பெற்றோர்  வேண்டாம் என்றால் விட்டுவிடுவதே அறிவுடைமை.
நம் பண்பாட்டில் /  கலாச்சாரத்தில்  திருமணம் என்பது  தனி இருவரின் 
முடிவன்று.  திருமணத்தின்பின் பல உறவுகள் கிளைத்தெழுகின்றன.  மாமனார், மாமியார் ,  அவர்கள் உறவினர்கள், கூட்டத்தார் என்பனபோன்றவை  அவை. இவற்றையெல்லாம் எளிதில் கையாண்டுவிட  முடியுமோ? வரதட்சினை1  (வரனுக்குத் தக்க இணையான  பொருள் )  வேறு இருக்கவே இருக்கிறது. 
------------------------------------------------------------------------



1  தக்க இணை > தக்கிணை  >  தச்சினை > தட்சிணை.

The typing presentation  (lines ) here could not  be justified.  We do not know how ir appears on your screen. You may report.  Presentation errors seem inherent. 



திங்கள், 25 ஏப்ரல், 2016

காதற்பரத்தைக்கு அறிவுறுத்துதல் - குறுந்தொகை

இப்போது குறுந்தொகையிலிருந்து  மாங்குடி மருதனாரின் ஓர் இனிய பாடல்.இவர்  ஒரு நல்லிசைப் புலவர்.  பாண்டியன் நெடுஞ்செழியனின் அவையில்   தலைமைப் புலவர். "மாங்குடி மருதன் தலைவனாக  உலகமொடு நிலைஇய  பலர்புகழ் சிறப்பின் " என்ற வரிகள் வரும்   நெடுஞ்செழியனின் புறநானூற்றுப் பாடலால் இதனை அறியலாம்.


பாடல் இது:

கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூல்  மடநாகு
துணர்த்தேக் கொக்கின்  தீம்பழங் கதூஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பவ்வ மணங்குக தோழி
மனையோள்  மடமையிற் புலக்கும்
அனையேம்  மகிழ்நற்கு யாம்ஆயினம் எனினே

.
164. ( குறுந்தொகைப் பாடல்.)



என்பது காதற்பரத்தை தலைமகளின் தோழி வந்து கேட்க அவளுக்குச் சொல்லியது.
கணைக்கோட்டு = திரட்சியான நெடுமூக்கினை உடைய.
வாளை - வாளை மீனின்
கமஞ்சூல் - அடர்ந்த கருவினைக் ;கொண்ட;
மடநாகு - மடம் பயிலும் இளம் பெண்மீன்;
துணர்த்தேக் கொக்கின்  - இலை முதலியவற்றுடன் கூடிய கொத்தான
மாவின்;
தீம்பழங் கதூஉம் ;- இனிய (மாம் )   பழத்தைக் கௌவித் தின்னும்.
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது --- பழங் கால வேளிரின் குன்றூரின் கிழக்கே;
தண்பெரும் பவ்வம் -   தண்மையான பெருங்கடல்;
அணங்குக  தோழி -   என்னை எடுத்துக்கொள்ளட்டும் தோழி;
மனையோள்  - தலைவி ; மனைவி .
மடமையிற் புலக்கும் -  எண்ணிப்பார்க்காமல்  குறைத்துப் பேசிப்  பிணங்கும்  ;
அனைத்தேம் ஆயினேம்   -  அப்படிப்பட்டவளாய் யாம் ஆகிவிட்டோம் ;
மகிழ்நற்கு எனினே -    தலைவருக்கு என்னும்போது ..


கமம் = நிறைவு.  அடர்வு. 
மடம்  :  அச்சம் மடம். நாணம் , பயிர்ப்பு  என்ற நான்கனுள் மடம்  கவடு  சூது இலாத நேர்மை; அறியாமை..  
தேம் +  கொக்கு  =  தேக்கொக்கு   கொக்கு என்றது மாமரத்தை.
தீம் பழம் :  தீம் எனில் இனிய.
தொன்று <  தொல்.  மிகப் பழைய .  தொல்+ து =  தொன்று.   
தொன்று தொட்டு  என்பது காண்க.  முதிர் =  மூத்த.
குணக்கு =  கிழக்கு.   குண +  அது =  குணாது.     குணா அது என்று அளபும்  எடுக்கும்.

இப்பாடலில் காதற்பரத்தை சொல்வது : நான் வலியத்  தலைவனிடம் போகவில்லை;  பெண்வாளை மீன் மாம்பழம் கிடைக்கப்பெற்று உண்பதுபோல அவர் என்னிடம் வந்தார், நான் ஏற்றுக்கொண்டேன்.   அவ்வளவே.   மனையறத்தைக் கெடுக்க நான் ஒன்றும் முற்படவில்லை. மனையோள்  என்னை வையுமுன் எண்ணிப் பார்க்கவேண்டும்.  நான்  கேடு  சூழ்பவள் ஆயின், முது வேளிரின் கடல் என்னை எடுத்துக்கொள்ளும்,... என்பது.

காதற்பரத்தையும் ஒரு தன்மானி  ஆகின்றாள். பெண் வாளை மீன் மடமுடைத்தானது  போல இவளும் மடமுடையாள்.

அரசியையும் அரசிளங்குமரிகளையும் ஏனைக் குலமாதர்களையும் காத்தற்குக் காதற்பரத்தை, இற்பரத்தை போலும் வசதிகள் பண்டைத் தமிழர் குமுகத்தில் தடையின்றி விடப்பட்டன. தம்மை அடக்கிக் கொள்ள இயலாத ஆண்கள் அங்குச் சென்று உலவி வந்தனர். அரண்மனைப் பெண்களைக் கண்டு தலைகிறுக்கம் அடைந்தவனுக்கு
இத்தகைய கதவுகள் திறந்திருந்தன. இல்லையென்றால் இளைஞர் பலர்   அம்பிகாபதிகளாகி அறுபட்ட தலையினராய் மடிந்திருப்பரல்லரோ