ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

உயிர் உயிர்மெய் திரிபு

உயிரெழுத்துக்களில் தொடங்கிய சொற்கள் நாளடைவில் உயிர்மெய் எழுத்துத் தொடக்கமாக மாறுவது தமிழில் காணப்படும் ஒரு வளர்ச்சி என்றே சொல்லலாம். சில சமயங்களில் பொருளில் வளர்ச்சி காணப்படும்.

எடுத்துக்காட்டாக, கலகம் என்ற சொல்.  கலகத்தில் பலர்  நெருங்கி வந்து அடிதடியில் ஈடுபடுவதைக் காண்கிறோம். இவர்கள் இப்படிக் கலக்காமல் தங்கள் தங்கள்  இடத்திலேயே இருந்துவிட்டால்  கலகமே இருக்காது என்று கண்டுகொண்ட ஊர்க்காவல் அறிஞர்கள், ஊரடங்கு என்ற ஒரு நடபடிக்கையை உண்டாக்கினர்.  ஆகவே கலகத்துக்குக் காரணம் கலத்தலே. அடி என்ற சொல்லிலும்,அடுத்துச்சென்றாலே அடிக்கமுடியும் என்பதை அறிந்துகொள்ளலாம். அடு> அடி. இதுபோலவே
அண்டையில் சென்றாலே ( நெருங்கினாலே)  சண்டையைப் போடமுடியும்.
இவற்றிலிருந்து, சொல்லில் சிறு மாறுதலும், அதற்கேற்பப் பொருளில் சிறு வளர்ச்சியும் ஏற்பாடுதல் காணலாம்,

அண்டை >  சண்டை.

அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாக மாறுவது மட்டுமின்றி,
வேறு உயிர்மெய்களாகவும் மாறும்.

 எடுத்துக்காட்டு:

உச்சி > முச்சி.

உச்சி என்பது முன் உச்சியை (அதாவது உச்சியில் முன் பக்கத்தைக்)
குறிக்க எழுந்த சொல்லாகலாம்.  முன் உச்சி ? முச்சி.  ஓர் ஒற்றும் உகரமும் கெட்டன. தேவையற்ற விரிவுகள் ஒழியும். அல்லது உச்சி என்னும் சொல்லின்முன் உள்ள உகரத்தில் ஓர் மகர ஒற்று ஏறிற்று எனினும் அமையும்.



சிவஞான போதத்தின் 9ம் பாடல்

ஊனக் கண் பாசம் உணராப்  பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத் துனை  தேர்த்து;எனப் பாசம் ஒருவ
தண்ணிழலாம் பதி; விதி எண்ணும் அஞ்செழுத்தே.

இது சிவஞான போதத்தின் ஒன்பதாம் பாடல்.

இதன் பொருளைச்  சுருக்கமாக நோக்குவோம்.

ஊனக் கண் = குறையுடையன வாகிய விழிகள் ;

பாசம்  = சடப் பொருள்களை உண்மையென்று உணரும் அறிவு ;

பதியை உணரா =  இவற்றால்  சிவத்தை அறிய இயலாது.

ஞானக் கண்ணினில் சிந்தை நாடி  -  ஞானக் கண்களால் மனத்தை நிலை  நிறுத்தி உணர்ந்து;

உராத்துனை தேர்த்து  = விரைந்து செலுத்தப்படும்  தேரின் தன்மையது

எனப் பாசம் ஒருவ -   என்று பிறழ்வுணர்வினை  விலக்க


விதி எண்ணும் அஞ்செழுத்தே.  =   உறுதி செய்யப்பட்டபடி ஐந்தெழுத்தைச்
சிந்திக்க


தண்ணிழலாம் பதி  -  சிவத்தை அறியலாகும். அருள் பெறலாம்,

ஊனக் கண்களோ  சடப் பொருள்களை அன்றிப் பிற அறிய மாட்டா;  பாச அறிவோ எனின்  நிலை அற்றவற்றை நிலையானவை என்று பிறழ உணரும்;
இவை இரண்டாலும் பயனில்லை.   இவை விரைந்து செல்லும் தேர் போன்ற  தன்மையை நம்முள் உய்ப்பவை;    இவற்றை விலக்கி  பஞ்சாட்சரத்தைக்
கைக்கொள்ளப் , பதியாகிய சிவத்தின் இன்குளிர் அருள் கிட்டுவவதாகும்.

விரைந்து செல்லும் தேரினால் யாருக்கும் பயனில்லை.  அதனில் அமைவுற்ற சிலையைக் கையெடுத்துக் கும்பிடக் கூடப் பத்தனுக்கு  (இறைப்பற்றாளனுக்கு )  முடிவதில்லை. அத்தகைய தேரினைப் பேய்த்தேர்  என்றனர்.

இவற்றைப் பின் விரித்துணர்வோம்,

Previous post on this subject went missing owing to some software error, This was rewritten.











சனி, 16 ஏப்ரல், 2016

T V RETHINAM PLAYBACK SINGER.

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி டி.வி. ரத்தினம். (B.1930)

இவர் பாடல்களை நேரில் கேட்ட திரு. அ.பி. மாசிலாமணி உங்களுடன் பகிர்ந்துகொள்வது.
----------------------------------------------------------------------------------


"அப்போது திருமதி ரத்தினம் சிங்கப்பூருக்கு வருகை புரிந்திருந்தார். அவர் பாடலைக் கேட்க சிங்கப்பூர் பார்ட்லி சாலையிலுள்ள இராமகிருஷ்ண மடத்திற்குக் குடும்பத்துடன் சென்றிருந்தோம். நாங்கள் அங்கு சென்று சேர்வதற்குச் சற்று நேரமாகி விட்டது. நாங்கள் மண்டபத்திற்குள் நுழைந்தபோது திருமதி ரத்தினம் மங்களம் பாடிக்கொண்டிருந்தார். இருந்தாலும் அமர்ந்தோம். பின்பு இராமகிருஷ்ண மடத்துத் தலைவர் திருமதி ரத்தினம் நன்றாகப் பாடியதாகவும், வட இந்திய இசை நுணுக்கங்களைத் தென்னகத்து
இசையுடன் கலந்து இனிமை பயத்ததாகவும் கூறித் தன்  புகழுரையை முடித்து நன்றி நவின்றார். அத்துடன் நிகழ்ச்சி முற்றுப் பெற்றது.

அடுத்து வந்த ஒரு ஞாயிற்றுக் கிழமையில் திருமதி இரத்தினம் இசை வழங்கிய , சிங்கப்பூர் பெருமாள் கோவிலில் உள்ள  கோவிந்தசாமிப் பிள்ளை திருமண மண்டபத்திற்குச் சென்றிருந்தேன். மிக்க அருமையாகத்  தமிழிசை‍ --  கரு நாடக இசையை  அவர் வழங்கினார். முடிவடையும்
தறுவாயில், வந்திருந்த சுவைஞர்கள் திரைப்பாடல்களைப் பாடும்
படி கேட்டனர்.  கோவில் சார் இடமாதலால், திருமதி இரத்தினத்துக்குக் கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. தலைமை தாங்கி
இருந்த தமிழவேள் சாரங்க பாணி அவர்கள் எம்.கே. தியாகராஜ‌
பாகவதர் காலத்துக்குப் பின் தாம் தமிழ்ப் படங்களைப் பார்ப்பதில்லை என்றும், தாம் சுவைத்த இசை பாகவதருடையது என்றும் கூறி, திரைப்பாடல் ஏதாவது பாடிச் சுவைஞர்களை மகிழ்விக்கும்படி கேட்டுக்கொண்டார். இப்போதெல்லாம் " இங்கே பேசினால் அங்கே கேக்குது  அங்கே பேசினால் இங்கே கேக்குது என்பது போன்ற தொடர்களால் பாடல்நயம் அற்றவைகள் இக்காலத் திரை இசைப் பாடல்கள் என்றும் குறிப்பிட்டார். பின்னர் திருமதி இரத்தினம் அவர்கள் ஒரு திரைப்பாடல் பாடினார்:  அது " நல்ல பெண்மணி, மிக நல்ல பெண்மணி, மிக நல்ல பெண்மணி " "கெட்ட பெண்மணி
மிகக் கெட்ட பெண்மணி என்ற தொடர்கள் இலங்கும் உடுமலை
நாராயணக் கவிராயரின் பாட்டு.

 இரத்தினம்  பாடிய புகழ் பெற்ற திரைப் பாடல்கள் பல.  பொன்முடிப் பாடல்கள்;  வேலைக்காரியில் "வாழிய நீடுழி, பகுத்தறிவாளன் ஆனந்தன்",  மற்றும் "ஆடவருவாயா கண்ணா",  இன்னொரு திரையில் "மனமுடையோரே மனிதர்கள் என்னும் வாய் மொழி வள்ளுவன் சொல்லாகும்" என்பது, இன்னும்  அஞ்சு ரூபா நோட்டைக் கொஞ்சமுன்னே மாத்தி மிச்சமில்லை"  " அத்தானும் நாந்தானே" என்ற இருகுரலிசை, "மனதுக்கு இசைந்த ராசா, எனை மயக்கு முகவிலாசா" (மர்மயோகி)  "பகைவனுக்கு அருள்வாய் (பாரதி பாடல் )  "ஆளை ஆளைப் பார்க்கிறார்"  "மாலையிட்ட மங்கை
யாரோ என்ன பேரோ எந்த ஊரோ (பாரதிதாசன்)  :  என்று பல.

 ஒரு திரைப்பாடலே அன்று கிடைத்தது என்றாலும்
சுவைஞர்கள் பெரிதும் பாராட்டினர். நல்ல குரல் வளமும் திறனும்
 உடையவர். டி .வி ரத்தினம்.    இவர் பின்னாளில் தண்டபாணி தேசிகரைப் போலவே  கல்லூரி  இசைப்பேராசிரியராய்  ஆகிவிட்டார்  என்று தமிழ் முரசு மூலம் அறிந்தோம்.  "

-----  A P MASILAMANI.