வெள்ளி, 5 செப்டம்பர், 2014

சங்கம்

சென்ற இடுகையில், "த்து" என்பது "ச்சு" ஆவதைக் கவனித்தோம்.

தகரம்  சகரமாவது, சொல்லில் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரலாம்.

இதைப் பாருங்கள்.

அப்பன் > அத்தன் > அச்சன்.

இங்கு மொழி இடையில் "த்த" என்பது "ச்ச" ஆயிற்று. இங்கு மொழி என்றது சொல்லை.

மொழி முதலிலிலும் இத்திரிபு வரும்.

சங்கப்புலவர்கள் மதுரை சென்று புலவர் கூட்டத்தில் கலந்துகொண்டு, கவி பாடி அரசனிடம் பரிசில் பெற்றனர். அப்போது அவர்கள் அங்கு தங்கி
 அரசன் அளித்த உணவை உண்டு மகிழ்ந்து, அவையிலும் பங்கு பற்றினர். உடனே திரும்பிவிட அப்போது வானவூர்திகள் ஏது?  மகிழுந்துகளும் இல.
ஆகவே தங்குதற் கருத்திலிருந்தே சங்கம் என்ற சொல் உருவாகிற்று.

தங்கு > சங்கு. 
இது ஊர்ந்திடும் ஒரு சிற்றுயிரி தங்கி வாழும் கூடு குறித்தது.

தங்கு > சங்கு > சங்கம் :  சங்கு.

சங்கு > சங்கம் = புலவர்கள் தங்கிக் கவிபாடிய இடம், புலவர் கூட்டம்.

சமைத்தல் என்பது தமிழே. இதன் அடிச்சொல்  சம் என்பது.  சம்> சமை.

அமை > சமை. சமைத்தலாவது, உண்பொருள்களைக் கூட்டி ஆக்குதல்.

சம் > சம்+கு > சங்கு > சங்கம்.

அம் > தம் > சம்.

தம் > தம்+கு > தங்கு.

உயிர் முதலானது, உயிர்மெய் முதலாகத் திரிதல், பெருவரவு ஆகும்.

இப்போது விரித்துரைக்காது இவற்றை மட்டும் அறிந்தின்புறுவோம்

This has been explained before to some extent..  

வியாழன், 4 செப்டம்பர், 2014

சில சுவையான திரிபுகளை....



இப்போது, சில சுவையான திரிபுகளைக் கவனிப்போம்.

வினை முற்றுக்களில் வரும் திரிபுகள். இவற்றில் "ற்று"  என்பது "ச்சு" ஆகிவிட்டது.

ஆயிற்று > ஆச்சு,
போயிற்று > போச்சு.

வினை எச்சங்களில் வரும் திரிபுகள்.  இவற்றில் "த்து" என்பது "ச்சு" ஆவது
காணலாம்.

தேய்த்து >  தேச்சு.
வாய்த்து >  வாச்சு.
ஏய்த்து > ஏச்சு.
காய்த்து > காய்ச்சு
அடித்து > அடிச்சு.
கடித்து  > கடிச்சு.

இவைபோன்ற திரிபுகள் மலையாள மொழியில் வினைமுற்றுக்களாய் வரும்.

சொல்லாய்வில் இவைபோலும் திரிபுகளைக் கவனிக்கவேண்டும்.

வீதியிலே நடக்கின்ற வேளை...

வீதியிலே நடக்கின்ற வேளை பார்த்து
விதிமுடிய நேர்ந்ததெனப் பேசும் வண்ணம்
சூதறியா நேரியர்கள் தம்மைக் கொல்லும்
சுடர்விளக்கின் உந்துகட்கோர் கட்டு வைக்கும்
தீதிலதாம் நெறியொன்றே இந் நாள் காறும்
தெரிந்தபெரு மனிதர்களும் கண்டார் இல்லை!
யாதுவழி உயிரிழப்பு குன்றச் செய்ய?
யாமறியோம் தேமருவும் மேலாம் வாழ்வில்.