வெள்ளி, 21 ஏப்ரல், 2023

தகு, தாக்கு , தகுதி முதலியவை.

தகுதி என்ற சொல்லை நாம் சிந்தனை என்னும் உலையிலிட்டு மசித்து நோக்குங்கால்,  அது எந்தச் சூழ்நிலையில் எழுந்தது என்பது சற்றும் புரிந்துகொள்ள இயலாத தொலைவிலே இருப்பதாகவே உணரமுடிகின்றது. இது எவ்வாறு எழுந்திருக்கக் கூடும் என்பது உடனே புரியவில்லை.

தகு என்பதில் ஈரெழுத்துக்களே உள்ளன.  இவற்றுள் கு என்ற எழுத்தைப் பார்ப்போம்.  கு என்பது வேற்றுமை உருபாக மொழியில் இயல்கின்றது.   மதுரைக்கு ( மதுரைக்குப் போனான் ),   சோற்றுக்கு (த்  திண்டாடினான்), பாட்டுக்கு  (ப்   பாட்டு),  வண்டிக்கு  ( மாடு வேண்டும் ) என்று  பல்வேறு பொருட்சாயல்களில் மக்கள்  "கு"  என்ற உருபினைப் பயன்படுத்துகின்றனர். இது செல்லிடம் அல்லது சேர்விடம் காட்டும் வேற்றுமை.  சேர்தல், அடைதல் முதலிய இயக்கங்களைக் காட்டும்  வேற்றுமையாக இருப்பதால், கு என்ற பழஞ்சொல் வரும் கு  என்பது மூலச்சொல்.   குடும்பம், கூடுதல் என்பனவெல்லாம் இச்சொல்லின் வளர்ச்சிகளே ஆகும். குட்டு என்ற சொல்லில் மடக்கிய கைவிரல்கள் ஒரு தலையின்மேல்  சென்றிடித்தல் ( சென்றடைவு)  பொருளாதல் காண்க. 

நான்காகுவதே,
கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப் பொருள் ஆயினும் கொள்ளும் அதுவே. 

மேலும்:

அதற்கு வினை உடைமையின் அதற்கு உடம்படுதலின்
அதற்குப் படு பொருளின் அது ஆகு கிளவியின்
அதற்கு யாப்பு உடைமையின் அதன் பொருட்டு ஆதலின்
நட்பின் பகையின் காதலின் சிறப்பின் என்று
அப் பொருட் கிளவியும் அதன் பால என்மனார்.

என்கின்றது தொல்காப்பியம்.  நான்கு ஆகுவதுவே  என்றது நான்காம் வேற்றுமையை.
சொல்லதிகாரத்துட் காண்க.


கு என்பது ஒரு தமிழ் மூலச்சொல். அது பேச்சிலும் எழுத்திலும் இருந்தது.  அது பொருளை வேற்றுமைப் படுத்துகிறது என்று கண்டுபிடித்து,  அதை உருபு என்று வகைப்படுத்தினான் பின் வந்த இலக்கணியன். எவனாக இருந்தாலும்  அவன் சொன்னது பின் வந்தது. அவன் சொல்லுமுன்பே அது மக்களின் பேச்சில் இருந்தது என்பதுதான் உண்மை. மயங்குதல் ஆகாது.

கு போன்ற துணைச்சொற்களைப் பின் இணைத்துப் பேசுதல் தமிழன் பேச்சு நெறியாகும்.


கண் என்ற உருபு.

நன்னூலார் கு என்ற உருபினைப் பற்றி நமக்கு அறிவிப்பது,  பெரும்பாலும் எப்போது வல்லெழுத்து மிக்கு வரும், எப்போது அவ்வாறு வராது என்பதைத் தெளிவிக்கவே ஆகும்.  கசடதபற  வல்லெழுத்துக்கள்.  புணர்ச்சியில் இவற்றின் மெய்களே தோன்றும்.  கனி + கண்  எனபதில்,  கனி என்னும் சொல்லும் கண் என்ற உருபும் இணைய,  கனிக்கண்  ( கனிக்கண் விதை)  என்று ககர மெய் தோன்றியது. இது உருபு சொல்லுடன் இணைந்த புணர்ச்சி யாதலின்,  வேற்றுமைப் புணர்ச்சி.  இதுவே "செங்கனி" என்ற பெயருடைய ஒரு பெண்ணைக் குறிப்பதானால்,  "செங்கனிகண் சீர் (தந்த நிகழ்வு)"  என, வலிமிகாமல் இயல்பாகும்.  வள்ளி + கண் என்பதும் வள்ளிக்கண் என்று வாராமல் வள்ளிகண் என்றே வருவதாம். செங்கனி என்பது ஒரு பெண்ணின் பெயராக இல்லாமல் சிவப்பான ஒரு கனியைக் குறித்தால் அப்போது செங்கனிக்கண் என்று வலிமிக்கு வரும். தமிழில் இவ்வாறிருக்க,  வேறு சில மொழிகளில் சொற்களின் இணைப்பினால் வலியேதும் மிகுவதில்லை.  இங்கு கண் என்பது உருபு. இது வரும் வேற்றுமை ஏழாம் வேற்றுமை. இதை இட வேற்றுமை என்று நினைவில்  வைத்துக்கொள்ளலாம். 

242.நன்னூல்:  

ஒற்றுயிர் முதலீற்று உருபுகள் புணர்ச்சியின்
ஒக்குமன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே .

இந்தக் " கண்"  என்ற உருபு,   கண் என்ற விழியைக் குறிக்காது .   இது கு+அண் என்ற இரு சிறுவடிவங்களின் கூட்டே ஆகும்.  அண் என்பது அருகில் என்று பொருள்படுவது. ( அண்> அண்மை). ஆனால் கண் என்பதற்கு இடம் என்ற பொருளும் உள்ளது.   கு+ அண் என்பன கூடி நின்று சொல்லானதே இதன் காரணம் ஆகும். குஅண் > கண். இதை புரிந்துகொள்ள,  அண்டிச் சேர்தல் என்று உரைத்தல் எளிதாக்கமாகும்.  கு என்பது கூடுதல் என்பதன் மூலச்சொல்.

தகுதி என்பதனோடு தொடர்புடைய வினைச்சொல்லே தகு என்பது. இவற்றுக்கும்  தாக்கு என்ற வினைக்கும் பொருள் தொடர்பு உள்ளது.

பழங்கால மனிதன்   மேலாண்மையின் பொருட்டு, விலங்குகளினோடும் மனிதர் பிறரோடும் போராடியே வாழ்வைக் கழித்தான்.  இப்போராட்டங்களின்போது, அவன் ஈட்டிய வெற்றியின் வாயிலாகவே அவனுக்கு மதிப்பும் மேன்மையும்  உண்டாயிற்று.  ஆகவே தகு, தாக்கு என்பன உறவுள்ளவை என்பதை உணரலாம்.

தகு என்பதில் அடிச்சொல் அல்லது வினைப்பகுதி  த என்பதே.  மிகு என்பதில் மி என்பது போலுமே இது. மி எனற்பாலது மே என்பதனோடு தொடர்புகொண்டதாகும். த என்பதும் தா என்பதும் ஒன்றே.  தா என்றது - நீண்ட போரின்பின்  த என்ற தகுதி வாய்த்தது. தாக்குதலின்பின்  தன் என்ற நிலைக்கு,  கௌரவம் வந்தது.  கா+ உர(ம்)+ அம் =  காவுர +அம் - காவுரவம் > கவுரவம் ஆகும். காத்துக்கொள்வதற்கு அவன் தாக்குதல் மேற்கொண்டான்.  தாக்குதலினால்,  அவன் தன்னிலையைத் தக்கவைத்துக்கொண்டான்.  "தகு<  தக்க< தாக்க"

தகு > தாக்கு

தாக்கு > தக்க > தக. 

தடு > தடி.

தடு > தட்டு.  தடு- தடை.

தன்பால் வரும் துன்பத்தைத் தடுத்துக்கொள்ள முடியாதவன், தன் பொருளையும் இழத்தல் கூடும்.

சுருக்கி எழுதியுள்ளபடியால், விளக்கம் வேண்டின் பின்னூட்டம் செய்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.



கருத்துகள் இல்லை: