வியாழன், 15 செப்டம்பர், 2022

நாடு + அன் சொல்லாக்கம்.

 தமிழ்ப் புணரியல் இயல்புகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டியது ஒரு முதன்மை வாய்ந்த செயலாகும்.

நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் வாக்கியத்தில்  நாடு + இல் ( இது இல் என்ற வேற்றுமை உருபு )  என்று புணர்த்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.  இது உண்மையில் " நாட்டில்"  என்றுதான் வரும்.  நாடில் என்று வருவதில்லை.  இவ்வாறே வேற்றுமை உருபு இல்லாதவிடத்தும், எ-டு:  நாடு+ ஆர்  எனில், நாட்டார் என்றே வரும்.  " நான் பேசினாலும் நாட்டார் பேசக் கூடாது " என்ற வாக்கியத்தின் மூலம் இதை உணரலாம்.  நாட்டைச் சேர்ந்தவர் " நாட்டார்".    இது நாடார் என்று முடியவில்லை.  நாம் " நாடு" என்ற இடப்பெயரைப் பற்றி இப்போது விரித்து உரையாடிக்கொண்டிருக்கிறோம்.

இனி  அவன், அவர் என்று பொருள்படும்  அன்,  அர், ஆர் என்ற விகுதிகள் பொருந்திய சொல்லாக்கத்தினைக் காண்போம்.

நாடு +  ஆன் >  நாட்டான்.

[  கடன் வாங்குவதானால் நாட்டானிடம் வாங்கக்கூடாது ---  வாக்கியம் ]

நாடு + அன்  > நாடன்.

ஈர்ங்குன்ற நாடன்  ( குளிர்ச்சி பொருந்திய நாட்டை உடையவன் )

நாடு + ஆர் >  நாட்டார்.

இது ஒரு பட்டப்பெயர்.  இது நாடு + ஆர் என்றவை புணர்ந்தெழுந்த பட்டம்.

நாடு  + ஆர்

இதுவும் ஒரு பட்டப்பெயர்.  நாடு ஆர் > நாடார் ஆனது.

வாக்கியம்:  காமராச நாடார் பெருந்தலைவர்.

நாடு+ ஆர் என்பதுமட்டும் மூன்று வகைகளில் புணர்ந்து சொற்களை உண்டாக்கி உள்ளது.

மொழிக்குச் சொற்கள் தேவைப்படுகையில், இரட்டித்தும் இரட்டிக்காமலும் சொற்கள் உருவாக்கப்படும்.  இதில் புணரியல் விதிகள் கருதப்பட மாட்டா என்பதை உணர்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்.


கருத்துகள் இல்லை: