சனி, 22 நவம்பர், 2014

தலைமகளும் தற்புகழ்ச்சியும்

ஒரு தலைமகளும் ஒரு தலைமகனும் தமக்குள் புலவியில் ஈடுபட்டு
நிற்கும் வேளையில் தலைமகள் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதாக
ஒரு புலவன் அல்லது கவிஞன் பாடுதல் கூடாதென்பது பண்டைப் பொருளதிகார வரையறவு  ஆகும். தற்புகழும் தலைமகள் தன்னடக்கம் இலாதவள் என்று கொள்ளப்படும். புலவன் படைக்கும் கதைத்தலைவி மிகச்சிறந்த பண்புநலன்கள் உடையவளாய் இருத்தல்வேண்டும்.பண்டைப் புலவர்கள் ஒரு சிறந்த குமுகாயத்தை (சமுதாயத்தை) உருவாக்க வேண்டுமென்பதிலும் சீர்கேடுகள் புகுத்தப்படுதல் கூடாதென்பதிலும் கண்ணும் கருத்துமாயிருந்தனர்  என்பதையே இவ்விதிகள் காட்டுகின்றன.

தலைமகனுடன் மாறுபட்டு நின்றாலும் கூட, தற்புகழ்ச்சியில் தலைதூக்கும் அடக்கமின்மை தலைவிக்கு விலக்கப்படும்.

பொருளிலக்கணம் ஏதும் ஆங்கிலம், சீனமொழி ஏனை உலக மொழிகள் என எவற்றிலும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும்  ஆங்கிலத்தில்
self praise is no praise என்பர், தற்புகழ்தலை எல்லா மொழியினரும் வெறுத்தொதுக்குகின்றனர். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பது வள்ளுவனார் வாய்மொழி. இதனை ஒரு உலகப்பண்பாட்டு விதி எனலாம். இவ்விதியை நம் பொருளிலக்கணம் பண்டை நாளிலேயே செயற்படுத்தி யுள்ளது. எத்தகைய சூழ் நிலையிலும் தலைவியை அடக்கம் உடையவளாகக் காட்டுவதையே கவிஞனின் பண்பாடு, கவிதையின் பண்பு என்றெல்லாம் மொழிந்தால் அது மிகையன்று.

கிழவோன் முன்னர்க் கிழவி தற்புகழ்தல்
புலவிக் காலத்துப் புரைவ தன்றே.

என்பது இறையனார் அகப்பொருட் சூத்திரம். 47

கிழவோன் - தலைமகன்  கிழவி - தலைமகள் இது கற்பியலில் வருகிறது.
கிழமை என்ற சொல் உரிமை என்று பொருள்படும். கிழ+ஆர்=கிழார் உரிமை உடையவர் என்பது  பொருள். நிலக்கிழார் என்பது காண்க.

தற்புகழ்தல் தகுதியானதன்று. ஆனால் கதைப்பாத்திரம் ஒரு பரத்தையாயின் அது ஒத்துவரக்கூடிய நடத்தையே. பாடலியற்றுவோன் அவள் தற்புகழ்ந்து பேசுவதாகப் பாடலாம்.

"இந்தத் தலைமகன் என்பால் விழவில்லையாயின் என் சங்கங்கள் தவிடுபொடியாகட்டும்' என்று அவள் கூச்சலிடுவதாகக் கவி புனையலாம்.
சங்கம் என்பது சங்குவளையல்.  சூத்திரத்தில் "முன்னர்" என்பது பெய்யப் பட்டுள்ளதால் இது நேர்நிற்கையில் நடந்துகொள்ளும் விதம் பற்றி எழுந்தது ஆகும். எனினும் ஏனைக் காலங்களிலும் தற்புகழ்ந்து பேசாதிருத்தலே சிறந்த நெறியாம்.

கிழவன் கிழவி கிழமை

கிழவன் கிழவி என்ற சொற்கள் இக்காலத்தில் பொருள் திரிந்து வழங்குகின்றன. கிழமை : உரிமை.  "கிழமைப் பட வாழ்"‍‍.  Wherever you live, live there with all rights and privileges associated with your situation. So said auvaiyAr. சனிக்கிழமை:  சனிக்கு உரிய நாள் என்று பொருள். கிழ என்பதற்கு  உரிமை என்பதே அடிப்படைப் பொருள். கிழ +  ஆர் = கிழார். உரிமை உடையவர். கிழ என்பதிலுள்ள  ஈற்று அகரம் கெட்டு, கிழ எனற்பாலது  கிழ் என்று நின்று ஆர் விகுதியுடன் புணர்ந்தது. கிழ + அன் ‍= கிழவன், இது
வகர உடம்படு மெய் தோன்றி, கிழவன் ஆயிற்று. கிழான் > கிஸான்.

கிழ என்ற உரிச்சொல், கீழ் என்பதிலிருந்து தோன்றியது. அரசனே எல்லா நிலங்கட்கும் உரியவன். ஏனை உரிமையாளர்கள், அவன் உரிமை தர அதைப் பெற்று வாழ்வோர் ஆவர். இன்றைய அரசாட்சியிலும்,
 இதுவே நடைபெறுகிறது. அரசு ஆவணம் தரவில்லையானால், நிலம் எப்படி உங்களுக்குச் சொந்தம்?  கீழ் > கிழ.  ஒப்பு நோக்குக: கீழ் > கிழங்கு.தமிழில் கிழ் என்பது சொல்லாகாது, அது திரிபுகளின் ஓட்டத்தில் கருவைப்போல் தோன்றா வடிவமே. அதைப் பிறைக்கோடுகளுக்குள் இட்டுக் காட்டலாம்:  கீழ் > ( கிழ் )+ அம் + கு = கிழங்கு. தரையில் கீழ் உள்ள செடியின் பகுதி.

பொருள் மாறுதலுக்கு உதாரணம் நாற்றமெனும் சொல். முன்னர் இது நன்மணம் என்று பொருள்பட்டது. நறு :  அடிச்சொல். நறு ‍>ந‌றிய. (ஒ.நோ: சிறு > சிறிய)
"நறியவும் உளவோ நீ அறியும் பூவே!"  (kuRunthokai)  என்பது காண்க. நறு > நாறு > நாறுதல் : வினைச்சொல் ஆக்கம்.  நாறு + அம் = நாற்றம்.

"சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி,
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி,
.................................................
.................................................
புதுமலர் தீண்டிய பூ நாறு குரூஉச்சுவல்
கடுமா பூண்ட நெடுந்தேர்..............................
( நற்றிணை, 149  )

என்பதும் காண்க.

மற்றும்:  "சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்...." என்பது
குறள்.

கருத்துகள் இல்லை: