செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

திருநாமகரண அழைப்பிதழ்

 


1940 வாக்கில்  இலங்கைப் புலவர் திரு. சேகரம் பிள்ளை ஒரு விழா எடுத்து எமக்குப் பெயரிட்டார்.  அவர் இட்ட பெயர் மாசிலாமணி என்பது. இதுநாள் வரை இதுவே எம் பெயர். இதன் அசல் திருட்டுப்போய் விட்டது.  இவர் பத்திரிகை ஆசிரியர் ஆதலால், இவர் நடாத்திய இதழ் பற்றிய வரலாறு  அரசு பதிவகத்தில் இருக்கும். (1935 முதல் 1940 வரை). இவ்விதழின் பெயர்: ''புதிய உலகம்''   என்பதாகும்.

திரு சேகரம் பிள்ளை அவர்கள் இலங்கையிலிருந்து வந்து முதன்முதலாகத் தங்கிய இடம்:  சிறம்பான் என்ற நகரம். இங்கு ஒரு தமிழர் சங்கீத சபா  ஒன்று இவரது  ஆதரவில் நடைபெற்று வந்தது என்று தெரிகிறது.  இதை இளநாட்களில் எம்மிடம் பழகிய பெரியோரிடமிருந்து யாம் அறிந்துகொண்டோம். 

அப்போது ஒரு பாட்டுப்புத்தகமும் கிடைத்தது.  அதன்  ஆக்கியோர் கவி காருண்யம் என்பவர். அவர் கவிதை நூலுக்கு சேகரம் பிள்ளை ஒரு மதிப்புரை வழங்கி இருந்தார்.  அதில் அவர் பாடிக்கொடுத்த ஒரு சாற்றுகவி இவ்வாறு இருந்தது.  

உயர்ராக நாதபுரம் தனிலேதான்
ஓங்குபுகழ் தாங்குகீழைச் சீவல்பட்டி, 
தயவுநிறை மக்களுறை மாங்கொம்பாம்
தங்கபுரி மங்களம்சேர் சிங்கமான
புயவலியன் கருப்பையா தந்தபுத்ரன்
பூதலத்துச் சமுகச்சீர் திருத்தவல்லன்,
நயமாகத் தருசமத்வ கீதமீந்த
நாட்டவர்கள் கேட்பதற்கோர் நல்லநூலே.

 இவர் இலங்கை சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் மாணவர். கொழும்பு பலகலை அல்லது கல்லூரியில் தமிழ்ப்புலவராகத் தேறித் தமிழ்ப்புலவர்ப் பட்டம் பெற்றவர்.   இவருக்கு  திரு வி. கல்யாண சுந்தரனாரிடமிருந்து கடிதங்கள் வந்திருந்தன என்று திரு அடைக்கலம் அவர்களிடமிருந்து அறிந்துகொண்டேம்.  எனது மாணவப் பருவத்தில் இவர் பதிப்பித்த இதழின் படிகள் ( பிரதிகள்) சில இருந்தன.  அவற்றில்  வெண்பாக்கள், விருத்தங்கள் , விடுகதைகள், குடும்பக்கதைகள் முதலிய பல இருந்தன. இவற்றைக் கற்றறிய ஆவலும் இருந்தது. இவற்றின் காரணமாகவே,  ஆரிய சமஜத்தில் தமிழ் ஆசிரியராக இருந்த திரு  அப்பாத்துரைச் செட்டியார் என்பவரிடம் சென்று யாமும் தமிழ் கற்றுக்கொண்டோம். அப்போது யாம் சிங்கப்பூர் செயின்ட் ஜோசப் கல்வி நிலையத்தில் ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்தோம். இது ஓர் அரசு உதவிபெற்ற கிறித்துவ உயர்நிலைப் பள்ளியாக இருந்தது.

எமக்குப் பெயரிட்ட காலத்தில் எம் அம்மாவின் பெயர் எதுவும் இந்த அழைப்பிதழில் அச்சிடப்படவில்லை என்பதை அறிந்துகொள்ளவும்.  யாம் ஜோசப் பள்ளியில் சேருங்காலத்தில்  என்னிடம் இரண்டு பிறப்புச் சான்றிதழ்கள் இருந்தன. இவற்றில் பெயர் முதலியவை கையெழுத்தால் எழுதப்பட்டவை. இவற்றை பள்ளி ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளாமல், ஒரு வெள்ளி கட்டணத்துக்குப் பதிலாக ஐந்து வெள்ளி மாதம் வசூலிக்கப்பட்டது என்பதும்  எம் நினைவில் உள்ளதாகும்.


சனி, 1 ஆகஸ்ட், 2026

நிரஞ்சன் என்பது

 நிரஞ்சன் என்பதைக் கவனிப்போம். பெண்பாற் சொல்லாக, நிரஞ்சி என்ற சொல் ஒன்று அமையவில்லை என்று சொல்லலாம். அல்லது எங்கோ இருந்து வழக்குப் பெற்றிலது என்று வைத்துக்கொள்ளுதலும் கூடும். நிரஞ்சன் என்பதை ரஞ்சன் என்று சுருக்கிவிட்டால், ரஞ்சிதா என்ற சொல் கிட்டிவிடும். இதற்கு நல்ல பல பொருள்களைக் கூட்டி உரைக்கலாம். மிகப்பழைய நாட்களில் இது : ரஞ்சி ஆத்தா என்றிருந்து,  ஆத்தா என்பது தா வாகி, பழையதிலிருந்து புதிய சொல் ஒன்று வந்திருக்கின்றது.  மொழி என்பது இப்படி அமைவதுதான்.  புதிய சொற்கள் விரியும் கற்பனைகேற்ப சொற்களும் பெருகும்.

நிறைந்தவன் >  நிறைந்தான் > நிறஞ்சான் >  நிரஞ்சன் > ரஞ்சன்.

பழைமையில் தோன்றியதுதான் புதுமை. வெற்றிடத்தில் எதுவும் விளவதில்லை.

என்னதான் புதுமை மனிதனாக இருந்தாலும் அந்தக் காற்று இருக்கும் வரைதான் நீ மனிதன்.  இதை உணர்கிறோம் அன்றோ?

அ, இ, உ என்பவை திரிந்து பல ஆயிரக்கணக்கான சொற்களாயின என்று சிலர் கூறுவது அதனால்தான்.  ஆனால் பேசுகிறவனுக்கு ஒவ்வொரு சொல்லும் தனித்தனி அர்த்தம் உள்ளதாகத் தோன்றவேண்டும்.  அப்போதுதான் மொழியின் இயக்கம் சரியாக நடைபெறும்.  இதனால்தான் சட்ட நூல்களில் சொற்கள் வரையறவு (  definitiions ) செய்யப்படுகின்றன.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

வெள்ளி, 31 ஜூலை, 2026

பிரசன்னம் அல்லது காட்சிதருதல்

 சான்னித்தியம் என்ற சமஸ்கிருத உருவாக்கத்தில்,  காட்சிதந்து நிற்றல் என்ற பொருளில் சொல்லமைகிறது.  சன்னம் ( பிரசன்னம்) என்பதற்கும் சான்னித்யம் என்பதற்கும் உள்ள நெருக்கத்தினை உணர்ந்துகொள்க. இவ்வேறுபாட்டில் உள்ள பொருளொற்றுமைகளையும் உணர்ந்துகொள்க. நீங்கள் 'வாரு'மே, மற்றும் 'வரு'க என்பவற்றில் வகரம் வாகாரம் எனச் சொல் மாறினும் பொருளொற்றுமை மாறவில்லை என்பதை அறிக.  அதே வருதல் என்பதுதான்.

அன் (அன்பு) என்ற  மூலமே,  அண் என்றும் (அண்மை என்பதில் ) மாறிவிடுகிறது. இனி,  அன் என்பது சன் என்று மாறுகிறது.  இதுபோலவே அண் என்பது சண் என்று மாறுகிறது.  இவை எல்லாம் அடுத்துநிற்றல் கருத்துத்தான். அன்பு என்பது ஒரு மனிதனை அடுத்துச்சென்று கொள்ளும் மனவுணர்வு.  அண்> அண்ணன் என்பவன் தம்பிக்கு அடுத்து மேல்நின்று பேணுவோன் அல்லது பராமரிப்பவன். காட்சிதருதல் என்பது காணத்தக்க வகையில் அடுத்துவருதல்.  அன்> சன் என்று திரியும். உள்ளமைந்த சன் தரும்  பிரசன்னம் இது என்பதை உணர்ந்துகொள்க.

இதிலிருந்து  அண்> ஆண் என்ற சொற்களைக் காண்போம்.  அண் என்பது மூல (அடி)ச்சொல். ஆண் என்பவன் பெண்ணை அடுத்துச் செல்பவன் அல்லது செல்லும் பிறப்பு  என்பது பொருளாகிறது.  ஆள் என்பதிலிருந்து ஆண் வந்தது என்று கொண்டு  ஆட்சி செய்வோன் எனப் பொருள்கொள்வது ஒக்குமா என்பது நன்கு ஆராயத்தக்கது. இது பொருண்மை பற்றியதாதலின், இதைப் பின்பு சிந்திக்கலாம். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். எம் முடிவை இப்போது சொல்லவில்லை.

பிற என்பது பிர என்று வந்தது.  உண்டாதல் என்னும் கருத்து.  சன்னம் என்பது அடுத்து என்னும் கருத்தாதலின்,  பிற என்பது அதே பொருளில் வருவது பொருத்தம் என்று கொள்வதற்கில்லை. அடுத்து முன் தோன்றுதல் என்பதுதான் பிரசன்னம் என்பது ,    இஃது தெளிவாகின்றது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை