செவ்வாய், 16 ஜூலை, 2024

Muneeswaran Temple consecration video

 Queenstown Singapore:


அடுக்குமாடி இல்லங்கள் அழகு காட்டும்
ஆர்ந்தமுனீஸ் வரன் கோவில் திகழும் பாக்கம்
தொடுத்தகுட முழுக்குவிழா தொடர்ந்த பூசை
தூயபிர சாதங்கள் வழங்கல் யாவும்
எடுத்துயர்ந்த சிறப்பினொடும் இயன்ற மேன்மை
இயம்பிடவும் சொல்லில்லை உடுப்போல் உச்சம்
கொடுத்தவொத்து ழைப்பிற்கோ  கூவும் வாழ்த்து
கூறுகின்றார் யாவருக்கும் நலமார் நன்றி.

 -----(கருஜி)

காணொளி அனுப்பிய கருஜி அவர்கட்கு  நன்றி  பல.

தமிழ் முரசின் சேவைக்கும் மகிழ்ச்சி.
தெரிவித்துக்கொள்கிறோம்.

பொருளுரை:

சிங்கப்பூரின் ஒரு பாக்கத்திலே ( பகுதியிலே)  அழகிய அடுக்குமாடி இல்லங்களும் நிறைவான முனீஸ்வரன் கோவிலும் இருக்கின்றன. இங்கே  குடமுழுக்கும்  பூசைகளும் பிரசாதம் வழங்குதலும் சிறப்பாக நடந்தேறின. இந்த நிகழ்வைப் புகழ வார்த்தைகள் இல்லை.  உடு - நட்சத்திரம்   அதைப்போல உச்சமான அழகே எல்லாவற்றிலும்  . யாவரின் ஒத்துழைப்புக்கும் வாழ்த்தும் நன்றியும் கூறுகின்றோம். Star performance says this poem.  கூவும் -   பலமாகச் சொல்லும்.   நலமார் -  நலம் கருதுகிற.  அதாவது இனி வரும் நிகழ்வுகளிலும் இத்தகைய ஒத்துழைப்பு வரவேண்டும் என்பது பொருள்.

திங்கள், 15 ஜூலை, 2024

அங்குலம்




அங்குலம் என்ற சொல்லைத் தமிழி லிருந்து எவ்வாறு பொருள்சொல்லுவது என்று பார்ப்போம். இதற்கு "விரற்கடை " அல்லது "விரற்கடை அளவு" என்று அகரவரிசைகள் பொருள்கூறும். இதுவும் சரியான பொருள்தான்.

இச்சொல்லை அண்கு + உல் + அம் என்று பிரிப்போம்.

அண்கு என்பதில் அண் என்பதற்கு அடுத்திருத்தல் என்று பொருள். அண்ணிய எனில் பக்கத்திலுள்ள. அண்ணுதல் வினைச்சொல்லுமாகும். உல் என்பது பல்பொருள் ஒரு சொல் லாவதுடன் ஓர் அடிச்சொல்லுமாகும். ஓரிடத்திலிருந்து இன்னோரிடம் செல்லுதலும் குறிக்கும். உல்: வளைவும் குறிக்கும். உலவுதல் என்றால் சுற்றிவருதலுமாகும்.

ஓரிடத்திலிருந்து அடுத்துச் சென்று அங்கு நின்றுவிட்டால் அது இடைத்தொலைவைக் குறிக்கும். இந்த இடைத்தொலைவுதான் விரற்கடைத் தொலைவு அல்லது அங்குலம் எனப்படுகிறது. நகரும் பொருள் எங்காவது சென்று நிற்கலாமென்றாலும் இங்கு கணக்குக்கு ஒரு விரற்கடை யளவில் நின்றுவிடுகிறது என்பதை அறியவும். அண்கு உல் என்பவற்றில் உல் என்பது முன்செலவைக் குறிக்கிறது பின்னர் அண்கு , அதாவது அண்மிய மாத்திரத்தில் சேர்ந்துவிடுகிறது அல்லது நின்றுவிடுகிறது. ஒருவிரற் கடைச் செலவாதலின், அது அங்குலம் ஆகிறது.

அண்கு - அண்மிச் சேர்கிறது : இங்குச் செலவு முடிகிறது.

உல் ( உலவியது ) - ஒரு விரலளவு. இங்கு உல் நேர்முற்செலவு குறிப்பது. உல் என்னும் மூலம் பல்பொருளது. அவற்றுள் ஒரு பொருளில் இங்கு வருகிறது.


இது பேச்சு வாக்கியமாய் இருந்தால், உல் அண் கு என்ற நிரலில் "சென்று சேர்ந்தது" என்ற பொருளில் வந்திருக்க வேண்டும். சொல்லாக்க மானதினால் முறைமாற்றாக வருகிறது. இதை ஏன் "உலண்கு" என்று நிரல்படுத்தவில்லை என்றால், முற்றிய சொல்லாக்கம் இங்கு தமிழ் மரபுக்குரிய ஒலியில் வரவில்லை. திருப்பிப்போட்டு அம் விகுதி ஏற்றினால் தமிழ்ச்சொல்லின் இசைவை ஒத்து வருதல் காண்க.

இதன் மூலம் அண்கு உல் அம் என்பதே சொற்பாகங்கள் என்பது தெளிவாகிறது.

இனி, சொற்கள் பாகப்பட்டு நிற்காமல் ஒழுகிசைவோடு முடிக்க, அண்கு என்பது அங்கு ஆகிறது. உல அம் என்பது உலம் ஆகிறது. அங்கு + உலம் > அங்குலம் ஆயிற்று என்று அறிக.

மெய் எழுத்து  ண்> ங் என்று மாறுவது பேச்சிலும் எழுத்திலும் காணலாம். கண்காணி > கங்காணி. ( கருப்பையா கங்காணி, செல்லப்பா கங்காணி என்பன போலும் பெயர்கள் தொழிலாளிகளின் மேற்பார்வையாளர்களுக்கு இயல்பாக வழங்கும்). இன்னும் வேறு சொற்களிலும் இப்படி மாறும். னகரமும் ஙகரமாய் ஒற்றுக்கள் வரும்போது மாறும், பழைய இடுகைகளில் கண்டு உணர்க. மற்ற உயிர்மெய்கள் வருமாயின் ஏற்ப மாறுதலடையும். எடுத்துக்காட்டு: பாண் சாலி > பாஞ்சாலி என்று வந்து பாணர் கொடிவழியைக் காட்டும். து என்பதும் சு என்று மாறும் : ஐந்து > அஞ்சு.  மந்தி என்பது  மன்+ தி என்று மாறிச் சொல்லானது. மனிதன் போன்றது என்பது சொல்லமைப்புப் பொருள்.

அங்குலம்  :  மிக்கத் திறனுடன் அமைக்கப்பட்ட சொல்.

உலகு என்பதிலும் உல் - உருண்டையாக, அ - அங்கு, கு - சேர்ந்தது என்று வருவது போலுமே இச்சொல்லும். முறைமாறி உல் என்பது முன் நின்றது.

கு - சேர்ந்து, வல் - வலிமையுடன், அ - ஆங்கு , அம் - அமைந்தது, குவலயம், இந்த உலகம் என்ற பொருளில் இச்சொல்லையும் காண்க. இங்கு கு முதலில் வந்துள்ளது. இது இருபிறப்பி. கு+ வலை + அ + அம் : சேர்ந்து சுற்றாக அமைந்தது உலகம் என்பதும் பொருள். வலை > வளை. வலிப்பு என்ற இழுப்பில் கோணல் அல்லது வளைவு இருக்கிறது என்றாலும், ளி என்று இடாமல் லி என்பதையே கொண்டமைத்தனர். சொல்லமைப்பின் ஆக்கத்தின் பின் வரும் ஆட்சியே சொல்லின் திறத்தை உறுதியாக்கும்.

சொற்களின் திறம் கண்டு அமைத்தோரைப் பாராட்டுங்கள். இது ஒரு காரண இடுகுறிப்பெயர். இங்கு செலவு அல்லது நகர்வு விரலின் ஒரு பகுதி அல்லது பக்கத்திலிருந்து இன்னொரு பகுதி அல்லது  பக்கத்துக்கு என்பதை வருவித்துப் பொருள்கொள்ள வேண்டியிருப்பதால், இது காரண இடுகுறிப் பெயர் ஆகிறது.  நாற்காலியைப் போலவே இதுவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

சுக்தம் என்ற சமஸ்கிருதச் சொல் அமைப்பு

 சுக்தம் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பதைக் காண்போம்.

இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் காட்டப்படலாம்.  ஆதலின் இது ஒரு பல்பிறப்பிச் சொல் என்பதை மனத்தி லிருத்திக்கொண்டு,  இதற்குத் தமிழிலிருந்து பொருள் கண்டுரைப்போம்.

சொக்குதல் என்பது ஒரு தமிழ்ச்சொல். அது இன்றுவரை நம்மிடம் உள்ளது. இச்சொல்  " சொக்கன்" என்று அமைந்து சிவபெருமானைக் குறிக்கும்.  சிவபெருமான் பற்றருக்கு ( பக்தருக்கு)  அவர்பால் மயங்கும்படியான ஏக்கத்தைத் தரவல்ல கடவுள் ஆவார்.  சிவன் ஆதிக்கடவுள் என்றும் கூறுவர்.  முழுமுதற் கடவுள் என்றும் கூறுவர்.  அவரைத் தொழுதலானது பற்றனொருவன் அவர்பால் வீழ்ச்சி பெறும் மயக்கினை அளிக்கவல்லது என்பர்.  அங்கிங்கெனாத படி எங்கும் பிரகாசமாய் இருப்பவர். தாயுமானவர் அவரைப் பரிபூரணானந்தம் என்பார்  [.மயங்குதல்.  To be enchanted, fascinated, captivated, subjected to the will of another ( இங்குக் கடவுள் என்று பொருள் கொள்க).]

வேதத்தின் சொற்களுக்கும் இவ்வாறு மயக்குறுத்தும் வலிமை உண்டு என்பர். எனவே சொக்குதல் என்ற சொல்லினின்று சுக்தம் பெறப்பட்டிருத்தலும் மிக்க உயர்ந்த நிலைக்கு ஒரு மேடை அமைத்துத் தந்தது போலாம் என்பது தெளிவு.

மேலும் சொ என்ற எழுத்தும் சு என்று திரியவல்லது என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இதற்கு நல்ல எடுத்துக் காட்டு:  சொந்தம்> சொதந்திரம்> சுதந்திரம் எனக் காண்க. சொந்தத் திறனைக் கொண்டுஒரு நாட்டை ஆளுதல் என்பதே இது.

சொக்கு + தம்<  (சொக்கு+ து + அம் ) >   சொக் +த்+ அம் >  சுக்தம்.   இவ்வாறு வேதப்பாடலைக் குறிக்கவல்லது இந்தச் சொல்.

சொல்+ கு + தம் > சொற்கு தம்>  > சுக்தம் எனினும் ஆகும்.  பற்றனின் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் செவிசாய்க்கும் பாடல்கள் என்று குறிக்க.

இவ்வாறு தமிழிலிருந்து பொருள் அறிய, இனிய பொருள் கிட்டுகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.