சனி, 13 ஜூலை, 2024

மண்டலம், சுருதி. சம்கிதை என்பவை.

 மண்டலம் என்ற சொல்லை இன்று ஆய்ந்து பிறப்பறிவோம்.

இச்சொல்லில் உள்ள உதிரிச் சொற்கள் இவை:-

மண்டு(தல்) என்ற வினைச்சொல்.

அல் என்ற அடிச்சொல். இதிலிருந்து அலை என்ற சொல்லும் உணடாகும். அங்குமிங்கும் செல்வது. இயக்கமுடையது.

அம் - அமைதல் குறிக்கும் விகுதி.

மண்டுதல் என்பது  நெருக்கமாய் ஓரிடத்திருத்தலைக் குறிக்கும்.  தனித்தனிப் பொருட்கள் ஒன்று கூடி இருத்தலை மட்டுமின்றி எண்ணிக்கைக்கு உரியவல்லாத பொருட்களுக்கும் இச்சொல்லைப் பயன் கொள்ளலாம்.  எடுத்துக்காட்டு; புகழ்.

நீலத் திரைக்கடல் ஓரத்திலே - நின்று

நித்தம் தவம்செய்த குமரி எல்லை,-- வட

மாலவன் குன்றம் இவற்றிடையே   ---  புகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு.  (  பாரதியார் பாட்டு).

மண்டுதல் செறிவு குறிக்கிறது.  ( நிறைவு ).

வேதங்களின் பகுதிகள் "௳ண்டலங்கள்" என்று குறிக்கப்பெற்றுள்ளன.  செறிவான செய்திகள்  உள்ளிருத்தலினால் இவ்வாறு மண்டலங்கள் என்று குறிப்பு உடையனவாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மண்டலம் என்பதும் தமிழ் மூலங்கள் உடைய சொல். மண்டுதல் என்பதை அடர்வு என்றும் கூறலாம்.

சுருதி என்ற சொல்லை அடுத்து நோக்குவோம்;

இதில் இரண்டு சொற்கள் உள்ளன.  சுரத்தல்,  உது - முன்னிருப்பது, இ - இது இங்கு என்று பொருள்தரும் விகுதியாகும்.  சுரத்தல் என்பது தமிழ் வினைச்சொல்.

சுர + உது + இ >  சுருதி.

சுர என்பதில் ஈற்று அகரம் கெட்டது.  ஆகவே

சுர் + உது + இ என்று புணர்ந்து சொல் ஆக்கம் பெற்றது,

சம்ஹித என்பதும் சமை இது அ என்று பிரியும்.

சமைத்தல் -  சேர்த்து உருவாக்குதல்.

இது ஓர் இடைநிலை.

அ என்பது பன்மை விகுதி.

இது சேர்த்துக் கட்டி அமைக்கப்பட்டது என்பது பொருள். எனவே தமிழ் மூலங்கள் ஆகும்.

சமை + கிட + ஐ > சம்கிடை> சம்ஹிதை எனினுமாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

 



 

வியாழன், 11 ஜூலை, 2024

துல் தல் அடிச்சொற்கள் பொருண்மை--- தலை என்பது என்ன?

வருதல், போதல் என்பவைபோல் வினைச்சொற்களுடன் கூடி, தல் என்பது வினைச்சொல்லின் விளைந்த பெயர்களைக் குறிக்க  ஆளப்பெறுகின்றது. இதிலிருந்து மண்டையைக் குறிக்கும் தலை என்ற சொல்லும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இப்பெயர் எப்படி வந்தது என்று அறியவேண்டியுள்ளது. 

தலை என்ற உறுப்பையும் குறிக்கும் சொல்லுக்கு எது மூலச்சொல் என்று இன்று அறிந்துகொள்வோம். இதற்கு வேறு பொருண்மைகளும்  பயன்பாடுகளும் உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே. இச்சொல்லிலிருந்து பிற சொற்களும் தோன்றியுள்ளன. எ-டு: தலையாரி, தலைச்சன்(பிள்ளை)  என்பவைபோல,  இவையும் நீங்கள் அறிந்துவைத்துள்ளவைதாம்.

சுட்டடிச் சொல் அமைப்பின்படி, தல் என்பது தலை என்பதன் அடிச்சொல். அடிச்சொல்லுக்கு ஒரு மூலம் இருக்கவேண்டும், இந்த மூலமான சொல்: துல் என்பதுதான்.

துல் என்ற அடிக்கு என்ன பொருள் என்பதை அறியவேண்டும். இதன் பொருளாவன:

சரியானது;  ஒப்புமை, எதிர், திட்டமுள்ளது, குறையில்லாதது; மறைப்பு இல்லாமை; தடையில்லாமை; இடமாய் இருப்பது அல்லது இருக்க இடம்தருவது; இணைப்பொருள்: உள்ளடங்காமல் தள்ளி இருப்பது,    முழுமை அல்லது எல்லாம் அடங்கியிருப்பது .

எல்லாம் இங்கு சொல்லிவிடவில்லை. இங்கு அகப்பட்டுச் சொல்லப்படாத பொருட்சாயல்களும் இருக்குமென்று கொள்க.

துல் என்ற அடியிலிருந்தே தல் என்பது ஏற்பட்டது.  ஆகவே வருதல் போதல் என்பன போலும் சொற்களில் இவற்றுள் ஒன்றில் உடன்பட்டுப் பொருள்தரும் விகுதியாகும்.  

இனி, து + அல் > தல் என்பதை உணர்ந்து,  இதுவே  (தல் ) உண்மையாகும், அல்லாதவை இதில் அடங்கா என்ற பொருளும் பெறப்படும்.  எனவே, அடங்கியவை, அடங்காதவை என இருபாற்கும் தல் என்பது பொதுவாகும் என்பதையும் அறிக.

காட்டாக,  தலைவன் என்ற சொல்லில் தொண்டன் உள்ளடங்கமாட்டான். அவன் அடங்கினானாகில் தலைமை என்பது ஏற்கப்படாமல் முடியும். அதுதான் சரியென்றாலும்,  தொண்டன் இல்லாமல் தலைவன் இல்லை என்பதும் உண்மை. ஆகவே, அடிச்சொல்லில் இடம் நோக்கியே தல், தலை என்பதற்கும் பொருள் இணங்குறுமாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.  முன் பொருள் துல்> தல் என்ற திரிபிலும் பின் பொருள் து+ அல் என்ற திரிபிலும் அல்லது திரிபமைதியிலும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு நோக்கிப் பகுத்தறிகையில்,  தல் > தலை என்பதன் பொருள் தெரிகிறது.  தலை என்றால் யாவரும் அறிய வெளியில் அறியப்பட்டு, உள்ளிலும் கீழிலும் அடங்காதது என்று பொருள். இது மனிதன் தலைக்கும் என்றும் தலைமை(த் தன்மை)க்கும்  பொருந்திவரும் என்பது அறிக. இச்சொல்லின் நுண்பொருள் தெளிவானது என்று அறிக.

ஆகவே தலை என்ற சொல்லும் தல் என்ற இடைச்சொல்லும் ஒருசேர உணர்விக்கப்பட்டன. ஆனால் புரிதல் மெதுவாக வரும் . இதைப் பலமுறை படித்தறியவேண்டும். அதுவும் வெவ்வேறு வேளைகளில் சென்றறிக.

தலை

இயல்பு நிலையில் மறைப்பு இல்லாத இடத்திலமைந்த உறுப்பு என்று இதை வரையறை ( define ) செய்தால் பொருண்மை வெளிப்படும். திருடனோ தூங்குபவனோ, குடைபிடிப்பவனோ  மறைத்துக்கொள்வான், ஆனால் இயல்பு நிலையில் மறைப்பில்லாத உறுப்பு என்பது பொருள்.  மறைப்பில்லாத, யாவரும் அறிந்த இடமும் தலை எனப்படும். எடுத்துக்காட்டு: தலையாலங்கானம்.  தலைச்சங்கோடு. குளித்தலை.

ஐ விகுதி உயர்வுப் பொருளது. தலைக்குப் பொருந்துவது ஆகும். தல் + ஐ > தலை  ஆதல்  காண்க.  ஐ மேலிருப்பதையும் உணர்த்தும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின். 


செவ்வாய், 9 ஜூலை, 2024

சத்திரம். சாவடி

 இந்த இரு சொற்களையும் நுணுகி ஆராய்வோம்.

சத்திரம் எனற்  பால சொல்லில் மூன்று பகுதிகள் : அவை சற்று,  இரு, அம். அமைப்பு குறிக்கும் விகுதி தான் அம் என்பது.  விகுதி  என்றால் சொல்லின் மிகுதியாய் நின்று சொல்லைப் பிறப்பிப்பது.

சற்று என்பது எழுத்து மொழியில் மட்டும் உள்ள வடிவம். இது சத்து என்றுதான் பேச்சில் வரும். இதன் மூலம் சல் என்பதே.இதன் பொருள் தேர்ந்தெடுத்த இடம் என்பது. கொஞ்ச நேரத்துக்கு என்றும் பொருத்தமான பொருளைத் தருகிறது. நேரம் இடம் இரண்டுக்கும் பொதுவான சொல் இதுவாகும். சலித்தல் என்பது சல் என்பதினின்றும் கிடைக்கும் சொல்லாதலால்  பொறுக்கி எடுத்த ஓர் இடத்தில் தங்குவது என்று பொருளாகிறது.

சத்து இரு அம் >  சத்திரு அம் > சத்திரம்.

இரு அம் என்பது இரம் என்று வருதலில் ருகரத்தில் உள்ள உகரம் ஒழிந்தது. ( கெட்டது )

பல் + து > பற்று >  பத்து.  ( இது பத்து என்ற எண்ணிக்கை. )  இதிலும் பற்று என்று வராமல் சொல்லாக்கத்தில் பத்து என்றே வந்தது.  சொல்லாக்கப் புணர்ச்சியில் இவ்வாறு வருதல் பெருவழக்கு ஆகும்.

பத்து என்ற எண்ணுக்குப் பெயருண்டாக்கிய போது, பல் து என்றிரண்டையும் சேர்த்துப் பெயரமைத்தனர். அதாவது எண்ணிக்கையில் பலவானது என்பதே பொருள்.

இனிச் சாவடி என்ற சொல்:

இது கல்வெட்டில் உசாவடி என்று காணப்பெறுகிறது.  ஆகவே சாவடி என்பது  உசாவு அடி என்பதில் உகரம் குன்றிய சொல்லாகும்.  உசா வி அறிவதற்கு அடுத்திருக்கும் கூடாரம் என்பது பொருள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்.