திங்கள், 6 டிசம்பர், 2021

கொப்புளம் என்ற சொல்லினருமை

 இன்று கொப்புளம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.  இச்சொல்லில் இரண்டு உள்ளுறைவுகள் உள்ளன.  அவை:

1 கொதி   --  இத்துண்டு,  கொப்புளம்,  நீர்கொதிக்கையில் அதன் மட்டத்தில் அங்குமிங்கும்  மேலெழும்புதல் போல் இருத்தலைக் காட்டுகிறது.  

2. புளம் -- இத்துண்டு,  புள் என்ற அடிச்சொல்லினின்று வருகிறது.  இது புழை என்ற சொல்லுடன் தொடர்புடைய உள்ளுறைவு ஆகும்.  புழை என்றால் துளை, துவாரம் என்று பொருள்.  இது தமிழில் வழங்கிவரும் இடக்கர்ச்சொற்கள் சிலவற்றுடனும் தொடர்பு உள்ளது.   "ஆலப்புழை" என்ற ஊர்ப்பெயரிலும் இது ஈறாய் உள்ளது.  ஆலப்புழை என்றால் ஆலமரத்தின் துவாரம் என்றுதான் பொருள்.  புள் -  புழை.  புள் என்பது  உகர ஒகரத் திரிபாக,  பொள் என்று வந்து வினையாகிப் பொள்ளல் என்றும் சொல் அமையும். இதுவும் தோலிற் புறப்பாடு என்று பொருள்தரும்.  பொள்ளுதல்  என்பது வினைச்சொல் , இங்கு ~தல் தொழிற்பெயர் விகுதி.  இந்த விளக்கம் போதுமானது என்று நினைக்கிறோம்.

ஆகவே,  கொதி+ புளம்.  இதில் தி என்ற இறுதி குறைய,  கொ+ புளம்>  கொப்புளம் ஆகிற்று.  

ஆதியில் காட்டில் வாழ்ந்த காலத்தில், "  கொ"  என்று தமிழன் ஓர் ஒலியை ஏற்படுத்தியிருந்தால் அதற்குப் பொருள் யாதாய் இருந்திருக்கும் என்று நீங்கள் ஆய்வு செய்து, பின்னூட்டம் இடுங்கள்.

அருமையாய் அமைந்த சொல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்

சனி, 4 டிசம்பர், 2021

மண்டூகம் [ கூபமண்டூகம்]

இது தவளை என்று பொருள்படும் சொல். இதை ஆய்வு செய்வோம்.

தவளை என்பது பெரிதும் மண்ணில் தூங்குவது. கொஞ்சம் நீர்கலந்த மண்தரையாயின் அவ்விடமானது தவளைக்கு மிகவும் பிடித்தமானது ஆகிவிடும்.

மலர்த் தூங்கும் வண்டு.

மண்ணில் தூங்கும் தவளை.

[இது மலரில் தூங்கும் என்று விரிவதால்  இல் என்னும் உருபு தொகுந்து ( மறைந்து) வருகிறது.

மலர் தூங்கும் என்றால் பூவே உறங்கிவிட்டது என்று பொருள்.

மலர்த் தூங்கும் என்றால் மலரில் மற்றொன்று ( வண்டு) தூங்குகிறதென்பது.  இங்கு வலி மிகும்.]

[ தட்டச்சு செய்கையில் கவனம் தேவை ].

மண்+ தூங்கு > மண்டூங்கு,  இதில் அம் விகுதி சேர,

மண்டூங்கம் என்றாகும் .  ஙகர ஒற்று இடைக்குறைந்து, மண்டூகம் ஆகும்.

அடி அகலமாகவும் வாய்ப்பகுதி சற்றுச் சிறுத்தும் இருக்கும் கேணி என்பது கூவம் ஆவது:    குவி + அம் > கூவம்,  வகர பகரத் திரிபில் இது கூபம் ஆகிவிடும்.

கூவம் > கூபம் என்பது முதனிலை நீண்டு, அம் விகுதி பெற்று வகரம் பகரமாய்த் திரிந்தது.

வகரம் பகரமாவது அடிக்கடி காணும் திரிபு. பிற மொழிகளிலும் உள்ளது. Not language specific.

இத்தகைய திரிபுகள் வருங்கால், ஒரு கையேட்டில் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். 

பகு <> வகு என்பது அத்தகையது.

கூபம் + மண்டூகம் >  கூபமண்டூகம்.

கிணற்றுத் தவளை என்பது.  கிணற்றில் வாழ்வது.  மண்ணில் துங்குவது.

இதை ஊங்கு, ஊக்கு என்ற சொற்களை இறுதியாக்கியும் பொருளுரைக்கலாம் ஆதலின் பல்பிறப்பி ஆகும். மற்ற உள்ளுறைவுகளை ஈண்டு விரிக்கவில்லை. பின்பு  கண்போம்.

மண்+ தூக்கம்> மண்டூக்கம்> மண்டூகம் எனினுமாம்.  இடைக்குறைச்சொல். இதுவுமது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

நோய்த்தொற்றில் துன்பத்தில் பன்னாட்டுத் தமிழர்.

 பன்னாடும் பரவியுள்ள பைந்தமிழர்----  அவர்கள்

பார்க்கின்ற வேலைகளில் பாதிக்கு  மேலே,

இந்நாளில் இல்லையென்றே  ஆயினவோ --- எனவே

இன்னலுற்று நோக்குமனம்,  ஏதிங்கு தூக்கம்?

என்னாலும் இயலாத செயலாகும் ---- இவர்கள்

எண்ணிக்கை தானுமினி கூறாத  நிற்பில்.

சொன்னாலும் எதைஎதையோ கவிகளிலே  ---- இன்று,

சோராமை மேற்கொண்டு வீறேகொள் வாரோ?  (பன்னாடும்)


சோற்றுக்கு  மீன்பிடிக்கப்  போயிடினும்---- அவர்கள்

சொந்தநாட்டு நீர்ப்பரப்பில்  சூறையில் ஆடி,

நாட்டுக்குத் திரும்பிவரும்   நேரத்திலே ----நீதி

நாடாமல் கைதுசெய்து  சேதங்கள் செய்தார்;  

நேற்றைக்கும்  இன்றைக்கும்  நடப்பனவோ?  ---இவை

நேராத  நாளில்லை தீராத  துன்பம்!

காற்றுக்கும்  கயமைக்கும் இடர்ப்படுவோர் --- இவர்கள்

கட்டங்கள்  மாறிடவே திட்டங்கள்  ஏது?



பொருள்:


இந்நாளில்  -  இந்த ( நோய்த்தொற்றுக்) காலத்தில்

சூறை -  சுழல்காற்று

சோற்றுக்கு - பிழைப்புக்கு

என்னாலும் -  இவ்வெழுத்தாளர் அல்லது கவியாலும்.

நிற்பில் -  நிலையில். (  நில் + பு :  நிற்பு,  நில்+ஐ> நிலை என்பதும் அது)

கட்டங்கள் -  துன்பங்கள் ( கஷ்டங்கள் .> கட்டங்கள்)

கடு+ அம் -  கட்டம்,  > கஷ்டம்.

( கட்டு+அம் > கட்டம் என்றது இன்னொரு சொல்).


மெய்ப்பு:  0812  05122021

பொருள் சேர்க்கப்பட்டது.

This was scheduled but could not be  edited in time owing to

Tamil software in phone generating errors. Recent malware.

Readers pl bear with us. You may point out errors in comments.