வியாழன், 11 நவம்பர், 2021

தாம்பூலம்

 இன்று தாம்பூலம் என்ற சொல்லினைக் காண்போம்.

இச்சொல்லில்  பூலம் என்பது புல்லுதல், புல்குதல் என்ற வினைகளுடன் தொடர்புடைய சொல்.

புல்லுதல்  -  ஒன்றுபடுதல்.  

புல்குதல் என்பதும் இதற்கிணையான பொருள் உடையது.

அடிச்சொல் புல்  என்பது.

புல் + அம் =  பூலம்  என்பது ஆடவர் பெண்டிர் ஒன்றுபடுங்கால்,  அல்லது ஒருவருக்கொருவர் அடுத்தடுத்து வருங்கால் வாய் நாவு முதலியவை தூய்மையாக இருக்கும்படி வைத்துக்கொள்ளும் அடைகாய் முதலியவற்றைக் குறிக்கும் சொல்.  பூலமென்பது முதனிலை நீண்டு அம் விகுதி பெற்ற தொழிற்பெயர்.  வினைச்சொல்லினின்று உருக்கொள்ளும் பெயர்ச்சொல் தொழிற்பெயர் என்பர். இலக்கணக் குறியீடு.  தொழில் என்றது வினைச்சொல் எனற்பொருட்டு.

இது பெரிதும் மங்கல விழாக்களில் பயன்பாடு கண்டது. பண்டையர் இயற்கையில் கிட்டும் வெற்றிலை முதலியவற்றைக் கையாண்டு தங்களை தூய்மைப் படுத்திக்கொண்டனர்.  இதுபோதுள்ள செயற்கை மருந்து வகைகள்  அக்காலத்தில் இல்லை.  Chlorhexdine, betadine  எனல் தொடக்கத்து இக்காலத்து மருந்துகள் முற்காலத்திலில்லை அல்லது பயன்பாடு காணவில்லை.

ஒரு வாய்ப்பு அந்நிலையைத் தருங்கால் இட்டுக்கொள்வது "தரித்தல்"  ஆகும்.  தரு> தரி > தரித்தல்.  தரி என்பதில் இகர ஈறு வினையிலிருந்து இன்னொரு வினையைப் பிறப்பித்தது.  ( தரு- இ- த்தல் ).  தருவித்தல் என்பது பிறவினை. இவ்வாறு ஒன்றிலிருந்து பலசொற்களை மொழிக்குப் படைத்துக்கொண்டது அறிவுடைமை.  முயற்சியின்றிக் "கடன்"கொள்வது சோம்பல் ஆகும். 

தாம் என்ற முன்னிணைப்பு, ஒருவருக்கொருவர்  அல்லது தம்மில் தாம் பதிந்து வாழத்தொடங்கும் இல்லற வாழ்வு நிலையைக் குறிக்கவரும் அழகிய சொல்லமைப்பு.

தம் + பதி > தம்பதி என்பதும் இத்தகைய நிலை உணர்த்தம் சொல்லாகும்.  தம் என்பதும் பதி(தல்) என்பதும் தமிழே.

பதிவுத் திருமணம் என்ற தொடரில் பதிவு வருகிறது.

எனவே  தாம் புல்லி மகிழத் தேவையான ஒன்று தாம்பூலம் என முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




புதன், 10 நவம்பர், 2021

வெற்றிலைக்கு இன்னொரு பெயர்.

 நம் வலைப்பூவில் வெற்றிலை பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் எழுதியுள்ளோம்.   அவை இங்கு உள்ளன.  படித்து மகிழவும்:

வெற்றிலை:   https://sivamaalaa.blogspot.com/2014/05/vetrilai.html

சருகு பிளகு  https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_16.html

குரங்குக்கு மறுபெயர்கள்  ( வெற்றிலையைக் குறிப்பிடுகிறது)

https://sivamaalaa.blogspot.com/2021/05/blog-post_27.html

வெற்றிலை இல்லா வினை: https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_2.html  (கவிதை)

வெற்றிலை---  - - வேறு பெயர்கள்  https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_7697.html

வெற்றிலை பெரும்பாலும் பல், நாவு முதலியவற்றை __ தூயதாக்குகிறது என்று வெற்றிலை போடுகிறவர்கள் சொல்கிறார்கள்.   போயிலை ( புகையிலை) யும் பலர் போடுகிறார்கள்.  நம் வீட்டுப் பாட்டிக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் சிவகிரிப் போயிலை கிட்டாமல்  சிறிது இன்னலுற்றார்.  பின்பு கொண்டுவந்து அது கடைகளில் கிடைத்தது.  என்ன மகிழ்ச்சி!  ஆனால் போயிலைக்கு விலை அதிகம்.  போயிலையினால் புற்று நோய் வருகிறது என்று ஐயப்பாடு இருப்பதால்,  அது அதிக வரிவிதிப்புக்கு உட்படுத்தபடுகிறது.  .  

வெற்றிலைக்கு "நாவிலை"  என்பது மற்றொரு பெயராகும்.  ஆகவே நாவு தூய்மைப் படுவதற்கு வெற்றிலை இன்றியமையாதது என்று நம்  பாட்டி பூட்டிகள் காலத்தில் நம்பினர் என்று நாம் கருத இடமுண்டு.

தாம்பூலம் என்பது வெற்றிலையை மட்டும் குறிக்காமல்,  பாக்கு அல்லது சீவல்,  சுண்ணாம்பு, கத்தக்காம்பு  (கற்றைக்காம்பு) என வாயில் போடுவதற்குரிய பொருள்களின் தொகைச்சொல் என்று தெரிகிறது.   இதைத் தாம்பூலம் தரித்தல் என்பர்.

தாம்பூலம் என்பது பூலம் என்றும் குறுக்கம் அடையும்.

முகபூசணம்,  தக்கோலம், சுருளமுது, அடைக்காய்  என்பனவும் தாம்பூலம் என்பதற்கு மறுபெயர்கள்.

உதடுகள் சிவந்து சாயம் பூசியது போலும் தோன்றுதலால் முகபூசணம் ஆயிற்று. முகம் என்றது உதட்டைக் குறித்தது. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

If you entered the compose mode please do not move your mouse over published material. You may be making unwanted changes . Please help by exiting the compose mode quickly.


செவ்வாய், 9 நவம்பர், 2021

ஸ்தம்பித்தல் சொல்லமைப்பு ( மாற்றுமுடிபு)

"தம்பித்து உயர் திசையானைகள் தளர" என்றான் கம்பநாடன், இராமாயணத்தில்.

ஒரு பொருள் அதன் பிறபாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பாடாமல்,  தொடர்பறுந்த நிலையில் நின்றுவிட்டால் அது தம்பித்துவிட்டது என்று சொல்லவேண்டும்.   ஒரு மனிதனின் இருதயம் 1  நின்று போனால் அது தம்பித்துவிட்டது என்று சொல்வது சரியான உரையாகிறது.  அதாவது பிற இணைப்புகளுடன் இயங்காமல் தாம் அல்லது தானாகிவிட்டது.  இதன் சொற்பகுதி தன் என்றாலும் தம் என்றாலும் முடிபில் வேறுபாடு தோன்றாது.

பிற பான்மைகள் பற்றிச் செல்லாது தானாக அல்லது தாமாகச் சுருங்குதல் அல்லது செயலிழத்தல்.

பிற்காலத்தில் தம், தன் என்ற பகுதியுடன் விகுதி பெற்று அமைந்த சொற்கள் ஒரு ஸகர மெய் எழுத்தை முதலாகக் கொண்டிருக்குமாறு உருக்கொண்டன.  இங்குக் கூறியது,  தான்,  தாம் என்ற வடிவங்கட்கும் பொருந்துவது.  ஒரு சொல் மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்குதலைத் தமிழ் ஏற்கவில்லை. ஆனால் சில மொழிகள் அதனை ஏற்றன. இது மொழிமரபுகளில் வேறுபாடு ஆகும்.

எ-டு:  தான் >  ஸ்தான்~~ 

 இவை பின் ஒரு விகுதியும் பெறும்.

இதனை இன்னொரு வகையிலும்  விளக்கலாம்.  

தம்பித்தல் என்பது தடைப்படுதல் என்ற பொருளும் உடையதாதலின்  தடு என்பதை பகுதியாகக் கொண்டு:-

தடு >  தடும்பி  >  தம்பித்தல்>  ஸ்தம்பித்தல்.

தடுப்பித்தல்  -  இதில் வல்லெழுத்து வந்தது  (டு).   ~பித்தல் என்ற பிறவினையிலும் வல்லெழுத்தே  மிக்கு வந்தது.  இதனை மென்மை செய்ய. "தடும்பித்தல் >  தம்பித்தல் என்று அமைக்கலாம்.  டு இடைக்குறைந்து சொல் மெலிந்தது.  செய்யுளில் இவ்வாறு மெலித்தல் செய்யத் தொல்காப்பியம் வசதி செய்கிறது.  கவிஞர் இதை எதுகை மோனை நோக்கிச் செய்வர்.  சொல்லமைப்பில் இதுவும் கைக்கொள்ளப்படும் உத்தியாகிறது.

இவ்வாறு சொல்லுக்கு இன்னொரு வகையில் அமைபுரைக்க முடிவதால், இச்சொல் இருபிறப்பி என்று உணர்க. முன் இடுகையில் இதைச் சொல்லாமல் தவிர்த்துவிட்டோம். எல்லா வடிவங்களையும் நாம் சொல்வதில்லை.  நேயர்கள் ஆய்வுசெய்து சொல்ல வாய்ப்பும் அளிக்கவேண்டுமன்றோ?

குறிப்பு:

1.ஈர்(த்தல்) - வினைச்சொல்.

ஈர்+து + அ + அம்   >  ஈர்தயம் >  இருதயம் 

து. அ என்பன இடைநிலைகள்.  அம் என்பது விகுதி.

ஈரல் என்பதும் ஈர் என்ற அடிப்பிறந்த சொல்லே.

இருதயம்  இடைக்குறைந்தால்  இதயம்.

இரத்தத்தை ஈர்த்துக் குழாய்களில் வெளியி லிடும் உறுப்பு.

இரு என்ற எண்ணுப்பெயரும் ஈர் என்றே திரியும்.  எ-டு:  ஈராறு கரங்கள்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.