புதன், 21 ஏப்ரல், 2021

மது - சுருங்கிய விளக்கம்

ஓர் ஐம்பது மாடிக் கட்டிடத்தின் பலகணி1யிலிருந்து வெளியில் எட்டிப்பார்த்தால் சிலர் மயக்கம் அடைந்துவிடுதல் அறிந்துள்ளோம்.  வான்படைஞர்க்கு இத்தகு காட்சிகள் இயல்பினும் இயல்பாகும்.  இவர்கள் பறந்துகொண்டே விளையாடும் திறம்  பெற்றவர்கள்  ஆவர். முதல்முறை போயிலை2 போட்டால் மயக்கம்  வருகிறது.பழகிப் போய்விட்டால் அதிகப்  போயிலை கேட்கும்.  பண்டு சிங்கப்பூரில் போயிலை வணிகம் செய்தவர்கள் தேவர் அண்ட் கம்பெனி ( தேவர்கள் குழும)க்காரர்கள். போயிலை கொண்டுபோய்ப்  பகிர்மானம் செய்தவர்க்குப் "போயிலைக்காரர்"  என்று அவருடைய வாடிக்கையாளர்கள் பெயர் கொடுத்திருந்தனராம். அக்காலங்களில்  மயக்கப் பொருட்களைப்   புழங்குவதில் தமிழர்  பெயர்பெற்றோர் ஆவர்.  இது  1940 - 50 வாக்கில் என்பர்.  அப்போது கள்ளுக் கடைகளும் சிங்கப்பூரில் இயங்கிவந்தன.  சிங்கப்பூரில் இக்கடைகளை ஒழித்த பெருமை கலைச்சார்புத்துறை அமைச்சர்  மறைந்த உயர்திரு இராச ரத்தினத்தி னுடையது ஆகும்.

மயக்கப் பொருள்களைப் பற்றி முன்னர் எழுதியுள்ளோம்.இங்கு ஓர் இடுகை உள்ளது. சொடுக்கி வாசிக்கவும்.3

மயக்குவது  >  மது ( இடைக்குறை).https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_19.html  [ சுருக்கச்சொல்]

இச்சொல்லை அடிச்சொல்லிலிருந்து அணுகி ஆய்வு செய்யலாம்.

சுருக்கமாக:

அடிச்சொல்:  மர்.

மர் > மய் > மய > மயங்கு  (மய்+ அம்+ கு)  >  மயங்குவது,   இடைக்குறைந்து:  மது.

மர் > மய் >மயக்கை >  மசக்கை.

மர் >  மரல் }

மர் > மருள்}  -  மயங்கி அல்லது சிந்தனையற்று  மனிதன் இயங்கும் நிலை.

மர்>   மரம்:   மண்ணில் முளைத்து வளரும் உணர்ச்சியற்ற  அறிவுக் குறை  உயிர்.

மர் >  மரி> மரித்தல்.  உணர்ச்சியற்ற, உயிர்விட்ட நிலை அடைதல்.

மர் > மரவை:  மரத்தாலான கோப்பை வைக்கும் தட்டு. வை என்ற விகுதி பொருத்தமானது.

ஒப்பீட்டுக்குப்  பல உள.  ஒன்று இங்கு:

விர்> விய் > வியன்( விரிவு).  "வியனுலகு"

விர்> விரி> விசி:   விசிப்பலகை.

விர் >விரு > விசு > விசும்பு:   வான்.

விர் >விய் >விய் +ஆல் + அம் > வியாலம்> விசாலம். ( ய - ச திரிபு)

விர்>விய்>  வியா > வியா+பர+ அம் =  வியாபாரம்:   விலைப்பொருட்டுப் பொருள்களை விரிந்து  பரவச் செய்தல்.

விர்> விரு > விருத்தம் :  விரிவுடைய பாவகை.

விர்> விரு> விருத்தி.( சரிசெய்து விரிவாக்குவது) .

இது மது என்ற சொல்லுக்கு விரிவான ஆய்வுக்கு வழிகோலும்.

மர் > ம > மது. (கடைக்குறை,பின் து விகுதி பெற்ற சொல்) என்பது மிக்கச் சுருக்கமான விளக்கம். 

மருதம் அடிச்சொல்: மர்

மக்கள் மயங்கும் ( தங்கிக் கலக்கும்) நிலம்

எத்தொழிலோரும் நிலையான வாழ்க்கையை மேற்கொள்ள முனையுங்கால் வந்து கலந்தமரும் நிலப்பகுதி.  ஆடு மாடு வளர்த்தாலும் உணவு தடையின்றி வேண்டுமாயின் விவசாயத்தில்  ஈடுபடுதல் செய்வர். மீன்பிடித் தொழிலரும் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயத்தில் புகுந்தால் உணவுக்குக் குறையிருக்காது. இவ்வாறு  ஒவ்வொரு நில வாழ்நரையும் பொருத்தி அறிந்துகொள்க.

விவசாயம் :   இங்கு விளக்கப்பட்டுள்ளது.

https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_54.html

வேற்று  நிலத்தொழிலரை ஈர்க்கக் காரணம் தொழிலின் உள்ளமை சிறப்பே.

யாரும் மருவும் தொழில்.  யாரும் வந்து மயங்குறு தொழில்.மயங்குதல்  - கலத்தல்.  தலைசுற்றுதல் என்று பொருட்சாயல்கள்  பல.

ஆடு மாடு நாய்  பூனை என யாவற்றுக்கும் உணவு துவன்று  உயிர்களைப் பேணும் தொழிலும் விவசாயம் என்னும் உழவுதான். சொல்லுக்கும் அதன் அமைப்புக்கும் காரணம் அறிகிறோமேஅன்றி,  இது விளம்பரமன்று.

இது சொல்லமை காலத்துச் சிறப்புக் கூறியது.

உழவை வள்ளுவன் புகழ்ந்ததும்  உணவு விளச்சலுக்கு அது  ஆதியானதால்தான்.  ஆதி -  ஆக்க  மூலம்.   கள் முதலியவை உண்டாக்குதல் துணைத் தொழில்கள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

தொடர்பு காட்டும் மற்ற இடுகைகள்:

1. ராஜஸ்தான் விவசாயிகள் : https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_15.html

 2. விவசாயம்   https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_54.html

3. பலவகைச் சொல்லாக்கம்: https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_99.html

4. நஞ்சை புஞ்சை முதலியன https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_27.html

தொல்காப்பியத்தில் : " வேளாண் மாந்தர்க்குப் பிறவகை நிகழ்ச்சி இல்" என்பது:  படைக்கு இவர்களை எடுப்பதில்லை.  படைக்கு வேண்டிய உணவும் இவர்களிட மிருந்தே வருவதால். இவர்களும் சண்டைக்குப்போனால் படையினர் எதைச் சாப்பிடுவது?.   அதுதான் காரணம்.   An army moves on its stomach,  said Napoleon.

படைக்கு ஆக்கிச் சோறுபோட்டவர்கள் படையாக்கிகள்.

அடிக்குறிப்புகள்:

1  பண்டைக்காலத்தில் காற்றதர்கள் ( சன்னல்கள்)  பல துளைகளை உடையனவாய் இருந்தன. ஒவ்வொரு துளையும் ஒரு கண். பலகண் உடைமையால்  பலகணி என்றுபெயர்.

2  போயிலை - புகையிலை.  போயிலை என்பது பேச்சுவழக்குச் சொல்.

3  வாய் > வாயித்தல் > வாசித்தல்.  ( ய - ச திரிபு).


ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

தவனம் ஆசை.

 இன்று தவனம் என்னும் சொல்லிலிருந்து சில அறிந்துகொள்வோம்.

முன்னுரை:  அயலோசையோ?

இச்சொல்லைப் பார்த்துவிட்டு அல்லது கேட்டுவிட்டு ஒலியின் காரணமாகத்  தமிழன்று என்பர் அறியார்.  ஆய்,  மாய் என்று வருவன சீனமொழிச் சொற்கள் போல் ஒலிக்கும்.   எல்லா வித ஒலிகளும் தமிழில் உள்ளன. ஒலிகளை மட்டும் மாற்றித் தமிழை இன்னொரு மொழிபோல் மாற்றிவிடலாம்.  இவ்வாறு வசதிகள் பல உடையது தமிழ்மொழி. பெரியசாமியை மிஸ்டர் பெரியாக்கி ( Mr Perry ) வெள்ளைக்காரனாக்கிவிடலாம். அப்புறம் அவர் பெரி சாம் தான். பார்லிமென்ட் என்பதைப் பாராளுமன்று என்று ஈடாகத் தந்து,  சொல்லாக்க நடிப்பினைக் காட்டலாம்.   பின்,  பார் -  நாட்டினை,  ஆளு -  ஆள்கின்ற,  மன்று -மன்றம் என்று பொருள்விரிக்கலாம்.  பார் என்பது உலகம் என்று பெரிதும் உணரப்பட்டாலும், நாடு என்ற பொருளும் உள்ளது.  ஆனாலும் இக்காலத்து உணர்பொருளைப் பின்பற்றி நாடாளுமன்றம் என்றும் கூறி மகிழலாம்.

ஒலியைக் கொண்டுமட்டும் மொழி எது ஏன்று தீர்மானிப்பது தவறாக முடிதலும் உண்டு.

தாவு என்னும் வினையிலிருந்து:

ஆசை மனத்து அசைவு.  மன உணர்ச்சி அசைவுற்று ஒரு பொருளின்பால் செல்கிறது.  சலனம் என்பதும் காண்க.   அசைதல் வினை.   அசை> ஆசை என முதனிலை நீண்ட தொழிற்பெயராகும்.

ஆசை அசைவு மட்டுமோ?  சும்மா வெறுமனே அசைதல் மட்டுமின்றி இன்னும் விரைவுற்றுத் தாவிச் செல்லுதலும் உண்டு.  இவையெல்லாம் அணியியல் முறையில் எழும் சொற்கள்.   தாவு >  தாவு+ அன் + அம் என்று கோவைப்பட்டு, தவனம் ஆகிவிடும். பற்றுதல் என்பது விரல்கள் கைகளால் பிடித்துக்கொள்வது போலும் ஆசை பற்றிக்கொள்கிறது.  அல்லது தீப்பற்றுதல் போலும் பற்றிக்கொள்கிறது.

இளிவே யிழவே யசைவே (தொல். பொ. 253).  அசைவு பல வகையன. தாவுதலு ஓர் அசைவே.

தாவு >  தாவு அன் அம் > தவனம் என்பதில் நெடில் முதல் எனத் தோன்றிக்  குறிலானது.   காண் என்ற வினை,  கா  என்பது குறுகிக் கண் என்று காணுறுப்பினைக் காட்டியது.    தோண்டியது போலும்  வாய்த்தொடர் குழாயை, தோண்டு + ஐ >  தொண்டை என்று முதனிலை நீட்சி குறுக்கி உறுப்பின் பெயராக்கியது. சா என்பது ச என்று குறுகி,  சா > சா+ வ் + அம்= சவம் ஆனது.  வ் இடைநிலை.  சாவு> சவம் எனக்காட்டினும் அதேயாம்.

உன் மனம் எனைக் கண்டு தவனம் செய்வதோ?  என்றால்,  என்பால்  ஆசை கொள்வதோ என்பதே பொருள்.

தவனங்கள் மூன்று:  மண்ணாசை, பொன்னாசை,  பெண்ணாசை.

தாவுவதால் மனமும் ஒரு குரங்கு  ஆனது.

எரியும் நெருப்பின் அனலும் தாவுவதாகச் சொல்வர்.  அனல் தாவி நெருப்பு பற்றிக்கொண்டது என்பதுண்டு. வெப்பமே இது.  இதிலும் தவனம் : தாவு+ அன் + அம் என்பதும் இன்னும் பொருள்தெரிய நிற்கின்றது.மருக்கொழுந்து மணமும் தாவுவதுதான். அதற்கும் இது பெயராகிறது.

திருப்புகழில் அருணகிரிநாதர்:   "அனலூடே தவனப்பட்டு " என்பதும் கவனிக்கவும்.  (308.50 )

வருத்தமும் இவ்வாறு தாவக்கூடியதே.  ஒரு துன்பத்தைக் கேள்விப்படுவோரெல்லாம்  வருத்தமடையக் கூடுமாதலால் அதுவும் தவனம் ஆகிறது.  எடின்பரோ கோமகனாரின் மறைவு கேட்டுப் பலர் தவனமடைந்தனர்.

உணவில் ஒன்றன் சுவை மற்றதில் தாவிக் கலக்கும்.  உப்பு, புளி, மிளகாய் இடித்து அதனால் தாவிக் கலந்தது தவனப்புளி ஆகிறது.

இங்கு ஆயுங்கால் ஓரிடத்திலிருந்து இன்னோரிடம் செல்லுதல் என்பதே தாவுதலென்பதன் அடிப்படைப் பண்டைப் பொருள் எனல் தெளிவு.

தவி - வினையிலிருந்து:

தண்ணீர் தவிக்கிறது என்பதுண்டு.   தவி+அன் + அம் =  தவனம் ஆகும்.  இது இன்னொரு வினைச்சொல்லிலிருந்து போந்து மேற்சொன்ன முடிபையே அடைவதான சொல்.  சில சொற்களில் வகரம் ககரமாகும்.  ஆகவே தவி > தகி ஆகும். தகிக்கிறது என்பர்.  தகி+ அம் = தாகம், முதனிலை நீண்ட திரிபுத் தொழிற்பெயர் ஆகுமிது.

கவனத்துக்குரிய திரிபுகள்:  

தாவு > தாவம் > தாபம்.  தாவம்> தாகம்:  (வ- க).

தவி > தகி > தாகம்.  (வ- க).

ஆகும் என்பதை ஆவும் என்பது பேச்சில்.  (வ-க).

அறிக மகிழ்க.

குறிப்புகள்:

தொடர்புடைய  இடுகைகள்:-

ஆசை https://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_2465.html

காமினி https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_3.html

ஆகமங்கள் https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post82.html

மெய்ப்பு  பின்னர்.


தடு என்ற சொல்லடித் தோன்றிய வடிவங்கள்.

 இன்று  தரம், தடம், தடவை முதலிய சொல்வடிவங்களைக் காண்போம்.

தடைபட்டுத் தடைபட்டுத் தொடங்கும் நிகழ்வில் ஒவ்வொரு தடைபாட்டினையும் ஒரு தடவை என்று சொல்வோம்.   தடு+ வை > தடவை ஆகும்.  டுகரத்தில் உள்ள உகரம் கெட்டு, அகரம் ஏறி வை என்ற இறுதிநிலையுடன் இணைகின்ற  செயல்   இதற்கு ஓர் எடுத்துக்காட்டு:  அறம் என்ற சொல்.   அறு +  அம் =  அறம் ஆவது போல. இங்கும் உகரம் கெட்டது காணலாம். இவ்விரண்டு துண்டுகளும் சேர்ந்து அற்றம் என்றும் இன்னொரு சொல்லுமாகும்.

தடம் என்ற சொல்லும்  டுகரத்தின் இறுதி உகரம் கெட்டது.  இதுவும் பின் அம் விகுதி பெற்று தடம் என்றாகும்.  தடம் என்பதற்கு வாட்டி அல்லது தடவை என்று பொருளில்லை.  வாட்டி: ஒரு வாட்டி, இரண்டு வாட்டி எனவரும்.

தடம் என்பதிலிருந்து திரிந்த தரம் என்ற சொல்லுக்கும் மேற்  சொன்ன பொருள் உள்ளது.  அது தடவை என்றும் பொருள் தரும்.  ஒரு தரம், இரண்டு தரம் என்று ஏலத்தில் கூவப்படுதல் கேட்டிருக்கலாம்.

தடம் > தரம் என்னும் திரிபு  மடி > மரி என்னும் திரிபு போன்றது ஆகும்.  சில உணவு வகைகளை விட்டு நோன்பு கடைப்பிடித்தலை  விடு>( விடதம்) > விரதம் என்று கூறுதல் காண்க.  இதுவும் ட - ர திரிபுவகைதான். அவனொடு, அதனொடு என்று வரும் ஒடு என்னும் வேற்றுமை உருபு,  ஒரு> ஒருங்கு என்பதனோடு பொருளொற்றுமை உடைத்தாதல் கவனித்தல் வேண்டும். இடு என்பதும் இரு என்பதும் அணுக்கப்பொருள் உடையன.  இட்ட பொருள் இட்ட இடத்தில் இருக்கும் என்பதை கூர்த்துணர்க.  இடு> <இரு.   தரம் என்பது தடம் என்பதனோடு பிறப்பியல் உறவுடைய சொல்.  இதனுடன் தடவை என்பதில் வரும் தடத்தையும் ஆழ்ந்து சிந்தித்துணர்க.

விடி என்பது ஒளிப்பகுதிகளின் விரிவேயன்றி வேறில்லை.  விடி> விரி என்பதறிக.  நுண்பொருள் வேறுபாட்டுச் சொல்லமைப்பு இதுவாகும்.  கடி> கொறி என்பதும் அன்னது.

தரமென்பதை தரு என்பதிலிருந்து கொள்ளுதல் கூடுமாதலின்,  இஃது ஓர் இருபிறப்பிச் சொல் என்னலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.