செவ்வாய், 13 ஏப்ரல், 2021

பீதாம்பரம்

 பொன்னாடையைப் பீதாம்பரம் என்றனர் என  நூல்கள் உரைக்கின்றன. துணிக்கப் படுவது துணி என்றும் வெட்டப்பட்டுக் கட்டிக்கொள்ளப்படுவது வேட்டி என்றும், சிறிய அளவினதான துணி துண்டு  என்றும்,  இவ்வாறு சொற்கள் அணியும் ஆடைகளைப் பற்றி ஏற்பட்டிருப்பதால் பீதாம்பரம் என்ற சொல்லும் இவ்வாறு எளிதான முறையில் அமைந்த சொல்லென்று நாம் முடிக்கலாம்.  உடம்பின் தாழ் பகுதியில் அணியப்படுவது தாவணி ஆனது.    தாழ்வு+ அணி = தாழ்வணி > தாவணி என்று,   ழகர ஒற்று வீழ்ந்தது.  வாழ்த்திசைக் குழுவினர், வாத்தியம் வாசிப்போராயினர் என்பதை நோக்க, ழகர ஒற்று வீழ்ந்ததில் ஒரு வியப்பில்லை.

சிவபெருமானுக்கும் பீதாம்பர ஆடை சொல்லப்படவில்லை.  ஆனால் மேகவண்ணன் உயர்பொன்னாடை அணி பெற்றார். ஆதலின் விண்ணுளான் பின்னாளினன் என்று அறிகின்றோம்.  கடவுளென்ற முறையில் இவர்கள் காலம் கடந்தவர்கள்.  ஆனால் மனிதர் துதிக்கத் தொடங்கிய காலம்  முன்பின்னாக இருக்கக்கூடும்.

தாமரையில் கவர்ந்தது செந்தாமரை. இதன் நிறத்தினோடு அணுக்கமுடைமையால் தாமிரம் என்ற கனிமம்  தாமரை என்ற சொல்லை முன்னமைவாகக் கொண்டு பெறப்பட்ட சொல் என்பது தெளிவாகிறது. தாமரையின் செம்மைக்கும் தாமிரத்தின் செம்மைக்கும் வேற்றுமை சிறிது உண்டென்றாலும் பழங்காலத்தில் நிறங்கள் பற்றிய வரையறவு அத்துணை தெளிவை ஒன்றும் அடைந்துவிடவில்லை என்பதை நாம் மறந்துவிடலாகாது.  எடுத்துக்காட்டாக,  கண்ணன் நீலவண்ணன் என்றும் கருமை நிறத்தோன் என்றும் இவ்விரண்டுக்கும் இன்றுள்ள இடைவெளித் தெளிவு தோன்றாவண்ணமே வருணனை செய்யப்படுவது நம் இலக்கிய வழக்காகும் என்பதறிக.   இவ்வண்ணமே தாமிரத்துக்கும் தாமரைக்கும் இடைநின்ற நிற இடைவெளி அன்று கருதப்படவில்லை என்பதே உண்மை.   தாமிரத்துக்குச் செம்பு என்ற சொல் செம்மை நிற அடிப்படையில் ஏற்பட்டிருப்பதும் கருதத் தக்கதாகும்.

தாமிரம் என்பது தாம்பரம் என்ற சொல்வடிவாலும் குறிக்கப்படுதல் உண்மையால்,  பீ தாம்பாரம் என்பதன் கண் உள்ள தாம்பரம் நிறத்தைக் குறித்த சொல்லே என்று தீர்மானித்தல் சரியாகும்.   நிறம் தாம்பரமாக, அந்நிறத்துத் துணியும் அதே பெயரைப் பெற்றது,  ஒருவகை ஆகுபெயரே என்று முடிவுகொள்ளலும் சரியானதே.

இப்பீதாம்பரம் போர்த்திக்கொள்ளப்பட்டது   முன் நடுவில் விலகி நிற்கும்படியாக நிகழ்ந்தது என்பதும் தெளிவு.  பிய்தல் அல்லது விலகிநிற்றல் குறித்த சொல் "பீ" என்பதாகும்.   பிய் > பீ .  பிய்வு எனின் பிரிந்துநிற்றல்.  இவ்வாறு துணிநிற்றல் ஓர் அழகுமாகும்.  இது செய்> சே என்பதுபோலும் திரிபு. செய்ய தாமரை, சேவடி என்பவற்றில் செம்மைப் பொருள் கண்டுகொள்க.  அன்றேல், ஒரு பெருந்துணியில் பிய்த்துக் கட்டிக்கொண்ட அணி என்று பொருள் கொள்ளலாகும்.

இனி இன்னொரு வகையில் சொல்லமைப்புக் கண்டு, உணர்த்துதல் கூடும்.

பின் + தாழும் + பர + அம் >  பீதாம்பரம் ஆகும்.  தாழும் என்பது தாம் என்றாயது இடைக்குறை.  பர அம் என்பது துணி உடலிற் பரவப் போர்த்தியிருப்பதைக் குறிக்கும். பர என்பதில் அகரம் கெட்டது.  பின் என்பது னகர ஒற்றுத் தொலைந்து பீ என்று நீட்சி பெற்றது.   0ன் எழுத்து வீழ்வது தன்பின் > தம்பி என்பதிலும் நிகழ்ந்துள்ளது.  பிம்பம் என்பதில் பின்+பு+அம் எனற்பாலது ஒன்றித் திரிந்தது.

நெஞ்சிடைப் பிரிந்து தாழ்ந்து பரவ நிற்கும் ஆடை.  பிய் என்பதும்  பீ  என்று திரியும்.  மரி என்பது மா என்று திரிந்து மாரகம் என்ற சொல் அமைந்தது. கோபீனம் என்ற சொல்லில் ஏற்பட்டுள்ள திரிபும் பின் என்ற சொல் நீட்சி காட்டவல்லது.

ஆகவே பீதாம்பரம் என்பது இருபிறப்பிச் சொல் ஆகும்.

இது எவ்வாறு அணிந்துகொள்ளப்பட்ட துணியைக் குறித்தது என்பதைச் சொல் காட்டுகின்றது. தாமிர நிறத்துத் துணி என்பதும் தெளிவாய் உள்ளது.  இடுப்பிலே பீதாம்பரம் என்ற வரணனையும் உண்டாதலின், இது பொன்னாடை போலன்றி வேறுவகைகளிலும் அணியய்பட்டிருத்தல் கூடும்.

முன் காலத்தில் இந்தத் தாம்பர வண்ணத் துணிகள் பெரிதாக நெசவு செய்யப்பட்டு, பின் அணியுங்கால் அவற்றிலிருந்து பிய்த்து ( துண்டு அகற்றி) அணியப்பட்டமையே  பீ (பிய்வு)  என்ற முன்னடைவு வந்தமைக்குக் காரணமாதலும் பொருந்துவதே. பிய்தாம்பரம் > பீதாம்பரம்.  அல்லது முன் குறித்தபடி,  பின் தாழ் பர அம் >  பின் தாபரம் > பீதாம்பரம் எனினுமாம்.

தொய் + பு > தொய்ம்பு > தோம்பு என்பதில் மகர ஒற்று புணர்ச்சித் தோன்றல். அதுபோலுமே ஆகும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.


  

திங்கள், 12 ஏப்ரல், 2021

தசை என்ற சொல்

 தசை என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்வோம்.

இது தை என்ற அடிச்சொல்லிலிருந்து வருகிறது.  இச்சொல்லின் இறுதியில் உள்ள சை என்பது விகுதி.  இதனை மேலும் பிரித்து இரண்டு சிறு விகுதிகளைக் கண்டுபிடிக்கலாம்  அவை சு+ ஐ என்பன,  இரண்டையும் இணைத்து ஒரு விகுதியாகக் கூறினாலும்  சு என்பது இடைநிலை, ஐ தான் விகுதி என்றாலும் ஆவதொரு தெற்றில்லை என்றறிக.

தை > தைவருதல் :  தடவுதல்.

தை > தைலம் :  தடவும் எண்ணெய் அல்லது நீர்ப்பொருளான மருந்து அல்லது நெகிழ்களிம்பு.

தைத்தல் -  இணைத்தல்.

தை -  தையல்:  துணிகளை நூலால் இணைத்தல்.

தையல் -  வீட்டுடன் இணைந்திருப்பவள்,  என்பதே அடிப்படையான பொருள். இன்னொரு வீட்டிலிருந்து பெண்வீட்டில் வந்து இணைபவனே மாப்பிள்ளை. அதனால்தான் திருமணத்தின் முன் பெண்பார்க்கப் போவது வழக்கில் வந்தது. பெண்வழி வாழ்வுமுறை மாறிவிட்டாலும் இந்த எச்சங்கள் தொக்கி நிற்கின்றன.

இணைத்தல் தடவுதல் எல்லாம் தொடுதல் வகைகள்.

தைமாதம் என்பது இணைக்கும் மாதம்.  மக்களையும் அவர்கள் நடாத்தும் நிகழ்வுகளையும் இயற்கை நலங்களையும் ஒருங்கிணைக்கும் மாதம்.

தடவுதல், இணைத்தல், பொருந்துதல் என்று தை என்பதன் அடிப்படைக் கருத்தை அறிந்தோம். இனித் தசை எனற்பால சொல்லைக் காண்போம்.

தை > தை+ சை  ( சொல்+ விகுதி)  >  தசை.  ( இது ஐகாரக் குறுக்கச் சொல்லமைப்பு).

இன்னொரு வழியில்:

தை >  தய் >  தசு > தசை.    ( தசு+ ஐ).

இது பை > பய் > பயன் (பையன்) > பசன்  ( பசு+ அன் )  > பசங்க (பேச்சு) போல்வது ஆகும்.

பசன் என்பதை பசுமை + அன் = பசன் என்று காட்டினாலும் அதே.   பசுமை, இளமைக் கருத்தில் அங்கே ஒளிந்துகொண்ண்டுள்ளது.  உணரும்படியாக இவண் வெளிக்காட்டப்படுகிறது.

தை > தைச்சு > தச்சு.  தச்சுவேலை என்பது மரங்களை அறுத்து இணைக்கும் வேலை.  இணைப்பதே அடிப்படைப் பொருள்.  தச்சு என்பதும் ஐகாரக் குறுக்கம்.

தை > தய் > தயிர்.   இர் விகுதி.  பாலில் ஏற்படும் இணைப்பு.

இவ்விதிப்படி திரிந்த இன்னொரு சொல்:  மை >  மய் >  மயிர்.  இர் விகுதி. இன்னொன்று:  பை > பய் > பயிர்.  

சொல்லை ஆய்வு செய்யும் ஆர்வமுள்ளவர்கள் இதனைப் பட்டியலிட்டு மனனம் செய்துகொள்க.

உடலில் ஏனை உள்ளுறுப்புகளுடன் இணைந்திருப்பதே தசை.


அறிக மகிழ்க.

செப்பமிடு மீள்பார்வை பின்னர்.


பிற்குறிப்பு:

தயங்கு என்பது தங்கு அங்கு என்ற கருத்துக்களின் ஒன்றுபாடாக வந்த சொல்லே ஆமென்க.  த என்பது தன்மை. தன்மை இடத்தில் கு : சேர்ந்திருத்தல். கு என்பதை விரிவாக முன் ஆய்ந்துள்ளோம். தம் என்பதும் வேறன்று. அவற்றை மறுநோக்கு மேற்கொள்க.  தன் + கு = தங்கு.  தன் இடத்தில் இருப்பதே மேலானது என்று கருதிவிட்டால்  அதுவும் த+ ஐ,   அல்லது த+ இயை = தயை ஆகும். [ ஐ என்பது மேன்மைக் கருத்து. ] மேற்சென்று போரிடுதல் துரத்துதல் என இல்லாமல் இருக்குமிடத்தில் இயைந்துவிடுதல்.  ஒரு வீரன் சீறிப் பாயாமல் இரங்கித் தன் நிலையிலே நின்றுவிட,  அது  தய , தயை என்று வந்துவிடுகிறது. அப்போது அது இரக்கம் என்று கூறப்படும். இவ்வாறு தயவு, தயை, தங்கு,  தயங்கு என்ற சொற்பின்னல்கள் எழுதலை கூர்ந்துணர்ந்து  மகிழ்க.

த -  தன்மை அல்லது தன்னிலையில்,

அ - அங்கே நின்றுவிடுதல்.

த + அ =  தய. இவ்விடத்து யகர ஒற்று (ய்) உடம்படு மெய்.

தயங்கு, தயவு, தயை எனச் சொற்கள் அமைதல் காண்க.

பண்டை மொழிமாந்தனுக்கு ஒருவன் தன்னிலை நீங்கி எதிர்நிற்பவனிடம் நெருங்கினால்  அவனை அடிப்பதற்கோ, வெட்டுவதற்கோ முற்படு செயல்;  இவ்வாறு தன்னிலை கொள்பவன் அரசனோ அதிகாரியாகவோ இருப்பான். தன்னிலை நீங்காமல் நிற்றல் என்பதே தயை,  அதுவே தயங்குதலுமாம்.  தண்டிக்கத் தயங்குதல்.  அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்ற தமிழ்நாட்டுப் பழமொழியையும் காண்க.  நின்று கொல்லும் - நின்று என்பதுதான் தயை, தயங்கு என்பவெல்லாம்.  நில் > நிலை.  தான் நிற்றல் - தன் நிலை - தன்னிலை. இலக்கணத்தில் தன்மை என்பர்.  தன்மை உடைய மனிதன் என்பர் சிலர். இதன் கருத்து என்னவென்றால், தன்னிலை நீங்காமல் " தயை" யுடனும் "தயக்கத் "துடனும்  ( இரங்கி ) நடந்துகொள்வோன் என்பது. தெய்வம் நின்று கொல்லக் காரணம், இடையில் மனிதனுக்குத் திருந்த ஒரு வாய்ப்பு அளிப்பதற்காகவே என்பர். அன்றை மாந்தனின் கருத்துகளின் ---நிலைமைகளின் அடிப்படையில் சொற்கள் உருக்கொண்டன.

தயாநிதே -  தயங்கி நின்றோனே ;  நி தே -  நில் + து + ஏ >  நி து ஏ. தயை செய்தோனே.  நில் > நி  ஆனது கடைக்குறை.

நிதி என்ற சொல் மாந்தனை அல்லது கடவுளைக் குறிக்கையில் அது திணைப் பிறழ்ச்சி ஆகிறது.  து என்பது அஃறிணை விகுதி.  மூலத்தில் தமிழிலிருந்து புறப்பட்டதாகக் காட்டினாலும், இலக்கணம் பிறழ்ந்ததால் அது தமிழென்று ஒப்பார் தமிழ்ப்புலவர் சிலர்.  இது இங்கு திணை விகுதி அன்று, சொல்லாக்க இடைநிலையே என்று கொள்ளின்,  இத்தடை இருக்காது. வேறு விளக்கங்களும் உள்ளன. எ-டு:   து  என்பதன்று,  த்  என்ற இடைநிலை என்பதுமொன்று. இத்துடன் நிறுத்துவோம்.

Classification should be based on a word's functionality and not form. 

---- என்பவை அறிக.

தமிழில் தெரிந்துகொள்ளவேண்டியது அனந்தம்.  ( எல்லை இல்லை). இயன்ற மட்டும் எழுதுவேம்.  மேலும் அறிவோம் பின்.

உங்கள் கருத்துகளையும் பின்னூட்டம் செய்யலாம்.

மெய்ப்பு பின்பு



தமிழ்நாட்டுத் தேர்தலில் யார் வெல்வார்?

 உலைபற் றியிலா  அரியும்  நீரும்

நிலையிற் சமைந்து வருமோ சோறும்?

அலைகள் இலவாய் அடங்கிய தேர்தல்

விலைகொள் வாக்கால் கடந்திடு வாரோ?


இது தமிழ்நாட்டுத்  தேர்தல்  (2021) பற்றிப் பேசப்பட்ட ஒரு கருத்தை மேற்கொண்ட ஒரு பாடல்.  பார்க்கப் போனால் அப்படித்தான் தோன்றுகிறது.

உரை பற்றி இலா -  உலையில் நெருப்பிடாமல்,

அரியும் நீரும் -  கிளைந்து வைத்த அரிசியும் நீரும்,

நிலையில் - அப்படியே விட்டுவிட்டால்,

சமைந்து வருமோ சோறும் -   (சாதம்) தானே வெந்து சோறு ஏற்படுமோ?

அலைகள் இலவாய் -  அரசியல் அலைகள் ( எதிர்ப்பு, வாதங்கள் முதலியவை)

இல்லாதனவாக,

அடங்கிய தேர்தல் -   அமைதியாக (கிளர்ச்சிகள் போல் இல்லாமல் ) நடந்து முடிந்த இந்தத் தேர்தல்,

விலைகொள் வாக்கால் -   பணம் புழங்கி  இய ந்திரத்தினுள் சென்ற வாக்குகளால்,

கடந்திடுவாரோ -  வெல்ல முயல்வோர் வென்றிடுவார்களோ?


 உங்கள் கருத்துகளைப் பதிவிடலாம். நன்றி.