திங்கள், 7 டிசம்பர், 2020

அதிகாரம் இச்சொல்லின் உள்ளுறைவு.

அதிகாரம் என்றால் என்ன என்பதை உணர்த்தும் வரையறவுகள் சட்டநூல்களிலும் ஆட்சியமைப்பு பற்றிக் கூறும் நுல்களிலும் கிடைக்கும். என்றாலும் நாம் " அதிகாரம்" என்ற சொல்லினமைப்பையும் அது போந்தமைந்த வழியில் கண்டுணரக் கிடக்கும் தெளிவுகளையும் ஆய்ந்து அறிந்து,  அதன் பின் அதிகாரம் என்பது எதைக்குறிக்கும் என்று உணர்ந்துகொள்வோம்..  

பெரும்பாலும் இச்சொல் அதி + காரம் என்று பிரிக்கப்படும்.  அதிகம் என்பதன் பகுதியே அதி என்றும் அது மிகுதிப்பொருள் உணர்த்துமென்றும்  அடுத்துக் காரம் என்பது சொல்லிறுதி என்றும்.  காரமெனின் செயல் என்று பொருள்படுமென்றும் கூறப்படுவதுண்டு. இவ்வாறு கூறின்.  அதிகாரமென்பது ஓர் மிகுசெயல் என்று முடிப்பதே பொருண்மை அறிதிறன் என்னலாம்.

சொல்லில் மூன்று உள்ளுறுப்புகள் இருக்கின்றன என்னலாம். அவை, 1. அகம்,  2. திகை  3.ஆரம் என்பன .

 அகம் என்பது எக்காரியத்திலும் உட்சுற்றில் உள்ள மனிதர்களை (இச் சொல்) குறிக்கிறது. இவ் உட்சுற்றில் ஒரு மனிதரோ ஒருவருக்கு மேற்பட்டவர்களோ இருக்கலாம். அவர்களிடம் ஒன்று திகைவுறுகிறது.   திகைதலாவது தீர்மானப்படுதல்.  இத்தீர்மானத்தின்பின்,   ஆரம் என்பது  அது சூழ இருப்போரிடம் சென்று சேர்கிறது. சூழ இருப்போர்  அதனை ஏற்றுக்கொண்டு நடைபெறுவிக்கின்றனர்.  அதனால் உட்சுற்றில் உள்ளவர்களிடம் நடப்புறுத்தும் திறம் உணரப்படுகிறது.  அத்திறமே " அதிகாரம்"  ஆகிறது. ஆர்தல் - சூழ்தல். பரவுதல்.

அகம் + திகை + ஆரம் =  அகதிகாரம் , இது இடைக்குறைந்து,  அதிகாரம் ஆம்.  அகம் > அக என்பதில் ககரம் இடைக்குறைந்தால்,  மீதமிருப்பது {அ+ திகை} என்பதுடன் ஆரம் சேரத் திகாரம் ஆகும்.   அ + திகாரம் -  அதிகாரம் ஆகும்.  ஒருவன் தீர்மானித்தாலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் தீர்மானித்தாலும், அது சேர்விடத்தில் நடப்புக்கு வருகிறது.  அதி என்பது உட்சுற்றில் தீர்மானப்படுவது.  எனவே அதி என்பது மிகுதி என்று உணரப்பட்டதில் பெரிய தவறில்லை.

அறிக மகிழ்க.

குறிப்புகள்

அகரம் ( அ ) என்பதும் ஒரு சுட்டடிச்சொல் தான்.

ஆயின் அகம் என்ற சொல் முன் இடுகையில்

விளக்கம்பெற்றுள்ளது. (  அ+கு+ அம்).

 இவற்றுள் அ என்பதை மட்டும் வைத்துக்கொண்டு

திகைதல் என்பதன் தி (முதலெழுத்தை) மட்டும் அதனுடன்

பொருத்தினால்,   அதி என்ற "காரண இடுகுறி" கிட்டிவிடும்.

அகத்துத் திகைந்தது என்னும் தொடருக்கு அதி என்பது

முதற்குறிப்பு ஆகிவிடுகிறது.

அதிகாரம் என்பது முன் பலவாறு விளக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் இவண் கூறப்பட்டது சரியானது.

அகத்து -   அரண்மனைக்குள்.  திகைதல் - முடிவுசெய்யப்பட்டது.

இது அரண்மனைக்கு வெளியிலிருந்த சிற்றதிகாரிகள்  புனைந்த

சொல் என்பது தெளிவு.

அதி என்ற முன்னொட்டும்  அகத்துத் திகைந்தது என்ற 

சொற்றொடரின்  சுருக்கமே  ஆகும்.  அதன்பின் என்ற தொடரின்

முதலெழுத்துச் சுருக்கமாகிய அபி என்பதும் முன்னொட்ட்டாகவே

கொள்ளப்பட்டது.  எ-டு:  அபிவிருத்தி.   [  அபி - அதன்பின்  விருத்தி - இது

விரித்தி என்பதன்  திரிபு.]  

மெய்ப்பு பின்.

கள்ளப்புகவர் நுழைவித்த சில எழுத்துப்பிறழ்வுகள்

திருத்தம் பெற்றன. 1235 08122020

        


வெள்ளி, 4 டிசம்பர், 2020

பூனைக்குட்டி போன்ற சிறு நாய்க்குட்டி (ஹாங்காங்)

படத்திலிருப்பவர்  எல். உரோஷினி,  ஹங்காங்  2020.


கடைத் தெருவிற்குப் போனாலுமே

கைத்தொங்குப் பைக்குள்ளே

காவலுக்கோ இந்தக் குட்டிநாய்

காண்போர் கரள் கவர  அது

கூடவே சென்றுவர

நாடும்பல   நலம்வருமே. 
 


------------------------------------------------------------

கரள் ( மலையாளம்) -  நெஞ்சம்.

இந்த மலையாளப் பாட்டில் இச்சொல் காண்க:

உள்ளில் கடன்னு கரள்

கொள்ளயடிக்கு நின்னே

கள்ளிப் பெண்ணென்னு விளிக்கும்;

ஆடானும் வரில்ல ஞான்

பாடானும் வரில்ல ஞான்

மாடத்துப் பச்சக்கிளியே.

மலையாளக் கவி .பாஸ்கரன்


அட்சரம் சொல் உட்பொருள்

 சரியக்கூடியவை சரியும்போது, ஒன்றன் அழுத்தத்தால் அடுத்து உள்ளது முன்னது பட்டு வீழ்கின்றது. இவ்வாறு சரிதலைச் சரம் என்றனர். சரி + அம் = சரம் ஆகிறது. இங்கு வினைச்சொல் சரிதல். இகரம் கெட்டது.

படி+ அம் = பாடம். இது முதலெழுத்து நீண்டு, டி என்பதன் இகரம் கெட்டு அமைந்தது.

வரிசையாகச் சரிவது, வச்சரம்.  வரிச்சரம் என்பதே இடைக்குறைந்து வச்சரம் ஆனது. சரிதலென்பதன் அடியாக  விழாமல் ஒன்றன்பின் ஒன்று வருவது சரம் என்றே குறிக்கப்பட்டது.  இது ஓர் ஒப்புமையாக்கம் ஆகும். சரவிளக்கு என்பதில் எதுவும் விழுவதில்லை என்றாலும் அது சரிந்து விழுதல் போலவே கற்பித்துச் சொல் அமைந்தது.  விழுக்காடு என்ற சொல்லை நோக்கின்,  எதுவும் விழுதல் இல்லை;  எனினும் விழுதற்கு இணையான நிகழ்வு ஆகும். எனவே. ஒன்றன்பின் ஒன்றாய் விழுதல் என்ற கருத்திலிருந்து (விழாமல்) வருதல் குறித்தது ஒரு கருத்துவளர்ச்சியே ஆகும்.

வீதம் என்ற சொல்லைக் கவனியுங்கள். இது விழுக்காடு என்று பொருள்படும். (பெர்சன்டேஜ் என்பர் ஆங்கிலத்தில்). இதுவும் விழு என்ற சொல்லின் இன்னொரு வடிவமான வீழ் என்பதனடியாய்,  வீழ்தம் என்று உருப்பெற்று, ழகர ஒற்றுக் கெட்டு  வீதம் என்றாயிற்று. விழு> விழுதம் > (முதனிலை நீண்டு) வீதம் எனினும் அதுவே. இதையறியாத சிலர், இது தமிழன்று என்று அலமரலாயினர். நுழைபுலம் இன்மைதான் இந்த வழுக்கல் முடிவுக்குக் காரணம் என்போம். ழகர ஒற்று வீழ்தல்,  வாழ்த்தியம் என்ற சொல்லிலும் நிகழ்ந்துள்ளது கூறுப.  அது வாத்தியம் ஆனது காண்க.

சுருங்க உரைப்பின்:

சரிதல்   விழுதல்;  அடுத்துவரல்.

ஒரு மரம் சரிந்தது என்றால், நின்ற நிலை மாறி, தரையை அடுத்துவந்துவிட்டது என்பதுதான் பொருள். அம்மரம் ஒரு நிலையில் நீங்கி மறுநிலைக்கு வந்தது. ஆகவே கருத்துவளர்ச்சியில் தவறில்லை.

சரி > சரம். ( அடுத்துவரல்.).

எழுத்துக்கள் அடுத்தடுத்து வருதலை உடையவை.  அகரம்  ஆகாரம் இகரம் ஈகாரம் என.    இது அடு + சரம் =  அடுச்சரம்,  டுகரம் இடைக்குறைந்து, அச்சரம் ஆகும். அடுத்தடுத்து வரிசையாய் வைக்கப்படுவன.  டுகரத்தை முழுமையாக நீக்கிவிடாமல்,  டுகரத்தில் உகரம் மட்டும் குறைத்து,  அட்சரம் என்பது இன்னொரு வடிவமாகும்.

இவற்றைத் தந்திரம் என்றும் வருணிக்கலாம்.  அல்லது  இயல்பான சொல் அமைப்பு என்றும் சொல்லலாம்.  எப்படிச்சொன்னால் என்ன?

அட்சரம் என்பது உண்மையில் alphabet தான்.

அடுக்குச் சரம் என்று வந்திருக்கவேண்டுமோ?  அடுக்கு என்பதில் அடு என்பதே அடிச்சொல். கு என்பது சேர்விடம் காட்டும் விகுதி.  சென்னைக்கு என்பதில் அது உருபு.  அந்த விகுதியை ஏன் கட்டி அழுதுகொண்டிருக்கவேண்டும் என்று அந்தச் சொல்லை அமைத்த அறிவாளி அதை விட்டுவிட்டான். அவ்வளவுதான் கதை. எல்லாவற்றையும் வைத்துக்கொண்டிருந்தால், வாக்கியம் ஆகுமே தவிர சொல்லாகாது.

அறிக, மகிழ்க. 

மெய்ப்பு பின்