புதன், 16 செப்டம்பர், 2020

தயார் ( போருக்குத் தயார் !)

 நாம் இப்போது தயார் என்ற சொல்லை அமைப்பறிந்து கொள்வோம். இச்சொல் தமிழர்  சிற்றூர்களிலும் வழக்கிலுள்ள சொல்லாகும்.  இதற்கு மாற்றாக வழங்கத் தக்க தமிழ்ச்சொல் " அணியம்" என்பதாகும். " நாம்  நூல்நிலையத்துக்குச் செல்ல அணியமாய் உள்ளோம்" என்னும் வாக்கியத்தில், அணியமாய் என்பது தயாராய் என்று பொருள்படும்.

அணியம் என்ற சொல்லில் மட்டுமின்றித் தயார் என்ற சொல்லிலும்கூட அடிப்படையாக நிற்பது அணிமைக் கருத்து ஆகும். அண் என்ற அடிச்சொல் அருகில் இருத்தலைக் குறிக்கும்.  அருகில் இருத்தல் என்பது  இடம், காலம்,  பொருள் உருவம் என்ற ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளுட் படும். காலத்தால் அடுத்தது, பின் இடத்தால் அடுத்தது, உருவத்தால் அடுத்தது ( மந்தியும் மனிதனும் போல ).... என்றிவ்வாறு விரித்துக்கொள்ளலாம்.

குற்றவாளியைக் கொல்வதற்கு அரசன் தீர்மானித்தபின் அதற்கேற்ற காலத்திற்காக அவன் காத்திருப்பானாகில், அதுவே அவனைத் தயங்கி நிற்கும்படி செய்கிறது. (காலத்தால் தயக்கம்).  அரசவையில் வீற்றிருப்பவன் குற்றவாளியைக் கொல்வதற்கு அதற்குரிய களத்திற்குச் செல்லக் காத்திருத்தலும் கூடும்.  அரசவையிலே அவனைக் கொல்வது வழக்கமன்று என்பதொரு காரணமாயும் இருத்தல் கூடும். இஃது இடத்தால் தயங்குதல். அரசன் அணிமைநிலைக்கு வந்துவிட்டான் எனினும், தள்ளிவைத்து நிற்றலும் பின்னர் செயல்படுத்தக் குறித்துவைத்தலும் தயங்குதல் > தய > தய+ ஆர் = தயார் ஆகிறது. ஆர்தல் - நிறைதல்.  இஃது தயக்க நிறைவு.  அது நீங்கிடில் செயல் தொடரும்.

தயங்கு - தய என்னும் சொல்வடிவங்கள்  தங்குதல் என்பதனோடும் தொடர்பு உடையவை.  தூங்குதல் என்பதும் தயங்குதல், காலம் கடத்துதல் என்பவற்றோடு தொடர்புடைய கருத்தே ஆகும். மொழியின் தொடக்க காலத்தில்  த - தூ என்று மிக்கச் சிறிய வடிவங்களாய் இருந்திருக்கவேண்டும். ( சீன மொழியிலும்  (த >) தான் என்பது சற்றுநிற்றல், பொறுத்தல் என்று பொருள் படுகிறது).  இனி இலத்தீன் தர்டரே tardare  என்பதும் ஆங்கிலம் தாரி/( டாரி)  tarry என்பவும் ஒப்பீடு செய்யத்தக்கன.  நில் என்று சொல்ல விழைபவன் "த" என்று அதட்டி நிறுத்துவது இன்றும் காணக்கிடைப்பது ஆகும்.

த ய என்ற அடிச்சொல் த - அ என்ற இரு உள்ளுறுப்புகளை உடையது. இதை வாக்கியப்படுத்தின்  த = நில்;  அ = அங்கே என்னலாம்.   தய+ அங்கு = தயங்குஆகும்.  இதைத் தய + அம் + கு என்றோ த + அ + கு என்றோ பகுத்தும் பொருளுரைத்தல் எளிதே. 

இதை விரித்தல் விழையோம்.  தய+ ஆர் = தயார் ஆனது தெளிவு.

தயார் இது தொடராமை நிலையாதல். தொடரப் பொறுத்தல்


தட்டச்சுப் பிறழ்வுகள் கவனம் பின்.




ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

ஓதம் ஊதுதல் ( காற்று, நீர் மிகுதல்).

ஓதம்:

 ஓதம் என்ற சொல் மனிதனின் விரை அளவின் பெரிதாதலைக் குறிக்கும்.இது ஒரு நோய். இதனை ஆங்கிலத்தில் hydrocele  என்று சொல்வர். ஒரு தேய்வைப்பை baloon /   நெகிழிப்பை காற்று ஊதிப் பருத்தலைப் போல் விதைப்பை ( விரை)   ஊதிப்போகும் நோய்.  ஆனால் இதில் நீர் மிகுந்து பருத்துவிடுகிறது என்பர்.  இதை மருத்துவரிடம் அறிக.

ஊது (ஊதுதல் ) என்ற சொல்லினின்று இது வருகிறது,  ஊகாரம் ஓகாரமாய்த் திரியும்.   எனவே ஊது > ஊதம் > ஓதம் ஆயிற்று.  

ஓதமென்ற சொல் அண்டவாதம் என்னும் இந்நோய் குறிப்பதுடன், வேறு அர்த்தங்களையும் உணர்த்தும்.  அவற்றுள் நீர்ப்பெருக்கு என்பதும் ஒன்று.  எனவே இந்த நோய் நீர்பெருக்கினால் விளைந்தது முன்னோர் உணர்ந்திருந்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இவையல்லாமல்  கடல், கடலில் எழும் அலை, ஈரம் முதலிய அர்த்தங்களையும் இச்சொல் தெரிவிக்கும்.

ஊதுதல், ஓதை, அண்டம்:

கடலில் காற்று " ஊது"வதாலும்,  அலைகளும் "ஊது"தலால் உண்டாவதாலும் ஊது > ஓது என்ற திரிபு பொருத்தமானதே.  ஓதை என்ற சொல்லுக்கும் காற்று என்னும் பொருள் உள்ளது.

இங்குக் குறித்த அண்டமென்னும் சொல்,  விரைப்பை உடலை அண்டி அமைந்திருத்தலால்  அண்டு > அண்டம் என்று வருவதாகும்.  அண்டுதலாவது அடுத்து நிற்றல்.   அடு> அண்டு. இடையில் ஒரு மெல்லெழுத்துத் தோன்றி அமைந்த சொல்.  " அண்டம் .....  அடுக்கடுக்காய் அந்தரத்தில் நிறுத்தும் " என்று தாயுமான அடிகள் பாடலில் வருகிறது.  ( தாயுமானவர், மண்டலம் 1)

 அண்டம் என்னும் சொல்லுக்கு முட்டை என்பது உட்படப் பிற பொருள்களும் உள.

"  அண்டமா முனிவரெல்லாம்

அடங்கினார் பெண்டுக்குள்ளே"

என்பது ஒரு நாட்டுப்பாடல் வரி. இதில் அண்டமென்பது பூமியுடன் வானத்தையும் சேர்க்கும் சொல். நாமறியா நாட்டுப்புறத்துப் பாவலர்கள் எவ்வளவு அழகாகத் தம் கவிதைகளை வடிக்கிறார்கள் கண்டீரோ?  அண்டம் பூமி மட்டுமே குறிப்பதுமுண்டு. இடனறிந்து பொருள்கொளல் அறிவார் கடன். முந்திரிக்கொட்டைக்கு  அண்டி என்ற பெயரும் உளது, அது பழத்துக்கு வெளியில் அதனை அண்டி இருப்பதானால்தான்!.

காற்று, வளி,  வாய்வு (பேச்சில் ), வாயு

 

குருதி  ( (அ)ரத்தம் ),  வாயு (காற்று) முதலியவை உடலை அண்டி நிறுவப்பெற்று, அவ்வுடலையே உடலின் திறன் குறைந்தக்கால் நோயுறுத்துவன.  ஆகையால், கல்லண்டம், குடலண்டம் என்று நம் தமிழ்மருத்துவம் கூறும். வளிமுதலாய் எண்ணிய மூன்றும் மிகினும் குறையினும் நோய்செய்யு மென்றார் நாயனார். பல  வலி இழுப்பு முதலிய ஆக்கி உடலின் குறித்த இடங்களில் தொல்லை தருவதால், மற்றும் மூச்சு முதலியவற்றால் உயிரையும் வயப்படுத்துவதால்,  வயம் > வய > வாயு ஆகும்.  வாய் - இடம் என்றும் பொருள். எவ்விடத்தும் உள்ளிருப்பதால் வாய் > வாயு  எனவும் படும்.  வாய்  இடமெனவே, உ - உள்ளிருப்பது,  வாயு ஆம். உயிர்கள் காற்று உட்கொண்டு வெளிவிடுகின்றன. எங்கிருப்பதும் காற்று. வாய் +உ  ஆகும். இவ்வாறு பலபிறப்பி ஆவது இக்காற்றுச் சொல்.. வாழ்வு வாய்க்கப்பெற்றோம் காற்றினால் ஆதலின் வாய்த்தல் > வாய் > வாயு எனினுமாம்.  வாய்வு என்ற பேச்சுவழக்குச் சொல்லில் இன்றளவும் இச்சொல்லில் பகுதி நிலைத்துள்ளமை காண்க.  வாய்த்தல் > வாய்வு.   வாய்வு காலைக் குத்துகிறது, தோளில் குத்துகிறது என்பர்.

உ ஒ திரிபு

உடனென்ற சொல் (உருபும் ஆம்),  உடு என்பதுடன் அன் விகுதி பெற்றது.  உடனென்பதை வேறு சொற்களால் சொல்வதாயின்,  உடு- கூடவே,  அன் - அங்கு என்று கூறி விளக்கலாம். ஒடு எனபது அப்பொருளதே.  உ - ஒ உறவை அறிந்துகொள்க.  ஒடு > ஒடுங்கு ( வினை). ஒடுங்கி நிற்பது ஒருங்கு செல்லுமாகலின்,  ஒடு > ஒரு.   மடி - மரி  திரிபு கவனிக்க.

ஊங்கு என்ற சொல் மிஞ்சிவருதல், கூடுதல் குறிக்கும்.  "அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை" என்ற சொற்றொடர் அறிக.  ஊங்கு  ( மிகுதல்) - ஓங்குதல் மிகுதலே.   ஊங்கு - ஓங்கு.

உடனே என்பதை ஒடனே என்பது பேச்சில்.

 ஊ - ஓ திரிபு அறிக. 

 

தட்டச்சு மெய்ப்பு  பின்.

சனி, 12 செப்டம்பர், 2020

அருணாசலம் என்பது

 இனி, இன்னொரு சொல்லைக் கண்டு தெளிவோம். இச்சொல் அருணாசலம் என்பதாகும்.

இதைச் சொல்லத் தொடங்குமுன் ஆசலம் என்ற சொல்லைப்பற்றி சில கூறல் நலம்  ஆகும். 

இடச்செலவு நிகழ்த்துவோற்குக் கடினம் தந்து ஆதரவாய் நில்லாதது என்ற பொருளிலேதான் " ஆசலம்"  என்ற சொல் உருப்பெறுகிறது. ஆசு+ அல் + அம். ஆசு எனற்பாலது பற்றுக்கோடாக நிற்பது என்று பொருள்தரும்.  "ஆசிடையிட்ட எதுகை" என்ற யாப்பியற் குறியீட்டில் ஆசு என்ற சொல் நன்றாக வந்துள்ளது.

நாள் என்ற சொல் ஆங்கிலமொழியிற்போல பகல்நேரம் என்ற பொருளும் உடையது ஆகும்.  இச்சொல் " நாளங்காடி" என்ற சொற்றொடரில் வந்துள்ளது,

இமயம் போன்ற மலைப்பகுதிகளில் நாள் அல்லது பகல் நேரம் என்பது மிக்க அருமை உடையது ஆகும். கடுங்குளிர் சற்றுக் குறைவுறும். ஆகவே அருநாள் என்பதன் பொருள் அறிந்துகொள்ள எளிதானதே.  அருநாள் என்பது அருநா என்று குறையும். அருநா + ஆசலம் என்பது  அருணாசலம் ஆகிறது. இதன்பொருள் மிக்கத் தெளிவாகவே உள்ளது.

அருணாசலம் என்பதன் ஏனைப் பொருண்மை முன் விளக்கம் கண்டுள்ளன. அவற்றையும் அறிந்துகொள்க.

உங்கள் மேல் வாசிப்புக்கு: ( உசாத்துணைக்கு)

ஆசலம் என்பது:   https://sivamaalaa.blogspot.com/2017/01/blog-post_65.html .

கடத்தற்கு அரியவையும் கடுமையானவையும் https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_2.html

அருணன் அருணாசலம் அருணோதயம்  https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_27.html

 

 குறிப்புகள்.

[ஒருசொல்லை ஒரே பொருளில்தான் கையாள வேண்டுமென்பதில்லை. சொல்லுக்கும் சொற்றொடருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளிருக்கலாம். இதை உணர்ந்தோர் பலர் எனினும், யாம் பெரிதும் போற்றுவது வழக்கறிஞர்களைத் தாம். எடுத்துக்காட்டாக, சிங்கை வழக்கறிஞர் திரு டேவிட் மார்ஷல் அவர்கள். Trafficking in drug is not the same as "possession of the drug  for the purpose of trafficking " என்பதை விரித்து வாதிட்டு, மரண தண்டனையிலிருந்து குற்றவாளியைக் காப்பாற்றியவர். மேலும் ejuisdem generis என்ற இலத்தீன் சொற்பொருள் விளக்க நெறியைத் தம் வழக்குரையில் பயன்படுத்தி வெற்றிபெற்றவர். அண்மையில் ஒரு தாளிகைக் கட்டுரையின்மேல் நடந்த விவாதத்தில் line of actual control என்பது தற்போது யார் எவ்விடத்தில் குறித்த காலத்து ஆள்கின்றாரோ  அவ்விடம் (அந்த நிலம்) அவர்வயம்  இருக்கிறது என்று  பொருள் என்பதை எடுத்துச்சொல்ல நேர்ந்தது. இலக்கியத்தில் மட்டுமின்றி வாழ்வின் எப்பகுதியிலும் எந்நிலையிலும் பொருள்விளக்கம் என்பது முன்னிற்கும் ஒரு தேவையாய் உள்ளது.

இதை எதற்காக இங்கு சொல்கிறோம் என்றால், யாம் முன்னொரு முறை சொல்லாமல் விட்ட பொருள், ஆங்கு இல்லை என்பதாகாது என்பதற்கே ஆகும்.

சுருக்கம் கருதியும் சில பொருண்மைகள் விடுபாடு கண்டிருக்கலாம். அது ஏன் விடுபட்டது என்பது யாம் வெளியிடாத ஒன்றே ஆகும்.]


மெய்ப்பு:  பின்னர்