செவ்வாய், 24 டிசம்பர், 2019

எழுந்திரு > எழுந்திரி மற்றும் இரு இரி திரிபுகள்

எழு என்பது அழகான செந்தமிழ்ச் சொல். இதிலிருந்து எழும்பு என்ற வினைச்சொல் பிறந்தது.  ஒரு வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல் தோன்றியுள்ளது இதிலிருந்து அறியலாம்.  பு என்ற விகுதியும் வினைச்சொல்லாக்கத்திற்கு உதவுவதை இது தெளிவிக்கிறது .  எழும்பு என்பது சில தமிழ்க்குடிகளிடை "ஒழும்பு"  என்று வழங்குகிறது.  எகர ஒகரத் திரிபு முன்  அறியப்பட்டதே எனினும்  எழும்பு என்பதே பெரிதும் தமிழ்ப் பேச்சினரிடையே பெருவரவினதாகும்.

இந்தப் பாடல் வரியைப் பாருங்கள்:

"அலைகடல் சேரும் வான்போல எழும்பும்
நாமே பார்மேல் ஈடிலா காதலர்"

என்பது காண்ணதாசன் சொல்லழகு. (  எதுகை மோனை அழகை விடுத்துக் கருத்தழகு ஒன்றையே கொண்டு இவ்வரி செல்கிறது.  எழும்பு என்ற சொல் இங்கு கவின் சேர்க்கிறது.  மண்டி என்ற சொல்லைப் பாரதி பயன்படுத்திய பாங்கு போன்றது இது. " ( .......வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.....)."

படுக்கையிலிருந்து எழுவதையும் எழும்பு என்பர்.  பு விகுதி இன்றி எழு என்று மட்டுமே இதைக் குறிக்கலாம்.  எ-டு:  எழு - விழி - நட"  என்ற தொடர் காண்க. ( "விழி - எழு - நட"  என்பதுமது.

எழு என்பதிலிருந்து எழுந்திரு என்ற கூட்டுச்சொல் அமைந்து,  அது பின் எழுந்திரி என்று மாறிவிட்டதுடன், மேலும் எந்திரி என்றும் திரிந்தது.  இங்கு திரிபுகள்:  இரு என்ற ஈற்றுச்சொல் இரி என்று மாறியது.  அஃதேயன்றி  ழுகரம் மறைந்து இடைக்குறையுமானது. எழுத்துத் தமிழை நோக்கப் பேச்சில் வரும் திரிபுகள் மிகுதியே ஆகும்.

ழுகரம் மறைந்து மேலும் திரிபுகளால் தாக்குண்ட இன்னொரு சொல்லை இங்குக் காண்பதும் விளக்கத்திற்கு உதவும்.

ஒரு வாதத்தில் ஒருவன் சரிவு அடையுமாறு இழுத்தல் சர்ச்சை ஆகும். இது சரி ( சரிவு ),  இழு ( இழுத்தல் ), விகுதி ( சை ) முதலியன வந்த சொல்லாக்கம்.

சரி + இழு + சை >  சரி + இ + சை > ச(ர் இ) ( இ )  சை > சர்ச்சை.

ரிகரத்தின் ஈற்றில் நின்ற இகரம் வீழ,  சரி என்பது சர் ஆனது.
வருத்தகம் என்பதில் ருகரத்தின் உகரம் வீழ்ந்து வர்--  ஆனது போலுமிது.
(வருத்தகம் >  வர்த்தகம்).  வருத்துதல் > பொருள் வரச் செய்தல். வரு> வருத்து என்பது வரத்து என்று திரிந்து வருந்து - வருத்து என்ற பிறவினையுடன் வேறுபடும்.   எ-டு:  நீர்வரத்து,  போக்குவரத்து.  வரு என்பதே பகுதி.

இழுச்சை என்பதிலும் ழு முன்பே ஒழியப் பின் இகரமும் மறைந்தது.

மனம் இடுதலைக் குறிக்கும் இடுச்சை என்பது இச்சை ஆனது காண்க.  ழு, டு என்பன மறைதல் இயல்பு.

வழுக்கணை என்பது  வக்கணை ஆனதும் காண்க. (  அணைப்பதும் அணைத்து வழுக்கிச் செல்லும் பேச்சு)

வக்கணைப் பேச்சுக் காரி  பெரிய வாய்வீச்சுக் காரி என்பதுண்டு.


இரு என்பது இரி எனச்  சேரலர் பேச்சில் வரும்.

இன்னும் திரி என்று முடியும் பதங்கள் பல உண்டு எனினும் இத்துடன் முடிப்போம். நீங்கள் ஓய்வு பெற்றபின் தொடரலாம்.

தட்டச்சுப் பிழைகள் பின் திருத்தம் பெறும்.

,






வெள்ளி, 20 டிசம்பர், 2019

பல்வேறு சொற்புனைவுகள். இவற்றுள் "இரு(2)" எப்படி வந்தது?

இருக்கிறான் இருந்தாள் முதலிய முற்றுக்களில் முன்நிற்கும் இரு என்னும் வினை இன்று இடம் குறிக்கும் உருபாகவும்  இல்லம் குறிக்கும் சொல்லாகவும் உள்ள "இல்" என்பதினின்று வந்தது என்பதே முடிபு  ஆகும்.

இல் >  இரு.  (வினைச்சொல் : இருத்தல்).

இடமென்ற சொல்லும் இடு என்பது மிகுந்தானதே  ஆகும்.   இடு + அம் = இடம் என்பதறிக.  இஃது அம் என்னும் விகுதியேயன்றி ஐ என்னும் விகுதியும்  (<மிகுதியும்) பெறும். இடு + ஐ = இடை. அப்போது  இரு இடங்கட்கு இடைப்பட்டது -  நடுவிலது -  என்றொரு சிறப்புப் பொருளையும் உணர்த்தவல்லது. தமிழின் ஏனை  இனமொழிகளில் (திராவிட மொழிகளில் ) இஃது இடம் என்றே பொதுப்பொருள் கொண்டிலங்கு மென்பதும்  அறிக.

இடைபடுதல் ("மூக்கை நுழைத்தல்" என்பது அணியியல் வழக்கு) என்ற வினைச்சொல்லும் உளது.  இடைப்படுதல் என்பது இடையே  வந்திருத்தல் என்பதுபோல் பேச்சில் வருதல் அறியலாம்.

இடு > இரு என்பவற்றின் அணுக்கமும் உணர்க. மடி > மரி என்பது  போலவே இத்திரிபுமாம்.

ஒன்றினோடு இன்னொன்று (வந்து) இருக்குமாயின் அது ஒன்றிற்கு அடுத்த
"  இரு "  அல்லது இரண்டு ஆகும்.  இருத்தல் என்ற வினையடியாகவே இரண்டிற்கும் எண்ணுப்பெயர் வந்துள்ளது காணலாம். ஒன்றை அண்டி இருப்பதே இரு+ அண்டு =  இரண்டு ஆகும்.  அண்டி இரு ( ஒன்றை அண்டி இரு) என்பது முறைமாற்றிச் சொல் அமைந்துள்ளது.  இவ்வாறு  சொல் அமைத்தல் பிற்காலத்தில் பல சொற்களில் பின்பற்றப்பட்டுள்ள முறையாகும்.  தொல்காப்பியனார் காலத்திலே " தாரம் தப்புதல்"  ( மனைவியை இழத்தல் ) என்பது " தப்பு + தாரம் "  > தபுதாரம் என்று குறிக்கப்பட்டது.  ( தப்பு > தபு  என்பது தொகுத்தல் அல்லது இடைக்குறை).   அவிழ்க்கும் இரு கைகளை உடைய பெண்டிரின் சட்டை,  இரு+ அவிழ் + கை >  இரவிக்கை ( ழகர ஒற்று இடைக்குறை)  ஆனது காண்க.  நிறுவாகத்தைக் காக்கும் இல்லமானது  :  கா + இல் >  இல்+ (ஆ) + கா = இலாகா ஆனது திறமையே. பலராலும் உணர்ந்திட முடியாத மறைவுப்புனைவு ஆகுமிது.  { இல்லம் ஆகும் காப்பதற்கு > இல்  ஆ கா}

ஆசு பட இருக்குமிடம்  :   இரு+ ஆசு + இ = இராசி.   இதுவும் முறைமாற்றுப் புனைவே. கிரகம் -  கிருகம் என்பது  இரு+ அகம் >  இரகம் > கிரகம் அன்றி வேறில்லை.  இரகம் என்பது சிரகம் என்று மாறிப் பின் சி என்பது  "கி" ஆகி,     கிரகமானது என்று விளக்கினும் அதுவே.  இராசிநாதன் இருக்கும் இடமே இரு அகம் > கிரு அகம் > கிரகம்.  (  இறகு > சிறகு ).(சேரல் > கேரளம்)

ஆசி என்பது நன்மை நடக்குமாறு  பற்றுக்கோட்டினை வழங்குவதே.  ஆசீர்  என்பது சீராகுக என்பதன் முறைமாற்றுப் புனைவு.  இதன் ரகர ஒற்று மறைந்து ஆசி ஆனது.  ஒரு  முண்டு ( துண்டு, துண்டுத்துணி)  தலையினை ஆசுபடப் பற்றி நிற்க,  அது முண்டாசு ஆகும்.  ஆசீர்வாதம் என்பதில் வாதம் என்பது வாதநோயைக்  குறிக்காது.  வருக தமக்கு ஆகும் சீர் என்பது வாக்கியம். இது  ஆ + சீர் + வா + தம் ஆனது.  வா = வருக; தம் = தமக்கு;  ஆ  =  ஆகும் ;  சீர் = நன்மை.

ஆகும் சீர் :  ஆசீர்,  இது ஆகு + ஊழ் =  ஆகூழ் என்ற பழம்புனைவு போன்றது.  ஆகுபெயர் என்பது இலக்கணக் குறியீடு.

வட்டமாகவோ நான்மூலையாகவோ மாவால் உருச் செய்து அதை சுடுகல்லில் ஒட்டி எடுப்பது:  உரு+ ஒட்டி =  உரொட்டி >  ரொட்டி. இது வேறுவழியிலும் விளக்குறலாம் ஆகையால் இருபிறப்பி ஆகும்.  வகர உடம்படு மெய் சொல்புனைவில் வேண்டியதில்லை.  சொல்லுருவில் துய்யது உரு+து மொழி,  அரபு கலந்தமையின். து விகுதி எனினும் ஒக்கும். படைவீடுகளில் பேசப்பட்டது என்பது கதை.  தெற்குக் கணத்தில் வழங்கிய மொழி தெற்காணம் = தெக்காணம், > தக்காணம் > தக்காணி.

பல்வேறு சொல்லாக்க முறைகளை அறிந்தோம்.

எழுத்துப் பிசகுகள் பின் திருத்தம்பெறும்

செவ்வாய், 17 டிசம்பர், 2019

இலத்தீனில் தமிழ்ச்சொற்கள்

வாழ், வாழ்வு  என்ற சொல்லுடன் விவோஸ்  (வைவோஸ்)  என்ற இலத்தீன் மொழிச்சொல்லுக்கு உள்ள தொடர்பு முன்பு   ஈங்கு விளக்கப்பட்டது உண்டு.

இலத்தீனில் பல தமிழ்ச் சொற்கள் உள. எவ்வாறு தமிழ் இலத்தீனில் புகுந்தது என்பதை ஆய்வாளர்கள் கூறக்கேட்டுணர்க.

அதுபற்றியும் முன் யாம் எழுதியதுண்டு.

இப்போது இன்னொரு  சொல்லை அறிந்துகொள்வோம்.

விழி என்ற சொல்லும் விஸுஸ்  என்று இலத்தீனில் வரும்.

பாழை என்பது பாடை என்றும் திரிதற்கொப்ப விஸுஸ் என்பது விடரே என்றும் திரியும்.  இதிலிருந்துதான் விடியோ என்ற சொல் ( காணொளியைக் குறிப்பது)  வந்துள்ளது.  ஆதலால் தமிழ் "விழி"  (காண் - காணுதல்)  என்பதே வீடியோ என்ற புதுமைப்பொருளுக்குப் பெயரிட வழி செய்துள்ளது என்பதை அறிதலும் மகிழ்வுறுத்துவதே ஆகும்.

வாய் என்ற தமிழ்ச்சொல் வழி என்றும் பொருள்தரும். இது "வயா" என்று இலத்தீனில் புகுந்து பொருள்மாறாது அந்த வழியையே குறிக்கும்.

வேளாண்மை விளைச்சலில் தொடர்புடையோரே காராளர்.  காக்கும்கை காராளர் கை என்று ஒரு பழைய வெண்பா முடியும்.  இந்தக் கரு   (கார்)  என்ற பகுதி கிரிஷி என்ற சொல்லினுள் உள்ளது.  திடல் என்றோ வயல் என்றோ பொருளறியப்படும்  எகர் என்பதிலிருந்து "ஆக்ரிகல்சர்" என்ற சொல் பிறந்ததாய்க் கொள்ளப்படினும்  ஆக்ரி (agri) என்பதில் ஆ என்பதை விலக்க, மீதமுள்ள கிரி  (-gri)  என்பது கிரிஷி என்ற சொல்லில் இருப்பது காணலாம். தமிழிலும் ஆ-  என்பது  ஆகாயம் என்பதில் முன்னொட்டாய் ( prefix )உள்ளது. மூலச்சொல்  காயம் என்பதே.  சூரியன் நிலவு முதலிய காயும் இடம்.   ஆ என்ற முன்னொட்டு  ஆதல் குறிப்பது.  ஆ என்பது வினைத்தொகையிலும் வரும். எடுத்துக்காட்டு:  ஆபயன்.  ( பயனுடையது ஆவது).  (  ஆ என்பதை  மாடு என்று பொருள்கொண்டு,  ஆபயன் எனில் பால், தயிர் வெண்ணெய் என்று  கொண்டாரும் உளர்.

ஆகிரி(agri) என்பதில் ஆ முன்னொட்டு என,  கிரி என்பது வேளாண்மைப் பொருளதாகிறது.

அறிவீர் மகிழ்வீர்.


எழுத்துப்பிழைகள் பின் திருத்தம்பெறும்.