வியாழன், 7 பிப்ரவரி, 2019

விசாரணை சொல்

விசாரணை என்ற சொல்லை இன்று சிந்திப்போம்.

ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு  விசாரணை செய்தலை "கைந்நாற்காலி விசாரணை"  ( armchair investigation  )   என்று சொல்வதுண்டு.  விசாரணை என்றால் விசாரிப்போன் அல்லது விசாரிப்போர் விரிந்து சொல்லுதல் வேண்டும். பரவலாகச் சென்று பல இடங்களிலும் கேட்டறியவேண்டும்.  இது விசாரணை என்ற சொல்லின்  மூலமாக நாமறிவதாகும்.  இன்று அலுவலகங்கள் கொள்ளும் பொருள்:  சான்றுகளைத் தேடிப் பிடித்துப் பதிவிடுதல் என்பதாகும்.  இந்தப் பொருள் சொல்லமைப்பில் இல்லை.  வழக்கில் உணர்ந்துகொள்ளப்படுவதாம்.

விரி > விய > வியா > விசா.

விர் > விரி  ஆதலின்,  விர் > விய் என்பதுணுர்க. பண்டைக் காலத்தில் விற்பனை செய்தோர் பொருளைத் தொலைவில் கொண்டு சென்று பரவச் செய்து அதற்கு மாற்றுப் பண்டங்களைப் பெற்றதனால்  விய் என்பது பரவற் கருத்துடன் தொடர்புற்றதே.  வில் என்பது எழுத்தளவில் உள்ள அடிச்சொல் என்றாலும் விய் என்பதே இன்னும் பேச்சில் உள்ளது. " காசுக்கு விய்யி" என்று பேசுவதைக் கேட்டிருப்பீர்.   விய் என்ற அடிச்சொல்லை அகர ஆதிகள் தனியாகப் பதிந்து பாதுகாக்கவில்லை என்றாலும் அது பல சொற்களில் அடியாகவே உள்ளது.

விர்> வில்:  ரகர லகரப் போலித் திரிபு.
விர் > விய் என்பது சொல்லியலில் இயல்பான திரிபு..

எழுதி வைக்காமல் போனது பேச்சில் வாழக்கூடும்.  அதை ஒதுக்குவது மடமை.  ஒதுக்கி  வைத்தாலும் சொல்லாய்வில் அது மீட்டுருவாக்கம் பெறும்.

வியன் என்பது தமிழில் விரிவு என்று பொருள்படுவது.

விரிநீர் வியனுலகு.

கடலால் சூழப்பட்ட விரிந்த உலகம்.

வியத்தல்  :  விய.   ஒரு காணாத பொருளைக் கண்டவுடன் கண்ணிமைகள் விரிந்துவிடுகின்றன.  மனமும் விரிவு கொள்கிறது.  அதனால் வியத்தல் என்பதோர் அருமையான சொல்லாகும்.

விய(ப்பு) > வியப்பித்தல் :  அதிசயிக்கும்படி செய்தல்.

வியப்பு என்பது மனத்துள் விரிவுகாண்பதைக் குறிக்கிறது.

பி என்பது பிறவினை விகுதியாகும்.

ஒருவனை வேலை ஏவுகையில் குரல்  ஒலி விரிந்து சென்று  அவனை எட்டுகிறது.

வியம்  >  வியங்கோள்.    அழைத்தல்.

வியம் > வியமம் :  துக்கம் ( நிகழ்வு கேட்டு  அதனால் துயர் பரவுகிறது ).  பொறாமை:  பொறாமையும் இவ்வாறு பரவலாகக் கூடியது.  பாராட்டு:  ஒருவர் இன்னொருவரைப் பாராட்டுவதும் இவ்வாறு பரவத் தக்கது.

வியர்வை என்பதும் பரவலாக உடலில் வெளிப்படும் தணிப்பு நீர்.

வியல் =  அகலம்.

விரிந்து செல்வது சிலவேளைகளில் வேறுபடும். ஆகையால் :

விய > வியவு:  வேறுபாடு.

விய > விய + ஆய + அம் =  வியாயம் >வியாசம்.  விரிந்து வரையப்படும் கட்டுரை.

விய + ஆக்கிய +  ஆன + அம் =  வியாக்கியானம் :  விரித்துரை.  அதாவது விரிவாக்கி ஆனது.    இச்சொல்லில் ஆக்குதல் என்ற வினையின் எச்சம் இருமுறை வந்து சொல் நீண்டது.


இன்னும் பல.

இப்போது விசாரணைக்கு வருவோம்.

விய > விச + ஆர் + அணை =  விசாரணை.  ( விரிந்து சென்றறிதல் ).

"விரிந்தறிதல் "   அல்லது  "விரிந்தெடை " என்றொரு சொல்லைப் படைக்கலாம்.  எடு ஐ =  எடை .எது நன்று என்பது நீங்கள்  கூற வேண்டும்.

 (விர் )  > (விய்).

பிழைகள் புகின்  திருத்தம் பின்.
Reviewed : 12.2.2019

புதன், 6 பிப்ரவரி, 2019

சுவையான தகவல்கள். சிங்கப்பூரில் முதல் தமிழ்ப் பள்ளி. இன்னும் பல

சிங்கப்பூரில் முதல் தமிழ்ப் பள்ளி:

1834ம்  ஆண்டு சிங்கப்பூரில் முதன்முதலாகத் தமிழ் வகுப்பு  சிங்கப்பூர் ஃபிரீ ஸ்கூல் எனப்பட்ட  சிங்கை இலவசப் பள்ளியில் துவங்கப்பட்டதென்று கூறுவர்.  இதை ஆராய்ந்து கண்டுபிடித்த தமிழன்பர் யாரென்று தெரியாவிட்டாலும் அவர்க்கு நாம் நன்றி சொல்வோம்.


பாரதியார் பலகலைக் கழகப் பேராசிரியர் பதவி -  ரூ. 30  இலக்கம்.

இப்படிக் காசு கைமாறியதாக ஒரு புகார் உள்ளது.  ஆனால் காவல்துறை விசாரணையில்  இது தொங்கிக்கொண்டு இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாசு தெரிவித்திருந்தார்.  மற்ற விவரங்கள் தெரியவில்லை.
30 இலக்கம் (  லட்சம் ) தானே!.  பேசாமல் கொடுத்துவிட்டு  அப்  பதவியில் அமர்ந்துவிடலாம் என்று மற்றவர்களிடையிலும் பேச்சு அடிபடுகிறதாம்.

உயரமான கொடிக்கம்பம்:

இந்தியாவிலே மிக்க உயரமான கொடிக்கம்பம்  தி.மு.க வுக்குத் தான் உள்ளதாம். இதன் உயரம் 144 அடியாகும்.   இது அண்ணா அறிவாலயம் என்ற தலைமை நிலையத்தில் உள்ளது.  கொடியை மேலே ஏற்றுவதற்கு ஒரு  மின்பொறி  உள்ளது.  கொடிக்கம்பம் நாட்டிய தேதி:  16.12.2018.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

நெய்யும் நேசமும் நட்பும் நடுப்பகுதியும். பொருந்துமா?

நெய்யிலிருந்து பல பலகாரங்களைச் செய்ய அறிந்துள்ளோம்.  நெய்யிலிருந்து என்றால் அதில் தொடங்கி,  அடுத்து மாவைப் போட்டு, அடுத்து உப்பை இட்டு, அடுத்து இனிப்பினை இட்டு........ ஆகவே இருந்து என்ற சொல் தொடக்கத்தையே காட்டும்.  இருந்து என்பது அசைவற்று வைகிய நிலை; அசைவு தொடங்கியவுடன்  வரை என்பது எல்லை அல்லது முடிவு ஆகும்.

நேசம் என்றும் திரிந்துலவும் நேயம் என்பது, மிக்க அருமையாக அமைந்த சொல்.  நெய் + அம்  =  நேயம் ஆகும். இங்கு முதனிலை என்னும் முதலெழுத்து  நெடிலாகி நீண்டது  ஆதலின் முதனிலை திரிந்த பெயராகும். இப்பொழுது நெய் என்பது வினைச்சொல்லாகவும் இன்றளவும் உள்ளது.   துணி நெய்கிறார்கள் என்`கிற  வழக்கை நோக்கி இதை உணரலாம்.  நெயவில் நூல்கள்  நெருங்கிப் பிணைந்து பின்னித்தான் துணி  அமைகிறது. இதுவும் நேயம் என்ற சொல்லின் தன்மையை நன்`கு உணர்த்துவதாகும்.பிற்காலத்தில்  நேயம் என்ற சொல் நேகம் என்று திரிபுண்டு ஒரு ஸகர முன்னொட்டைப் பெற்று ஸ்னேகம் அல்லது ஸ்நேகம் என்று மாப்பூசி மயக்கிற்று.   காலத்தால் பிந்திய சொல் இதுவாகும்.  மசாலையை நல்லபடியாக நேகாக அரைக்கவேண்டும் என்று அம்மா பணிப்பெண்ணிடம் சொல்வார்.   நேகாக அரைத்தால் பிணைப்பு அதில் கூடுதல் ஆகிறது. நக்கரை புக்கரையாக அரைத்தால் துகள்கள் பெரியனவாய்ப் பிணைப்புக் குறைந்து காணப்படுமென்பர்.  நேகு > நேகம் >ஸ்நேகம் எனினும் அதுவாம்.

நீரும் மண்ணும் நெருங்கிய நிலப்பகுதியே நெய்தல்.  வெம்மையும் குளிரும் ஒன்றை ஒன்று தொட்டு நிற்கும் நிலப்பகுதியே நெய்தல். மக்களும் நெருக்கமாக வாழுமிடம் நெய்தல். கடல் பல செல்வங்களும் தருவது:  அவை கடல் பஃறாரம்  என்ப.   கடல் பலவும் தருவது என்று பொருள்தரும்.

நெய்தல் என்பதில் தல் ஒரு விகுதி;  அது பெரிதும் தொழிற்பெயர் விகுதியாய் வரக் காணலாம்.

பஃது என்பது  பத்து  ஆகும்.   பல்+ து =  பத்து அல்லது பஃது.  அகர முதலாய் 0னகர இறுவாய் முப்பஃது என்ப என்ற தொல்காப்பியத் தொடரை உன்னுக.

இரண்டு மாடுகளை ஒரு கயிற்றினால் கட்டி  இரண்டும் இருபக்கமாக இழுத்துக்கொண்டு போனால்  அவை பிரிந்து நிற்பவை என்பது சொல்ல வேண்டியதில்லை.  இரண்டும் நடுப்பகுதிக்கு வந்து ஒன்றாக நின்றால் நட்பு டையவை ஆகின்றன.

நள் >  நடு.

நள்ளிரவு;  நடு இரவு,   நள்ளாறு -  நடு ஆறு -  நட்டாறு.

இதுபோலும் அமைப்பு:   கள் -  கடு;  பள் - படு;  சுள் - சுடு என்று மொழியெங்கணும் பரந்துபட்டுள்ளன.

நடு >  நட்டல்  இது நடு+  அல்.   நாடாது நட்டலிற் கேடில்லை. நட்டபின் வீடில்லை.  ( வீட்டுக்கு வராமல் சுற்றித் திரிவான் என்பதன்று;  விட்டு விலகலாகது என்பது.)

நள் + பு  =  நட்பு.

நள் என்பதும் நெருக்கமுணர்த்து பதமே.  பொருள் பதிவு பெற்றதே  பதி + அம் = பதம்.  நன் கு வார்க்கப்பட்டதே வார்த்தை.    இனி வாய்த்தை > வார்த்தை.  எனினும் அதுவே.  இரு உதடுகள் நெருக்கமுற்றதே  வாய்.  பொருள் வருவிக்கப் படுவதே வார்த்தை.  வரு > வார்.  வருவான் -  வாரான்  என்பவற்றில் வரு என்பது வார் எனத் திரிதலுணர்க.  சொல்லின் ஒலி மட்டுமே உண்டு;  பொருளானது ஊட்டப்படுகிறது.  பொருள் அருத்தப்படுகிறது:  அருந்து > அருத்து என்பது பிறவினை.   அர் என்பது அரவம் என்று ஒலியுமாம்.
 இப் பிரிசெலவு நிற்க.

சந்திப்போம்.

நிலைப்பிசகுகளும் வருபிழைகளும் திருத்தம் பின்

ஒவ்வொரு முறையும் மீளேற்றுகையில் செலவு கூடும்.