சனி, 23 டிசம்பர், 2017

சொல்லிறுதி இடையின ஒற்றுக்கள்



இறுதி இடையின எழுத்துக்கள் வீழ்ச்சி;

 இடையின எழுத்துக்கள் ய ர ல (வ)% ழ ள.

இவ்வெழுத்துக்கள் வகர ழகர ஒற்றுக்கள் நீங்கலாக சொல்லின் இறுதியில் ஒற்றெழுத்துக்களாய் வருங்கால், அவை கெடும் ( அதாவது விடப்படும் ).  இது பெரும்பாலும் பேச்சிலே நிகழும். எழுத்திலும் வந்து சொற்கள் திரியும்.

1.கொய்யாக்காய் > கொய்யாக்கா.
இதில் யகர ஒற்று (ய்) ஒழிந்தது.
நாய் - நே;  பாய் - பே;  தாய் -  தே என்றும் ஒருமாதிரியாய் இழுத்துப் பேசுவோருமுண்டு.
எண்ணெய் > எண்ணெ;  பண்ணை > பண்ணெ;
ஐ என்பது அய் போலும் யகர ஒற்றிழந்து  எகரமாகும்.

2. தண்ணீர் > தண்ணி.
இதில் ரகர ஒற்று ( ர்)  ஒழிந்தது.

3,  பந்தல் > பந்த.  செய்தால் >  செய்தா.
இங்கு லகர ஒற்று வீழ்ந்த்து.

4. அவள் >  அவ;    அவ்வாள் > அவா.

5. இனி ழகர ஒற்று:  இது சொல்லிடை வீழும்.
   வாழ்க்கைப்படு > வாக்கப்படு.
   வாழ்த்தியம் > வாத்தியம்.
சூழ்து >  சூது. ( நன்`கு ஆலோசித்து விளையாடுவது ).  சூழ்தல் - ஆலோசித்தல்.
    ழகர ஒற்றுக்கு ஒரு ரகரம் தோன்றும்:
     அவிழ் > அவுர். 

6, வகர% ஒற்று சொல்லிறுதியில் வருவதில்லை. சொல்லிறுதிக்கு இரட்டித்து ஒரு உகரச் சாரியை போலும் வந்து முடியும். இதை சொல்லாக்க விகுதி எனலாம்.
கவ் ( )  >  கவ்வு.   வு : விகுதி.

 கவ் என்பது சொல்லாகக் கருதப்படுவதில்லை.
 

கவ் > கவ. கவ் >  கவிழ்  கவ் > கவர். ஆகவே கவ் என்பதைப் பிறைக்கோட்டுக்குள் இட்டுக் காட்டலாம்.  (கவ் )>

சீனமொழியில் இது கா என்று நீளும்.

அறிந்து மகிழ்வீர்.
 

வெள்ளி, 22 டிசம்பர், 2017

காஒசிகன் கௌசிகன் (முனிவர் பெயர்)


காட்டில் தவமியற்றி அரிச்சந்திரனையும் எதிர்கொண்டவர் விசுவாமித்திரர். விசுவாமித்திரர் என்பது காரணப்பெயர்.  விசுவம் = உலகம்; மித்திர எனில் நண்பர். ஆக, உலகநண்பன் இந்த முனி.

இவருக்கு இன்னொரு  பெயரும் உளது. அது கௌசிக முனி என்பர்.
கௌசிகமுனி காட்டில் தவமியற்றி வருந்தியவர். அரிச்சந்திரன் வேறு வந்து தொல்லைதந்து அவர்தம் வருத்தத்தை மிகுத்துவிட்டான். இப்போது இந்தக் கதையை ஒட்டிக் கௌசிக என்ற பெயரைத் தமிழைக் கொண்டு ஆராய்வோம்.

கா = காடு.
ஒசி(தல்) = வருந்து(தல்.)
கு = இடைச் சொல். வேற்றுமை உருபாகவும் வரும். கு என்பதன் பொருள் சென்றுசேர்தல்.
அன் -   ஆண்பால் விகுதி.  இது பிறமொழிகளில் அ~ என்று குறுகும்.
காஒசிக(ன்)  என்பது காவுசிக என்று வரும் : இது மேலும் குறுகி கௌசிக ஆகும்.

பொருள்: காட்டில் வருந்தியோன்.

அரிச்சந்திரன் வருத்தமூட்டினான். காட்டுச் சூழ்நிலைகளும் வருத்தமூட்டுபவை.

தமிழ்ச்சொற்களின் பொருளால் கதை பிறந்ததா அல்லது கதையின் காரணமாகச் சொல் அமைந்ததா என்பது ஆய்வுக்குரியது.

ஏனை ஆய்வாளர்கள் குஷ் என்பதனடி கௌசிகன் எனும் பெயர் தோன்றிற்று என்பர்.  ஜான் காரெட் என்னும் ஆய்வாளர் (1871) நடு ஆசியாவிலுள்ள குஷ் என்ற இடப்பெயரிலிருந்து பெயர் அமைந்ததாகக் கருதுவார்.
அந்த இடத்துக்கும் கௌசிக முனியின் பெயருக்கும் உள்ள ஒலியொற்றுமையைக் காட்டி, இவர் அங்கிருந்து வந்தவர் என்று கருதுவார்.  வேறு ஆதாரம் யாதுமில்லை. 

ஆரியர் என்பது ஓர் இனப்பெயர் அன்று.

உளைப்பு என்றால் உச்சரிப்பு. உழைப்பு வேறு,

பேச்சொலி என்பதற்கு மற்றொரு நல்ல சொல் உளை
என்பதாகும். சேறு,  அழுகை என்பன பிற அர்த்தங்கள்.
உழை என்பது பாடுபடு என்ற பொருளுடைய சொல்.

அது நீங்களறிந்த சொல் ஆகும்.



இந்த உளை என்ற சொல்லை ஒலிக்கும் பயன்படுத்துவ
தில்லை;  சேற்றுக்கும் இக்காலங்களில் பயன்
படுத்துவதில்லை.

அரிய இனிய தமிழ்ச்சொற்களைத் தமிழன்பர்கள்
கற்றுக்கொண்டு வேண்டியாங்கு அவற்றைப் புழங்கவும்
வேண்டுமென்பது எனது வேணவா ஆகும்.

உளை என்பது அழுகை மற்றும் ஒலி என்று பொருள்
படவும் செய்யும் என்று அறிந்தீர்கள் அல்லவா?

உளை (ஓலி) என்ற சொல்லிலிருந்தே "ஊளை"  என்ற
 சொல்லும் திரிந்தமைகிறது.  ஊளை என்பதும் ஒலியே
ஆயினும் அது நாய்கள் நரிகள் முதலியவற்றின்
நெட்டொலியைக் குறிக்கிறதென்பதை நீங்கள்
அறிவீர்கள். ஒரு நாய் ஊளை யிடுகிறதென்றால்
தன் தனிமையை உணர்த்தவும், பிரிவினைத் துன்பம்
பொறாத்தன்மையாலும் மற்றும் தன் கூட்டத்திற்குத்
தன் இருப்பிடமுணர்த்தவும் நீட்டொலி செய்யு
மென்பதை நீங்கள் அறிந்திருத்தல் கூடும்.
 ஊளையிடும் நாயை வைத்திருப்பது கூடாது என்பது
அவ்வொலி கேட்டு  நரிகளோ பிற விலங்குகளோ
வந்து தாக்கக்கூடும் என்ற பழங்கால அச்சமே ஆகும்.
அதுவும் நீங்கள் காட்டோரத்து
வாழ்நரானால் இதில் கவனம் தேவை. அது நிற்க.

உளை (ஒலி) > ஊளை ( ஒரு குறிப்பிட்ட ஒலி).

தொடர்பையும் குறில் நெடிலாக்கிச் சற்று வேறுபட்ட
பொருளை உணர்த்தும் தமிழ்மொழியின் பாங்கையும்
 ஈண்டு உணர்ந்துகொள்க.

தனக்கு வேண்டிய சொற்களைத் தமிழ் இப்படித்தான் பல
உத்திகளைக் கையாண்டு சொந்தமாகப் படைத்துக்கொண்டது.
கடன்பெற்றது சிறிதே. கடன்பெறாமைக்குக் காரணம் அது
சிறப்பாக வழங்கிய பழங்காலத்தில் அதற்குக் கடன் தரத்தக்க
பெருமொழிகள் அருகிலில்லை என்பதும் ஒரு காரணமாம். சிறு
கிளைமொழிகள் பல இருந்திருத்தல் கூடும்.

இனிப் பேச்சொலி, எழுத்தொலி ( உச்சரிப்பு) என்பதை
உளைப்பொலி என்றும் குறிப்பிடுவேன். மனத்துள் இருத்திடுவீர்.
பலுக்குதல் என்றொரு சொல்லும் உளதென்பது நீங்கள்
அறிந்ததே.