வியாழன், 20 ஏப்ரல், 2017

பன்னீரா ? எடப்பாடியா?

உயரப் பறந்தது தேன்சிட்டு;
உயர்ந்து சென்றது வான்முட்ட!
அயர்ந்தன மற்றப் பறவைகளே.
அரசனும் ஆனேன் நானென்றது.

தமிழகத் தரசோ யாரென்பதை
தாமிகப் பறந்து கூவுமவர்
அமையும் பன்னீர் தெளிப்பவரோ?
அவர்முன் அமர்ந்த பாடியரோ?

இன்னும் சின்னாள் பொறுத்திருந்தால்
எதற்கும் விடையும் கிடைத்துவிடும்.
மன்னர்  இவரென் றறிந்தபடி
மாலை இலைநீர் அருந்திடுவீர்.

இலைநீர் ‍  : கொழுந்து இலைநீர், (தேயிலை நீர்)
















 

அக அத்தி அகத்தியர்

அத்தி மரம்தான் பெரும்பாலும் பாம்புகள் முட்டையிடும் இடமென்று
பாம்புபற்றித் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். இதுபற்றித் தெரிந்தவர்கள்தாம் சொல்லவேண்டும்.

அகத்தியரின் வீட்டுக்கருகிலே ஓர் அத்திமரம் இருந்திருந்ததென்பாரும்
உண்டு. இதற்குத் தனிப்பட்ட ஆதாரம் ஏதுமில்லை.  அகத்தியர் என்ற‌
சொல்லை அடிப்படையாக வைத்தே இது சொல்லப்படுகிறது.

அகத்தியர் உண்மையில் "அக அத்தியர்" என்றனர் இவர்கள். அவர்
வீட்டிற்கருகிலே ஓர் அத்திமரமாம்.

மக்கள் அதை அவ்வீட்டுக்குரிய அத்தி என்ற பொருளில், அக அத்தி
என்றனர்.  அவ்வீட்டில் வாழ்ந்த குள்ளமுனி, அகத்தியர் எனப்பட்டார்.

எதுவும் இருக்கலாம். சில ஆயிரம் ஆண்டுகளின் முன் நடந்ததை
எப்படி அறிவது?  நேற்று நடந்ததற்கே ஆதாரம் கிடைக்காமல்
மனிதர்கள் திண்டாடுகிறார்கள்!   

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

முன்னிலை பெற்ற தொழில்கள்

மனித நாகரிகத்திலே முன்னிலை பெற்ற தொழில்கள் சில. நாம் பேச‌
விழைவது மனிதன் காட்டினனாக வாழ்ந்து, மரங்களின்மேல் குடியிருந்த காலத்தைப் பற்றியது. அப்போது அவன் வேட்டுவனாக இருந்தான். மரத்தில் கிடைத்த்வற்றை உண்டதுடன், விலங்குகளையும் வேட்டையாடித் தின்றுவிட்டு,இரவில் மரங்களில் வீடு அமைத்துக் குடியிருந்தான்.

பலவித இடர்களையும் விட்டுப் போய் வைகுவதனால் அவன் தங்கியது
"வீடு" எனப்பட்டது. குந்த ஓர் இடம் வேண்டாமோ?  மரத்திலவன் வைத்ததே (அமைத்ததே) அவனுக்கு "வை குந்தம்" ஆனது. அவன் பத்திரமாகக்
குந்திக்கொள்ளும்படி வைத்த இடம் : வைகுந்தம். அவன் இடர்களிலிருந்து வீடுபெற அவன் கும்பிட்ட சாமியும் வைகுந்தத்திலேயே இருந்துகொண்டார்.

வேட்டுவ வாழ்வை விட்டு நீங்கி, ஓரிடத்துத் தங்கி, பயிர்த்தொழில்
மேற்கொண்டு  , சில விலங்குகளை வீட்டின் புறத்துக்  கொட்டகையில் இருத்தி வளர்த்துப் பால், தயிர், மோர் முதலிய நுகரத்தொடங்கியது
பிற்காலத்து நாகரிகம் ஆகும்.  இக்காலங்களில் அவனுக்கு, மாடு, ஆடு, நாய் பூனை முதலிய நட்புடையவை ஆயின.


ஆதாரம் ( ஆக்களைத் தருதல்),    ஆதரவு ஆதாயம், முதலிய சொற்கள் அவன் மாடுசார்ந்த ஒரு நாகரிகத்தினன் என்பதை
நன்கு விளக்குவன ஆகும்.  அவன்றன் ஆவுறவை "ஆபோகம்" என்ற‌
சொல் விளக்கும்.  ஒரு மனிதன் போய்த் தேடும் சுகங்கள் "போகம்"
எனப்பட்டது.  அவன் ஆவினோடு கூடி வாழ்ந்த வாழ்வு "ஆபோகம்"
என்று சிறப்புப்பெற்றது.

பண்டமாற்றில் ஆவை விற்க, அது "ஆதாயம்" தந்தது.  ஆ‍ பசு;
தா =  தருதல். தாயம்: தருதல். தா +அம் = தாயம் ‍= தருதல். யகர‌
உடம்படு மெய்,

மனிதன் எத்தனை ஆக்களை உடையவனாய் இருந்தான் என்பதைக் கொண்டு அவன் செல்வனா, அல்லனா என்றபாலது தீர்மானிக்கப்பட்டது.மாடு என்ற தமிழ்ச்சொல்லுக்குச் செல்வம் என்ற‌
பொருள் இன்னும் மாற்றமுறாமல் இருக்கிறது. "மாடல்ல மற்றையவை" என்ற திருக்குறள் தொடரால் இது நன்கு புரியும்.

புதியோனாகக் குடிபுகுந்தோனுக்கும் இடர் அடைந்தோனுக்கும் தந்து
உதவத்தக்கது  ஆக்களே.  இதுவே "ஆதரவு"  ஆனது. ஆவைத் தருவதே ஆதரவு. அவனுக்கு வேண்டிய பால், தயிர் முதலிய தேவைகளை ஆக்களே தந்தன. ஆவின்றித் தரவில்லை.  ஆ தருவதே ஆதாரம்.

நாளடைவில் இச்சொற்களில் ஆவின்பங்கு  மறக்கப்பட்டு,  அவை
பொதுப்பொருளில் வழங்கின. மாடு என்பதே செல்வமானது.

ஏர்த்தொழிலுக்கு உதவியது எருது ஆனது..  எரு‍=  ஏர்.  எரு> எருமை.

எருமை மிகுந்த ஊர் எருமையூர்:>  மையூர் > மைசூர்.  தலைக்குறையும் திரிபும் ஆகும். ய>ச திரிபும் காண்க.  மை = மெய்,  ()உடல்..

இங்ஙனம் ஆ நாகரிகம் சிறந்த இடங்களில் ஏறு தழுவுதல் ஒரு
வீரவிளையாட்டானதும் பொருத்தமே.