சனி, 4 மார்ச், 2017

காருண்யம் கருணை how derived

காருண்யம் ‍ சொல் பின்புலச் சிந்தனைகள்.

இந்தச் சொல் காருண்யம் என்னாமல் காருண்ணியம் என்று எழுதப்படுதல் வேண்டும். அப்படி எழுதினால் சொல்லின் தன்மையும் அதிலடங்கியுள்ள பொருண்மையும் நன்கு புலப்படுவனவாகும்.

கார் என்பது கரு என்பதன் திரிபு. ஒளிக்குறைவு அல்லது ஒளியின்மையைக் குறிக்கும். கருமுகில்களைக் கார்முகில் என்போம்.
கார்மேகம் என்பதுமுண்டு.  இந்தக் கருமையினை உண்பது எது?
அதாவது இருளை விழுங்கி  இல்லாமல் ஆக்குவது ஓளியே அன்றி
வேறில்லை. கருமை இரக்கமின்மையைக் காட்டுமானால் அக் கருமையை உண்டு அதை விலக்கும் ஒளி இரக்கத்தையும் அன்பையும் காட்டுமென்று சிறாரும் கூறிடுவர். அந்த ஒளியாகிய சிவம் அக்கருமையை விலக்க  உண்ட காலை,  அதுவோ அவரை விட்டு
நீங்காமல் அவர் கண்டத்திற் பதிந்துகொண்டது.  உண்மை யாதென்றால்
ஒளியை விட்டு இருளும் முழுமையும் நீங்காமல் . இரண்டும்  ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்துகொண்டுள்ளன .  .  காயம் (ஆகாயம்) கருமை;
அதை விலக்கும் , (விளக்கும்)  ஒளி செம்மை. இரண்டும் விடாமல்
மாறி   மாறி வரும்.

கருமையை (கார்) உண்ட நிலையிலே,  கார் என்ற கொடுமை நீங்கிய‌
நிலையிலே, இரக்கமும் அன்பும் தோன்றுகின்றன. இவையே மொத்தமாகக் கார் உண்ணு இயம் ( காருண்ணியம் ) என்னும் ஒன்றாகிறது. கருணை என்பதும் கரு+ உண் + ஐ = ஆகிறது. கரு என்பது
கண் என்றும் திரியும். கருண் (கரு+உண்) என்பதும் கண் ஆகும்.

கரிய உள்ளத்துத் தோன்றும் இரக்கமின்மையை உண்டு ஒளியை வெளிப்படுத்துவதே கருணை, காருண்ணியம் எனப்பட்டன.

இவை  இந்தோ ஐரோப்பியச் சொற்கள் அல்ல.


இடைநின்ற யகர ஒற்று மறைதல்.

இடையில் உள்ள ஒற்றுக்கள்  மறைந்து சொற்கள் அமைவதென்பது
தமிழில் பெருவரவான நிகழ்வு ஆகும்.

வேய்தல் :  வேய்+ து + அம் =  வேய்தம் >  வேதம்.
வேய்தல்:   வேய் + து + அன் = வேய்ந்தன் > வேந்த‌ன்
தேய்தல் :   தேய் + கு  + அம் = தேய்கம் > தேக‌ம்
வாய்        வாய் + து +  இ =  வாய்த்தி >  வாத்தி >  வாத்தியார்.
தாய்:        தாய் + தி   =  தாய்தி > தாதி.
வேய் :      வேய் + சி =  வேய்சி  >  வேசி.
நோய்:       நோய் + து + ஆன் = நோய்ந்தான் > நோஞ்சான் (திரிபு).
பாய்தல்      பாய்+ சு + அன் + அம் = பாய்சனம் > பாசனம்.
காய்தல்      காய் + சு + இன் + இ = காய்சினி > காசினி .

இவை முன் இங்கு விளக்கப்பட்டுள்ள  சொற்கள். முன் இடுகைகளைக்
காணவும். பின் யாதாயினும் அழிந்திருப்பின் மீளேற்றம் பெறும்.
வேய்தல் என்பது மேலணிந்துகொள்ளுதல். கூரை வேய்தல். அதுபோல்
பாடல்கள் அமைத்தல். வேந்தன் , முடி அணிதலால் வேந்தன் எனப்பட்டான். வாய்ப்பாடம் சொல்பவன் வாத்தி எனப்பட்டான். உப அத்தியாயி ஆகிய உபாத்தியாயி ( `~ யர், ~யினி ) வேறு சொல். பண்டிதர் குழம்பியதுண்டு.  பல அணிகலன்களும் வாசனைத் திரவியங்களும் பூசிக்கொள்பவள், பூசி மயக்குபவள் வேசி ஆனாள்.
பாய்தல் இங்கு நீர்ப் பாய்ச்சல்.காய்தல் : வெறுத்து ஒதுக்குவதற்குரிய‌
போதிக்கப்பட்ட இவ்வுலகம். காய்தல் ‍:  வெறுத்தலும் ஆம். வேறு
பொருளுடையதுமாம் இச்சொல்.

யகர ஒற்று மறைந்த சொற்கள் பல  இங்கு ஆய்வு செய்யப்பட்டு
விளக்கப்பட்டன.  வேதம் ‍ : மறைமலையடிகள் விளக்கம். வித்
என்ற சொல்லிற் புறப்பட்ட வேதா என்ற சொல் வேறு. இரண்டும்
ஒரு பொருளையே சுட்டினும் வெவ்வேறு பிறவிகள். ஆங்கிலத்தில்
பேக்கட் என்பது வேறு; தமிழில் பைக்கட்டு என்பது வேறு. ஓலி
ஒப்புமை உள்ளது. பார்லிமென்ட் வேறு; பாராளுமன்று வேறு .சுட்டப்பட்டது
அப்பொருளே  ஆயினும்.  

வெள்ளி, 3 மார்ச், 2017

சூசி.சாடி

அகர வருக்கத் தொடக்கத்துச் சொற்கள் பல சகர வருக்கத் தொடக்கமாக
மாறின என்று பல இடுகைகளில் காட்டினோம் .  இதற்கு அமை ~ சமை;
அமண்~ சமண் என்பன காட்டப்பெற்றுள்ளன;  ஆய்வுகளும் அவ்வடிப்படையில் நடைபெற்றன.

இப்போது ஊசி என்ற சொல்லைப் பார்ப்போம். இது சூசி என்றும்
வழங்கும்.

ஊசி >  சூசி.

ஆடி என்பது கண்ணாடி. ஆடி பலபொருட்சொல். அவற்றுள் ஒரு
பொருள்:  கண்ணாடி.
இது சாடி என்று திரியும்.  கண்ணாடி அல்லது மண்ணாலான பாத்திரத்துக்கு  ஆகுபெயர். இக்காலத்தில் சாடி என்பது பாத்திரத்தை
மட்டுமே குறித்தலால், ஆகுபெயர் நிலையினின்று முழுப்பெயராக‌
மாறியுள்ளது.
மேலும் சாடி என்பது ஜாடி என்று மாறி வழங்குகிறது. மூலச்செய்பொருளான கண்ணாடியினின்று தொலைவில் வந்துவிட்டது
காண்க,