வெள்ளி, 18 நவம்பர், 2016

ஆசீர்வாதம்

ஆசீர்வாதம் என்ற சொல்லின் தென்றமிழ்ப் பிறப்பை முன் யாம் விவரித்த‌துண்டு.  ஆனாலும் இங்குக் கிடைக்கவில்லை.\

ஆகூழ் போகூழ், மற்றும் ஆகாயம் முதலிய சொற்களிற் போல  ஆ= ஆதல் என்ற முன்னொட்டுப்பெற்ற  சொல் இதுவாகும்.  ஆசீர் என்பது
சீராவது என்று பொருள்தரும்.

வாயில் தோன்றி விரிவது வாதம் ஆகும்.  பின் எழுத்திலும் வாதங்கள் வந்தன. ஆனால்  வாதம் என்று இச்சொல்லின் விதந்து சு ட்டப் படுவது  இருவருக்கு அல்லது அதனின் மேற்பட்ட ந(ண் )பருக்கிடையில் ஏற்படும் சொல்லாடல்  அன்று.   தம் வாயினின்று அல்லது பிறர் வாயினின்று புறப்படும் "சீர்  ஆகுக"  என்னும் வாய்மொழியையே குறிப்பது இது.   ஆ - சீர் - வா- தம்  என்று இயைந்து வந்திருப்பது காண்க. வழக்கில் பொருள் விரியும். 

ஆசீர் என்பது தமிழ் வழக்கே ஆகும். தோன்றியதும் தமிழரிடத்தே.







வியாழன், 17 நவம்பர், 2016

மோகம்

மோகம்  என்பது முன்னர் விரிவாக ஆய்வு செய்யப்பட்ட சொல்லே.
ஆனால் அதற்குரிய பழைய இடுகைகள் இங்குக் கிடைக்கவில்லை.
அவை அழிக்கப்பட்டுள்ளன.


நினைவிலிருந்து மீட்டு எழுதுகிறோம்.

விலங்குகள் மோப்பம் பிடித்தே பாலியல் அணுக்கம் கொள்கின்றன.
யாரும் போய்த் தெரிவிக்காமலே உணர்ந்து நெருங்குகின்றன. ஆகையால்
மோகம் என்ற சொல் மோத்தல் என்ற மோ விலிருந்து பிறந்தது.

மோ+கு+ அம் =  மோகம்.  இங்கு கு என்பது சொல்லாக்க  இடைநிலை.  மோப்பம் என்பதில் மோ+பு+அம் ‍= மோப்பம் என்று பு இடைநிலை ஆனது போல.  இதில் பு இடைநிலை என்னாமல் "விகுதி"   ',இன்னொரு 'விகுதி " என்றும் சொல்லலாம்.

மோகித்தல் என்பதில்  இகரம் இறுதியில் நின்று வினையானது. மோ +கு+ இ = மோகி.   இடை  நின்ற கு=  க் +உ.  .  இதிலுள்ள உகரம்  கெட்டது .  மோ +க் +இ = மோகி .ஆயிற்று.

மோகப் பற்று :  இது பின் மோகபத்  ஆனது.





புதன், 16 நவம்பர், 2016

நாணயச் செல்லொழிப்பு நடவடிக்கைகள்


நாணயச் செல்லொழிப்பு   demonetization .

வெளி நாடொன்றிலிருந்து அச்சடிக்கப்பட்டு இந்தியாவிற்குள் புகுத்தப்பெறும் கள்ளக் காசுத்தாள்கள், ஆண்டுக்கு 70 கோடிக்கு
மேலிருக்கும் என்று வல்லுநர் கூறுகின்றனர். இது தீவிரவாத நடவடிக்கைகட்கும் பிற அரசியல் நடவடிக்கைகட்கும் கூடப் பயன்படுத்தப் படுகின்றன என்று கூறுகிறார்கள்.


இந்திய நாட்டுக்குள் புகும் இந்த காசு, ஏழைகள் பணம்படைத்தோர் என்று வேறுபாடின்றி யாவர் கைகளிலும் தவழ்கின்றன.

இவற்றில் சில தோற்றுருக்களை ( டினோமினேஷன்)  செல்லாதவை
ஆக்கியது மோடி அரசின் திறமைதான்.


ஆயிரம் நூறைந்து நூறென்ப
அடிக்கடி புழங்கிவரு நாணயங்கள்
நோயினைப் போல்முளைத்த தீவிரர்கள்
நோட்டமிட நுழைந்தழிக்கச் சுட்டெரிக்க‌
நேயரைப்  போல்நடித்தும் ஊடுருவி
நெடும்பயன் பெற்றுப்போர் வெற்றிபெற‌
ஓய்விலா தச்சடித்து வெளியிட்டார்
உழலுமோர் இந்தியர்க்குள் புகுத்திவிட்டார்.


கலந்துறை காசுப்பொய் உருக்களையே
கட்சிகள் கலைத்துறையார் நாட்டினரும்
விரைந்தணைத் தவராகப் பயன்படுத்தி
வேண்டிய நலம்பலவும் கொண்டனரோ
விளங்குதல் இலரதனில் வீழ்ந்தனரோ
வினைவகை அறிந்திலாத சூழ்நிலையே
நிலங்கவர் நினைப்புடைய தீவிரர்க்கு
நேர்விடுத் தவர்பாணம்  மோடியவர்.

எளிதலாப் பெரும்போரே தலையமைச்சர்
ஈடுற‌  லானாரே என்றுசொல்வோம்!
ஒளிவிலா வெளிப்படையில் திட்டமிட்டால்
ஒருதுளி  கரும்பணத்தில் கைவாராதே!
நெளிசுளி வெல்லாமும் நெட்டுணர்ந்தார்
நின்றவ ரோடுழைக்கக் காசகத்தார்
அளியரே  இயலாமல் தவித்திடவும்
அவண்பணம் எடுப்பார்தத் தளிப்பவரே

எதுயாது நிகழ்ந்துருவே எட்டினாலும்
இதுநிகர் நடவடிக்கை துணிச்சலாகும்;
மெதுவாய்ச் சிந்தித்துத் திட்டமிட்டு
மேற்செல  உரிதருணம் அன்றிதுவே.
புதிதாய் முதன்முதலில் இதுசெய்தார்
புனிதர் மோடியிவர் வாழ்கவாழ்க.
விதியாய் நாமுறுமோர் தீவிரமே
வீழ்ந்திட எவ்விலையும் நல்விலையே.

(அறு  சீர்  கழிநெடிலடி  ஆசிரிய விருத்தம் .  ஈரசை ~  மூவசை - மூவசை  என்று  வரத்  தொடுத்தது,  சிலவிடத்தில் அசைகள்  மிக்குவர விடப்பட்டது.
ஒருபோன்மை  monotony தவிர்த்தல் நோக்கமாகும் .)