ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

நிவர்த்தி என்ற சொல்

நிவர்த்தி என்பது நம்  வழக்கில் உள்ளதாகும். என் மகளுக்குக் கல்யாணம்
செய்யத் தடைகள் ஏற்பட்டுக்கொண்டே உள்ளன, ஏதேனும் நிவர்த்தி செய்தல்  வேண்டும்  என்று பேசுவது நம் காதில் கேட்கிறது. நிவர்த்தி என்றால் என்ன,இச்சொல் எப்படி அமைந்தது?  ‍  என்பதைக் காண்போம்.

தொடர்கின்ற தடைகளை நிறுத்தவேண்டும்.  நில் > நிற்பு,  நிறுத்து என்பதற்கு  நி போட்டுக்கொள்ளுங்கள்.

மந்திரம் செய்வீர்களோ, ஏதேனும் மாயம் செய்வீர்களோ ‍:   இந்தத் தொல்லைக்கு ஒரு முடிவை வருவிக்க  வேண்டும்.  வரு . வருத்து, (வரச் செய்தல்).பிறவினை . இதன் தொடர்புடைய  சொல்  வரத்து என்றும்  வழங்கும்.  எ-டு :  போக்குவரத்து.   இனி  வருத்து > வருத்தகம் > வர்த்தகம்  பொருள் வருவித்து வணிகம் செய்தல் ;  பின்பு  பொதுப்பொருளில்  வழங்கியது ,

(வருத்தம் அல்லது துன்பம் வரச்செய்தல் அன்று ,  அது வேறு  ).

வரு > வருத்து > வர்த்து,   வர். (அடி)

இதை   (நிவர்த்தியை )  நிகழ்த்த ஒரு திறம் வேண்டுமே!  திறம் > தி.

ஆக, நி+ வர்(த்து) + தி.


நிவர்த்தி என்ற சொல் கிடைத்துவிட்டது.

இறுதி நிலை, வர்+தி என்றாலும் வர்த்து+ இ என்றாலும் வேறுபாடில்லை.  இருவழிகளும் ஒரு முடிபு கொள்கின்றன.

வர்+ தி என்பது வலித்து வர்த்தி ஆகும்

நிவர்த்தி :  நிறுத்தம் அல்லது நிற்றல் வருமாறு செய்யும் திறம்
 அல்லது நடவடிக்கை,

அறிந்து இன்புறுக.


சனி, 3 செப்டம்பர், 2016

உதிரம்

சொல்லமைப்பு:உதரம் ‍  உதிரம்

இங்கு குறித்த இரு சொற்களில் உதிரம் என்ற சொல்லை முதலில் எடுத்துக்கொள்வோம்.

உடலில் எப்பகுதியில் வெட்டு, கீறல் முதலியன ஏற்பட்டாலும் , இரத்தம் வருகிறது.  அரத்தம் என்பதே சரியான சொல் என்பதும்,  அர் என்பது
சிவப்பு நிறம் குறிப்பது என்பதும்,  அர்+அத்து+அம் = அரத்தம், இதுபின் ரத்தம் என்று தலையிழந்து, பின் ரகரத்தில் சொல் தொடங்கக் கூடாது என்பதால்
இகரம் சேர்த்து இரத்தம் ஆனது என்பதும்  நமக்கு முந்திய ஆய்வாளரால் நிறுவப்பட்ட ஒன்றாம்.

அரத்தம்   சொட்டும்,  வடியும்  அல்லது உதிரும் தன்மை உடையது. அதனால் அது உதிர்+அம் = உதிரம் எனப்பட்டதென்பது  அறிதற்குரியது.

போரில் இ/அரத்தம் அல்லது உதிரம் சிந்தியோருக்கு  மன்னர்களால் வழங்கப்  பட்ட நிலம்  உதிரப்  பட்டி  எனப்பட்டது  காண்க.

அரத்தம் =  குருதி எனவும் படும்.

உதரம் என்பது வயிறு. இதை அடுத்துக் காண்போம்.


கேடிகள்

பேச்சுத் தமிழில் மிகுதியும் வழங்கும் ஒரு சொல் கேடி என்பதாகும்.
கேடி என்ற சொல்லுடன் ஒருவனின் பெயரையும் இணைத்தும் குறிப்பதுண்டு. சிங்கப்பூரில் பெயர்பெற்ற கேடிகள் யாரும் இருப்பதாக நாம்
கேள்விப்படுவதில்லை. மலேசிய நகரங்களில் உள்ளனர் என்பது பலரும்
அறிந்ததே. பிற நாடுகளில் மாஃபியா என்னும் பெரிய கேடிகள் இருப்பதாகத் தெரிகிறது.

கேடி என்ற சொல் தமிழா என்று முன்னர் ஒருவர் கேட்டதுண்டு. சுருக்கமாகச் சொல்வோம்/

கேடு + இ =  கேடி   கேடு செய்வோன் என்பது பொருள்.

முன்  அஞ்சடிக்காரன் என்று ஒரு வழக்கு இருந்தது.  கடைவீடுகளுக்கு வெளியே ஐந்து அடி அகலமுள்ள நடை இருக்கும். வெயில் மழை படாமல் இவற்றினூடே நடந்து செல்லும் வசதி இருக்கும்.  இவ்விடங்களில் படுத்து உறங்கி  வீட்டுக்காரர்கள் தரும் உணவை
உண்டு வாழ்ந்தவர்கள் இப்பெயரால் அழைக்கப்பட்டனர்.

முன் ஒரு தமிழன் ஒரு மலாய்க் குடும்பத்தின் வீட்டின் அஞ்சடியில்
இரவில் படுத்துறங்கிக் காலங்கழித்து வந்தான்/ அந்த வீட்டுத் தவழும்
குழந்தை அதன் தாய் அறியாமல் வெளியில் வந்து தூங்கிக் கொண்டிருந்த‌
அவனைத்  தட்டிற்று.  அவன் அதை ஒரு கம்பால் அடித்துக் கொன்றான்.. பாவம், ஒரு பெரிய துயர நிகழ்வாகிவிட்டது,  இப்போது
அஞ்சடிக்காரர்கள் யாரையும் காண முடியவில்லை.

இவர்கள் கேடிகள் அல்லர்; ஆனால் சிலர் பித்தர்கள் என்று தோன்றுகிறது.