செவ்வாய், 8 மார்ச், 2016

பகைப்போர்

புகை இல்லாமல்  நெருப்பு இலை என்பார்கள்.1 இப்போது எரிவாயு  அடுப்பைப் பற்றவைத்தாலே எந்தப் புகையும் இல்லாமல் அழகாக நீல நிறத்துடன்  எரிகின்றது. நீர் புகையைப் பார்க்கவில்லையே தவிர புகை ஒளிந்து கொண்டிருந்து பின் மறைந்து எரிந்தது என்று நீங்கள் கூறக்கூடும்! இருக்கலாம் .......எனக்குத் தெரியவில்லை.

பகை இல்லாமல் போர் இல்லை எனலாமா? போர்கள் பகை ஒன்றாலேயே ஏற்படுவதில்லை.  மூல காரணம் என்பது பொருளியலாக இருக்கலாம்.  அதனால் மனக்கசப்பு வளர்ந்து பகையாக முற்றிப்   போராய் முடியலாம். தொடக்கத்தில் பகை இல்லாவிட்டாலும், அது பின் ஏற்படலாம் என்று தெரிகிறது.

இது பற்றி நன்கு அறிந்த பட்டறிவாளராக  நீங்கள்  இருக்கக்கூடும்.

இப்போது பகைப்போர் என்ற சொல்லைக் காண்போம்.  \

பகை +  போர்  =  பகைப்போர் எனில்  பகையின் காரணமாகிய போர் என்று பொருள்படும்.

பகைப்போர் -   பகை கொள்வோர்  என்றும்  பொருளாகும்,

இவற்றை  அறிந்து பயன்படுத்துதல் உங்கள் பொறுப்பு..


1  நெருப்பு இல்லாமல் புகை இல்லை. ( நெருப்புக்குச் சான்று புகை) .  பழமொழி .

ஞாயிறு, 6 மார்ச், 2016

புறப்பொருளில் தோற்றவர்க்கு இரக்கம்.



இந்தப் புறப்பொருட் கொளுவைச் சற்றுக்  காண்போம்.

அழிகு நர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக்
கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று.

என்பது 20-ம் பாடல்.  வஞ்சித் திணையில் இது ஒரு துறை ஆகும்.

சரணடைந்தவர்களைக் குண்டுவீசித் தாக்கிய கொடியவர்க்கும் அதற்குத் துணைபோன அடுத்தார்க்கும் உண்மையில் தெரியவேண்டிய ஒரு பண்பாட்டை இக்கொளு எடுத்துக்கூறுகிறது. தோற்றவர்க்கு இரங்கிய தூயபண்பினன் இறுதியில் ஒழிக்கப்பட்டது  எத்தகு கேடு!

போரில் வன்மை அழிந்தவர் இரு கைகளையும் உயர்த்தித் தம் முதுகையும் காட்டுகின்றார். அந்த நிலையில் வெற்றி பெற்றவன்  தன் கூரிய வாளைச் சரணடைந்தோனின் முதுகில் குத்திவிடுவது எளிதுதான்.   ஆனால் குத்தக்கூடாது என்கிறது தமிழர் பண்பாடு. வாளைக் குத்தாமையே வீரப் பண்பாடு என்கிறது.  இதைப் பக்கலில் நின்று கண்டோர் அந்த வீரப் பண்பினைக் காதலிக்கின்றனர் என்கிறது நம் புறப்பொருள் இலக்கணம்.

சரணடைந்தோனைக் குத்துதல் கோழைமை.  அவனைக் காப்பாற்றுவதே  வீரம்.

வஞ்சியில் இது தழிஞ்சித் துறை ஆகும்.


You may continue reading on this topic . Click for more:


வென்றபின் பகைவனுக்கு அருள்செய்
http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_24.html


சேரனுடன்  மோதாதே
http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_39.html


போர்த் தந்திரங்கள்
http://sivamaalaa.blogspot.sg/2016/03/blog-post_91.html


சனி, 5 மார்ச், 2016

"விற்பன்னர்"

ஒரு பொருளை விற்பதற்குச் சில வேளைகளில் வணிகர் சிலர் மிக்கத் திறமையுடன் பேசுவர்.  மந்திரங்கள் சொல்லி, பாம்பு  விளையாட்டும் காட்டி அது கடித்தால் இந்த மருந்தைப் போடுங்கள்  விடம் ஏறாது,  ஏறின விடமனைத்தும் இறங்கிவிடும் என்றெல்ல்லாம் விளக்கம் தருவதற்குப்  பேச்சுத் திறன் முதன்மை  யானது ஆகும்.  இவர்கள் விற்பனைக் கலைஞர்கள்

அறிஞர்  சிலர்க்கும் இத்தகு திறன் காணப்படுகிறது.

ஒரு சமயம் ஒரு சீன நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.  இவர் சிங்கப்பூர் வானூர்தி நிலையத்தில் அறிஞர்  நெல்சன் மெண்டெலா  அவர்களின் உரையை நேரில் கேட்டவர்.  "இது அன்றோ  உரை! சிலர்  எழுதி வைத்துக்கொண்டு பேசுகிறார்களே! அதிலும் கூட தடுமாறுகிறார்களே "   என்றார்.   நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்  அரசியல் அறிஞர் லீ குவான்  யூ அவர்களும் சிறந்த உரைவலர் ஆவார்.

இவர்கள் திறம் ஒரு வகையில் விற்பனைத் திறத்துடன் ஒப்பீடு செய்யத் தக்கது ஆகும்.  செலச் சொல்லும் செந்நாப்போதார் சீர்மிக்க இம்மாமனிதர் .

இது தொடர்பில் "விற்பன்னர்" என்ற சொல்லை அலசுவோம்.

விற்பு  =  விற்பனை . விற்பனைக் கலை குறிக்கிறது.

அன்னர்  =  போன்றவர்கள்.

கலை குறித்த "விற்பு"    அதன் கலை உடையாரைக் குறித்தது.   இது ஆகுபெயராய் நின்றது.

முழு விரிப்புடன் சொல்லின்  "விற்பரன்னர் " எனல் வேண்டும்.  இரண்டு "அர் "
இன்றி  ஒரு அர்  வரச்  சொல் அமைந்தது சொற்புனை புலமை ஆகும்.  ஒரு ரகரம் மறைந்த இடைக்குறை எனினுமாம்.

வில் போல் குறிவைத்துப் பன்னுவோர் என்று கூறுவதும் கூடும் .  பன்னுதல்  -  சொல்லுதல்.

அறிவோம்  மகிழ்வோம்.