சனி, 27 பிப்ரவரி, 2016

Ponmudi song: கெடுமதிப் பெற்றோர்

பொன்முடி என்ற  பெயரில் வெளிவந்த ஒரு பழைய திரைப்படத்தைப் பற்றிச் சிறிது தெரிந்துகொள்வோம்.  இது ஒரு காதல் கதை.  இந்தப் படத்தின் இயக்குநர்  எல்லிஸ் டன்கன் என்னும் ஆங்கிலேயர். இப்படத்தில் பல இனிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன, அவற்றுள் ஒன்று இப்போது நம்முன் உள்ளது.  அது இது:

வான்மழை இன்றி வாடிடும் பயிர்போல்
நானுனைப் பிரிந்தே வாடுகிறேன்
சூழ் நிலையாலே கூண்டினில் வாடும்
பைங்கிளி போலிங்கு வாழுகிறேன்

வெளியில் விடாமல் வீட்டினுள் வைத்தே
கெடுமதியால் என்னைப் பூட்டினரே
வளர்காதல் ஜோதி உனையன்றிப் பாரில்
ஒளியுமே எதென் வாழ்விலே


காதல்மொழி பாவாய் கனவோ நம்வாழ்வு
கணமும் இனி  உயிர் நான் தரியேன்;
நாதமில்லாத யாழ்போலும் ஆனேன்
நானே உன் பிரிவால் காதலி.

என் அளி நீ ஒன்றாக இணையாய்
முன்போலவே நாம் சேர்ந்திடுவோமோ என்னுயிரே
என் அளி நீ ஒன்றாக இணையாய்
முன்போலவே நாம் சேர்ந்திடுவோமோ இன்னமுதே


இப்பாடல் நல்ல இலக்கிய நடையிலேதான் அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் சிறப்புடன் இலங்குகின்றன . இப்பாடல் புனைந்த கவி பாடல்கள் பல இயற்றிய  பட்டறிவும் உடையவர் என்று தெரிகிறது. உவமை நயம் பாடலில் நம்மை ஈடுபடுத்துவதாய் உள்ளது.  வான்மழை இல்லாமல் வாடும் பயிர், கூண்டினில் வாழும் கிளி, நாதமில்லாத யாழ் என வருபவை காண்க. என் அளி என்பது என் அன்பே எனல் பொருட்டு. வளர்காதல் ஜோதி என்று காதலனை வருணிக்கிறாள் காதலி. அவனின்றி வாழ்வில் ஒளி இல்லை என்கிறாள். இருண்ட வாழ்வாகிவிட்டதென்கிறாள்.

 காதலன்  ஒருபடி மேல் சென்று  கணமும் இனி உயிர்வாழ மாட்டேன் என்கிறான்.  இந்த  முடிவு  அவன் திண்ணிய உள்ளத்தைக் காட்டுவது .இறுதியில் எண்ணிய எண்ணியாங்கு எய்தி இன்புறுவான் அவன் .

காதலிக்கப் புறப்பட்ட பெண்ணை அறைக்குள் போட்டுப்  பூட்டிவிட்டால்  பார்ப்போருக்கு உடனே சோக உணர்ச்சி வந்துவிடுவதில்லை.  சிலர் கேட்டு நகைக்கவும் செய்வர்.  பார்த்து,  அப்படித்தான் வேண்டும் அவளுக்கு என்பர். சிலர் . இப்படியெல்லாம் பல கோணங்களில் கருத்துகள் எழாமல், இப்பாடல் படம் பார்ப்பவர்களை ஒருமுகப் படுத்தி  சோகத்தைத் தூண்டி அழவைக்க முற்படுகிறது. இப்போது சோகப் படங்கள் வெளிவந்தாலும்  சோகப் பாடல்கள் வருவதில்லை.  துயரில் பாடல் எழாது என்ற ஆங்கில ஆசிரியர்களின் கருத்தாட்சி மேலோங்கியுள்ளது.  எனினும் காதல் இழந்து வாடும் துயரப்பாடல்கள் ஏனை மொழிகளில் இல்லாமலில்லை. காதலன் காதலி ஒரு திடலில் ஓடிக்கொண்டு இருகுரலிசை  வழங்குவது உண்மை நிலை ஆகிவிடுமா என்ன ? ஒரு வீரன் பதின்மரை நையப் புடைப்பது  உண்மை நிலை ஆகாது.  திரைப்படம் காண்போர் அழாமல்  காக்கப்படுவதாகக் கூறலாமே தவிர துயரப்  பாடல்களை  விலக்குவதால் வேறு நன்மை யாது  என்பதை நீங்கள்  கண்டுபிடியுங்கள்.  இதுபோலும் துயரப் பாடல்களைக் கேட்டால் மக்கள் காதலர்களைப் பிரிக்கலாகாது என்ற உணர்வைப் பெறக்கூடும் என்று சொல்லலாம் .

காதலைப் பிரிக்க நினைத்தது பெற்றோரின் கெடுமதி என்கிறாள் காதலி.

சங்க இலக்கியங்களின் தாக்கம் பாடலில் உள்ளது.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

விலட்சணம் ‍

.விலட்சணம் எனின் வேறாக இருப்பது என்று நீங்கள் அறிந்திருக்கலாம்.

இலக்கம் என்ற எண்ணுப்பெயர் இலட்சம், லட்சம் என்று திரிவது உங்களுக்குத் தெரிந்ததே.  இலக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உடையது எனினும், இங்கு நாம் கருதுவது நூறாயிரம் என்னும் பொருள்.

இலட்சம் :  இலக்கம் ஆதலின்,  விலட்சணம் : விலக்கண‌ம்  ஆகும் என்பதை எளிதாய் உணரலாம்.

விலக்கு + அணம் ‍=  விலக்கணம். அணம் என்பது ஒரு பின்னொட்டு அல்லது விகுதி. ( மிகுதி :  சொல் மிகுதல்)

விலகு ‍  விலகி நிற்பது.  எனவே வேறு என்ற பொருள் பெறப்பட்டது.  தமிழ்ச்சொல் ஆகும்.

இதை அடுத்துவரும் போத உரைகளிற் பயன்படுத்துவோம்.

இலக்கணம் -grammar

விலக்கணம் - something that stands apart.  separateness  விலட்சணம்

வியாழன், 25 பிப்ரவரி, 2016

கற்பனை : கற்பிக்கப்படும் பொய்மை

வி என்னும் பின்னொட்டுப் பெற்ற சொற்கள் சில உள்ளன. நம் நினைவுக்கு
வருபவை : கல்வி,  கேள்வி, வேள்வி,  கிளவி (சொல்).
அருவி, குருவி (குர்ர் என்பது ஒலிக்குறிப்பு),  முதலியவை.

இவற்றுள் கல்வி என்ற சொல்லுக்கு உரிய  அடிச்சொல் கல் ‍ கல்லுதல் என்னும் வினைச்சொல்.கல்லுதல் :  தோண்டுதல்.

கல்வியைப் பற்றிக் கூறியவிடத்து, வள்ளுவனாரும் : " தொட்டனைத் தூறும் மணற்கேணி"  என்று பாடினார். கல்வி ‍ தோண்ட ஊறும் மணற்கேணி அன்றோ?

கல்லுதல் என்ற சொல்லினின்று  பல சொற்கள் தோன்றின.

கற்றல்  ( கல் + தல் )
கற்பு.  அன்னை தந்தையரால் கற்பிக்கப்படும் ஒழுக்க நிலை..
கலை  ( கல் + ஐ )
கல் + ஆ  (  கலா )  நில்+ ஆ= நிலா போன்றது. பல்+ ஆ = பலா, பல சுளைகளை உடைய பழம்.

கற்பனை : கற்பிக்கப்படும் பொய்மை.  கல்+ பு + அன்+ ஐ.
விற்பனை படிப்பினை எனக் காண்க.

கல் என்னும் தமிழ் அடிச்சொல் பல மொழிகளிற் பரவிற்று.
கலா, கற்பனை முதலிய இனிய ஓசைச் சொற்கள் கவர்ந்துகொள்ளப்பட்டன.

கல்குலஸ், கல்குலேசன் முதலிய ஆங்கிலம் வரை சென்றன.

கல்குலுக்கிக் கணக்குப் பார்ப்பது தமிழர் திறம் என்று அறிவோம். அது கல்குலஸ் ஆயிற்று.

கால்சியம் என்ற சொல்வரலாறு யாது?

will edit.