புதன், 11 டிசம்பர், 2013

Nelson Mandela

இனம் மொழி மதம் கடந்து
மனித இனத்தை நேசித்தார்
தனி மனித உரிமை களைத்
தலைதாழ்ந்து பணிந்திட்டார்.
நிறவெறி தனைஎதிர்த்து
நெடுங்காலம் போரிட்டார்
அறநிலை பிறழ்தலிலாப்
பெருவாழ்வில் நிலைநின்றார்

இன்னொரு காந்தியென‌
இவ்வுலகில் ஒளிவீசி,
தம்ம‌ரு நறுநாட்டின்
தலைமையிலும் கொடிநாட்டி
மின்னலென அது நீங்கி
மேலான தனிவாழ்வில்
தாமாக அமைந்திட்டார்.
தரணியில்யார் ஒப்பவரே?


நெல்சன் மண்டேலாவின்
நீடுபுகழ் பறைசாற்ற‌
கல்நின்று அணிசெய்யும்
மன்று ஒன்று  நாட்டுவரோ?

மறைந்தாலும் மறைவில்லா
மாமனிதர் புகழ் ஓங்க‌
நிறைந்துயரந்த தமிழ்ப் பாவால்  
நின்றுபணிந்தேத்திடுவோம்.






செவ்வாய், 10 டிசம்பர், 2013

riots in Singapore Island

சட்டமும் ஒழுங்கும் தலைமேற் கொள்ளும் சிங்கப்  பூரரசு
சாலைகள் சந்துகள் எல்லாம் தூய்மை உலகில் இதுஅரிது
கொட்டம டக்கிக் குறும்பரை வைக்கும் கொள்கை அதுபெரிது
குற்றம் அரிதெனக் கூறும் தீவினில் கலகம் ஒருவியப்பே!

அறிகுழு அமைத்தும் அதன்கா ரணம்தரும் நாளை எதிர்பார்ப்போம்
பிறிதொரு காரணம் உண்டிது பிறந்த திகதி நாள்  நட் சத்திரம்
அறிவது யாதெனின் ஆகுநே ரம்குன்றி ஆகா ததுவிரிந்தால்
பெறுவது தீமையே என்பதும் உண்மையே பேசும் இதுதெளிவே.


சூடு கிளப்பிச்  சூறாவளி தோன்றாமல்
பாடு தவிர்த்த‌பண் பட்டகா வல்துறை.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

ஏகலைவன்

ஏகலைவன் என்ற மகாபாரதச் சொல்லை இப்போது ஆய்வுசெய்வோம்.

எய் =  அம்பு எய்தல்.
எய் ‍> ஏ  இது முதனிலை திரிந்த பெயர்ச்சொல். இங்ஙனம் நீட்சி அடைகையில் யகர ஒற்று, கெட்டது. (அதாவது, மறைந்தது). இப்படி மறையவில்லை என்றால், ஏய் என்று ஆகி, விளிச்சொல்லுடன் மயங்கும்.

அடுத்து, கலை என்ற சொல்.  அம்பு எய்வது ஒரு கலை.

வன் என்பதில், வ்+அன் ஆகவே வகர உடம்படு மெய்யும் அன் என்னும் ஆண்பால் விகுதியும்.

வல் > வன் என்றும் திரிந்து, வல்லவன் என்பதையும் குறிக்கும்.

ஆக இது தமிழ் மூலங்களையுடைய ஒரு பெயர்

Ekalavya:  Notes

ஏகலைவன் என்பது தமிழ் வடிவம். சங்கதத்தில் "ஏகலவ்யா". ஏகலைவன் என்று நேர்புனைவாக  இல்லாமல் ஏகலைவ்+ய்+அ(ன்)  என்று மாற்றம்பெற்றுள்ளது. வகர உடம்படு மெய்யும் யகர உடம்படு மெய்யும் உள்பொதியப்பட்டு, ஆண்பால் னகர ஒற்று களையப்பட்டுச் சொல்லாக்கம்  பொற்றுள்ளது. ஏகலைவன் கரு நிறத்தோன் என்பதும் கவனிக்கத் தக்கது.


வட  பெரு நிலப்பகுதியில் கருப்பு  இனத்தோர் ஆட்சி செய்த  பாகங்களும்  இருந்தன  என்பதும்  அவர்கள் ப‌ற்பல கலைகளையும் அறிந்திருந்தனர் என்பதும்  இதனால் பெறப்பட்டது.